Friday 22 December 2023

'ஓர்மை' மீரான் மைதீன்

ஓர்மையின்
விளிம்புகளிலிருந்து
அற்று விழுந்து அதல பாதாளத்தில் கிடக்கும் நினைவுகளை
புசித்துப் புசித்து
பசியடங்காத இரவொன்றில்
நெளிந்து நெளிந்து பாம்பாகிப் 
பச்சிப் பறவையாகி
நேராகி நெடுஞ்சாண்கிடையாகி விழுந்து 
எழுந்து 
புறண்டு புறாவாகி
ஆடை தரித்து ஆயத்தமாகி
பறந்த பொழுதில் 
உருகி மெழுகாகி  மெய்யாகிய
ஓர்மையின் விளிம்புகளிலிருந்து
அற்று விழுகிறேன்
கதகதப்பில் அடைக்கலம் புகுந்தவாறு
அணைத்துப் பிடித்துக் கொள்ளுமாறு
காற்றில் விட்டெறிந்த முத்தம் பறக்கிறது.

2016

Wednesday 20 December 2023

"சிகரி மார்க்கம்"நூல் அறிமுகம் மீரான் மைதீன்

அருமை நண்பர் கே.முகம்மது ரியாஸின் "சிகரி மார்க்கம்"சிறுகதை நூல் அவரின் இரண்டாவது தொகுப்பாக வந்திருக்கிறது. முந்தையது "அத்தர்"சிறுகதை தொகுப்பு.

             நான் இப்போது இந்த தொகுப்பில் எந்த சிறுகதையை முதலில் வாசித்திருப்பேன், சந்தேகமில்லாமல் மீரான் (எ) மரியா'வைத்தான்.அதை மேலும் ஒருமுறை வாசிக்கவும் செய்தேன். எனது "ஒரு காதல் கதை"யில் கூட மனிதர்களுக்கு அதீத நெருக்கமானது அவர்களின் பெயர்தான் என்று எழுதியிருக்கிறேன்.பெயர்போல நெருக்கமான இன்னொன்று இல்லை என்பது மெய்யானது. நான் முதலில் அந்தக் கதையை வாசிப்பதற்கு அந்த பெயர் ஒரு காரணமாக இருந்தது.
    ரியாஸின் கதை உலகம் மற்ற எழுத்தாளர்களின் எழுத்து வரிசையிலுள்ள மெல்லிய மாற்றங்களின் ஒரு அடுத்த அடுக்காக இல்லாமல் முற்றிலும் புதிதான ஒரு புத்தம்புது அடுக்கு.நல்ல அபூர்வமான அடுக்கும்கூட. கொண்டாடப்பட வேண்டியவர்களை கொண்டாடத் தெரியாமல்  நாம் கடந்து போவது ஒரு தடத்தை  அழிப்பது போலத்தான். இஸ்லாமியப் பெயரோடு ஒருவர்,இன்றைய சூழலில் வாழ்வின் நெடிய பரப்புக்களைக்  கலாபூர்வமான எழுத்தாக்குவது எளிதான காரியமல்ல. இந்த காரியத்தின் மீது எப்புறத்திலிருந்தும் ஆதரவு சொற்கள் சுலபத்தில் வந்துவிடாது.கதைகள் ஆகுமா ஆகாதா என்று அப்போதுதான் பேசத் துவங்குவார்கள்.இஸ்லாமியர் என்பதற்காக பொதுவெளியின் புறக்கணிப்பு ஒருபக்கமும்,இஸ்லாமிய பின்புலத்திலிருந்து பாராமுகமான பார்வை மறுபக்கமென மிகப்பெரும் இடங்கேறுகளுக்கிடையே ஒரு பிரதிபலனுமின்றி எழுதப்படும்  எழுத்தென்பதையே ஒரு சாதனையாகச் சொல்லலாம்.இங்கே கே.முகம்மது ரியாஸ் தனது அத்தர் சிறுகதை தொகுப்பின் வாயிலாக அடர்த்தியான கவனம் பெற்றவர்.கதை,கவிதை, கட்டுரையென தனது தனித்துவமான எழுத்துக்களால் தன்னை நன்றாக ஸ்தாபிதம் செய்திருக்கிறார்.சிரான இடைவெளியில் இப்போது சிகரி மார்க்கம் வந்தடைந்திருக்கிறது. 
தொகுப்பில் ஒன்பது சிறுகதைகள் இருக்கின்றன.தமிழில் இதற்கு முன்னால் எழுதப்படாத பாங்கில் எழுதப்பட்டுள்ள ஒன்பது கதைகளும் காட்சிகளும் இதன் வாழ்வும் அறுபுதமானவை என்று நான் சொன்னால் என்ன அர்த்தம் கற்பிப்பார்களோ எனக்குத் தெரியாது ஆனாலும் அதுதான் உண்மை என்பதை என்னால் என் வாசிப்பின் வழி சொல்லாமல் இருக்க இயலாது. அப்பழுக்கற்ற சிந்தனையோடு தேடுகிறவனுக்கு இந்த கதைகளின் உலகம் பெரும் ஆவலுக்குரியது.
     இஸ்லாம் என்றதும் ஒரு பண்பாடு என்றுதான் உலகில் பலரும் புரிந்து வைத்திருக்கின்றனர்.வழிபாட்டு முறைக்கடந்து வாழ்வியல் கூறுகளாக அது,பன்முகப் பண்படுகளைக் கொண்டது.உணவு உடை சடங்குகள் என தனித்தனியாக அதற்கு ஆயிரம் ஒட்டுதல் உரசல்கள் இருக்கிறது. நன்றாக உண்பவர்கள் உடுப்பவர்கள் என்கிற பொதுப்புத்தியில் உறைந்த அபிப்ராயங்களிலிருந்து அவர்களின் வாழ்வை அவர்களின் தனித்துவமான சொற்களை,அவர்களின் வழிபாட்டு முறைமையின் வாயிலாகக் கலந்துகிடக்கும் அரபுச் சொற்களை,அவதானித்துப் பயணிக்கிறவர்களுக்கு அது காட்டும் உலகமென்பது அசாத்தியமானதாகும். ஏனென்றால் ரியாஸின் கதைகளுக்கு எல்கைகளில்லை.ஆதியிலிருந்து இன்றைய அந்தம் வரை நிலமெங்கும் வியாபிக்கும் வகையிலிருக்கிறது.
           ஒரு நீதிமன்ற வழக்கிலிருந்து ஆரம்பிக்கும் மீரான் (எ) மரியா, இலங்கையின் ஆறுகாவல்துறையில் இருந்து வாகைத்தீவு,கோட்டையூர், ஏர்வாடி, அந்தோணியார்புரம் மற்றும் மிகப்பரந்த கடல்வெளி என நிலமும் இதன் மனிதர்களும் பரந்துபட்ட வாழ்வும் இதன் ஊடாடும் மனிதர்களின் பண்பாட்டுப் புள்ளிகள்,வாழ்வின்  கோலமாகின்றன.இதுஒரு பெருவாழ்வின் சாறு என்பதனால் ஒவ்வொரு துளிக்குள்ளும் அடர்த்தி பெருக்கப்பட்டிருக்கிறது.
"மரியா கடலில் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது.அதன் மேலே ஒரு ராஜாவைப்போல இடுப்பில் கையைக் கொடுத்து மீரான் நின்று கொண்டிருந்தான்.அவனுக்காக அவனது அம்மா அமலி தூரத்தில் கரையில் கைகளைக் கட்டிக் கொண்டு காத்திருந்தாள்.அவள் வாய் மாதா மன்றாட்டு மாலையை பாடிக்கொண்டிருந்தது"
முரண்களின் அபரிமிதமான இணைவின் உலகம்.இதனை ரியாஸ் துவங்குவதும் பகுதி பகுதியாக நகர்த்துவதும்,எல்லாம் சித்திர வேலைப்பாடுகளைப் போல இருக்கும். மானிடவாழ்விலுள்ள இழப்புகள் வலிகள் துரோகங்கள் எல்லாம் கடந்து மனம் ஒன்றை ஒன்று ஆராதிக்கும் புதிய துவக்கத்தை கதை அனேக நம்பிக்கைகளோடு துவங்கி வைக்கும். இப்போது நமக்கென்று தனித்த கோபமில்லை,தனித்த முடிவுமில்லை நாம் அதனோடு அமைதியாக கலந்து விடுகிறோம்.இது முழுக்க முழுக்க இயற்கைப் பூர்வமான மனம்.இந்த மாயலோகம் ஒன்றால் இயக்கப் படுவதைப்போலவே இவரும் கதைகளை இயங்கவிடுகிறார்.
          கடல்சார்ந்த வாழ்வின் பக்கங்கள் தமிழில் நமக்கு வேறு வேறு தளங்களில் அறிமுகமாகி இருந்தாலும் ரியாஸ் வெளிப்படுத்தும் கதையின் வாயிலாக நமக்கு அறிமுகமாகின்ற கடல்சார் வாழ்வென்பது தமிழுக்கு புதிய பக்கமாகும்.
பகுதாது கோமானே,பார் இலங்கும் சீமானே
அலையாடும் கடல் ஓரம் அரசாளும் கப்பல் ராஜா
திரையோடும் கடலில் திக்கற்ற படகு நான்
கலங்கரையாய் ஆயிடுமோ உன் அருள்
செவத்தகனி தன் இடுப்பில் இருந்த கப்பல் ஒலியுல்லா திவ்விய மாலைச் செய்யுளை எடுத்து ஒப்பித்தார்.கப்பல் ஒலியுல்லா வியக்கத்தக்க ஒரு புதிய அறிமுகமாக மலருகிறது.இதுவரை கடல்சார்ந்த பதிவுகளில் நாம் காணாத புத்தம் புதிய இந்த அறிமுகத்தை ரியாஸின் எழுத்துக்கள் நீட்டிச் செல்கின்றன.இலங்கை மலேசியா சிங்கப்பூர் இந்தோனேசியா என பேரெல்லைகளை வசப்படுத்தி இருக்கும் வாய்ப்புகள். பாதாம் துறைமுகத்தைச் சுற்றியும் கடல்.தூரத்தில் எங்கோ பள்ளிவாசலில் தொழுகைக்கான அழைப்பு.பாதை கடலுக்குள் ஒரு பச்சை மினாரா நோக்கிச் செல்கின்றது.சிகரி மார்க்கம் கடல்பற்றிய புதிய சித்திரங்களை மார்க்கங்களை நிறுவும் கதைகளின் திரட்சியாக இருக்கிறது.கதைகள் ஒன்றின்மீது தெரிந்தவாறும் தெரியாதவாறும் அசைவுகளை ஏற்படுத்துகின்றன.இங்கு அசைவுகளுக்குப் பஞ்சமில்லை. ஆழ்ந்து வாசிப்பவர்கள் ஆராயந்து அறிய விரும்புபவர்களுக்கான அழகான திறப்புகள் நிறையக் கிடக்கிறத.ஆஸ்திரேலியாவில் நாளென்று ஒரு கடற்கரைக்கு செல்வதாக இருந்தால் ஒருவர் அங்குள்ள எல்லா கடற்கரைக்கும் சென்று வர இருபத்திஏழு ஆண்டுகள் ஆகுமென்று வாசித்திருக்கிறேன். இப்படியானதொரு பலமுனைகளைக் கொண்ட கதைஉலகமாக சிகரி மார்க்கம் அமைந்திருக்கிறது.
     ஏழாவது வானத்தில் வீடு என்று ஒரு சிறுகதை, கடல்களின் கோமான் தூதர் ஹிள்ரு உப்பு சமுத்திரத்தின் வழியே ஞானத்திரவியங்களை அள்ளித் தருபவர்.ரியாஸும் முஹப்பத்தானவர் என்பதனால் ஞானத்திரவியங்கள் கொஞ்சமல்ல நிறையவே  வசப்பட்டிருக்கிறது.எழுத்துகள் வெள்ளமென பெருக்கெடுக்கும் இக்காலத்தில் அவதானிக்கும் புறஉலகை தனது அகஉலகத்தால் அணுகும் தன்மையில் வெற்றியடையும் ரியாஸ் தனது எழுத்துகளை முந்திய எந்த சாயலுமில்லாமல் பார்த்துக் கொள்வதும் சிறப்பானது.கதை கலைப்பு,விரிவடைந்த எல்கைப் பயணம்,தனது நம்பிக்கையின் வழியேயான தென்மங்களின் இணைவு என பன்முகத்தன்மை கைக்கொண்ட விளையாட்டு நீண்ட பரப்புக்கு நகர்த்துகிறது.ஒருவகையில் வாசகனை வேறு வேறு பகுதிக்கு துரத்துவதும் கூட இலக்கியத்தின் உயர்தன்மைதான்.கதைக்கு வெளியே அவன் தேடவேண்டிய பேருலகின் திறப்புகளை,சாம்பிராணிப் புகை பனிபோல் பரவுவதைப் போலவும் உள்ளுக்குள்ளிருந்த ஒரு மிருகத்தின் கர்ஜனையாகவும் செய்ய இயலுகிறது.
           புல்வெளியில் பொசுக்கென இறங்கி ஒரு கால்நடை மேய்வதுபோலவும் மேயலாம். அவ்வாறான மேய்தலில் வயிறு நிரம்பும்.இன்ன சக்தியுள்ள உணவு என்று அறியாமல் உண்டாலும் அதன் சக்தியை உடல் கிரகிக்கதானே செய்யும்.அறிந்து கொள்ளும் போது அது மேலும் அலாதியானது.வாசிப்பும் ஒருவகையில் இப்படித்தான்.அது தரும் புதிய திறப்புகளில் ஏதுவாகப் பயணித்தால் பேரானந்த அனுபவமாக மலரும் "சிகரி மார்க்கம்" இதனை கதையாகவும் கொள்ளலாம் இதுதரும் புதிய திறப்புகளின் வழி பேரானந்தம் பெரும் தடமாகவும் கொள்ளலாம்.எல்லா கதைகளிலும் இதன் அம்சங்கள் மறைக்கப்பட்டும் வெளிப்படுத்தப்பட்டுமிருக்கிறது. "மண்ணறைக்குச் சென்றுவிட்டவர்களின் நினைவாக இருக்கும் பிரதியை,வாப்பாவின் வற்புறுத்தலால் இடுப்பளவு தண்ணீரில் கடலில் விட்டுவிட்டு வந்தேன்.குர்ஆன் பிரதி மீண்டும் மீண்டும் கரையில் செங்குத்தாக ஒதுங்கி நின்றது.ஏழாவது முறை கடலில் விட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் வீடு வந்து சேர்ந்தபோது, வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்த இலந்தை மரத்தின் மீது குர்ஆன் பிரதி தொங்கிக்கொண்டிருந்தது.
நெஞ்சோடு பிரதியை அணைத்துக் கொண்டேன்.'பெத்தம்மா....'
'இறைவா, தூயர் ஹிள்ரு பொருட்டால் என் சிரமங்களின் நன்மையை புலன்களுக்கு உணர்த்துவாயாக ! நான் ஒதுங்கிக் கொள்ள ஒரு கூரை வழங்குவாயாக! கூரையின் கீழ் ஞானக்கோப்பையைத் தருவாயாக ! உன்னிடத்தில் சேர்க்கும் ஒரு கப்பலை இக்கரைக்கு அனுப்பி வைப்பாயாக ! கடலைப் பார்த்துப் பிரார்த்தித்தேன்.
இவ்வாறாக கதை விரிக்கும் உலகம் ஒரு ஞானப்பரப்புக்கான மெல்லிய பாலத்தைச் சமைப்பதை அவதானிக்க இயலுகிறது.சிகரி மார்க்கம் பழையது எதுவும் போல இல்லாத புதிய அனுபவம்.தமிழில் கடல்சார் இஸ்லாமிய வாழ்வின் பதிவுகளின் ஆரம்ப புள்ளியும் கூட.ஒன்பது கதைகளும் விரிக்கும் உலகிற்கு ஒரு தொடர்புகள் தென்பட்டாலும் இதன் வாழ்வும் வரலாறும் நம்மை நீண்ட மௌனத்திலாக்கி பின்னர் பெரும் உரையாடலுக்கு இட்டுச் செல்பவை.கே.முகம்மது ரியாஸுக்கு அன்பும் வாழ்த்தும்.

சீர்மை வெளியீடு
பக்கம் 135
விலை ரூ 175

"உலகியல் அறிவு " தோழர் காமுவின் ஆஸ்திரேலிய போஸட் அறிமுகம்

      ஒவ்வொரு முறையும் நம்மை புதுப்பிக்கும் அழகிய வேலையைப் பயணங்கள் செய்கின்றன. பயணத்தைப் பற்றி நினைப்பதும் பயணத்தைப் பற்றி பேசுவதும் புத்துணர்வளிக்கும் செயல்களில் உள்ளவை.இதல்லாது பயணத்தைப் பற்றி எழுதுவது என்பது மானுட விசாலத்தின் மீது  புத்தொளி பாய்ச்சும் ஆவணமாகும்.கவிஞர் கோவை காமு அவர்களின் 'ஆஸ்திரேலியா போஸ்ட் 'என்கிற இப்பயண அனுபவ நூல் ஆவணங்களின் வரிசையில் இடம்பெற்றிருக்கும் அழகிய புதிய ஆவணமாகும்.

           1888ல் சேலம் பகடலு நரசிம்ஹலு நாயுடு துவங்கி புகழ்பெற்ற பயண இலக்கியங்களைத் தந்த நெ.து.சுந்தரவடிவேலு,ஏ.கே செட்டியார் வரிசையில் எழுத்தாளர் சோமலே என்கிற சோம.லெட்சுமணன் 1950ல் ஆஸ்திரேலியாவில் ஒருமாதம் என ஒரு பயண நூலைத் தமிழுக்கு வழங்கியிருக்கிறார்.1972க்குப் பிறகு எழுத்தாளர் மணியன் சிங்கப்பூர் மலேசியா ஆஸ்திரேலிய பயண அனுபவங்களை எழுதியிருக்கிறார். ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம் ஆஸ்திரேலியா பயண அனுபவங்கள் என்றும் 2012ல் பி.எம்.இராமசாமி ஆஸ்திரேலியாவில் அறுபது நாட்கள் என்ற ஒரு பயண நூலைப் படைத்திருக்கிறார்.இந்த நீண்ட தொடர்ச்சியின் வரிசையில் கோவை காமு அவர்கள் இப்போது ஆஸ்திரேலியா போஸ்ட் வாயிலாக தனது சிறப்பான பார்வையை ஐம்பது கட்டுரைகளாக எழுதிய இந்த நூல் சமீபத்திய பயண இலக்கிய நூற்களில் மிக முக்கியமான புதிய வரவாக இருக்கிறது.ஆஸ்திரேலியா நாட்டின் பன்முக தன்மையை அப்படியே எடுத்துவரும் காமுவின் எழுத்து நமக்கு படிப்பினையாக அமைகிறது என்பதை உறுதியாகக் குறிப்பிடலாம்.
         ஆதியிலிருந்தே மனிதன் இடம் விட்டு இடம் நகரும் பயணியாகத்தான் இருந்திருக்கிறான்.இப்படி நகர்கிறவர்களிடமிருந்தே மானிட சமூகம் புதியவைகளை கற்றுக் கற்று தேர்ந்திருக்கின்றன.பயணிகளால்தான் புதிய இடங்கள்,புதிய கலாச்சாரங்கள், இப்படி எல்லா புதியவைகளும் பரஸ்பரமாக வந்தடைந்தும் சென்றடைந்தும் காலங்கள் கடந்திருக்கிறது.கோவை காமு அவர்கள் இப்போது புதிய ஒன்றை வந்தடையச் செய்திருக்கிறார்.இது காலத்தின் அவசியமான ஒன்று.எப்படி அவசியமான ஒன்று என்பதைத்தான் இந்த ஐம்பது கட்டுரைகளும் நம்மோடு கதைக்கின்றன.
            காமு அவர்கள் தகவல்,செய்தி, கலாச்சாரம் ,தனித்துவமான தன்மைகளடங்கிய வாழ்வியல் இயல்புகள்,அரசு மற்றும் அரசமைப்பு முறை,உறவும் உறவுச்சிக்கலும், இணைந்து வாழுதல் மற்றும் தன்பாலின ஈர்பார்களின் சுதந்திரமென ஏராளமான பொருண்மைகளில் ஒரு தொடர் உரையாடலை நிகழ்த்துகிறார். இதில் வாசகனாக பங்கெடுக்கும் நாம் ஒப்பீடு செய்து பார்பவர்களாகவும் மலைப்பவர்களாகவும் அல்லது அப்படியான கட்டங்களை இங்கு நிறுவும் அகமன விருப்பத்தை விவாதிப்பவர்களாகவும் பயணிக்கிறோம்.அவர் பயணத்தில் நம்மை இணைக்கும் இந்த பயணநூல் ஒரு கல்வி நிலையத்தின் கற்பித நுட்பங்களை நமக்குள் மெல்லக் கடத்துகிறது.மனித சமூகம் ஒன்றுக்கொன்று முகம் பார்க்கும் கண்ணாடியாக இருக்கின்றன. செம்மைப்படுத்துதல் தொழில் விஞ்ஞானம் பொருளியல் மேம்பாடு காலநிலை என இன்று சர்வதேச சமூகத்துக்கு சில பொது குணாம்சங்கள் இருப்பதனால்  நாம் சர்வதேச சமூகத்தினைக் கற்பது காலத்தேவையாக இருக்கிறது.நாம் இதனை பாடசாலையின் மாணாக்களைப் போல கற்க இயலாது .எனவே இப்படியாகத் திறக்கும் தனித்தனி வாசல்களின் வழியேதான் நாம் நம் பார்வையை விசாலப்படுத்த இயலும்.இன்றைய நவீன உலகின் போக்கில் இன்று தொடர்பு என்பது எல்லாவகையிலும் சாத்தியம் என்றாலும் காமூ சுவீகரிக்கும் சில நுட்பங்களை பொதுவான தன்மையால் கொண்டுவர இயலுமா என்றால் அது சாத்தியமற்றது.எனவே இந்த பயணநூல்கள் நமது அறிவு பரப்பில் சாத்தியமற்ற ஒன்றையே சாத்தியப்படுத்துகிறது. ரோடு நன்றாக இருக்கும் பூங்காக்கள் அழகாக இருக்கும் கடற்கரைகள் கவர்ச்சியானவைகள் என்ற பொது பிம்பங்கள் கடந்து காமு சாலையில் சும்மா நிற்கும் போது ஒரு ஆஸ்திரேலிய குடிமகன் உதவ முன் வருகிறான்.ஒரு மனிதர் சாலையில் நிற்கிறார் ஒருவேளை அவருக்கு உதவி தேவைப்படலாம் என்ற எண்ணம் அங்கு வளர்க்கப்பட்டிருக்கிறது.நாம் ஒதுங்கிப் போய்விட வேண்டும் என்ற போதனையைக் கைக்கொண்டிருப்பவர்கள்.இங்கே காமு பதியும் வாழ்வு நமக்கு மாற்றுப் போதனையைத் தருகிறது.தனிமனித சுதந்திரம் என்பதன் வரையரை இந்த உலகின் சிறிய கண்டமாக இருக்கிற ஆஸ்திரேலிய வாழ்வின் வாயிலாக நமக்கு ஆவணப்படுத்துகிறார்.இந்த நூலுக்கு உள்ளேயும் வெளியேயும் நம்மை தேடத் துரத்தும் ஒப்பனையற்ற எழுத்து மதிப்புக்குரிய கவிஞர் காமுவினுடையது.

          அவர் நூலில் குறிப்பிடுகிறார் அரசாங்கத்தைப் பொறுத்தவரை கடவுள், மத,நம்பிக்கையில் எந்தப் பாகுபாடும் காட்டுவதாகத் தெரியவில்லை. குறிப்பாக பள்ளிகளில் குழந்தைகள் அவரவர் விருப்பப்படி மத அடையாளங்களை அணிந்துவரலாம் என்று அறிவிப்பு செய்திருக்கிறார்கள்.

1901ல் இயற்றப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் 106வது பிரிவு, அரசு, மதவிவகாரங்களில் தலையிடக்கூடாது. எந்த மதத்தையும் சாராமல் நடுநிலையோடு (State Neutrality) இருக்க வேண்டும் என்று சொல்கிறது. அந்த வகையில் இந்நாடு மத நடுநிலை நாடாகவும் திகழ்கிறது.இந்த செய்தி பெரும் படிப்பினையை சொல்லத்தருகிறது.

   
           பயணங்களின் வழியே நிகழும் உலகியல் அறிவு என்பதை நாம் பயணமல்லாத இன்னொன்றிலிருந்து கற்க இயலாது.எனவே பயண இலக்கியம் மானிட வாழ்வை மேலும் செம்மையான பகுதிக்கு நகர்த்தவல்லது.ஆஸ்திரேலிய நாடு பற்றி காமு எழுதியிருக்கும் இந்த பயண அனுபவ நூல் நம்மை செம்மையான ஒரு பக்கத்துக்கு நகர்த்துகிறது.இது ஒரு புள்ளி.இந்த புள்ளி மேலும் விரிவுபட வேண்டும். எழுத்தாளர் கவிஞர் கோவை காமு மேலும் இதனை விரிவாக்குவார்.


                           அன்பும் வாழ்த்தும்
                          எம்.மீரான் மைதீன்.

Monday 11 December 2023

"ஒரு அழகிய கனவுசீன் கதவு"

நூல் அறிமுகம்: சேலம் ராஜா

எதையாவது ஓரிரு வார்த்தைகளை எழுதுவதும் பின்பு அழித்துவிடுவதுமாக, திருவாழியை வாசித்ததிலிருந்து மனம் ஓர் உள்ளே வெளியே விளையாட்டை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. காரணம் அது வாசக நெஞ்சின் இருண்ட பகுதிகளையும்  தன்னுடைய பொருள் புதைந்த, கருணைமிக்க, எளிய மனங்களின் ஏகபோக அன்பினால் ஒரு வெளிச்சத்தை இழையோட விட்டிருப்பதுதான். இன்றெல்லாரும் நவீன காலத்தின் உச்சத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால் பழைமையான உணவு வகைகள், மண்பாண்ட சமையல், இயற்கைமுறை விவசாயம், பசுமை நடை, ஆற்றுக்குளியலென காலத்தில் பின்சென்றவற்றைத் தேடி ஓடுபவர்களாக மாற்றப்பட்டிருக்கிறோம். இதுவொரு உணவுச்சங்கிலித் தொடர்போலத்தான். கற்காலத்திலிருந்து தொடங்கி நவீனமயப்பட்டு பிற்பாடு கற்காலத்தை நோக்கியே திரும்புவது. இதுதான் என்றுமே மாற்றமுடியாத நியதியும்கூட. இன்னும் ஒரு ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு இவ்வுலகம் எப்படி இருக்குமென்பது இப்பொழுது இருக்கும் நமக்குத் தெரியப்போவதில்லை. ஆனால் இந்தக் காலச் சுழற்சியில் நாமும் சிறு துரும்பாகச் சுழன்றுகொண்டிருப்போம் என்பது உண்மை. இதிலுள்ள ஆச்சரியப்படும் ஒருசில உண்மைகள் என்னவென்றால், திடீரென திருவிழாக்கூட்ட நெரிசலில் நாம் தொலைத்துவிடுபவை / விடுபவர்களை இந்தக் காலம் மீண்டும் ஒரு புள்ளியில் நம்மிடமே அல்லது தொலைந்துபோன இடத்திலேயே வீசிச் செல்வதுதான். அப்படியாக, ஒருசிறு நிலத்தில் வாழும் சில மனிதர்களின் பெருவாழ்வே இந்தத் திருவாழி. 

இந்தப் பிரபஞ்சத்தோடு ஒப்பிடுகையில் மனிதன் என்பவன் சிறு துரும்பில் கால்பகுதிகூட இல்லை. ஆனால் மனிதகுலத்திலிருந்து  எதிர்கொண்டு பார்க்கையில் அவனுடைய வாழ்வென்பது எவ்வளவு ஆச்சரியமாகவும் மலைப்பாகவும் எத்தனையெத்தனைத் திருப்பங்கள் பொதிந்துகிடப்பதாகவும் இருக்கிறது! திருவாழி என்பது வளர்ந்துவரும் ஒரு சிறு நகரிலுள்ள ஏழு கடைகள் அடங்கிய வணிகக் கட்டிடம். இத்தனைக்கும் அந்தப் பெயர் அதற்கெனப் பிரத்யேகமாக வைக்கப்பட்ட பெயரல்ல. அது அதனுடைய உரிமையாளரின் பெயர். அவர் வசிப்பது வேறொரு ஊராக இருப்பினும் தன்னுடைய மாமியார் வீட்டுவழி கிடைத்த நிலத்தில் அந்த வணிக வளாகத்தை நிறுவுகிறார். பிறகு அதில் கடை வைத்துத் தொழில் செய்து பிழைக்க வரும் மனிதர்களும் அவர்தம் வாழ்வுமே இந்த நாவல் முழுக்க விரியும் பிரதானக் கதைக்களம். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளில் தொடங்கி இரண்டாயிரத்துப் பதினைந்து வரை, உத்தேசமாக நாற்பத்தி ஐந்தாண்டு காலம், பல்வேறு மனிதர்களினுடைய வாழ்வை உள்ளடக்கியது. ஒரு தனி மனிதனின் பாதி ஆயுள்; அதைச் சுணக்கமில்லாது சொல்லி முடிப்பதே ஒரு பெரிய வேலை. ஆனால் இந்த நாவலில் பிரவேசிக்கும் இருபதிற்கும் மேற்பட்டவர்களின் வாழ்வியலை அன்போடும் பரிகாசத்தோடும் அதேசமயம் சலிப்பேதும் வந்துவிடாதபடி நாஞ்சிலின் பச்சையான புழங்குமொழியில் ஐந்தாறு வருடப் பார்வையாளனாக விவரித்திருக்கிறார் மீரான் மைதீன். 

காட்சிகளாக விரிவடைகையில், மேற்கிலிருந்து கிழக்காக ஐந்து கடைகளும்  கிழக்கிலிருந்து தெற்காக இரண்டு கடைகளுமாக ஒரு ‘எல்’ வடிவத் தோற்றமுடையது திருவாழி கட்டிடம். பின்புறமாக பொன்னம்மா மனையும் எதிர்ப்புறமாக  கிருஷ்ணனின் டீக்கடையும் அதையொட்டி நீளும் பிள்ளையின் மனையுமாக, ஒரு வட்டாரத்தை உள்ளடக்கியது அவ்விடம். இதில் கிருஷ்ணன் கடையின் பக்கவாட்டில் உள்ள சிமெண்ட் பெஞ்சும் சில டிராக்டர் டயர்களுமே பல முக்கிய முடிவுகளெடுக்கப்படும் இடம். கதையின் தினசரி தொடங்குவது கிருஷ்ணணின் டீக்கடையிலிருந்துதான். திருவாழி கட்டிடம் எழும்பிய புதிதில் ஐந்தாம் எண் கடை பட்டணம் சாயிப்புக்காக ஓட்டல் நடத்தத் தரப்படுகையில், அதில் வேலை செய்தவர்தான் இந்தக் கிருஷ்ணண். அப்போது அவருடன் வேலைபார்த்து மரித்துப்போன மைதீன் கண்ணுவின் மகன் அன்சாரிதான் திருவாழி கட்டிடத்தின் மேற்பார்வையாளன்.  அனைத்துக் கடைகளிலும் மாத வாடகை வசூலிப்பது, வருட ஒப்பந்தப் பத்திரத்தைப் புதுப்பிப்பது, திருவாழி வருகிறார் என்றால் அவரை அழைத்துவர, பின்பு போய் பஸ் வைத்துவிட என்கிற பணி அன்சாரிக்கு. ஓர் இருபத்தைந்து வயதுடைய இளைஞன், அறுபதிலுள்ள கிருஷ்ணண் ஆகிய இருவரைத் தொட்டுதான் தினசரி கதைக்களம் விரியும். உடன் வேலை பார்த்த மைதீன் கண்ணுவின் மகன் என்பதால் தன்னுடைய மகன் போலவே கிருஷ்ணன் பரிகாசம் காட்டுவார். அன்சாரியும் எல்லாருக்கும் இணங்கிப்போகிற குணமுடையவன்தான்.  

பட்டணம் சாயிபு, ஓட்டல் நடத்திய காலத்தில் கணவனால் கைவிடப்பட்டு இரு குழந்தைகளோடு சூளாமணி என்கிற  பெண் சாயிபின் கடைக்கு வேலை கேட்டு வருகிறாள். சாயபு யாருக்கும் தவறுதலாகக்கூடத் தீங்கிழைக்காத நபர். வேலையும் தருகிறார். எல்லாம் நல்லபடியாகச் செல்லும்போது சாயிபின் மனைவிக்கு சூளாமணி மீது சந்தேகமெழ, அவளை விளக்குமாற்றால் அடித்துத் தூற்றி, இல்லாத வசவுகளைப் பேசி வெளியே அனுப்பிவிடுகிறாள். அதன்பிறகு தண்ணீர் பிரச்சனையென எதேச்சையாக சாயிபினாலும் ஓட்டலை நடத்தமுடியாமல் போய்விட,  அதிலிருந்து அந்த ஐந்தாம் எண் கடையை எடுத்தவர்களுக்குத் தொடர்ச்சியாக விபத்துகள் ஏற்பட்டு இடது கால் முறிய, அந்தக் கடையில் ஏதோவொரு அமானுஷ்யம் இருக்கிறதென ஒரு பேச்சு உலவத்தொடங்குகிறது. ஆறேழு இடது கால்களின் முறிவுக்குப் பிறகு, ஏரியாவில் ஐந்தாம் எண் கடையின் பேச்சுக்கு இறக்கை முளைத்துப் புற்றீசல் கூட்டாமாகி அவ்வூர் கடந்தும் ஐந்தாம் எண் கடையின் கட்டுக்கதைகள் பிரபல்யமடைகின்றன. என்னதான் நாகரீகத்தில் மனிதன் தெளிவான சிந்தனையாளனாக ஆகிவிடினும் உருவமற்றும் இலக்கற்றும் பறந்துகொண்டிருக்கும் இதுபோன்ற கதைகள், லேசாக அசைத்துதான் பார்க்கின்றன. நெடுங்காலமாக அங்கேயே திருவாழிக் கட்டடத்தின் ஒவ்வொரு மாறுதல்களையும் பார்த்துவந்த கிருஷ்ணண்கூட, இது முன்பு வேலை பார்த்த சூளாமணியின் சூழ்ச்சியாகத்தான் இருக்குமென நம்பிவிடும் ஆளாகிறார். 

எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் எனும் திராணி உடையவனாக ஆறேழு இடது கால்களுக்குப்பின் சிலாங்கா என்பவன் வந்து அன்சாரியிடமும் திருவாழியிடமும் பேசி, தாரை தப்பட்டையோடு தடபுடலாக ஐந்தாம் எண் கடையில் ஒரு எலக்ட்ரிக்கல் கடையைத் தொடங்குகிறான். கடை தொடங்கிய அன்றே அவனுக்கும் விபத்து நேர்ந்து இடதுகால் முறிகிறது. அக்கடை பற்றிய புற்றீசல் பேச்சுக்கு அது மேலும் பெட்ரோல் ஊற்றியதுபோல ஊரெங்கும் பறந்து பற்றி எரிகிறது. அன்சாரியும் கிருஷ்ணணும் திருவாழியும்கூட, அந்தக் கடையில் ஏதோ மாந்ரீக சக்தி உள்ளதாக நம்பத் தொடங்குகிறார்கள். பின்பு  கிருஷ்ணணின் ஏற்பாட்டால் ஒரு மாந்ரீகன் வருகிறான்; கழிப்பு செய்து சூன்யம் நிவர்த்தியாக்கப்படுகிறது. பிறகு அக்கடைக்கு ஜீனா வருகிறான். இப்படியாக இறந்தகாலம் முதல்  நிகழ்காலம் வரை ஊடாடி ஊடாடி கதைக்களம் விரிகிறது.  

முதலாம் எண் கடை பூபாலன் என்பவனுடைய ஜெராக்ஸ் கடை. இரண்டாவதாக பேபி குட்டியின் நகை அடகுக் கடை, மூன்றாவதாக வேலுமயிலின் டிரம்ப்பட், நான்காவது சிந்துவின் பியூட்டி பார்லர், ஆறாவது ராஜகுமார் அண்ணாச்சியின் மளிகைக் கடை, ஏழாவது சலாமின் டெய்லர் கடை. இப்படியாக, பல மனிதர்களுடைய வாழ்க்கைப் பாடுகளைத் தாங்கியிருக்கிறது திருவாழி கட்டிடம். இதிலிருக்கும் ஒவ்வொருவருக்கும் பல கதைகள் இருக்கின்றன. இதில் சிந்து, விவாகரத்தான பேரிளம் பருவத்துடையவள். அவளுக்கு அன்சாரி மீது இன்னதென வரையறுக்கவியாலத ஒரு மோகம் இருக்கிறது. அவனுக்கும்தான். ஆனால் அதுவெல்லாம் தூரத்துப் பச்சையின் அளவுதான். வண்டிச்சக்கரம்போலச் சுழலும் இந்தக் காலம், தன்னகத்தே வைத்துக்கொள்ள மனிதன் நினைப்பவற்றைத் தொலைவில் விசிறிவிடுகிறது. தொலைக்க நினைப்பதை அருகிலேயே இருக்குமாரு பார்த்துக்கொள்கிறது. ஆனாலும் மிக விசித்திரமானது. எங்கெங்கோ அலைக்கழிக்க வைத்தபின் அவன் விரும்பியதை அல்லது அவனுக்குச் சேரவேண்டிய ஒன்றை அவனுக்கே இறுதியில் தந்துவிடும் என்பதே நிதர்சனம். ஐந்தாம் எண் கடையின்படி பார்த்தால் இது மாய மந்திர சித்துவிளையாட்டின் கதையாகத் தோன்றும். ஆனால் உண்மை வேறு. மனிதனின் பெருவாழ்வில் அவையெல்லாம் வந்துபோவதும் பலரும் அவற்றைக் கடந்து வருவதும் இயல்புதானே. அப்படி மிக இலகுவாகக் கடந்துவிடும் இடங்கள் அவை. அதன்பிறகு பார்த்தால், மனிதர்கள் தங்களின் இருப்பை இவ்வுலகில் தக்கவைக்கப் படும்பாடுகளே அதிகமாக நிறைந்திருக்கின்றன.  

அன்சாரி தொடங்கி அவ்வப்போது பெரிதும் பின் விவரணைகளற்றுத் தொலைந்துபோகும் குச்சான் வரை, எல்லாருக்குப்பின்னும் வாசிப்பவர்கள் யாரும் எதிர்பாராத துயரமான நிகழ்வுகள் ஆலைக்கழிவுகளைப்போலக் குவிந்து கிடக்கின்றன. அதுபோலவே மிக இயல்பாக நம்மோடு ஒட்டிக்கொண்டு வரும் மனிதரிடத்தும் உள்ளுக்குள் பொறாமையும் பகைமையும் நிறைந்திருக்கின்றன என்பது வாழ்வின் அபத்தமான விசித்திரம். இப்படிப் பலவாறான ஏற்ற இறக்கமுள்ள கதை மாந்தர்கள் இருப்பினும், எங்கோ இருந்தபடி எல்லாரின் குணங்களையும் பிரித்து அறிந்து வைத்திருப்பவராக இருக்கிறார் திருவாழி. ஏகபோக சொத்துக்கள் இருந்தும் அதை இவ்வூரிலிருந்தபடியே ஆண்டு அனுபவிக்க மகன்கள் ஒத்துழைக்காத வேதனையே அவரை உருக்குகிறது. அவரைப் பொறுத்தவரை இந்த நிலமும் இங்கிருக்கும் மக்களும்தான் அவருக்கு நகமும் சதையும். பூர்வீகத்தை விட்டு வெளியேறிப்போக இஷ்டப்படவில்லை மனது. தனக்குப் பிறகு பிடிமானற்று நிற்கும் அன்சாரி தடுமாறிவிடக்கூடாது; அவனுக்கு ஏதாவது நல்லது செய்து கரையேற்றிவிட வேண்டுமென்கிற எண்ணம் ஒருபுறம் அவரை மேலும் வதைக்கிறது. அதுபோலவே அனைவருக்கும் ஒவ்வொரு ஆசை; அதில் பகுதி ஆசைகள் இந்த மீதமுள்ள ஜீவிதத்தைக் கடத்த பொருள் சேர்த்திவைப்பதாக இருப்பதுவே. அதற்குள்ளாக சாதி நிமித்தமும் மதத்தின் நிமித்தமும் ஏழ்மையின் நிமித்தமும் ஒருவன் உயிர்வாழ எவ்வளவோ முட்டுக்கட்டைகள் வந்துவிடுகின்றன. மொத்தமாகச் சொல்லப்போனால் வாழும் இந்தச் சிறிய வாழ்வில் கதைகள் இல்லாத மனிதனுமில்லை; ஆசையில்லாத மனிதனுமில்லை என்பது மட்டுமே உண்மை. ஆனால் அதை அன்போடும் கருணையோடும் முன்கொண்டு செல்வதில்தான் இவ்வுலகின் சக்கரம் இயங்குகிறது. அதன்படி அறத்தின்பால் ஒருவன் நடந்துகொள்ளும்போது அவன் முன்பு இழந்தவற்றை வேறு வடிவிலோ எப்படியோ மீண்டும் இயற்கையின் நியதி அவனிடமே அதை ஒப்படைத்துச் செல்கிறது. அன்சாரியும் பட்டிணம் சாயிபும் கிருஷ்ணணும் சிலாங்கா, மனோகரன் வாத்தியார் போல சுயநலத்தோடில்லாமல் அகமனதோடு உரையாடியபின் நல்லவற்றின் பக்கமே நிற்பவர்களாக இருக்கிறார்கள். இந்தப் போட்டியான வாழ்வை எதிர்கொள்ள முடியாமல் அன்சாரி துவண்டுபோகும்போதெல்லாம் அவனுடைய உம்மாவின் வார்த்தைகள் அவனைத் தேற்றிக்கொண்டுவருபவையாக இருக்கின்றன.  

ஒரு தனி மனிதனின் வாழ்வில் நடப்பதை எழுதுவது ஓரளவுக்கு சுலபம். ஆனால் இந்த ஏழு கடையின் மனிதர்கள் மட்டுமின்றி இவர்களுக்கு முன் அங்கிருந்தவர்கள், அவர்களின் சுற்றப்பாடுகள் தொடங்கி இடையில் வந்துபோவோர் முதற்கொண்டு அந்நிலத்தின் தகவமைப்பு, இயற்கை,  மலை, மரம் என அப்படியே கண்முன் திரையிட்டுக் காட்டியிருக்கிறார் மீரான் மைதீன். அங்குள்ள ஏழு கடைகளை வர்ணித்திருப்பதிலேயே வாசகன் மனதில் காட்சிகள் விரிவடையத் தொடங்கிவிடுகின்றன. அதிலேயே ஒட்டுமொத்தக் கட்டடத்தின் வரைபடமும் மனத்தில் பதிந்துவிடும். மேலும் மைனர் சலீம் கடை சிந்தியாவிற்கும் அண்ணாச்சிக் கடை அகிலனுக்கும் டிரம்பட் கடை பிலிப்பிற்கும் சிந்துவிற்குமென நாவல் முடிந்தபிறகும் பெருங்கதைக்கான கிளைகள் நீண்டிருக்கின்றன. அதுவொரு வாசகப் பார்வைக்கான வெளியாக ஆசிரியர் திறந்துவிட்டிருக்கிறார் போலும்.  

சிந்துவின் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த பியூட்டி பார்லரை மிக உவமையோடு விவரித்திருப்பார். அதிலொன்றுதான் அழகிய வேலைப்பாடு மிகுந்த உள்அறைக் கதவு. அதை ‘கனவுசீன்’ கதவு எனும் சொல்லாடலில் குறிப்பிட்டிருப்பார். படிக்கும்போது ஒருமாதிரி சிரிப்பு வந்தாலும் பிறகு அதுவொரு பரஸ்பர அடையாளமாக ஒட்டிக்கொள்ளும். ஒட்டுமொத்த நாவலில் சிந்து வருமிடங்களிலெல்லாம் கனவுசீன் கதவும் வந்துகொண்டேயிருக்கும். அவள் அதை விலக்கிவிட்டுப் பார்ப்பதே சினிமாவின் ஒரு அழகிய காட்சிபோலத் தோன்றும். முழு திருவாழி நாவலுமே காதல், பாசம், பகை, பணம், ஏக்கம், துக்கம், சந்தோசமென எல்லாமே பக்கத்திற்குப் பக்கம் மாறும் ஒரு அழகிய கனவுசீன் கதவுதான். வாழ்வில் ஒரு மனிதன் படிக்கத் தவறக்கூடாத நாவல் இது. 

Saturday 2 December 2023

வாழ்வின் கோலங்கள்'



வாழ்வின் கோலங்கள்'
மீரான் மைதீனின் நாவல் ’அஜ்னபி’
பாவண்ணன்



ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு திண்ணை இணைய இதழில் மீரான் மைதீன் எழுதிய ஒரு சிறுகதையைப் படித்துவிட்டு, அதைப்பற்றி பல நண்பர்களிடம் திரும்பத்திரும்பப் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. அக்கதையின் பெயர் ’மஜ்னூன்’. அரபுமொழியில் அது ஒரு ஏளனச்சொல். பைத்தியம் என்பதுபோல. அரபு சிறையில் அகப்பட்ட ஒருவன், விடிந்தால் தண்டனை என்கிற நிலையில் தன் பிரியமான மனைவிக்குக் எழுதும் கடிதம்தான் அச்சிறுகதை. வேலை தேடிச் சென்ற அரபுநாட்டில், உரிய பதிவுச்சீட்டு இல்லாமல் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு தப்பித்தப்பி ஓடி, இறுதியில் காவல்துறையிடம் அகப்பட்டு சிறைப்பட்டுவிடுகிறான். அரபுநாட்டுக்கு வருவதற்காக அவன் பட்ட துன்பங்கள், அங்கு வந்தபிறகு அவன் பட்ட துன்பங்கள் அனைத்தையும் ஒருவிதமான சுயஎள்ளல் மொழியில் தொகுத்துச் சொல்லும் விதமாக இருந்தது அச்சிறுகதை. பொருளீட்டுவதற்காக ஒரு மானுடன் படும் வேதனைகளும் அவமானங்களும் எத்தகையவை என்பதை நுட்பமான மொழியில் கதை விரிவாக முன்வைத்திருந்தது. அயல்மண்ணில் குப்பை வாகனங்களில் திருட்டுப்பயணம் செய்து, அலங்கோலமான தோற்றத்தில், நகருக்குள் நடமாடும் அவனைத்தான் அந்நாட்டுச் சிறுவர்களும் பெரியவர்களும் பைத்தியம் பைத்தியம் என ஏளனம் செய்து சிரிக்கிறார்கள். விரட்டுகிறார்கள். கல்லால் அடிக்கவும் செய்கிறார்கள். யார் பைத்தியம், எது பைத்தியக்காரத்தனமானது என்கிற விவாதத்துக்கான வித்தை விதைத்துவிட்டு அச்சிறுகதை முடிந்திருந்தது. மேலும் சில ஆண்டுகள் கழித்து அவர் எழுதிய ’கவர்னர் பெத்தா’ என்கிற சிறுகதையைப் படித்தேன். அவருக்கென ஒரு சிறுகதைமொழி அழகான முறையில் கைகூடி வந்திருப்பதைக் கண்டேன். என் மனத்தில் நான் குறித்துவைத்திருக்கும் சிறந்த சிறுகதையாசிரியர்கள் பட்டியலில் அவர் பெயரை அன்றே குறித்துக்கொண்டேன். ’ஓதி எறியப்படாத முட்டைகள்’ படைப்பு அவரைச் சிறந்த நாவலாசிரியராகவும் முன்வைத்தது. அடுத்ததாக இப்போது ‘அஜ்னபி’ நாவல் வந்துள்ளது. கடந்த பதினாறு ஆண்டுகளாக எழுதி வரும் அவருடைய சீரான வளர்ச்சி மகிழ்ச்சியளிக்கிறது.
’அஜ்னபி’ ஒருவகையில் மஜ்னூன் போன்றவர்களின் கதைகளைத் தொகுத்து முன்வைத்த முயற்சி என்றே தோன்றுகிறது. விசா தாளுக்காக தன் சக்திக்கு மீறி கடன் வாங்கிக் கொடுத்துவிட்டு, பாலைவன தேசத்தில் ஒட்டகம் மேய்ப்பவர்கள், ஆடுகள் மேய்ப்பவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், வாகனங்கள் ஓட்டுகிறவர்கள், சின்னச்சின்ன ஏவல்வேலைகள் செய்கிறவர்கள், தையல் தொழில் செய்பவர்கள், கட்டடத்தொழில் செய்பவர்கள், கறிக்கடையில் வேலை செய்பவர்கள், உணவுவிடுதிகளில் வேலை செய்பவர்கள் என நாவலில் இடம்பெறும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையில் மஜ்னூன் போன்றவர்கள். ஆனால், அவர்கள் தாயக மண்ணில் வாழ வேறு வழியில்லை. தன் குடும்பம் பசியின்றி உணவுண்ணவும் சகோதரசகோதரிகளை கைதூக்கிவிடவும் தேவையான பணத்தைச் சம்பாதிக்க அவர்கள் அரபுதேசம் செல்கிறார்கள். ஒரு காலத்தில் தேயிலைத்தோட்டத் தொழிலாளியாக இலங்கை, மலேசியா, பிஜி தீவுகளுக்குச் சென்றவர்களைப்போல, நம் காலத்தில் அரபுதேசத்தை நோக்கிச் செல்கிறார்கள். யோசித்துப் பார்த்தால், மானுடகுலம் வாழ்க்கைக்கான வழிதேடி ஆதிகாலத்திலிருந்து ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள். பொருள்வயின் பிரிந்திருக்கும் இவ்வாழ்க்கை, அவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் எப்படி வடிவமைத்திருக்கிறது என்பதை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் பார்க்கவைக்கிறது அஜ்னபி.
அரபுதேசத்தில் அரேபியர்கள் அல்லாத மற்றவர்கள் அனைவரையும் குறிக்கும் பட்டச்சொல்தான் அஜ்னபி. வட இந்தியாவில் தென்னிந்தியர்களை மதராசி என்பதுபோல, கேரளதேசத்தில் தமிழர்களை பாண்டிகள் என்பதுபோல, கர்நாடகத்தில் கொங்கரு என்பதுபோல, தெலுங்கு தேசத்தில் அரவாடு என்பதுபோல, அஜ்னபி ஒரு அடையாளச்சொல். அதைப் பொருட்படுத்தாமல், எழுபதுகளிலும் எண்பதுகளிலும் அரபு தேசத்தை நோக்கி ஏராளமானவர்கள் சென்றார்கள். ஊருக்கு ஊர் ஏஜெண்டுகள் வாடகை வீட்டில் அலுவலகம் நடத்தி, ஆள்களை ஆசைகாட்டி வலைவீசிப் பிடித்து, கடவுச்சீட்டு வாங்கிக் கொடுத்து, விசா வாங்கி, பம்பாயில் (அப்போது மும்பை அல்ல) மெடிக்கல் முடித்து விமானத்தில் ஏற்றிவிடுவார்கள். ஆண்களுக்கு ஆபீஸ்பாய் வேலை, பெண்களுக்கு ஆயா வேலை என்ற ஒப்பந்தப் பேச்சுக்கு, அந்தப் பாலைவன மண்ணில் இறங்கிய பிறகு ஒரு பொருளும் இருப்பதில்லை. கண்ணீரிலும் வேர்வையில் நனைந்தபடி கிடைத்த வேலையைச் செய்து, வாங்கிச் சென்ற கடனை அடைக்கும் வேகத்தில் மூழ்கத் தொடங்கிவிடுவார்கள் அவர்கள். ஒவ்வொருவரைச் சுற்றியும் ஏராளமான கனவுகள். அவஸ்தைகள். வலிகள். வேதனைகள். தூக்கமற்ற இரவுகள். மனநிலைப் பிறழ்ச்சியின் விளிம்புவரை சென்று ஒவ்வொருவரும் மீண்டு வருவார்கள். பொருளாதார அளவில் சிறிதளவேனும் முன்னெறுவதற்கு அரபுதேச வாழ்க்கை துணையாக ஒருபக்கம் இருந்ததென்றாலும், இன்னொரு பக்கத்தில் அவர்களைக் கசக்கிப் பிழிந்து சக்கையாக்கியது என்பதும் உண்மை.காலி பெப்ஸி டின்களை உதைத்துக்கொண்டே நடக்கும் சிறுவர்களையும் பெரியவர்களையும் இந்த நாவலில் பல இடங்களில் மீரான் மைதீன் சித்தரிக்கிறார். தெருவைப்பற்றிய ஒவ்வொரு சித்தரிப்பிலும் இது இடம்பெறுகிறது. அரபியர்கள் கால்பந்தாட்டத்தில் ஆர்வம் மிகுந்தவர்கள். அவர்களுக்கு சாலையில் கிடக்கும் ஒவ்வொரு பொருளும் கால்பந்தாகவே தெரிகிறது. தனியாக நடப்பவன் அதை உதைத்துக்கொண்டே செல்கிறான். கூட்டமாகச் செல்பவர்கள் கால்களிடையே தள்ளித்தள்ளி, அதை ஒரு ஆட்டமாக மாற்றிவிடுகிறார்கள். அரபுப்பகுதிகளில் வாழ நேர்ந்த அஜ்னபிகள் வாழ்க்கையும் கிட்டத்தட்ட இந்தப் பெப்ஸி டின்கள்போன்றதுதான். பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. யார் வேண்டுமானாலும் அவர்கள் நடக்கும்போது தடுத்து நிறுத்தலாம். அவர்களை அடிக்கலாம். காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அடைக்கலாம். முதலாளிகள் வேலையிடங்களிலேயே அவர்களை இருட்டறையில் வைத்து வதைக்கலாம். தெருவில் நடக்கும்போது கல்லால் அடித்துத் துரத்தலாம். அயல்தேச வாழ்வின் அவலங்களை ஒருவித நகைச்சுவை உணர்வோடு மைதீன் சித்தரித்துச் சென்றாலும் வாசிக்கும்போது மனம் கனத்துவிடுகிறது. சிரிக்கப் பழகாதவர்கள் மனம் சிதைந்து பைத்தியமாகிவிடக்கூடும் என்றொரு பாத்திரம் நாவலில் சொல்லும் இடமொன்றுண்டு. அது நூற்றுக்குநூறு சத்தியம்.

நாவலின் மையப்பாத்திரமாக இருப்பவன் ஃபைசல். பல இடங்களிலிருந்து ஆபத்துமிகுந்த பயணங்கள் செய்து, ஜித்தாவுக்கு வந்து சேர்ந்து, அங்கே அமைந்த நண்பர்கள் உதவியால் எமெர்ஜென்ஸி பாஸ்போர்ட் வாங்கி, இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல முயற்சி எடுக்கப்படுகிறது. ஃபைசல் நாவலின் மையச்சரடு. அவனைச் சுற்றி பல மனிதர்கள் வாழ்கிறார்கள். அவனைப்போலவே அவர்களும் அஜ்னபிகள். எல்லா அஜ்னபிகளும் அரபிகளை வெறுப்பதில்லை. அதுபோல எல்லா அரபிகளும் அஜ்னபிகளை வெறுப்பதில்லை. நபியின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, உழைப்பவனின் உடல்வியர்வை உலர்வதற்கு முன்பாக, சம்பளத்தைக் கொடுத்துவிடும் அரபிகளும் இருக்கிறார்கள். கைகால்களைக் கட்டிப் போட்டு, இருட்டறையில் வைத்து வேளாவேளைக்குச் சோறு போடும் அரபிகளும் உண்டு. பொதுமைப்படுத்திவிட முடியாதபடி அமைந்திருக்கிறது மனிதவாழ்க்கை.
வேலைநேரத்தில் உழைப்பு அவர்களை வேறெதையும் சிந்திக்க முடியாதபடி வைத்திருக்கிறது. வேலையை முடித்துக்கொண்டு அறைக்குத் திரும்பியதும் தனிமை அவர்களை வாட்டியெடுக்கிறது. தனிமையை நினைவுகளால் விரட்ட முயற்சி செய்கிறார்கள். குடும்பத்தைப்பற்றிய நினைவுகளாலும் ஊரைப்பற்றிய நினைவுகளாலும் மனத்தை நிரப்பிக் கொள்கிறார்கள். அள்ளியள்ளிக் கொட்டினாலும் நிரம்பாத மனம் அவர்களைப் பைத்தியம் பிடித்தவர்களாக மாற்றுகிறது. குழுவாக நண்பர்கள் சேர்ந்து பாலியல் கதைகள் பேசுகிறார்கள். நீலப்படம் பார்க்கிறார்கள். அரசியல் பேசுகிறார்கள். மது அருந்துகிறார்கள். சீட்டு விளையாடுகிறார்கள். தொலைபேசியில் பாலியல் விஷயங்கள் பேசுகிறார்கள். தூங்குகிறார்கள். ஃபைசலைச் சுற்றிலும் பல விதமான மனிதர்கள் இடம்பெறுகிறார்கள். துன்பமாக இருந்தாலும் இன்பமாக இருந்தாலும், எதிலும் ஒரு நிரந்தரமற்ற தன்மையே ஓங்கியிருக்கிறது. நிரந்தரமற்ற கணங்களைத் தொகுத்துச் சொல்லும் போக்கில் மானுட வாழ்வின் நிரந்தரமின்மையையே நாவல் அடையாளப்படுத்துகிறது.
நாவலில் இடம்பெறும் எண்ணற்ற பாத்திரங்களில் மறக்கமுடியாத ஒரு பாத்திரம் அரூஷா. அவளும் ஓர் அஜ்னபிதான். இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஒரு பெண். ஃபைசல் அடிவாங்கி இருட்டறையில் அடைபட்டுக் கிடக்கும்போது, அவனுக்கு உணவைக் கொண்டுவந்து கொடுப்பவள். ஃபைசலும் அவளும் ஒரே முதலாளியிடம் வேலை செய்பவர்கள். கடமை ஒரு கட்டத்தில் இரக்கமாக மாறி, பிறகு கனிவாக மாற்றமுற்று, மெல்லமெல்ல காதலாக உருமாறி, அவனிடம் தன்னையே இழக்கிறாள் அவள். “ஏமாற்றி விடுவாயா?” என்கிற அச்சம் ஒருபக்கம். “உன்னோடுதான் நான் வாழவேண்டும்” என்கிற ஆவல் மறுபக்கம். அச்சத்துக்கும் ஆவலுக்கும் இடையே ஊடாடி ஊடாடி தினமும் வீடு உறங்கும் வேளையில் அவன் அறைக்குள் வந்து மோகத்துடன் தழுவிக்கொள்ளும் அவள் காதல், ஒருவித கனவுச்சாயலுடனும் காவியத்தன்மையுடனும் அமைந்திருக்கிறது. ஈடு இணை சொல்லமுடியாதது அந்தக் காதல். ஆனால், அக்கனவையும் நம்பிக்கையையும் சிதைத்துவிட்டு, அவ்விடத்திலிருந்து தப்பித்து வெளியேறுகிறான் ஃபைசல். கணவன் மனைவியென பரிமாறிக்கொண்ட அன்பும் முத்தங்களும் காதலும் வெறுமையான ஒரு புள்ளியில் கரைந்துபோய்விடுகின்றன. அவளுக்கு இழைத்த துரோகத்தைப்பற்றிய குற்ற உணர்வோடு அவனும், அவனைப்பற்றிய நினைவுகளோடு அவளும் வெவ்வேறு திசைகளில் பிரிந்துபோய்விடுகிறார்கள். பிரித்து விளையாடுகிறது வாழ்க்கை விதி.
மம்மிலி இன்னொரு முக்கிய பாத்திரம். அரபு முதலாளியின் பிள்ளைகளை தன் சகோதரிகளாக எண்ணி நடந்துகொள்கிறான் அவன். அவர்களுக்குரிய மரியாதையையும் லாபப்பங்கையும் அளிக்க அவன் மனம் ஒருபோதும் தயங்கியதே இல்லை. விசாலமான அவன் அன்பும் ஆதரவும் வாழ்க்கைச்சுழலில் சிக்கித் தவித்த ஃபைசலுக்கு துடுப்புகள்போல அமைகின்றன. அரபு நாட்டிலிருந்து வெளியேறமட்டுமல்ல, அவனுக்கு தன் தங்கையை மணம்முடித்துக் கொடுத்து மைத்துனனாக மாற்றிவைத்துக் கொள்ளவும் அவன் விரும்புகிறான். கடையின் வாசலில் கூடிவிடும் பூனைகளுக்கு ஒவ்வொருநாள் அதிகாலையிலும் அவன் பால் ஊற்றி அருந்தவைக்கும் காட்சி நெகிழ்ச்சியானது. வழங்குவதற்கு அவனிடம் அன்பு உள்ளது. மன்னிக்கும் குணமும் உள்ளது. பூனைகளைப் படமெடுத்து, தன் அன்புத் தங்கைக்கு அனுப்பிவைக்கிறான் அவன். அந்தப் படத்தைப் பார்த்து அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தொலைபேசியில் அதைக் குறிப்பிடும் அவள் அம்மா, தங்கச்சங்கிலியையே கொண்டுவந்து கொடுத்தாலும் பொங்கிவராத அளவுக்கு அந்தச் சந்தோஷம் அவள் முகத்தில் பொங்கி வழிந்ததாகச் சொல்லிச்சொல்லிப் பூரித்துப்போகிறாள்.
கருத்தான் காதர் இன்னொரு முக்கிய பாத்திரம். ஊருக்கு அடங்காமல் திரிகிறவனை ஒரு வேலையில் அமர்த்தி, நல்வழிப்படுத்தலாம் என எண்ணிய அண்ணன் ஏற்பாட்டின்படி, அரபு தேசத்துக்கு வந்தவன் அவன். வந்த இடத்திலும் அவன் அவனாகவே இருக்கிறான். மது, புகை, சூது என எல்லாவற்றையும் தொட்டு ஒரு வலம் வருகிறான். சூதாட்டத்தில் ஒரே இரவில் பதினஞ்சாயிரம் ரியால் சம்பாதிப்பது, சிறைக்குச் செல்வது, மீண்டும் திரும்பி ஊருக்குச் செல்வது, எதிர்பாராத விதமாக குரான் படிக்க ஆரம்பிப்பது, எல்லாவற்றையும் ஒரே கணத்தில் துறந்து பள்ளிவாசல் முக்கியஸ்தராக மாறுவது என அவன் வாழ்க்கை முழுக்கமுழுக்க அசாதாரணமான சம்பவங்களால் நிறைந்திருக்கிறது.
முகமே இல்லாமல் ஒரு புகைப்படமாகமட்டுமே அறிமுகமாகி, மறைந்துபோகும் ஒரு பாத்திரம் ஜாஸ்மின். ஃபைசலுக்காக அவன் வாப்பா பார்த்துவைத்திருக்கும் பெண். அவள் புகைப்படம் அவர் கடிதத்துடன் அவனுக்கு வருகிறது. அரூஷாவை தன் நெஞ்சிலிருந்து அகற்றிவிட்டு, அவ்விடத்தில் ஜாஸ்மினை வைக்கிறான் அவன். முதலில் பட்டும்படாததுமாக முளைவிடும் ஆசை, ஒரு மரமென வளர்ந்து நிழல்பரப்பி நிற்கிற சமயத்தில் சூறாவளியென வீசிய காற்றில் அந்த மரம் முரிந்துவிடுகிறது. இந்தியா வரும் தேதி உறுதியாகத் தெரியாத நிலையில் அந்தச் சம்பந்தம் கைவிட்டுப் போய்விடுகிறது. கடைசியில் ஜாஸ்மின் படம் நிறைந்திருந்த அவன் நெஞ்சில் பிர்தெளஸாபானுவின் முகம் அவன் நெஞ்சை அடைத்துக்கொள்கிறது.
அரபு தேசத்தில் முருங்கைமரம் வளர்த்துக்கொண்டு, நாடகம் எழுதி இயக்கும் கனவோடு இருக்கும் குமரி இக்பால், தொழுகை நேரத்தில் வேலை செய்ததால் உதைபட்டு வலியில் புரளும் டைலர், தனிமையின் வெறுமையைப் போக்கிக்கொள்ள, தூக்குப் போட்டுப் பழக விளையாட்டாக முயற்சி செய்யும் ஹபீப் முகம்மது, மம்மனியா, மம்மக்கண், கண்காணிக்கவேண்டிய காவல் பொறுப்பில் இருந்தபடி, பாஸ்போர்ட்டைத் திருடிக்கொண்டு ஊரைவிட்டு ஓடிவிடும் பிலிப்பைனி, மிஷரி கிழவன், ஊரிலிருக்கும் நான்கு பெண்பிள்ளைகளுக்கும் நல்லதுசெய்யும் கனவோடு அரபுதேசம் வந்து, கிட்டும் மிகச்சிறிய ஊதியத்தில் எதையும் செய்ய இயலாத குற்ற உணர்வோடு அழும் பணியடிமை, நாசர் என நாவலுக்குள் ஏராளமான மனிதர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.
நாசரின் தந்தையாரின் மறைவுச்செய்தி வரும் இடம், நாவலின் மிகமுக்கியமான ஒரு கட்டம். அரபு தேச வாழ்வின் அவலக்காட்சிகளில் அதுவும் ஒன்று. மரணம் இயல்பானது என்று மிகச்சாதாரணமாகச் சொல்லிவிட்டு, விடுப்பு கொடுக்க மறுக்கிறான் அவன் அரபி முதலாளி. அந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாத அவன் உடல்நிலை மெல்லமெல்ல குன்றுகிறது. நாசர் சார்பில், பல நண்பர்கள் கூடி அவனுடைய முதலாளியிடம் பேசுகிறார்கள். அங்கே வசிக்கும் இன்னொரு அரபுமுதலாளியும் நாசருக்காகப் பரிந்து பேசுகிறான். எதற்கும் மசியாத கருங்கல்லாக இருக்கிறான் அந்த அரபி. நாசரின் இடத்தில் தன்னுடைய வேலைக்காரனை அனுப்புவதாக அரபி வாக்களித்த பிறகுதான் பதினைந்து நாட்கள் விடுப்பு கிடைக்கிறது. என்ன சம்பாதித்து என்ன பயன், பெற்றெடுத்த தந்தையின் இறுதி ஊர்வலத்தில்கூட கலந்துகொள்ள இயலாத நெருக்கடியான வாழ்வுதானே என்கிறபோது அயல்தேச வாழ்வின்மீது கவிகிற கசப்பும் விரக்தியும் நாவலில் துல்லியமாகப் பதிவாகியுள்ளது.
குளிர்சாதனப் பெட்டியின் கதவிடுக்கில் படிந்துவிடும் மணல்துகள்போல அரபுதேசத்துக்கு வந்தவர்கள் நெஞ்சில் ஏராளமான அனுபவங்கள் ஒட்டிக்கொண்டுவிடுகின்றன. சாதாரண மனிதர்களின் சாதாரண அனுபவங்கள். சாதாரணத்தின் கவித்துவமும் கலையுச்சமும் அந்த அனுபவங்களில் வெளிப்படும்வகையில் தன் வலிமைமிக்க மொழியால் வசப்படுத்தியிருக்கிறார் மைதீன். மைதீனின் பதினாறு ஆண்டு கால இலக்கிய முயற்சிகளில் இந்த நாவல் மிகப்பெரிய திருப்பம். ஒரு நல்ல உச்சம்.

(அஜ்னபி- நாவல். மீரான் மைதீன். காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில். 

Wednesday 29 November 2023

"திரைகளில்லை"மொய்தீன் கவிதைகள்

காண்டா மிருகத்தைப்
போன்ற யானையை 
ப்ப்பூ என ஊதித் தள்ளிய மிச்ச இரவை காற்றிலேறி கடந்து பயணித்ததில் ஏழு கடல் பின்னே போயிருந்தது.

ஒட்டகச்சிவிங்கியின் நீண்ட கழுத்தைப் போன்ற கொம்புடையவன் 
தானே சுயமாக அறுத்து வீசிய துவண்ட கொம்பில் துருவேறிக் கொண்டிருக்கிறது.

இங்கும் அங்குமாய் 
வெட்டி விளையாடுகிறான்  சங்காரன்.
இவனையும்,அவனையும் கட்டங்களில் நாய்களாக்கி உருட்டுகிறான்.
சங்காரனின் உருட்டு எண்களுக்கொப்ப
குரைக்கின்ற நாய்கள்
கட்டங்களிலிருந்து வெளிக் குதித்து
மிச்ச இரவுகளில் 
பிச்சிப் பிறாண்டி 
குரைத்துக் கொண்டே கிடக்கிறது .

ப்ப்பூ என ஊதிய 
காண்டா மிருகத்தைப் போன்ற யானை
தலையில் விழும் பயத்தில் 
வானம்பாத்தானாய் நகரத் துவங்கிய
பேட்டரி பொம்மைகளை நாய் துரத்துகின்றன.

பொம்மைகள் கதற
நாய்கள் குரைக்க
துருவேறிய கொம்பு முளைக்க
ஏழு கடல் தாண்டிப் பறந்திருந்த தேவதையை நோக்கித் தாக்கோலை தொலைத்திருந்த பொம்மை ஒன்று கத்தியது.

"இந்தக் கடலைப் புரட்டிப் போடு"
அப்போது தேவதைக்கும் பொம்மைக்கும் இடையே திரைகளில்லை.

நவம்பர் 2017

Thursday 23 November 2023

ஓதி எறியப்படா முட்டைகள்

* ஓதி எறியப்படாத முட்டைகள்*

ரொம்ப நாட்களாக படிக்க வேண்டும் என நினைத்த புத்தகம். சகோதரி ஹுதாவால் சாத்தியமானது...
இதுவரை பழக்கமேயில்லாத நாகர்கோவில் வட்டார  மொழி முதலில் படிக்க கஷ்ட்டமாக இருந்த துதான் படிக்கப் படிக்க அப்படியே  ஆழத்திற்கு இட்டுச் சென்றது........

"" கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட நாவல்..1999ம் வருடம் முஸ்லிம் முரசில் தொடராக வந்த போது தொடரந்து படிக்கக் கிடைக்கவில்லை...""

இஸலாமிய வாழ்வியலை ரத்தமும் சதையுமாக பாத்திரங்கள் மூலம் உலாவ விட்டிருக்கிறார் ஆசிரியர்  மீரான் மைதீன்....

அந்த நாளைய முஸ்லிம் குடும்பங்கள் முதலில் " பர்மா" சம்பாத்தியத்தையும் அதன்பின்னர், " அரபு" நாட்டு சம்பாத்தியத்தையும் நம்பியே தங்கள் வறுமைப்பாட்டை போக்க விழைந்திருக்கிறது...

முதலில் கவர்ந்த து ,இருநூற்றம்பது வருட  பள்ளி வேப்பமரம்...நூற்றைம்பது வருடத்துப் பள்ளிவாசல். அதன் மோதியார்...

"" வெள்ளிக்கிழமை " குத்பா" தொடங்கியதும்,டீக்கடை நாயரின் குடிசை வீடு தீப்பற்றி எரிகிறது. நாயரின் மனைவி அலறுகிறாள். " குத்பா" ஆரம்பிச்சுருச்சு யாரும் வெளிய போக கூடாது. ஆலீமின்  குரலுக்கு இளைஞர் பட்டாளம் கட்டுப்படவில்லை. முதல் ஆளாக பக்கர் ஓடுகிறான்..அவன் பின்னே இளைஞர் பட்டாளம் ஓடிப்போய் எரியும் நெருப்புக்குள் நுழைந்து குழந்தையை காப்பாற்றுகிறார்கள்...

"" ஒலு செய்ய இருக்கும் ஹவுலு நீரில், முதல் முறையாக  ,நாயரின் குடிசை ஒளு செய்து தனது உஷ்ணத்தை தணித்துக் கொண்டது""... இந்த வரிகள் மனங் கவர்ந்த து"".....

" மொய்து சாகிபு- சுபைதா,...
குச்சித்தம்பி- செய்தூன்
ஹமீது சாகிபு- தஸ்லிமா... 

ஐந்து நேரமும் விடாத தொழுகையாளி ஹமீது சாகிபு. மூன்று ஆம்பளைப் பிள்ளைகளையும் வெளிநாட்டிற்கு அனுப்பி பணங்களை மூட்டை கட்டி வைத்துக் கொள்ளும் சாமர்த்தியசாலி.
ஊர்ச்  சொத்தையெல்லாம் ,தனதாக்கிக் கொண்டு விட வேண்டும் எனும் தீராத பேரவா.... தன் பாவங்களை, ஐந்து நேரத் தொழுகை , சுத்தப்படுத்தி விடும் என நம்புகிறார்... ஒவ்வொரு ஊரிலும் இப்படிப்பட்ட  ஹமீது சாகிபுகள்  உள்ளனர்...

" தன் குமர்களை கரையேற்ற ,தன் அருமை மகன் எப்படியாவது வெளிநாடு சென்றே ஆக வேண்டும் என எடுபிடி வேளைகளை சலிக்காமல் செய்யும் குச்சித்தம்பியின் மேல் பரிதாபம் ஏற்படுகிறது... மூத்த மகள் பலிகடாவாக  ஆக்கப்படும் சூழ்நிலை  வேதனை..."

" மொய்து- சுபைதாவின் செல்ல மகளின் நிக்காஹ், ஹமீது மகன் ஜின்னாவுடன். 
வெளிநாட்டிலிருந்து வந்த   சபுராளி.  ஆயிஷாவின் கனவில் வந்த ராஜகுமாரன்... திருமணச் சடங்குகளும்  அலங்காரங்களும் மனதை கொள்ளை கொள்கின்றன. என் திருமணத்தில் என் அண்ணண்  அப்போது மருத்துவ மாணவர்....,, பித்தளை அண்டாவை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு என்னை புகுந்த வீட்டில் கொண்டு வந்து விட்ட நினைவு வந்த தை  தவிர்க்க முடியவில்லை."

பேய்க்கதைகள் ,காலனி கட்டிடம் பள்ளிக்கூடம் போக அடம் பிடிக்கும் சிறுவர்களை  ,அள்ளிக்கொண்டு  போனாலும் , அவர்கள் பண்ணும் அலம்பல்கள்,சாத்தான்கோயில் கொடை விழா, ஊருக்கு ரயில் வந்த து வஞ்சனை செய்வினை, எதையும்  விடவில்லை..

சுக்குக் காப்பிக்கடை சுல்தான் மிகவும் சுவாரஸ்ய மனிதர்... 
" அலைகள் ஓய்வதில்லை" ராதாவின் மேலுள்ள அபிமானத்தை, வைத்து அவரை சீண்டி விட்டு வேடிக்கை பார்ப்பதும், ராதா அம்பிகா பெயர்களில்  கடிதங்களை அனுப்பி அவரை பாடாய் படுத்துவதும், தொடர்ந்து நாற்பத்தி ரெண்டு நாள் முட்டையை தலையை சுற்றி  குளத்தில் எறிவதுமாக , , இதைப் பார்த்து  விட்ட ஹமீது அவரை இன்னும் பயமுறுத்த குச்சித்தம்பியின் மகனை விட்டு பயமுறுத்தி,, அவரை  தொடர்ந்து பேதியாக விடுவதும்,, ஆசிரியரின் தீராத நகைச்சுவைக்கு பெரிய சான்று..

அறிவிற் சிறந்த ஆயிஷாவை அந்த ஊர் வழக்கப்படியே  பருவம் எய்திய பின்  ,உடனே கல்யாணம் பண்ணிக் கொடுத்து விட பெற்றோர்கள் அவசரப்பட்டு, பணக்கார ஹமீது மகன் ஜின்னாவிற்கு கல்யாணம் செய்து வைக்க , பணத்தாசை பிடித்த ஹமீது கல்யாணத்துக்கு முன்னரே  தோப்பை எழுதி வாங்கிக் கொண்டதோடமில்லாமல்  மருமகளை , கணவனும் மனைவியிமாய் பாடாய் படுத்தி எடுக்கின்றனர். ஜின்னா   மனைவியிடம் பாசத்தை பொழிவதும், வெளிநாடு சென்ற பின்னர் அவன் மனதை மாற்றுவதும்,  அந்தக்காலத்தில் சகஜம்....

ஆயிஷா பிள்ளையை பெற்றெடுக்கு முன் தவிக்கும் தவிப்பு கணவனிடம் ஒரு வார்த்தை போனிலாவது பேசி விடமாட்டோமா எனும் ஆதங்கம்,  பெண்ணைப் பெற்ற ஒவ்வொரு அம்மாவுக்கும்  தீராத வேதனை..

குச்சித்தம்பியின் மௌத், மகனின் வெளிநாட்டின்  ஜெயில் வாசம் குடும்பத்தின் அவல நிலை, ஹமீதின் அட்டகாசம் எல்லாம் எங்களின் சிறு வயது ,கிராமத்தில் நடந்த காட்சிகள் இப்போதும் கண் முன்னே நினைவில்...

கடைசியில் ஆயிஷாவை  இப்படி மனப்பிரழ்வுக்கு ஆளானவளாய் காட்டியிருப்பதை தான் மனது ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

"" இஸ்லாமிய சமுதாயத்தில் " படிப்பும் பதவியும் இல்லாததால்த்தான் ஆண் பெண் இருவருக்குமே  இந்தக் கஷ்டம் என்ற நெனைப்பு  வந்து விடுகிறதுதான்""

" இப்போதய படிப்பறிவு முன்னேறிய காலத்திலும் கூட , பரவலாக அங்கங்கே நம் சமுதாய பெண்களின் நிலமைகளில் பெரிதாக மாற்றம் வந்து விடவில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை"....

ஜஹ்பர் மதீனா.
22-11-2023

Wednesday 15 November 2023

சைக்கிள் சக்கரம் கோட்டம் எடுப்பவன், லெஃப்ட்ல வளைவுன்னா டாப்புல நாலமத்த கம்பிய முறுக்குவான், எல்லாம் பொறிதான்....

சைக்கிள் சக்கரம் கோட்டம் எடுப்பவன், லெஃப்ட்ல வளைவுன்னா டாப்புல நாலமத்த கம்பிய  முறுக்குவான்,  எல்லாம் பொறிதான்....
-------------------------------------------------------------------
கொலை என்று கருதப்படுகின்ற ஒரு சம்பவம், அந்த கொலையுண்டவனின் தொடர்பிலிருக்கும் நட்புகள், உறவுகள், அக்கம்பக்கதாரை மற்றும் அவன் தினமும் சாப்பிடச் செல்லும் ஹோட்டல் உரிமையாரைக்கூட விடாது துரத்துவதோடு, காவல்துறை அவர்களை விசாரணை என்கின்ற பெயரில் அவர்களின் தற்போதைய நிலையிலிருந்து அப்படியே புரட்டிப்போடுகின்ற அவலம் என்பது ஒன்று. இரண்டாவதாக, இந்த நீளும் பட்டியலில் வருகின்ற எளிய மனிதர்களின் வாழ்க்கை முறையை, பழக்க வழக்கங்கள், பேச்சு மொழிகள் ஆகியவற்றை சுருக்கமாகவும் கனக்கச்சிதமாகவும் சொல்லுகின்ற பாங்கு. இதனூடாக, அவர்களின் அன்றாட வாழ்வின் கண்ணுக்குத் தெரியாக கண்ணிகளாக இருந்து வினையாற்றுகின்ற அரசியல், அதிகார வர்க்கத்தின் மமதையை உணர்த்துவது என தனது "ஒச்சை" என்கின்ற சிறிய நாவலில் ஒரு புதிய பாணியிலான கதைக்களத்தை உருவாக்கியிருக்கிறார் அருமைத் தோழர் மீரான் மைதீன். நட.சிவகுமாரின் அறிமுகத்துடன் வந்திருக்கும் இந்நாவல் 164 பக்கங்களைக் கொண்டிருக்கிறது. புலம் வெளியீடு. விலை ரூ.180. 

கதையில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்படுகின்ற "கோயா" என்கின்ற கமர்தீன் என்பவர் நாவலின் இரண்டாவது அத்தியாத்திலேயே கொலை செய்யப்படுவதாகச் சொல்லி வாசகனை அதிர்ச்சிகுள்ளாக்கும் மீரான். அதன்பின்னர் அந்த கொலைக்கான மர்ம முடிச்சினை அவிழ்க்கும் முயற்சி என்ற காவல்துறையினரின் நடவடிக்கைகளைச் சொல்வதன் மூலமாக, கதையின் போக்கினை விறுவிறுப்பாக்குகிறார். ஆனால் உண்மையில் ஒரு கொலை, அதைக் கண்டுபிடிக்கின்ற காவல்துறை என்ற ஒரு சாதாரண கோணத்தில் இந்தக் கதையை நாம் அணுகமுடியாத அளவிற்கு, நாவலில் உலவுகின்ற கதைமாந்தர்களின் அறிமுகமும், அவர்களின் பாடுகளும் என அவற்றை நோக்கிய நமது பார்வையைத் திருப்பியிருக்கிறார் மீரான் மைதீன். 

நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற வட்டார வழக்கு மொழி பல வகையில் விளையாடுகிறது. அந்த விளையாட்டின் துவக்கமும் முடிவும் புதியதொரு விளையாட்டின் தொடக்கமாகிறது. மீரானின் துள்ளல் மற்றும் எள்ளல் நடை அவருக்கு இயல்பில் கிடைத்துள்ள பலம். அவ்வாறான மனிதர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்தவர்கள் எழுத்தாளர்களாவதும் மொழிக்குக் கிடைத்த ஒரு வரம். நடந்துவிட்ட கொலையைப் பற்றியோ, அதை யார் செய்திருப்பார்கள் என்பது பற்றியோ அல்லது கொலையுண்டவனைப் பற்றியோ சிந்திக்காமல், அதைச் சுற்றி நடக்கின்ற விசயங்கள் குறித்த பார்வையை விரிவாக்குவது என்கின்ற வகையில் இந்த நாவல் ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டுகிறது. 

"கோயா" என்பவன் ஒரு குறியீடு. அதிகாரத்தை ஆட்டுவிக்கும் குறியீடு. அப்படி ஆட்டுவிக்கப்பட்ட அதிகாரம், அந்த அதிகாரத்தின்கீழ் சுழன்று தவிக்கும் ஒடுக்கப்பட்டவர்களைக் கசக்கிப் பிழியும் என்பதற்கான குறியீடு. "எளியவன் கட்டமைத்து வைத்திருக்கும் அழகிய உலகங்களைச் சற்று மேலே நிற்கிறவன் குலைத்துப் போடுகிறான். அவனுக்கு மேலே அவனுக்கு மேலேயென இந்தக் குலைப்பின் கட்டமைப்பு ஒரு படிக்கட்டு மேலேறிப்போகிறது...." என்று மீரான் குறிப்பிடுவது, இந்தக் குறியீட்டினை முன்வைத்துதான் என்ற முடிவுக்கு நாம் வரலாம். 

தனியாக ஒரு மைய நீரோட்டம் என்றில்லாமல், கதையில் வருகின்ற ஒவ்வொரு பாத்திரத்தையும் நாம் கவனத்துடன் நோக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்திற்கு வாசகனைத் தள்ளுவது வரவேற்கத்தக்க உத்தி. நாவலில் வருகின்ற "பஷீர்" "அன்வர்" "மனோரஞ்சிதம்" போன்ற பாத்திரங்கள்  நம் மனக்கண் முன்னால் விரிக்கின்ற செய்திகள் பலப்பல. கட்டமைத்தலில் ஒரு புதிய வடிவமாக இந்த "ஒச்சை" நாவலை நாம் எடுத்துக்கொள்ள முடியும். "எல்லாம் பொறிதான்" என்பதைப் போல தன்னுடைய அனுபவத்தின் மூலமாக மிக அருமையான ஒரு வாசிப்பனுபவத்தைத் தந்திருக்கின்ற தோழர் மீரான் மைதீனுக்கு அன்பும் நன்றியும். 

விசாகன்
தேனி

Sunday 12 November 2023

மீரான் மைதீனின் ஒரு காதல் கதை

இந்தப் பூமியில், பொருளியல் சூத்திரங்களால் மட்டுமே செயல்படுவதுபோல தோன்றும் இந்த இடத்தில் தரிக்கும் மனிதர்களை ஈர்த்து இன்னொரு கோளத்தில் வைத்திருக்கும் மகத்தான ஆற்றல்களில் ஒன்று காதல். ஆனால், காதலின் ஈர்ப்பும் அதனால் காதலர்களுக்குக் கிடைக்கும் பறத்தலும் தற்காலிகமானதே; இந்த ஈர்ப்பு செயல்படும் உலகிலிருந்து ஒட்டுமொத்த வாழ்க்கையையும் பார்த்த தமிழின் சிறந்த சிறுகதையாசிரியர் மௌனியின் கதாபாத்திரங்களோ தங்கள் காதல் நிறைவேறாத நிலையில் அதற்கு ஒரு அமரத்துவத்தை ஏற்படுத்துபவர்கள். மீரான் மைதீன் எழுதியுள்ள ‘ஒரு காதல் கதை’ குறுநாவலின் நாயகியான ஷீலா தன் காதல் வாழ்க்கையில் வெற்றிகண்டவள்.

காதல் இன்னமும் கசிந்துகொண்டிருக்கும் திருமண வாழ்க்கையில் எந்தக் குறையும் இல்லை. பணி வாழ்க்கையிலிருந்தும் கல்லூரி முதல்வராக ஓய்வுபெற்று 60 வயதிலும் வசீகரத்துடன் இருப்பவள். நாகர்கோவிலிலிருந்து சென்னைக்குப் போகும் ரயிலில் பேரக் குழந்தைகளைப் பார்க்கச் செல்லும்போது, தனது வெற்றிக் கதையின் விடுபடல்கள், துயர எச்சங்கள், மௌனங்களைக் கதைசொல்லியுடன் பகிர்ந்துகொள்வதுதான் இந்தக் கதை. காதலுக்கு முன்னர் முஸ்லிம் பெண்ணாக இருந்த அவளது பெயர் வஷீலா. காதலுக்குப் பின்னர் இந்து பெண்ணாகத் தோற்றமளிக்கும் அவளது இப்போதைய பெயர் ஷீலா. வஷீலாவுக்கும் ஷீலாவுக்கும் இடையிலான பயணத்தை எழிலுடன் சொல்லியிருக்கிறார் மீரான் மைதீன். மதம் மாறிக் காதலிப்பது அந்தரங்க உரிமை என்ற நிலையிலிருந்து அரசின் கண்காணிப்புக்கு உள்ளாகியிருக்கும் சமூக அரசியல் சூழலில் இந்தக் காதல் கதை மேலும் பொருத்தமானது.

ஒரு கதைசொல்லி, ரூமியின் தாக்கம் கொண்ட சூஃபி காதலன், நன்றாகக் கதை கேட்பவன் என்றெல்லாம் கலந்த ரொமான்டிக் கதாபாத்திரமாக, பொன்மொழிகளை அடிக்கடி உதிர்ப்பவராக, ஆனால் வாசகர்களும் ஏற்றுக்கொள்ளும்படியாகக் கதை சொல்லியிருக்கிறார். கோட்டார் சந்திப்பில் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் ஷீலாவுடனான உரையாடல் தொடங்கும் வரை, காதலில் உள்ள உலகம் மறக்கும் தன்மையின் மீது கவனம் குவித்துப் பேசி நம்மில் ஒரு மேடையை நிறுவுகிறார் கதைசொல்லி. சின்னச் சின்னக் காதல் கதைகள் மினியேச்சர் சித்திரங்கள்போல இடம்பெறுகின்றன. அந்தக் கதைகள் வெவ்வேறு நாடுகளில் நடப்பவை. நிச்சயமற்ற பொழுதுகளில் நல்ல காட்சியோ, மோசமான காட்சியோ அவற்றை நினைவாகக் கடக்க வேண்டியிருக்கும் ரயிலில் இந்தக் கதை நடப்பதால் மொழியில் பயணத்தின் லயமும் கவித்துவமும் நுட்பமான கவனிப்புகளும் சேர்ந்துவிடுகின்றன.

ஷீலாவும் இந்துப் பையனான மணிகண்டன் மீது காதல் ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்று தனது அறுபது வயதில் விசாரிக்கத் தொடங்குகிறார். அவனது உருவம், கண்கள் ஆகியவற்றைச் சிலாகித்தாலும் ஏன் உயிருக்கு உயிராக நேசித்த பெற்றோரைக் கடந்து அவனைக் கைப்பிடிக்கும் பந்தம் ஏற்பட்டது என்பதை அவரால் விளக்கிச் சொல்லவே முடியவில்லை. திருமணமான பிறகு, தாயின் மரணம் செய்தியாகவே ஷீலாவுக்குத் தெரியவருகிறது. தந்தை பேச முடியாமல் மரணப் படுக்கையில் இருக்கும் சில மாதங்களில் மட்டுமே அவரை உடனிருந்து பராமரிக்கும் குறைந்தபட்ச ஆறுதலைப் பெறுகிறார் ஷீலா.

இன்னொரு மதம், இன்னொரு கலாச்சாரப் பின்னணியிலிருந்து வந்ததால் எந்தவிதமான அசௌகரியத்தையும் ஷீலா அனுபவிக்கக் கூடாது என்று மணிகண்டனின் பெற்றோரால் அத்தனை பிரியத்துடன் நடத்தப்பட்டும் ஷீலாவுக்குத் தன் பெற்றோரைக் கைவிட்ட குற்றவுணர்வு இருக்கிறது. மீண்டும் ராசியாகிவிட்ட தம்பிக் குடும்பத்தின் உறவு, பேரக் குழந்தைகளின் பிரியத்தால் அதை அவள் நிரவுவதற்கு முயல்கிறாள். ஆனால், அவள் கதையில் நிரவ இயலாத பள்ளங்களை, சக இருதயனாக ஓர் இரவு மட்டுமே தன்னுடன் பயணிக்கும் ஒரு வழிப்போக்கனிடம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறாள்.

ரயிலிலிருந்து கதைசொல்லியைப் போலவே நாமும் இறங்கி ஷீலாவைப் பிரிந்துவிடுகிறோம். இன்னொரு மதம், இன்னொரு கலாச்சாரப் பின்னணியிலிருந்து வேறொரு வாழ்க்கைக்கு, வேறொரு பின்னணிக்குக் காதல் காரணமாகத் துணிகரமாகக் கடந்துசென்ற வஷீலா, ஷீலாவாக மாறிய பின்னர் பெற்றது என்ன? இழந்தது என்ன?

மணிகண்டன் என்ற ஆணிடம் தனது வாழ்க்கையின் திருப்பத்துக்கு ஒப்புக்கொடுத்த ஷீலா குறித்து ஏற்படும் விந்தையின் அளவு, தன் கதையைச் சொல்வதற்கு அவள் அந்த இரவில், ரயிலில் தேர்ந்தெடுக்கும் கதைசொல்லி தொடர்பானதிலும் எழுகிறது. மௌனி, இந்தக் கதையைப் படித்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார். தனது பிரபஞ்சத்தில் உள்ள கதையாக ஷீலாவின் கதை இல்லை என்றாலும், ஷீலாவின் துக்கத்தோடு அவர் அடையாளம் கண்டிருப்பார்.

– ஷங்கர்ராமசுப்ரமணியன்,

Saturday 11 November 2023

காலத்தை வரையும் எழுத்து

காலத்தை வரையும் எழுத்து-





நாம் எல்லா வகைகளிலும் காட்சிகளின் வழியே உலகைப் பார்க்கிறோம். அந்தப் பார்வையின் வழியே நிகழும் நமது அவதானமே நம்மைக் கட்டமைக்கிறது. அவதானம் எல்லாக் கண்களுக்கும் ஒன்றுபோல நிகழ்வதல்ல, அது நமது தனித்த மனங்களின் வழியே முன்னமே நாம் அடைந்த சிந்தனைகளின் கூட்டியக்கத்திலிருந்து இயங்குகிறது. நமக்கு நெருக்கத்தில் நிகழும் மகிழ்வானவைகளையும் துயரங்களையும் நாம் உணர்வுநிலையில்  பார்ப்பதுபோல பிற மனிதர்களின் மகிழ்வுகளையும் துயரங்களையும் பார்ப்பதில்லை. மனித மனம் பொதுவாக காலகாலமாக வடிவமைக்கப்பட்ட விதம் இப்படியானதுதான். ஆனால் மனிதர்கள் அபூர்வமாகத்தான் உணர்வுநிலையில்  சமபார்வையுடைய சமூக பங்கேற்பாளர்களாக இருக்கின்றனர். எனவே இன்றைய காலத்தில் சமபார்வையுடை மனிதர்கள் நம்மை கவருகிறார்கள். அதன்பொருட்டு நமக்குப் படிப்பினையாக இருக்கிறார்கள். நாம் அவர்களைப்பற்றிப் பேசவோ எழுதவோ கொண்டாடவோ  விரும்புகிறோம். இப்படியான விருப்பங்களும் கூட எல்லோருக்குள்ளும் நிகழாது. யாரோ எவரோ என அந்நியமான இந்த வாழ்வு நிலையில், அப்படி நிகழுமானால் அதுவும் ஒரு ஞானநிலைதான். இந்த ஞானநிலை வாய்க்கப்பெற்றவர்களில் ஒருவராக, இந்த வாசிப்பில்  கண்டடைந்தவைகளிலிருந்து எழுத்தாளர் ஹேமா அவர்களை மிக நேர்மையாகக் குறிப்பிடுகிறேன். 

  எழுத்தாளர் ஹேமா அவர்களின் "கதையல்ல வாழ்வு" கட்டுரைகளை வாசித்த இந்த அனுபவம் எனக்குள் சில புதிய பார்வைகளைச் சேர்ப்பிக்கிறது என்பதை  வாசிக்க வாசிக்க எனக்கு ஆத்மார்த்தமாக உணர முடிந்தது. இந்த எழுத்தின்  பரப்பென்பது மிகப் பெரியதாக, நிலம், மொழி, பிரதேசமென, எல்லைக் கடந்த சாத்தியப்பாடுகளில்  வியாபிக்கிறது. செல்லும் இடமெல்லாம் மனிதத்தை, மனிதர்களைக் கற்கிற  கரிசனமும் அக்கறையும் கொண்ட இந்த எழுத்தின் குரல் நம்மைக் கூட்டாக்கிக் கொள்வதில் முனைப்புக் கொண்டிருக்கிறது. இந்தக் குரல் அவசியமானதும் கூட, யார் நமக்கு கரிசனத்தோடும் அக்கறையோடும் நம் பார்வை புலனுக்கு, சாதாரண நாயக நாயகிகளின் வாழ்வை, வரலாறை, செய்திகளைக் கொண்டு வருகிறார்களோ அவர்களே அதன் மூலம் நம்மை விசாலப்படுத்துவார்கள். பெருங்கதையாடலும் அதிகாரமும் முயங்கும் வெளியிலிருந்து சாதரணர்களை நோக்கிப் பாயும் பேரன்பின் குரல். குரலற்றவர்களின் குரலாக இதன் பன்னிரண்டு  கட்டுரைகளை இதனடிப்படையில் மிக முக்கியமானதாக கருதலாம். 

        இந்த கட்டுரைகள்  துவங்கியிருக்கும் புள்ளி மேலும் தொடர்ந்து செல்லும் என்றே தோன்றுகிறது. நம் பார்வைப் புலனுக்குத் தெரியாத ஏராளமான மானுடர்களைக் கொண்டியங்கும் உலகினைத் தொடர்ந்து அவதானிக்கும் அன்புமயம் எழுத்துக்கள், இன்னும் காலதேச வர்த்தமானங்களைத்  தாண்டி  இடைவிடாது வளரும் என்றே நம்புகிறேன். ஹேமா அவர்களின் "பாதைகள் உனது பயணங்கள் உனது" என்கிற நூலை வாசித்துப் பெற்ற முந்தைய அனுபவமும் எனக்கு நல்ல நிறைவானது. அதன் நிமித்தமாக அவர் எழுத்தின் உள்ளார்ந்த நோக்கமாக வெளிப்படும் அவரின் சமூகப்பார்வை நம்பிக்கைகளை விதைப்பதை உள்வாங்கியிருக்கிறேன். அந்த புரிதலில் இருந்து வாசகர்களுக்கு நான் குறிப்பிட விரும்புவது, இன்றைய காலம் என்பது இவ்வாறான ஓராயிரம் நம்பிக்கைகளைத் திரும்பத் திரும்ப விதைக்கப்பட வேண்டிய அவசியமுள்ள காலமாகும். 

    இந்த அகன்ற உலகில் நம் கண்களுக்கு முன்னாலேயே மறைந்து கிடக்கும் ஒன்றை நமக்கு அறிமுகப்படுத்தி அதனைக் கல்வியாக்கி விடுகிற அதீத அக்கரையின் பொருட்டு கவிதை கதை ஆய்வு என பலவகைமைகளில் படைப்புகளை உருவாக்குகிறோம். அப்படி உருவான படைப்புகளை இங்கு ஆழமாகவோ அல்லது மேம்போக்காகவோ  வாசிக்கப்படுகிறது. நோக்கப்படியே அது வாசகர்களைச் சென்றடையுமா என்பதனை உறுதிபட சொல்லவியலாத நிலையில் இதுபோன்ற எழுத்துக்கள் நோக்கத்தை சரியாக செய்துவிடும் என்பதில் தெளிவு இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான முகம் இருக்கிறது. பல தனித்துவங்களை அதனதன் அடிப்படையில் அப்படியே ஏற்றுக் கொள்வதே ஒரு பன்மைத்துவ சமூக அமைப்பின் நாகரீக முகமாகும்.  கட்டுரைகளில் உரைநடை வடிவத்தில் கதைபேசுவது போலவும், சம்பவ அடுக்குகளாகவும், செய்தியாகவும், நேரடி உரையாடலாகவும், இன்னும் சிலவற்றை ஒரு புனைவுபோலவும் பலவிதமான முறைமைகளில் இங்கு ஹேமா அவர்கள்  எழுத்துப் பாணியை கையாள்கிறார். இதனை கட்டுரை எழுத்தின் இன்னுமொரு வடிவமாகப் பார்க்கலாம். மானிட சமூகத்துக்கு முன்னே சமுத்திரம் போல குவியும் எழுத்துகளிலிருந்துள்ள வரலாறும் வாழ்வும் பிரதானவெளிகளில் வென்றவர்களுக்கும் அரண்மனை வாசிகளுக்கும் அதிகாரவர்க்கத்திற்கும்  மட்டுமல்ல, சாதாரண மனிதர்களுக்கானது. இதன் காரணமாக கீழிருந்து மேல்நோக்கிய வரலாறுகளில்தான் எளிய மனிதர்கள் தங்கள் இருப்பை எப்படி வைத்திருக்கிறார்கள் என்கிற உண்மை  வெளிப்படுகிறது. வென்றும் முகம் தெரியாமல் பிரகாசமான அகம் கொண்ட அற்புதமனிதர்கள் இவ்வெழுத்தில் அணிவகுக்கிறார்கள். அவர்களோடு நிகழும் உரையாடலும் செய்தியும் அல்லது அவர்களின் கதைகளும் வாசக மனதில் ஒரு உத்வேகத்தை உருவாக்க முனைகின்றன. அந்த முனைப்பில் வெற்றியும் பெறுகிறது. குறைந்தபட்சம் நம்மில் ஒரு அசைவை ஏற்படுத்தாமல் அவை வெறுமையாக நகர்ந்து போகவேயில்லை. 
      ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டுபவரைப்பற்றி நமக்கு என்ன தெரியும்? அவர் தனது வாகனத்தை நகரங்களின் நெரிசலான சாலையில் சைரன் சப்தத்தை ஒலிக்கவிட்டபடியே விரைந்து ஓட்டுகிறவர் மட்டுந்தானா அல்லது அவர் கூலிக்காக வேலை பார்க்கிற ஒருவர் மட்டுந்தானா..? அவர் தன்னை முன்காட்டிக் கொள்ளாமல் சப்தங்களால் கடந்துபோகும் அந்த வாகனஓட்டி சப்தமின்றி உயிர்காக்கும் தடத்தில் முதல் வரிசைக்காரனாக இருக்கிறான் என்பதனை நாம் என்னென்ன தருணங்களில் உணர்ந்திருப்போம். இந்த முகந்தெரியாத முதல்வரிசைக்காரர்களைப் பற்றிய இந்த எழுத்து நமக்கு புதிய கற்பிதங்களைத் தருகிறது. ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டிச் செல்லும் வீரலட்சுமி நமக்கு அறிமுகமாகிறார். இந்த உலகில் உயிரைவிட மதிப்புமிக்கது என்று எதாவது இருக்கிறதா..? என்றால், ஆமாம் இருக்கிறது என்று நாம் யாரும்  வேறொன்றைச் சொல்லத் துணிவதில்லை. உயிர் மதிப்பு மிக்கது என்பதில் நம் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை என்றாலும் நாம் சகமனிதர்களை இதன் மதிப்பீடுகளோடு கவனிக்கிறோமா என்ற கேள்வியை  முன்வைக்கலாம். ஒரு கட்டுமானத் தொழிலாளிபற்றி, ஒரு சாக்கடையைச் சுத்தம் செய்யும் தொழிலாளிபற்றி, இன்னும் நாம் அன்றாடம் கடக்கும் இதுபோன்ற எண்ணற்ற சகாக்களைப்பற்றி உண்மையில் நமக்கொன்றுமே தெரியாது என்கிற உண்மை புலப்படுகிறது. நம் வாழ்வின் எல்லா அடுக்குகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் அரிய மனிதர்களின் மனுசிகளின் வாழ்வும் வரலாறும் அதன் மதிப்பீட்டு முக்கியத்துவத்தையும் இந்த எழுத்து புலப்படுத்துவதாக அமைந்திருப்பதை வாசிப்பிலிருந்து உணருகிறேன்.
  நகரங்களில் மட்டுமல்லாது சாதாரணப்பகுதிகள் வரையிலும் உயர்ந்து நின்று நம்மை வியப்பிலாழ்த்துகிற கட்டடங்கள் அதற்கு பின்னே முகம் தெரியாத ஆண்பெண் உழைப்பாளிகள், திக்கற்ற இடங்களில் சிக்குண்ட மனிதர்களின் பிரச்சனைகளில் பலாபலனின்றி செயல்படும் மீட்பர்களைப் போன்ற களப்பணியாளர்கள், நாம் அருவருப்பாகக் கடந்துபோகும் கழிப்பிடங்களை சுத்தப்படுத்தும் மாமனிதர்கள், வீட்டு வேலையாட்கள், சாலையோர வியாபாரிகளென ஹேமாவின் எழுத்தில்  உலாவும் மனிதர்கள் நம் மனங்களில் நிரம்புகிறார்கள். அவர்கள் நம்மிடத்தில் யாதொரு கேள்வியும் கேட்கவில்லை அல்லது எந்த முறைப்பாடுகளையும் சொல்லவுமில்லை ஆனாலும் சிலவற்றில் மனம் கனக்கிறது. சிலரின் அதீத செயல்களால் நம் மனம் நிறைகிறது. ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரையும் நமக்கு அடையாளப்படுத்தும் இந்த  எழுத்துக்கு எல்லையற்ற கருணை இருக்கிறது. உறவுகளே கடந்துபோய்விடுகிற இந்த துயரம் மிகுந்த உலகில் யார் எவரென அறியாமலேயே  இறந்த உயிர்களிடத்தில் பெருங்கருணை கொள்ளும் மனிதர்கள் தங்கள் உயர்ந்த செயல்களின் வாயிலாக உயர்ந்து நிற்கின்ற அபூர்வங்களைத் தேடிக்கண்டடைந்து ஹேமா நம்மிடம் சேர்க்கிறார். இந்த அபூர்வ மாமனிதர்களை, அவர்களின் கதையை, வாழ்வை, அவர்களின் உன்னதமனங்களை, அவர்களின் பல்வேறு செய்திகளை நம்மிடம் எழுத்துக்களாக்கி சேர்ப்பதில் அவருக்கு உயர்ந்த சமூக நோக்கமிருக்கிறது. அது எல்லையற்ற அன்பின் வடிவம். சீர்திருத்தத்தை விரும்பும் உவகைக் கொண்ட மனதின் பிரார்த்தனை. மானிடத்தின்பால் அன்பும் கருணையும் கொண்ட பிரார்த்தனையாக இது மலருவதால்தான் இவ்வெழுத்து உருவாக்கும் காட்சிகளோடும் அந்தக் காட்சியில் உலவும் மனிதர்களோடும் நம்மை உறவாடச் செய்வதிலும் இந்தக் கட்டுரைகள் முனைப்பு கொள்கின்றன. செலினா சேச்சியைப்பற்றிய வரைதல் மலைப்பாக இருக்கிறது. நமக்கு இவ்வுலகில் அறிமுகமாகின்ற சுடுகாட்டில் பிணம் எரிக்கும் பணியைச் செய்யும் முதல் பெண். சமரசம் உலாவும் இடம் என்று உண்மையில் சுடுகாட்டைச் சொல்ல இயலுமா என்ற கேள்விகள் முன்வருகின்றன. கவிஞர் மருதகாசியை மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டிய காலத்தைச் சொல்கிறது. செலினா சேச்சிக்கு இறந்த உடல்களின் மீது ஒரு பயமும் இல்லை. மாறாக உயிருடன் இருப்பவர்களிடத்தில்தான் பயமிருக்கிறது. இன்னொரு அற்புத மனுசியாக நமக்கு அறிமுகமாகும் வீரலட்சுமிக்கு உயிருக்குப் போராடும் மனிதர்களிடத்தில் ஆண் என்றும் பெண் என்றும் பேதமில்லை. அவர் சேவையின் பொருட்டு பால் வேறுபாடுகளைக் கடந்த ஞானநிலையை கண்டடைகிறார். இன்னொரு முனையில் கெட்டு அழுகிப்போன ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்யும் ஹாலீத் குழுவினர் மற்றுமொரு மலைப்பு. ஒரு நேர்கோட்டில்தான் எத்தனை எத்தனைப் பார்வைகள் எவ்வளவு எவ்வளவு பயணங்கள் நடந்தேறுகின்றன. இந்த வாழ்வும் நிலையும் மனிதர்களை அப்படியே பக்கத்துக்குப் பக்கம் புரட்டிப் போடுகிறது. ஆனாலும் யாரும் எதுவும் எந்த நிலையிலும்  ஸ்தம்பித்துப் போய்விடவில்லை. பாரமும் வலியும் கடந்து நூலாசிரியர் ஹேமா ஒரு பறவை பறப்பதைப்போல இதனை வாசகப்பரப்பில் வரைந்து செல்கிறார். இன்னும் வரைவார். செலினா சேச்சியின் வாழ்வை மைய்யமாகக் கொண்ட ஜூவாலமுகி திரைப்படத்தை தேட வேண்டும். 
    இது ஒரு உன்னத இலக்கியமாக எழுத்துமுறையில் எல்லாக் காத்திரங்களையும் வலுவாகக் கொண்டிருக்கிறது. நேர்த்தி பெற்று  இந்த எழுத்துக்கள் நல்ல நோக்கத்தைக் கொண்டிருக்கின்றன. உயரமான ஓரிடத்தில் நம்மை அமர வைத்து விசாலமானப் பார்வையை ஏற்படுத்துகிறது. ஒரு தந்தை தன் குழந்தையை தலைக்கு மேலாகத் தூக்கிப் தூரத்தில் ஒன்றைப் பார்க்க வைப்பது போல பார்வைகளினூடாகவே  நாம் எல்லா அவதானங்களையும்  பெறுகிறோம். நமக்கு இதுபோல எண்ணிலடங்காத அவதானங்கள் தேவைப்படும் காலமாக இது இருக்கிறது. இந்த நேசகரமான புரிதலோடு ஹேமா அவர்கள்  காலத்தை தம் எழுத்துகளில் இட்டு நிரப்புகிறார். இந்த நிரப்புதல் கதையல்லாத வாழ்வாக இருக்கிறது. இந்த நூலை வாசித்து சுற்றிலுமான  மனங்களைப் பாருங்கள், பிறறோடு பேசுங்கள், யாராவது பேசினால் உங்கள் காதுகளை சற்றேனும் அப்பக்கமாகத்  திருப்புங்கள். கேலக்ஸி வெளியீடாக வெளிவரும் இந்த கட்டுரை நூலுக்காக எழுத்தாளர் ஹேமாவுக்கு நெஞ்சம் நிறைந்த அன்பும் வாழ்த்தும்.
  

அன்புடன்
எம். மீரான் மைதீன்
பெங்களூரிலிருந்து
20/10/2023

Thursday 9 November 2023

தோன்றிய பொழுதின் பயணம்

"தோந்நிய யாத்ரா" என்ற மலையாளச் சொல்லின் பொருள்,தோன்றிய பொழுதின் பயணம்.
சாளை பஷீரின் இந்த நூல் பஷீர் எனக்குத் தந்து நாட்கள் நிறைய ஆகிவிட்டது.ஐந்தாறு நாட்கள் தீவிர எழுத்திலிருந்து இன்று வாசிப்பின் பக்கம்  திரும்பியபோது சிக்கியது. மலையாள நிலத்தில் நிகழ்த்திய பயணங்களின் வழியே அவரின் அனுபவங்களை நல்ல புதினம்போல எழுத்தாக்கி இருக்கிறார்.சாளை பஷீர் நம் பிரியப்பட்ட ஆசான் பஷீரின்,பேப்பூர் மற்றும் தலையோலப்பரம்பு முதலான  இடங்களில் நம்மையும் அழைத்துப் போகிறார். அப்படியே பாலக்காட்டிலுள்ள தஸ்ரக்கிலுள்ள ஆளுமை ஓ.வி.விஜயனின் நினைவகம் என அவரின் பயணத்தில் நாமும் இணைவதுபோன்ற நடபடியில்  அற்புதமான அனுபவமாகிறது. அவரரவர்களின் எழுத்து மொழியினை நமக்கு வசப்படுத்தும் ஒரு காரியத்தை சாளைபஷீர் அழகிய மொழியில் நமக்கு கடத்துவது இந்த நூலின் பேரம்சமாக இருக்கிறது.தொடரும் அவரின் யாத்திரைகளில் நாம் மேலும் அறிய இயலாத நல்ல அனுபவங்களைப் பெறுகிறோம். சும்மா ஒரு தகவலாக மட்டுமில்லாமல் தேர்ந்த வார்த்தைகளால் நல்ல இலக்கியமாக இதனை செய்திருக்கிறார்.
   
நவீனகால மனிதன் ஊர்களையும் கிராமங்களையும் உருக்கி நகரங்களாய் உருட்டித் திரட்டுகிறான்.ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளைக் கொல்லவும் கற்றுக்கொண்டான்.ஆனால் கிராமங்களை ஊர்களைப் போல ஆறுகளை உருமாற்றும் கலையை இன்னும் கற்கவில்லை என்று பல்வேறு வராலற்று சிறப்புகளைக் கொண்ட  பொன்னானி நகர் பற்றிய பயணஅனுபவத்தில் பஷீரின் எழுத்து மிகமுக்கியமான ஒருபதிவாக இருக்கிறது.பொன்னானியின் பெரிய பள்ளிவாசல் பதினைந்தாம் நூற்றாண்டில் நிருவியபிறகே வெறும் துறைமுக இறங்குதளமாக இருந்த பொன்னானி முறையான நகரமாக மாறியிருப்பதை பதிவு செய்கிறார்.பயணநூல்,பயணத்தின் அனுபவத்தில் எழுதியநூல், பயணத்தின் வழியான ஆய்வுநூல், அல்லது பயண அனுபவ சுவிகாரத்திலிருந்த வெளிப்படும் புனைவு என பலவகைகளில் சாளை பஷீரின் இந்நூலைக் குறிப்பிடலாம். தமழ்சமூகம் கவனிக்கத்தக்கவான ஒரு நூலாக காண்கிறேன்.இதுஒரு நல்ல வழிகாட்டி நூலும் கூட.புத்தகமும் பயணமூம் மானிடவாழ்வில் சக்திமிக்கவை என்பதை நாம் இதன்வழி பரிபூரணமாகப் புரிந்து கொள்ளலாம்.இலக்கியமென்று எடுத்துக் கொண்டாலும் பயணம் எனக் கொண்டாலும் கேரளம் தீராக்காதலோடு கண்டுணர சாத்தியங்கள் மிகையாக இருக்கும் நிலம்.சாளைபஷீர் அதன் மகத்துவத்தை இந்நூலில் பூரணத்துவமாக்குகிறார்.மம்புரம் தங்கள் பற்றிய மற்றுமொரு கட்டுரை பனிரெண்டாம் சுல்தானிலுள்ள ஆசான் பஷீரின் சூஃபிய நிலைப்பாடு என இந்த நூலில் ஒரு அழகிய மாயத்தொடர்ச்சி இயங்குகிறது.இன்னும் குறிப்பிடாத ஏராளமான விசயங்கள் குவிந்திருக்கின்றன.சாளை பஷீருக்கு நிறைந்த அன்பு.
சீர்மை வெளியீடு.
Salai Basheer

Tuesday 7 November 2023

"காலங்களில் மேவும் கதைகள்"

1991லிருந்து 98வரையிலும் எழுதிய சிறுகதைகளின் தொகுப்புதான் "கவர்னர் பெத்தா".காலச்சுவடு வெளியீடாக இப்போதும் விற்பனையில் இருக்கிறது.முப்பது வருடங்களுக்கு மேலாகிவிட்ட கதைகளின் பெருவாழ்வின் சிலதுளிகள்.

நன்றி தோழர் காமு.

மீரான் மைதீனின் 
" கவர்னர் பெத்தா" வாசிப்பனுவம் .... 
***********************************

மீரான் மைதீனின் படைப்புகளின் தொடர் வாசிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே கவர்னர் பெத்தாவைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அது என்ன கவர்னர் என்னும் குறு குறுப்பு வளர்ந்து கொண்டே வந்தது. என்ன , ஏது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும் சேர்ந்து கொண்டது. 
சரி, படித்துக் கொண்டிருக்கும் " ஓச்சை" நாவலை முடித்து விட்டு வாசிக்கலாம் என்று ஆன்லைனில் புத்தகம் ஆர்டர் செய்து அதுவும் வந்து விட்டது. 

ஒரே மூச்சில் படித்து விட்டேன். பத்து சிறுகதைகள் கொண்ட குறுந்தொகுப்பு 'கவர்னர் பெத்தா' . 

காலமாற்றத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் போகும் மனிதர்களின் அவஸ்தைகளை அசன் கண்ணாப்பா என்ற முதியவரின் பாடுகளின் மூலமாக பதிவு செய்கிறது அசன் கண்ணாப்பா என்கிற கதை. அவருக்கு வயது  எழுபது என்றாலும் இன்னும் ஊணிக்கொம்பு இல்லாமல் தான் நடமாடுகிறார். 

அந்த ஊரில் மொத்தமே முப்பது வீடுகள். அதிலும் பெரும்பாலும் குடிசை வீடுகள். சிலது ஓட்டு வீடுகள். உச்ச பட்ச விஞ்ஞான வளர்ச்சியாக மின்சாரம் மட்டுமே. வேறு சாதனங்கள் இன்னும் ஊருக்குள் வரவில்லை. 

சிறுவர்களுக்குக் கதை சொல்வதுதான் அசன் கண்ணாப்பாவின் அன்றாட தினப்படி வேலை. அக்கம் பக்க சிறுவர்கள் கூடி, முதியவரின் நாடியைப் பிடித்து கொஞ்சி, கன்னத்தைப் பிடித்து , ஓய்.. அப்பா.. ஒரு கத சொல்லு என்று ஆரம்பித்து விடுவார்கள். உடனே உற்சாகமாகி  கதை சொல்ல ஆரம்பித்து விடுவார். அது உண்மைச் சம்பவமோ இட்டுக் கட்டியோ எப்படியோ சொல்வார். மெய்மறந்து கேட்கும் சிறுவர்கள் நடுநடுவே சந்தேகங்கள் கேட்பார்கள். ' அப்போ பள்ளிக்கு பொறத்து ஒரு பெரிய வாவ மரம் நின்றது ' என்று ஒரு கதையில் சொன்ன போது, இப்ப அந்த மரம் எங்கே என்று ஒரு சிறுவன் கேட்கிறான். 'சொல்லத கேளுங்கலே' என்று செல்லமாக ஒரு அதட்டு அதட்டிவிட்டுக் கதையைத் தொடர்வார். 
விடிந்தெழுந்தால் இன்று குழந்தைகளுக்கு என்ன கதை சொல்லலாம் என்பதே அவரின் சிந்தனையாக இருக்கும். 

அரேபியாவில் இருந்து பேரன் காதர் ரஹ்மான் ஊருக்கு வருவதாக் கடிதம் வருகிறது. அந்த ஊரில் இருந்து அரேபியாவுக்கு முதன் முதலில் சென்றது தன்னுடைய பேரன் என்பதில் அளவு கடந்த பெருமை அவருக்கு. தாயழி, 'பிளேன்ல வானத்துல பறந்துல்லா அரேபியாவுக்கு போயிட்டான்' என்று தனக்குத் தானே சிலாகித்துக் கொள்வார். 

வந்த பேரன் பலருக்கும் விதவிதமான பொருட்கள் தருகிறான். பெரியவருக்கு ஒரு டீ ஷர்ட் . வீட்டுக்கென்று ஒரு டி.வி. பெட்டி. 

டி.வி. பார்க்க ஊரே கூடி விடும். எம்.ஜி.ஆரும் நாயகியும் ஆடுவதை ரசித்துப் பார்க்கும் பொம்பளையளுக்கு பயங்கர சிரிப்பு. மறியம் பெத்தா, ' அட, நீக்கம்பத்து போவா, இப்படிக் கெடந்து ஆடுதா.. வெக்கம் கிடையாதா.. ' என்று சொல்லும் போது எல்லோரும் சிரிப்பார்கள். 

வழக்கம் போல் அன்றும் அசன் கண்ணாப்பா திண்ணையில் வந்து அமர்கிறார். சிறுவர்கள் கதை கேட்க உற்சாகமாக கூடுகிறார்கள். திடீரென்று ஒரு சிறுவன், ' டேய், டி.வி.ல படம் போட்டாச்சு' என்று சொன்னவுடன் எல்லோரும் டி.வி. பார்க்க ஓடி விடுறார்கள். 

வெறுமையாகப் போகிறது முதியவருக்கு. இப்போதெல்லாம் கதை கேட்க ஆளில்லை. பள்ளித் திண்ணையில் இருந்து கொண்டு கண்ணில் தென்படும் ஆட்டுக் குட்டியைப் பார்த்துக் கொண்டே காலத்தைக் கழிப்பதாகக் கதை முடிகிறது. 

வாழ்நாள் முழுவதும் ஒரு குறிப்பிட்ட தினப்படி நடவடிக்கைகளில் பழக்கப்பட்டு விட்ட மனிதர்கள், குறிப்பாக முதியவர்கள் காலப் போக்கில் ஏற்படும் மாற்றங்களில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள இயலாத போக்கை நுட்பமாக பதிவு செய்யும் அதே நேரத்தில் ஒரு காலகட்டத்தையும் தன் எழுத்தின் மூலமாக இலக்கியமாக உறையச் செய்து விட்டார் மீரான் என்றுதான் சொல்ல வேண்டும். 

அடுத்து, கவர்னர் பெத்தா. பெத்தா என்றால் பாட்டி. அம்மாவைப் பெற்ற அம்மா. 

கவர்னர் பெத்தா ஓர் அடையாளப் பெயர்தான். அந்த அடையாளம் எப்படி வந்தது என்பது தான் சுவாரஸ்யம். 

பெத்தாவின் இயற்பெயர் பீர்மா. அதாவது பீர்மா பெத்தா. 

அவர்கள் ஊரில் உள்ள தர்காவிற்கு அப்போதைய கவர்னர் பாத்திமா பீவி விஜயம் செய்ய இருக்கிறார் என்ற செய்தியோடு கதை ஆரம்பிக்கிறது. 

உடனே ஊர் அல்லோல கல்லோலகப் படுகிறது. எங்கு பார்த்தாலும் இதைப் பற்றியே பேச்சு. குளிக்கப் போகும் போது யாரோ ஒருவர் இன்னும் எட்டு நாள் என்று சொல்ல , கேட்டவர் எதுக்கு என்று கேட்க, கவர்னர் வாறதுக்கு என்று பதில் சொல்வது வாடிக்கை ஆகிவிட்டது. அந்த சிற்றூர் தர்காவிற்கு கவர்னரே விஜயம் செய்கிறார் என்பதை  ஒவ்வொருவரும் தனிப்பட்ட கெளரவமாகவே கொண்டாட ஆரம்பித்து விடுகின்றனர். அந்தப் பரபரப்பு பீர்மா பெத்தாவையும் தொற்றிக் கொள்கிறது. அதில் கலந்து கொள்வதற்கான விஷேச ஏற்பாட்டில் கவனம் செலுத்துகிறாள். 

பீர்மாவுக்கு ' ஒரு பட்டுக் கசவுக் கவுணியும் ஒரு குப்பாயமும் எடுத்தால் கொள்ளாம்'  போல் தோன்றவே, மருமகள் அடுப்படியில் இருந்த சமயம் பார்த்து மகனிடம் கோரிக்கை வைக்கிறாள். ' இப்பதான பெருநாளுக்கு எடுத்தோம் ' என்று மகன் பேசிக் கொண்டிருக்கும் போதே மருமகள் வந்து அவளும் தன் பங்குக்கு ' ஆமா, கவர்னர் வந்து நேர உங்கள் கையைப் பிடிச்சித்தான் குலுக்கப் போராளாக்கும் ' என்று குத்தலாகப் பேச , பெத்தா இடிந்து போகிறாள். 

ஆனால், அப்படித்தான் நடந்தது. 

கவர்னர் வரும் நாளில், விடிந்தும் விடியாமல் எழுந்து , குளித்து , அப்படியே போய் மறியம் பெத்தா, பாக்கு பெத்தாவை அழைத்துக் கொண்டு தர்காவாசலில் , கேந்திரமான பகுதியில், கவர்னரை பார்க்க தோதான இடத்தில் இடம்பிடித்து விட்டனர். அதிலும் பீர்மா பெத்தாவுக்கு மூங்கில் தடுப்பை ஒட்டியபடி நிற்க இடம் கிடைத்து விட்டது. 

சரியாக ஒன்பது மணியளவில் கவர்னர் பாத்திமா பீவி கம்பீரமாக காரில் இருந்து இறங்கி, ' முட்டாக்கும் போட்டுக் கொண்டு நடந்து நாலா பக்கமும் கம்பீரமாய் கூட்டத்தைப் பார்த்து கைஅசைத்துப் புன்னகையுடன் அங்கும் இங்குமாக திரும்பி ' பீர்மா பெத்தா நின்றிருக்கும் பகுதிக்கு வந்து விட்டார். 

சட்டென்று எந்தத் திட்டமிடலும் இல்லாமல் , யாரும் எதிர்பார்க்காமல் பீர்மா பெத்தா கவர்னரை நோக்கி கையை நீட்டிவிட்டார். கவர்னரும் வெகு இயல்பாக பீர்மாவின் கரத்தைப் பற்றிக்  குலுக்கினார். 

கூட்டத்தில் இருந்து சத்தம் வந்தது. 

" பிள்ளா, கவர்னர் பெத்தா.. " 

அன்று முதல் பீர்மா பெத்தா கவர்னர் பெத்தா ஆனாள். 

திரும்பி வரும் போது மறியம் பீர்மாவிடம் பெத்தா சொன்னாள். 

" நாசமா போனதுவோ... நம்மள படிக்க வைக்காம உட்டுட்டுதுவோ.. நம்மள மாதித்தானே இருக்கா... எங்கம்மாகாரி நெலையளிஞ்சி நின்னுட்டா ... பள்ளிக்கோடத்துக்குப் போட்டாளான்ன கேட்டதுக்கு ... பொட்ட புள்ள படிச்சி பெரிய கவர்னராட்ட ஆவப்போறா... ன்னா.. " 

பொட்ட புள்ள படிச்சி என்ன ஆகப் போகுது என்று இன்றளவும் நிலவும் சமூகத்தின் பொதுப் புத்தியை மென்மையாக அதே சமயம் வலிமையாக விமர்சிக்கும் அற்புதமான சிறுகதை. 

இந்தக் கதை ஆங்கிலம், உருது, அரபியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அரபியில் மொழி பெயர்க்கப்பட்ட முதல் தமிழ்ச் சிறுகதை என்ற பெருமையும் உண்டு. 

மனித மனங்களின் உணர்வுகளின் மெல்லிய அசைவுகளை காத்திரமான கதா பாத்திரங்கள் மூலமாகவும், கதைப் போக்கின் ஊடாகவும் தன்னுடைய படைப்புக்களின் வழியாக தரிசிக்கச் செய்யும் மீரான் மைதீனின் எழுத்தைக் கொண்டாடுவோம். 

அன்புடன், 
காமு
07/11/2023

Wednesday 25 October 2023

உமர் கய்யாம்

கியாஸ்உத்தீன்அபுல்ஃபத் உமர்இப்னுஇப்ராஹீம் அல்கய்யாமி
இது உமர் கய்யாமின் முழுப்பெயர்.

உமரின் புகழ் ருபாயத்தின் முலமே உச்சம் பெற்றது
பிர நூல்கள் 
1 மகாலத்-பில்-ஜபர்-வல்-முகாபிலா
2முஸதறாத்-கிதாப்-யுக்லிதாஸ்
3 லவாஸீம்-அம்சினா
4 ஸிச்-மாலிக் ஷாஹி
5 றிசாலா கௌன்-வல்-தக்லீப்
6 அல-வுஜீத்
7 குல்யாத்-அல்-வுஜீத்
8 மீஸான் அல்ஹிகம்
9 நௌரோஸ் நாமா

ஏ ஆர் ரஹ்மானின் 
முகாபிலா பாடல் நினைவுக்கு வருகிறது

கவிஞர், கணிதவியலாளர், மெய்யியலாளர், வானியலாளர் என பலதுறை வல்லுனராக இருந்தாலும்  . தனது கவிதைகளாலே உலகில் இன்றளவும்  அறியப்படுகிறார்.

கயாமின் ஓரு பாடலை பாருங்கள்.

அவர்களோடு ஞான விதையை
நானும் நட்டேன்
என்னுடைய சொந்தக் கையினாலே
அதை வளர்த்தேன்
ஆனால் கடைசியில்
நான் அறுத்த அறுப்பு இதுதான்
தண்ணீர் போல் வந்தேன்
காற்றைப் போல் போகிறேன்

#
நிபுணர்களிடத்தில்
உலகத்தின் தத்துவத்தை
விட்டுவிட்டு
எனனுடன் ஒரு மூலையில்
குந்தவா
நம்மைப் பரிகசிக்கும்
இந்த லீலையைக் குறித்து
பரிகாசம் செய்வோம்

Tuesday 24 October 2023

"ரோஜாமலர்"

உழன்று கொண்டே கிடக்கிறது மனம்.
           கவிஞர் கோ.கலியமூர்த்தி 

ரோஜாமலர் என்றொரு கதாபாத்திரம்
******************************************
       எழுத்தாளர் மீரான் மைதீன் குமரி மாவட்டத்துக்காரர். கலைஇலக்கியப் பெருமன்றத்தின் மூலம் பழகக் கிடைத்து நெருக்கம் கூடிய உறவுகளில் ஒருவர்.

    சிறுகதை, நாவல் இரண்டு வடிவங்களிலும் தொடர்ந்து இயங்குபவர். சமீபத்தில் காலச்சுவடு வெளியீடாக வந்த அவரது 'திருவாழி ' நாவல் அவரது உச்சபட்ச படைப்பு.

   அவரது அபாரமான சிறுகதைகள் பலவுண்டு. என்றைக்கும் என் மனதில் நீங்காத இடம்பிடித்து ரீங்காரம் இடும் கதை  'தங்கமுலாம் பூசப்பட்ட இரண்டு சிறகுகள் '.இந்தக் கதை  'பலாமரம் நிற்கும் புதிய வீட்டிற்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறான் '
என்ற தலைப்புள்ள தொகுப்பில் இருக்கிற கதை.

   காமம் மனிதமனதின் அலைக்கழிப்பு மையமாகத் தொடர்ந்து செயல்படுவதையும்,தனித்த பெண்கள் கையறுநிலை நடுவிலும் சூடுகிற கம்பீரம் அவர்களுக்கு ஒரு ராஜகுமாரியின் சாயலை அளிப்பதையும், காமம் அரும்புகிற பதின்பருவ வயதுகளில் எல்லாச் சிறுவர்களையும் ஆண்களாக்குகிற வளர்ந்த பெண்கள் எல்லாக் காலத்திலும் இருக்கிறார்கள்.அபிதா யமுனா சுகறா போன்ற இலக்கிய கதாபாத்திரங்களுக்கு இணையான கதாபாத்திரங்கள் அவை  என்பதையெல்லாம் நினைவில் மீட்டச் செய்கிற கதை அது.

   கதையில் வருகிற ரோஜாமலர் என்கிற வித்தியாசமான  பெயருள்ள வித்தியாசமான பெண் இளைஞி அல்ல,பேரிளம்பெண். சிறுவனான தன் மகனோடு, பற்றிப்படர கொழுகொம்பு தேடும் கொடிபோல் அலைக்கழியும் அவள் வாழ்வில் ஒருகட்டத்தில் வந்துபோகும் கொஞ்சம் ஆண்கள், அவர்கள் அவளைப்பற்றி வைத்திருக்கும் மதிப்பீடுகள், மனிதமனத்தின் விந்தையான இயங்குதளங்கள், யாரும் எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட வாழ்வின் ஓட்டம் என அழகான நுட்பமான கதை அது.

   அதற்குப்பின் அதைவிடவும் சிறப்பான கதைகளை மீரான் மைதீன் எழுதியிருந்தாலும், பதின்பருவ ஈர்ப்பின் ரகசிய ருசிகளின் பரவசம் மிளிரும் ரோஜாமலர் என்னும் படிமத்தைத் தாண்டி நகரமுடியாமல், முதலில் வெகுநேரம் பிறகு 
வெகுகாலம் அந்தக் கதைவெளிக்குள் உழன்றுகொண்டே கிடக்கிறது மனம்.

Monday 23 October 2023

உணவு மற்றும் உணவகங்களின் ஜனநாயகம்



        சைவத்தை விட  அசைவம் உண்ணக்கூடியவர்களே உலகில் அதிகமாக இருக்கின்றனர்.
நான் சைவம் மற்றும் அசைவம் இரண்டுவகை உணவிலும் சம விருப்பமுடையவன்.குமரி மாவட்டத்தில் ஆறுநாள் மீன் உணவும் ஞாயிறு அன்று மட்டன் சிக்கன் ஒருவேளை வசதியில்லாத நேரமென்றால் குறைந்தபட்சம் கருவாடாவது சாப்பிட்டு விடுகிறோம்.இப்படியான ஒரு டிசைனில் உள்ள மாவட்டம் தமிழ்நாட்டில் வேறு எங்காவது இருக்கிறதா என்றும் தெரியவில்லை.சில நகரங்களிலுள்ள பெரிய ஹோட்டல்களைவிட அங்குள்ள கையேந்திபவன்கள் நாட்களைச்  சிறப்பாக்கிவிடுகின்றன,குறிப்பாக நெல்லை,மதுரை,திருச்சி. 

உணவு என்பது எவ்வகையிலும் நமக்கு கெடுதல் செய்யாமலிருந்தால் போதுமானது.அவ்வகையில் மதுரை சுல்தானியா மனம்கவர்ந்த உணவகமாக நான் உணர்ந்திருக்கிறேன்.சென்னை வடபழனியில் விலை கொஞ்சம் அதிகமென்றாலும் கேம்பஸ் மற்றும் ஸ்ரீராகா நல்ல திருப்திகரமானவை.திருச்சியில் காமாட்சி உணவகம் அப்படியானது.இன்னும் அசைவத்தைவிட சைவத்தில்தான் அதிக விலையிட்டு கொள்ளையடிக்கிறார்களோ என்று உணர்ந்த தருணங்கள் நிறைய இருக்கிறது. 

கேரளாவில் உணவுவகைகள் ரொம்பவும் சிறப்பாக இருக்கும்.தமிழ்நாட்டின் விலையை ஒப்பிடுகையில் விலையும் குறைவு.இதன்காரணமாக அங்கு மேற்கொள்ளும் பயணங்கள் இன்பகரமானவை.அசைவம் சாப்பிட மிகச்சிறந்த இடமும் கூட.குறிப்பாக பீஃப் உணவை நம்பிச் சாப்பிடலாம். இந்தியாவுக்கு வெளியே என்றால் வளைகுடா நாடுகளைவிட அசைவ உணவு சாப்பிட தோதான இடமாக இலங்கையைக் குறிப்பிடலாம். 

நம்முடைய நாட்டைப் பொருத்தவரையில் பெரும்பாலான உணவகங்களில் தரம் பேணப்படுதல்,முறையான தயாரிப்பு முறைகளைப் பின்பற்றுதல் போன்றவைகளில் குறைபாடு நிறைய இருக்கிறது.சென்னையில் எண்பது ரூபாய்க்கு பிரியாணியும் கிடைக்கிறது இருநூறு ரூபாய்க்கு தயிர்சாதம் விற்பவர்களும் இருக்கிறார்கள்.ஆலந்தூரில் மிகப்பெரிய கடையாக இருக்கிற சுக்குபாய் கடை அசைவமும் ,வடபழனி துரைசாமி ரோட்டில் சிறிய அளவிலுள்ள சாத்தப்பன் கடை அசைவமும் ஒரு தொல்லையும் செய்யாத ஆரோக்கியமானவைகளாக கண்டிருக்கிறேன்.மனிதர்களின் அடிப்படையான உணவு என்பது இந்த உலகில் ஆகப்பெரும் வியாபாரமாக உருமாறியிருக்கிறது.இன்று உலகின் எல்லா நகரங்களிலும் சர்வதேச நிறுவனங்கள் நங்கூரமிட்டு இறங்கியிருக்கின்றன.ஆனாலும் நினைவுகளில் பசுமையாக கிடக்கிற ஒன்று,திருவண்ணாமலையருகேயுள்ள வேட்டவலம் என்னும் ஊரில் 2014ல் ஒரு சாதரணக் கடையில்(வீடுபோல இருந்தது)நாலு இட்டிலி சாப்பிட்டுவிட்டு எவ்வளவு என்று கேட்டதும் அந்த அம்மா ஐஞ்சு ரூபா கொடுப்பா என்றது இன்னும் மறக்க முடியவில்லை.எந்த உணவகமாக இருந்தாலும் இன்னும் மறக்கமுடியவில்லை என்ற சொல்லை மனங்களில் உருவாக்குவதே அது காலா காலத்துக்கு நின்று நிலைக்ககூடியது.வெந்ததைத் தின்று விதி வந்தால் சாகவேண்டும் என்று சொல்வதைப்போலவே இன்று பெரும்பாலான உணவகங்களின் இருப்பை புரிய முடிகிறது.இன்று பரவலாக பலரும்  உணவகங்களை வெற்றிகரமாக நடத்துகின்றனர் என்பதை நாம் ஜனநாயகத் தன்மை மிக்கதாகப் பார்க்கலாம்.இதன் பின்னணியிலுள்ள கலகக்குரல்களை யாரும் மறுக்க இயலாது என்பதைத்தான் புதிய குரல்கள் வாயிலாக நாம் புரிந்து கொள்கிறோம்.ஆனாலும் கூட சொல்லவிரும்புவது தமிழ்நாட்டில் கேரளா மற்றும் கர்நாடகாவை ஒப்பிடுகையில் உணவகங்களில் விலை அதிகம்.அதிகம் என்பதைவிட கொள்ளை விலை விற்கிறார்கள் என்பதுதான் உண்மை.

Tuesday 10 October 2023

மாய எண்ணங்களுக்கு உயிர் தரும் எழுத்து.

மாய எண்ணங்களுக்கு உயிர் தரும் எழுத்து. 
ஒருவனை தனியாக ஒரு அறையில் அடைத்துவிட்டால் அல்லது பேச்சறவமற்று தனிமைப் பட்டுப்போகும்போது அவன் அகமனதோடு அதிகம் பேசிக்கொண்டிருப்பான். அந்த பேச்சு கற்பனையாக தொடங்கி கண்முன் காட்சிகளாக விரியும். அதையே தீவிரமாக அவனது மனம் சிந்திக்கத் தொடங்கும்போது அந்த சிந்தனைகளில் உள்ள நல்லது கெட்டதுகளில் தன்னையே ஒரு பாத்திரமாக உருவகித்துக்கொள்வான். சில நேரங்களில் அதில் தெளிவடையும் மனிதனும் உண்டு, மீண்டும் மீண்டும் அதிகமாக தன்னை குழப்பிக்கொண்டு அதிலேயே உழல்பவர்களும் உண்டு. இந்த விசித்திரமான நோய் மனிதனாக பிறந்த எல்லோருக்கும் உண்டு என்பது தான் மறுக்க முடியாத உண்மை. 

அந்த வகையில் எழுத்தாளர் மீரான் மைதீன் அண்ணனுக்கும் இது சற்றுஅதிகமாகவே இருப்பதாக எண்ணுகிறேன். ஏனென்றல் இப்படி இல்லாத ஒன்று குறித்து தன்மனதோடு கலந்து கற்பனையினால் அதற்குள் அவிழ்க்க முடியாத பல சூழ்ச்சிகளிட்டு பின்பு ஞானம் பிறந்தவனை ஒரு தெளிந்த குளத்தை காணுவதுமாதிரி அந்த கதாபாத்திரத்தை வாசகனுக்கு கடத்துவதில் வல்லவர். மேலும் அது வெறும் நல்ல மாதிரியான கற்பனையாகவுமிராது. அதற்குள் பேய், பிசாசு, பில்லி சூனியம் ,மாந்ரீகம், மூட நம்பிக்கைகள் என பலதும் இருக்கும்படியாக பார்த்து வார்த்தெடுப்பார். 

கொரோனோ காலத்தில் எல்லோரும் வீட்டோடு முடங்கின காலத்தில் அவரோடு ஒரு மெய்நிகர் சந்திப்பில் கலந்து கொண்டபோது இந்த கேள்வியை கேட்டேன். 

 "உங்கள் கதைகளில் இப்படி தனிமனித மனத்தோடு கூடிய உரையாடலும், அது மேலும் மூடநம்பிக்கையின் பொருட்டு நகர்வதாகவே கதை,நாவல்களில் தென்படுகிறதே?  இதற்கு பிரத்யேக காரணம் எதுவும் உண்டா?"

அதற்கு அன்று, "அப்படி தனிப்பட்ட எந்த காரணமும் இல்லை., சிறுவயதில் கேட்ட வளர்ந்த கதைகளின் வழி எனக்குள் அது பரவிவிட்டது என்றும் மேலும் அந்த உலகில் இல்லாத ஒன்றிற்கு உருவகம் கொடுத்து உயிர் கொடுத்து நடமாட விடுவது ஒருவித பிரயாசை அதை வாயால் சொல்லிவிட முடியாது ராஜா நீங்க தனியாக இருக்கும்போது அப்படி சிந்தித்து பாருங்கள் உங்களுக்கே புலப்படும்" என்றார். 

ஆனாலும் எனக்கு அன்று அந்த பதில் அவ்வளவு திருப்தியில்லை மீண்டும் ஒருமுறை நேரில் சந்தித்த போதும் அதையே தான் கேட்டேன். அப்பொழுதும் சிரித்துக்கொண்டே 
"ராஜா பேய் பிசாசு என்றெல்லாம் ஒன்று இல்லை தான் ஆனால் அதுசார்ந்த கதைகளை கேட்டு தானே நாம் வளர்ந்திருக்கிறோம். மேலும் மனிதனுடைய கற்பனை திறன் தான் இந்த உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்தது ஆக, அதை எதனாலும் வெல்லவே முடியாது எனும்போது அந்த மாதிரியான மனிதர்களையும் அவர்களின் வெள்ளந்தி தனத்தையும் பரவவிடுவதில் தவறில்லையே" என்றதாக ஞாபகம் பின் வேறு பேச்சுக்குள் மூழ்கிவிட்டோம். 

அது உண்மை தான் ஒருவன் தனிமைப்பட்டு போகும்போது தான் இவ்வாறான எண்ணங்கள் தலைதூக்கும். 

கடந்த நான்கைந்து நாட்களாக வைரஸ் காய்ச்சல் படாதபாடு படுத்திவிட்டது. தனிமை படும்போது உண்டாகும் எதிர்மறையான எண்ணங்களைவிட உடல் நலிவுற்று கிடக்கும் போது உண்டாகும் எண்ணங்கள் மிக கொடூரமானதாக இருக்கும். அப்படியான எண்ணங்களில் தவிர்க்க முடியாதது நாம் இல்லாமல் போய்விட்டால் என்ன ஆகும்? எது நடக்கும் எது நடக்காது?  நமக்கு பிறகு நம் சார்ந்தவர்களை யார் பார்த்துக்கொள்வார்கள் போன்ற காரணமுள்ள எண்ணங்களும் உண்டு. இப்படியான விதண்டாவாத எண்ணங்களோடு மல்லுக்கட்டிக்கொண்டு காய்ச்சல் அவஸ்தையோடு புரலள்வதைவிட ஐந்தாறு மாதங்களாக தொடாத வாசிப்பை தொடங்கலாமென அலமாரியிலிருந்த புத்தக அடுக்கிலிருந்து எடுத்தது தான் 'சித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம்' சிறுகதை தொகுப்பு. 

அந்த தொகுப்பிலுள்ள பதினோரு கதைகளில் பலகதைகள் மேற்சொன்ன எதிர்மறையான எண்ணங்களால் என்னென்ன நிகழ்கிறதென்று விளக்குபவைகளாகவே உள்ளது. எங்கோ ஒரு மூலையில் கேட்பாரற்று கிடக்கும் கயிறுக்குவியல்களுக்கு பின்னால் என்ன கதை இருந்துவிட போகிறது உங்களுக்கோ எனக்கோ? ஆனால் படைப்பவன் கண்ணில் பட்டால் அதற்கு பின்னால் ஆயிரமாயிர கதைகளை புனைய முடியும். அதிலும் அந்த கயிற்றுக்குவியலுக்கு பின் இறுகி உயிர்நீத்த கழுத்துகள் கூட அமானுஷ்யமாக வந்து உங்களோடு பேசும். 

வெளிநாட்டில் பணிநிமித்தமா சென்றிருப்பவன் தினமும் வீட்டிற்கு தொலைபேச டெலிபோன் பூத்திற்கு சென்றால் அங்கு தொங்கும் பல்வேறு நாட்டு கடிகாரங்கள் பல விநோத சித்திரங்களை உங்கள் கண்முன் நகைச்சுவையாக வரைந்துவிட்டு போகும். 

சாதாரணமாக வீட்டின் வாசலில் உள்ள ஒரு மாதுளை மரம். அதுவும் அவர் மனைவிக்கு யாரோ வாங்கி வந்த பழத்திலிருந்து விழுந்த வித்திலிருந்து முளைத்தது. அதனால் இத்தனை ஆண்டுகளுக்குபின் வீட்டின் உரிமையாளருக்கு தூக்கம் கெடுகிறது. தன் சாயங்கால சாயாக்குடி சகாக்களோடு கலந்தாலோசித்து காரணம் 'தென்றல்' தான் என கண்டுபிடிக்கிறார். தென்றலை தீர்த்துக்கட்ட வேண்டுமென்று திட்டம் தீட்டுகிறார் என்றால் உங்களால் சிரிக்காமலிருக்க முடியுமா?. சிரிப்போடும் அதே சமயம் ஒரு சீரியஸ் டிஸ்கஷனோடும் கதை செல்லும். 

இப்படியாக ஊசிகாந்தம் உயர்ந்த மலைப்பிளவின் வழி, மத்தது, குப்பையாண்டி பிள்ளையின் சுவர், உக்கிர ஒலி,கலர் வேலைப்பாடுகளுடன் கூடிய டிசைன் வாய்கள், ஒருபாடு கதைகள் போன்ற கதைகள் அதனதன் வடிவத்திலும், கருப்பொருளிலும் தனித்தன்மை வாய்ந்தவை. குப்பையாண்டி பிள்ளையின் சுவர் கதையும், கலர் வேலைப்பாடுகளுடன் கூடிய டிசைன் வாய்கள் கதையும் கற்பனை திறனின் உச்சம் என்றே சொல்லலாம். ஒரு சுவர் பேசினால் அது எத்தனை ஆண்டுகளின் கதையை தன்மேல் ஏற்றியிருக்கும் என்பதும்- மனிதர்கள் ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொரு வாயை பொறுத்திக்கொண்டு பேசுகிறார்கள் என்பதுவும் வேறு வேறு கோணங்கள். ஆனால் இருவரிடத்திருந்தும் வருவது சமகால வார்த்தைகள். மிக நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு நல்ல தொகுப்பை படித்த திருப்தியை இவ்வளவு அதிகமாக பதிவு செய்துவிட்டதாகவே நினைக்கிறேன். ஆகையால் சித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம்  புத்தகத்தை நீங்கள் வாங்கி படித்து உண்மையை தெரிந்துகொள்ளுங்கள். 

பின் குறிப்பு:- மாய எண்ணங்களை போலவே ஒளி,ஒலிகளை வாசகனுக்கு கடத்துவதிலும் எழுத்தாளர் மீரான் மைதீன் வல்லவர் அந்த எண்ணங்களுக்கு சற்றும் குறைவில்லாமல் இருக்கும் ஒளி, ஒலிகளின் அவருடைய தீராக்காதல். அவ்வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அவருடைய சேலம் வருகையின் போது அறையில் வைத்து இந்த படத்தை நான் எடுத்தேனென்றாலும் இந்த ஜன்னோலரம் எடுங்க ராஜா நல்ல ஒளியா இரிக்கு என்று அவர்தான் சொன்னார். புத்தக விபரம் முதல் கமெண்டில் தருகிறேன்.❤️ 

பேரன்புடன், 
   -சேலம் ராஜா 
        -10-10-23.

Monday 2 October 2023

ஒரு வாசிப்பனுபவம்

மீரான் மைதீனின் நாவல் ஒச்சை - வாசிப்பு அனுபவம் 

மீரான் மைதீனில் கதை மாந்தர்கள் எல்லோருமே அவரவர் நிறைகுறைகளோடு தான் வாழ்கிறார்கள். கதையும் கூட கதாநாயகன், நாயகி என்று இருவரை மட்டுமே  சுற்றி வருவதில்லை. கதைப் போக்கில் , அது ஓர் ஊர்க் கதையாகவும் , அந்த மனிதர்கள் அனைவரின் கதையாகவும் உறுப்பெறும் மாயம் நிகழ்கிறது. இது அவருடைய எல்லா நாவல்களிலும் காணக்கூடிய பொதுவான போக்கு. 

ஒச்சை நாவலும் விதிவிலக்கல்ல. 

அன்று காலை வழக்கம் போல் சலாம்து சாயிப்பின் டீக்கடை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. மக்கள் வருவதும் போவதுமாக , டீ குடித்துக் கொண்டே ஊர்க் கதைகளைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வந்த குருசுமிக்கேலின் மகன் சைக்கிளில் இருந்து காலை ஊன்றியபடி , ஓய் சாயிப்பு.. உங்களுக்கு ஒண்ணும் தெரியாதா என்று ஆரம்பிக்கிறான். சொல்லுலே .. தாயழி என்று சலாம்து சாயிப்பு சத்தம் போட ,  கிளவுஸ் கம்பெனிக்க பின்னாடி கோயாவக் கொன்னு போட்டிருக்கானுவ. கத்திக் குத்து .. ரத்த வெள்ளத்தில செத்துக் கிடக்கான் என்று சொன்னவுடன் ஊர் மக்களுக்கு பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. 

போலீஸ் விசாரணை சூடு பிடிக்கிறது. 

மோப்பம் பிடித்து ஓடிவந்த போலீஸ் நாய் கோலப்பன் புரோட்டாக் கடை ஷட்டரைப் பார்த்து குரைத்து விட்டு அங்கேயே படுத்துக் கொள்கிறது. கோலப்பன் மீது கொலையின் சந்தேக நிழல் படிகிறது. 

நள்ளிரவில் தன்னுடைய கடையைச் சாத்திவிட்டு , வீட்டுக்குச் சென்று  குளித்து படுக்கைக்கு செல்ல 4 மணி ஆகிவிடும் கோலப்பனுக்கு. நம்பிக்கையும் நாணயமும் இரு கண்கள் என்று எழுதப்பட்ட ரியல் எஸ்டேட் புரோக்கர் நெட்டையின் விசிட்டிங் கார்டை கடுப்பில் தூக்கி வீசப்போக அது கொலையுண்ட கோயா, அன்றைய இரவில் நண்பர்களான பூமணி, மோசே உடன்  மது அருந்திய இவனுடைய புரோட்டாக் கடையின் பின்புறம் கண்டெடுத்த போலீஸ் , கோலப்பனையும் வளையத்துக்குள் சிக்க வைக்கிறது. தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தவன் வாழ்க்கை போலீஸ் , விசாரணை என்று தடம் புரள்கிறது. 

கொலையுண்ட கோயா ஒரு சுவாரஸ்யமான கேரக்டர். எல்லாவற்றையும் நுட்பமாக கிரகிக்கும் ஆற்றல் படைத்தவன். திடீரென்று பேரறிஞர் அண்ணா, மாப்பிள்ளமார் கலகம், குமர கோயில் நுழைவுப் பேராட்டம் பற்றியெல்லாம் வரலாற்றுத் தரவுகளோடு பேசுவான். மிதமான போதையில் கோயாவின் பேச்சு பெரும் ஞானம் கொண்டவனின் பேச்சு போல் இருக்கும் என்று எழுதிச் செல்கிறார் மீரான். அது சரிதான் என்று பல இடங்களில் நிரூபிக்கிறான் கோயா. 

ஒரு முறை காசு, பணம் பற்றி ஐயப்பனிடம் பேசிக் கொண்டிருக்கும் போது போகிற போக்கில் கோயா, மானங் கெட்ட பயலுவளுக்குதான் காசு பணம் பெரிசு ஐயப்பா என்று சொல்வான். 

அதே போல் ஆட்டோ டிரைவர் பஷீரின் வேணி மேல் கொண்ட ஒரு தலைக் காதல் தோல்வியில் முடிந்தவுடன் ஆறுதல் சொன்ன கோயா, கவலைப்படாதே ... உனக்கென்று ஒரு சீதேவியோ மூதேவியோ வருவாள் என்று சொல்லிட்டு , காதல் ஒரு முடிவுறாத பயணம் என்பான். கேட்டுக் கொண்டிருந்த சிந்தா ஷேக்மதார், காதல் ஒரு முடிவுறாத பயணம்.. அருமையான டைட்டில் என்று பாராட்டுவான். 
மரியம் பீவி என்று தன் அன்னையின் பெயரில் இருந்த ஆட்டோவின் பெயரை திரிவேணி என்று பிரியப்பட்ட பொண்ணின் பெயரில் மாற்றிக் கொண்டு,  காதல் தோற்றவுடன், ஆட்டோவில் அடிக்கடி கம்பன்  ஏமாந்தான் பாடலை ஒலிக்க விடுவான். கேட்டுக் கொண்டிருந்த சங்கரன் மாமா, டீக்கடை சலாம்து பாயிடம், தாயழி , இவன் ஏமாந்துட்டு  கம்பன தெருவுல இழுத்து விடுறான் பாரு என்று சொல்லும் போது சலாம்து பாயோடு சேர்ந்து நமக்கும் சிரிப்பு வருகிறது. சலாம்து பாய், சங்கரன் மாமா கல கல கூட்டணி ஊர் நடப்புகளைப் பற்றி இப்படி நச்சென்று  கமெண்ட் அடிப்பது நாவல் முழுக்க பரவிக் கிடக்கிறது. எந்த ஒன்றையும் வலிந்து திணிக்காமல் , கதாபாத்திரங்களின் உணர்வுப் போக்கிலேயே கதையை நகர்த்துவதும், நகைச்சுவை உட்பட அனைத்து உணர்வுகளையும் நுட்பமாக கடத்தக் கூடிய எழுத்துக்குச் சொந்தக்காரராக மீரான் திகழ்கிறார். 

கோயா, மனைவி சைனபாவைத் தள்ளி  வைத்து விட்டு , ஏதோ தொடுப்பில் இருப்பதாக ஊருக்குள் பேச்சு. மனோரஞ்சிதம் என்கிற அந்த ' நொண்டிச் சிறுக்கி ' , இடுப்புக்குக் கீழே கம்பியாய் சூம்பிக் கிடக்கும் கால்களோடு , ஆற்றங்கரைக் குடிசையில் கள்ளச் சாராயம் விற்று வயிற்றைக் கழுவுபவள். ஒரு முறை அவளுடைய குடிசை தீப்பற்றி எரிந்த போது, ஊரே வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது, கோயா தான் உயிரைத் துச்சமென மதித்து அவளைக் காப்பாற்றியவன். கருணை உள்ளத்தோடு அவன் செய்யும் உதவிகளைப் பார்த்தால், அந்த உறவை எப்படிக் கொச்சைப் படுத்த முடியும் என்று தெரியவில்லை. 

கதாபாத்திரங்களின் வடிவமைப்பு கன கச்சிதம். ஒரே ஒரு காட்சியில் வரும் கேரக்டர் கூட மனதில் ஆழமாய் பதிந்து விடுகிறது. நிஜ மனிதர்கள் போலவே மனதில் உலவ ஆரம்பித்து விடுகிறார்கள். வரிகளை வாசிக்க வாசிக்க அவர்களுடைய அனுபவங்கள் அப்படியே நெஞ்சில் உயிரோவியங்களாக நிலை பெற ஆரம்பித்து விடுகின்றன. 

ரியல் எஸ்டேட் புரோக்கர் ஐயப்பனும் , கோயாவும் ' ஒண்ணாம் கிளாஸில் ' இருந்தே கூட்டாளிகள். ஓமனில் இருந்து இரண்டு மாத விடுமுறையில் வந்த ஜின்னாவுக்கு இடத்தைக் காட்டி, நாலு நல்ல வார்த்தை சொல்லி அவனுக்கு எடவாடு முடித்துக் கொடுத்தால் , கையில் கொஞ்சம் பணம் புரளும். லேசாக ஆசுவாசப் படுத்திக் கொள்ளலாம் என்னும் ஆவலாதியில் இருவரும் போகும் போது, வழியில் சந்தித்த கோயாவிடம் சிறிது நேரம் உரையாடி விட்டுத்தான் செல்கிறார்கள். இப்படித்தான் நாவல் ஆரம்பிக்கிறது. 

அடுத்த நாள் காலையில் பார்த்தால் கோயா குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கிறான். ஆடிப் போகிறான் ஐயப்பன். 

அப்போது சதாசிவனும், ராமச்சந்திரனும் ஐயப்பனிடம் மெல்லக் கேட்டனர் , செத்தவன் சாயப்பு, நான் வேணும்னா சுப்ரமணியத்துட்டப் பேசவா என்று எதற்கோ அடிபோடுவதைப் போல் கேட்கிறான். அவனுடைய விபரீத எண்ணத்தை உணர்ந்த ஐயப்பன் , " எங்க எழவு உழும் ,  ரத்தம் குடிக்கலாம்னு நடக்கியளாலே " என்று விரட்டி விடுகிறான். போகிற போக்கில் , உரையாடல் வழியாகவும், நிகழ்வுப் போக்குகள் வழியாகவும் அரசியல், சூழல் கேடு, சமய அடிப்படைவாதிகள் போற்றிப் பாதுகாக்கும் நம்பிக்கைகள், சமூகச் சீரழிவுகள் என எல்லாவற்றின் மீதும் இது போன்ற நுட்பமான விமர்சனங்களை பொதிந்து வைத்துக் கொண்டே போகிறார் மீரான். 

போலீஸின் சந்தேக நிழல் ஐயப்பன்  மீதும் விழுகிறது. விசாரணைக்கு அழைத்துப் போக சுசீலன் என்கிற காவலர் மஃப்டியில் வந்து ஐயப்பனிடம் , எங்கயாவது தோப்பு வெலைக்குக் கிடந்தாச் சொல்லுங்க ... வாங்க தள்ளிப் போய் பேசுவோம் என்று நைசாக அழைத்துப் போகிறான். ஆட்டோ அருகில் வந்ததும், ஏறுலே வண்டில என்று அதட்டுகிறான். என்ன தொனி மாறுகிறதே என்று உச்ச கோபத்தில் பதற்றமான ஐயப்பன், யாருலே நீ? எதுக்குலே ஆட்டோல ஏறணும் என்று கேட்கிறான். ஆங், உன் அம்மைக்கு மாப்பிளை பாக்கதுக்கு ... ஏறுலே தாயழி என்று கழுத்தில் கைவைத்து ஆட்டோவுக்குள் தள்ளுகிறான். 

' அம்மைக்கு மாப்பிள பாக்கதுக்கு ' என்ற வார்த்தையை தாங்க முடியவில்லை ஐயப்பனால். அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. அந்த வார்த்தைகள் சம்மட்டி அடிபோல் இறங்கிக் கொண்டே இருந்தது. கற்பனையில் ஒருவன் சன்னம் சன்னமாக கொன்று போடக் கூடிய வார்த்தைகள் எத்தனை துரதிர்ஷ்டமானது என்று பதிவிடுகிறார் மீரான்.  வாழ்வின் எதிர்பாராத அதிர்ச்சித் திருப்பம் , "என்ன மயிரப் புடுங்குன வாழ்க்கைடா " என்று அங்கலாய்ப்பாய் இருந்தது ஐயப்பனுக்கு. 

விடிய விடிய தூக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்தவன், அதிகாலைப் பள்ளிப் பாங்கோசை கேட்டு எழுந்து பாயில் உட்காருகிறான். ஐயப்பனுக்கு அதன் அர்த்தங்கள் எதுவும் புரியவில்லை என்றாலும், குழந்தைப் பருவத்தில் இருந்தே கேட்டு வரும் அந்தப் பாங்கின் சத்தம் இனிமையாக இருந்தது. பாங்கு முடிந்ததும் சிவன் கோவிலில் பாட்டு போட்டார்கள் என்று எழுதுகிறார் மீரான். 

சட்டென்று எழுந்து குளித்து விட்டு, கோயாவின் அடக்க ஸ்தலத்துக்குப் போகிறான். நேற்று முந்திய காலையில் சிரிக்கச் சிரிக்கப் பேசிய கூட்டாளி இப்போது செத்து மண்ணுக்குள். ' மனிதன் காலத்தால் எதில் வளர்த்திருக்கிறான் என்றே தெரியவில்லை ' என்னும் யோசனையோடு அடக்க முடியாமல் அழுகை பீறிட்டு வெடிக்கிறது. கபர்ஸ்தானத்துக்கு அழைத்து வந்தவனால் இவன் இப்படி அழுவதை நம்ப முடியவில்லை. திரும்ப வரும் போது , இந்த உலகத்துல எங்கயாவது மனுஷன் நல்லவனாகவும் இருக்கான் என்று பலவிதமாக பேசிக்கொண்டே வருகிறான். 

நண்பனின் கொலை, போலீஸ் விசாரணை எல்லாம் அதுநாள் வரை தன்னுடைய ' சுய அசைவுகள் மேல் எழுந்து விடாதபடி தனக்குத் தானே போர்த்திக் கொண்ட வலையில் ' இருந்து மெள்ள மெள்ள விடுபடுபவனாகக் காட்சியளிக்கிறான் ஐயப்பன். 

ஆரம்பத்தில் துப்பறியும் மர்ம நாவல் போல் தோற்றம் கொண்டாலும் , சகல மனித உணர்வுச் சுழிகளாய் நடக்கும் நதிபோல் சலசலக்கிறது நாவல். 

விசாரணைக்குச் செல்லும் கணவன் ஜின்னாவுடன் செல்லும் மனைவி உசைமா, அவனைக் கலாய்ப்பதெல்லாம் தரமான நகைச்சுவை. 

போலீஸ் விசாதனைக்குப் பிறகு ஆறு மாதத்தில் மரணித்த பூமணி, நோய்வாய்ப்பட்ட மோசே, இன்சா அல்லா என்று சொல்லிவிட்டு , சிரித்துக் கொண்டு, என்ன சரியாச் சொன்னேனா என்று கேட்கும் தடிக்காரன்கோணம் வைத்தியர், கிளீனிக்கின் நடுத்தர வயதுப் பேரழகி, வெட்டி பந்தா காட்டும் ஜமா அத் தலைவர் அன்வர், குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியாளாய் வாழ்வைக் கழிக்கும் மோதினார், விசாரணை பயத்தில், சிவம்பிள்ளை பண்ணையார் வயலில் நாத்தங்கால் பிரிச்ச வாமடையில் நீர் ஓடுவது போலப் போயிட்டே இருக்கே என்று மூத்திரம் பெய்யும் நெட்டை என்றழைக்கப்படும் ரசாக் என்கிற ரியல் எஸ்டேட் புரோக்கர், கடைசியில் கொலையாளி என்று கைது செய்யப்படும் கோயாவின் தம்பி காஜாவின் மீதான குற்றப்பத்திரிக்கையில் உள்ள ஓட்டைகளைப் புட்டுப் புட்டு வைக்கும் நடேசன் வக்கீல், ஜமாஅத் தலைவர் அன்வரின் வெற்றுச் சவடால்களை அம்பலப் படுத்தும் ஆட்டோ டிரைவர் பஷீர், இன்ஸ்பெக்டர் ராயன், காவலர் ரேணுகா என்று எல்லோரும் உயிர்ச் சித்திரங்களாக உலா வருகிறார்கள். 

ஒச்சை என்ற மலையாளச் சொல்லுக்கு சந்தடி , இரைச்சல், கலகலப்பு என்று பொருள். 

கோயா கொலையானவுடன் நின்று போன பள்ளி முக்கு ஒச்சை, காஜா விடுதலை ஆன சிறிது காலத்தில் மீண்டும் வந்ததாகக் கதை முடிகிறது. 

ஜி.நாகராஜன் , வைக்கம் முகம்மது பஷீர் போல், விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை, அவர்களுடைய சமூக நியதிகளை அல்லது நியதி மீறல்களை அன்பும் கருணையும் கொண்டு அவர்களின் சமூக, பொருளாதார நிலையில் இருந்து பார்க்கும் பார்வையில்தான் மீரான் மைதீனின் படைப்புகள் இருப்பதாக உணர்கிறேன். 

மனித நேயமே மீரான் மைதீனின் எழுத்தின் அடிநாதம். அதை மனித நேயம் என்றாலும் சரி, பேரன்பு என்றாலும் சரி, இவருடைய எழுத்துக்களும், கதை மாந்தர்களும் சாதி, மத, இன, மொழி என்ற எந்த மன மாச்சரியங்களும் இல்லாத வாழ்க்கை நெறியைத்தான் முன்வைப்பதாகப் படுகிறது. 

எந்த மனநிலையில் உள்ள வாசகனுக்கும் இந்த உணர்வு ஏற்படும் என்று நினைக்கிறேன். 

நல்ல இலக்கியப் படைப்பு இதைச் சாதிக்கும். 

' ஒச்சையும் ' சாதித்திருக்கிறது. 

அன்புடன், 
காமு 

வெளியீடு : புலம் 
பக்கம்      : 164 
தொடர்பு  : 98406 03499

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்                    இன்னொரு சாயல்                            எம்.மீரான் மைதீன்          ...