Wednesday 14 February 2024

" புதிய திறப்பு "

    " கலாச்சாரத்தின் மீதான
           ஒரு புதிய திறப்பு "

                             எம்.மீரான் மைதீன்


       ஆமினா முஹம்மத் எழுதியிருக்கிற ஆகாத தீதார் என்கிற சிறுகதை நூலை வாசித்துவிட்டு அமைதியாக யோசித்த தருணங்கள் நன்றாக இருந்தது.நம்மை  நெகிழ்த்தும் எழுத்துக்கு எப்போதும் நமக்குள்ளே ஒரு இடம் உருவாகுகிறது. நமது சிந்தனைப் பரப்பை விசாலப்படுத்தி நம்மை அசைக்கும் போது நாம் அந்த அசைவுகளுக்கு ஏற்ப மன எல்கைகளில் நம் வாழ்வியல் தொடர்புகளிலுள்ள முந்தைய சுவீகாரங்களின் வழியே  பயணிக்கிறோம்.அப்படியான ஒரு பேரனுபவத்தை தருகிற தொகுப்பாக அமைந்திருக்கிறது.இஸ்லாமிய வாழ்வியல் பரிட்சயமுடையவர்களுக்கு இந்த கதைமாந்தர்களும் மொழியும் உரையாடலும் மதுரமான சுவையுடையதாக இருக்கும். ஒரு மலைப்பிரதேசத்தின் மழை வெள்ளம் பள்ளத்தை நோக்கி பாய்ந்தோடுவது போல வாழ்வின் எல்லா நிலைகளும் பெண்களை நோக்கியே பாய்ந்தோடும் வாழ்வியல் சித்திரத்தை காலத்தின் முன்னும் பின்னுமாக ஆமினா எழுதியிருக்கிறார்.வாழ்வை வரலாறாகவும் வரலாற்றையே வாழ்வாகவும் கலைப்படுத்தும் இந்த சிறுகதை நூல் சாதரணர்களின் அற்புதமான ஒரு ஆவணமாக நம்மை வந்தடைந்திருக்கிறது.முந்தைய பல இருப்புகளை உடைத்துப்போடும் ஒரு ஜென்மத்தின் மனுசிகள் அப்படியே காலத்தோடு நம்மை வந்தடைகின்றனர். புகைப்படம் என்கிற ஒரு சிறுகதை, தொகுப்பிலுள்ள ஆகச்சிறிய கதையும் கூட.காலத்தைாமட்டுமே உறையச் செய்யாமல் செய்யப்பட்ட துரோகங்களையும் தாங்கி நின்று நடுக்கமுறசெய்யும் ஒரு கேள்வியை முன்வைக்கிறது.கேள்விகளுக்கு இங்கு பதில் இல்லை என்றாலும் கேள்விகளால் எல்லாவற்றையும் குதற முடியும்.குர்ஆனில் காலத்தின் மீது சத்தியமாக எனத்துவங்கும் பல வசனங்களை வாசித்திருக்கிறோம். காலம் எத்துணை முக்கியமானது என்பதன் புரிதலாக இதனை கொள்ளலாம்.கடந்த காலத்தை நம்முன் கொண்டு வருவதன் வாயிலாகவே நாம் புதிய கட்டமைப்பை உடைக்கவோ உருவாக்கவோ இயலும்.

          உயிர்கள் இந்த உலகவாழ்வை மரணத்தின் வாயிலாக நிறைவு செய்கின்றன.மரணமடைந்தவர்கள் பிறகு ஒருபோதும் திரும்ப வருவதில்லை.எனவே அது நமக்கு மிக்கடுமையான துயரம் தரக்கூடியது. நமக்கு தெரிந்தவர்கள்,நம்மோடு பழகியவர்கள்,நம்மோடு நெருக்கமாகப் பழகியவர்கள்,மிகமிக நெருக்கமாகப் பழகியவர்கள்,நாம் அன்றாடம் பார்த்து வரக்கூடியவர்கள்,உறவுகள்,தூரத்து உறவுகள்,நேரடியான இரத்த சம்பந்தமுடைய உறவுகள்,உறவுகளின் உச்சமான தாய்தந்தையர் கணவன் மனைவி,சகோதர சகோதரிகள் என பலவிதமான அடுக்குகளில் நிகழும் மரணங்களில் மனிதர்கள் துயரப்பட்டு, வலிசுமந்து,நினைவுகளின் ஆக்கிரமிப்பிலேயே வாழ்வதைப் பார்க்க இயலும்.தாய் தந்தையரின் மரணங்கள் பிள்ளைகளின் வாழ்நாள் முழுவதும் நினைவுகளாய் துரத்துவதுபோல இணையர்களின் மரணமும் அதீத நினைவுகளின்பால் மூழ்கடிக்கும் துயரமானது. இதன்பொருட்டு அந்த அதீத அன்பின் நினைவுகளை சுமந்து,நீ இல்லாத இந்த உலகில் வாழ இயலாதென தாங்கமுடியாத இழப்பின் வலியில்  தன்னை சுயமாக மாய்த்துக் கொள்கிறவர்களைக்கூட நாம் பார்க்கிறோம்.இன்னொரு பக்கம் கடுமையான துரோகங்களின் பொருட்டு நீ இருக்கும் இந்த உலகில் இனி நான் வாழ விரும்பவில்லை என்கிற நிலையில் நிகழும் சுய மரணங்களையும் நாம் பார்த்திருக்கிறோம்.மரணம், மரணித்தவருக்கு விடுதலையாகவும், வாழ்பவர்களுக்கான தண்டனையாகவும் இருப்பதாக  ஒரு கதையில் எழுதியிருக்கிறேன். மரணத்தின் பொருட்டு சுற்றிலும் நாம் கற்பனை செய்ய இயலாத மாற்றங்கள் நிகழ்கின்றன.ஒரு மரணத்தால் ஒருவேளை ஒரு அடிமை சுதந்திரவானாக மாறலாம்.ஒரு ஏழை செல்வந்தனாக மாறலாம். அதுவரையிலும் அதிகாரமற்ற ஒருவர் அதிகாரம் பொருந்தியவராக மாறலாம்.இவைகள் அனைத்தும் எதிராகவும் மாறக்கூடும்.மரணம் ஒருவகையில் முக்கியத்துவம் வாய்ந்ததுதான்.

           இந்த வாழ்வில் நாம் பல மரணங்களைப் பார்த்திருக்ககூடும். எந்த மரணமும் நம்மை கொஞ்சமேனும் துரத்தும்.மரணப்பட்டவரின் நல்லவைகளும் கெட்டவைகளும் நம்மோடு அவர் வாழ்ந்த காலத்தில் நடந்த விதங்கள்,பேசிய சொற்கள் என நினைவுகள் துரத்தாமல் விடுவதில்லை.பெரும்பாலும் மரணித்தவர்களின் மீது நமக்கு வன்மமில்லை.துக்கம் மெல்ல மெல்ல எல்லா வன்மங்களையும் பகைகளையும் இல்லாமலாக்கி புனிதப்படுத்த முயலும்.மரணித்தவரின் விடயத்தில் இதில் நமக்கு ஒரு நட்டமுமில்லை.எனவே நாம் மரணித்தவரின் மீது 'நல்ல மனுசன்..போயிட்டான்..'என்பது போன்ற வார்த்தைகள் நமது சட்டைப்பையில் இருப்பு இருக்கின்றன.மரணித்தவர்கள் மீது எல்லா சமயங்களும் தனித்தனியாக நிறைய நம்பிக்கை சடங்குகள் செய்வதையும் அவ்வகைச் சடங்குகளை செய்வதைக் கடமையாகவும் கொள்வதைப் பார்க்க இயலும்.இஸ்லாம்,எல்லா உயிர்களும் மரணத்தை சுவைத்தே தீரும் எனவும்.மரணத்திற்குப் பிறகு இறைவனிடத்தில் அந்த உயிர் எழுப்பப்பட்டு கேள்விகணக்குகளின் வாயிலாக அந்த உயிரின் நன்மை தீமைகள் அளவீடு செய்யப்பட்டு அதன் பலாபலன்கள் அவ்உயிருக்கு வழங்கப்படும் என்பதை நம்பிக்கையாக கொண்டிருக்கிறது.

              இஸ்லாம் சமூகம் மூடுண்ட சமூகம் என்கிற குற்றச்சாட்டு இப்போது மிகப்பழமையாகிப் போயிருக்கிறது. பெண்கைள முடக்கி வைத்திருக்கிறார்கள் என்றக் குரல்கள் பொய்த்துப் போய்விட்டது. அரசியல், சமுதாயசேவை,ஆய்வு,கலை இலக்கியம் என அவர்கள் நிறைய பங்களிப்பைச் செய்ய வருகின்றனர். இப்போது அது பெருகிவருகிறது.இதில் ஆண்களின் உலகம் ஓரளவுக்கு முன்னமே விசாலமானது. தமிழ் சிறுகதை உலகில் இதற்கான நூற்றாண்டு வரலாறு இருக்கிறது. ஆனால் பெண்கள் என்று குறிப்பிட்டால் தமிழில் இலங்கையையும் இணைத்துக் கொண்டாலும் கூட சொற்பமானவர்களின் பெயர்களே முன்வருகின்றன.பெண்களின் பங்களிப்பாக முன்னோடிகளான பாத்திமுத்து சித்தீக், கே.ஜெய்புன்னிஸா,ஜரீனா ஜமால், இளசை மதீனா,தொண்டியைச் சார்ந்த பாத்திமா ஷாஜஹான்,பஜிலா ஆசாத்,எஸ்.பர்வின் பானு,நஸீமா ரசாக்,ஜெஸீலா பானு,என்னும் வரிசையில் வெகுஜனப் பரப்பில் அறியப்பட்ட கவிஞர் சல்மாவுக்குப் பிறகு நீண்ட காலம் கடந்து ஆய்வுத்தளத்தில்  நஸிமா பர்வின் நவீன எழுத்தின் முகமாக வந்திருந்தார். தொடர்ந்து இஸ்லாமிய வாழ்வியலை எழுதும் ஷம்ஸுல் ஹுதா இரண்டு சிறுகதை நூல்களைத் தந்திருந்த நிலையில் இப்படியான காலத்தில் சமீபத்திய காத்திரமான வரவாக அறிமுகமாகியிருக்கிறார் "ஆகாத தீதார் "சிறுகதை தொகுப்பினுடை ஆசிரியர் ஆமினா முஹம்மது.கதைக் கட்டமைப்பில் நுட்பமான பார்வை கொண்டிருக்கும் அசாத்தியமான வரவாக தெரிகிறார்.முதல் சிறுகதையை வாசித்ததுமே வியப்பாக இருந்தது.தேர்ந்த வசப்பட்ட எழுத்துமுறை.கதையை ஆமினா துவங்குகிற இடமும் முடிக்கிற இடமும் அழகிய அம்சங்களின் நேர்த்திமிக்க  கலவை.அவருக்கு எழுத்தின் வசீகரமான சாரம்சங்கள் வாய்த்திருக்கிறது என்பது உண்மையாகத் தோன்றதக்க சாத்தியங்கள் இருக்கின்றன. கண்களின் இயல்பான பார்வையைப் போல ஒரு பாடுபொருளைப் பிரதானமாக முன்வைத்து மனங்களின் வழியே கடத்துகிற எழுத்து யாத்திரையில் நல்ல ஓட்டத்தை ஓடியிருக்கிறார்.இதன் தொடர்ச்சியில் இன்னும் வீரியமான வரைவுகள் அவரிடமிருந்து வரக்கூடும்.


"காலையின் மீது இரவின் இருள் இன்னும் முழுதாய் நீங்கியபாடில்லை. அதற்குள்ளாகவே கான்சா தெரு பெண்களும் குமரிகளும் செய்யிதா நாச்சியாள் இல்லம் முன்பாக ஒருவர் பின்னே ஒருவராக வர ஆரம்பித்துவிட்டார்கள்.நீண்ட வரிசையில் கலர்,கலர் பிளாஸ்டிக் குடங்கள் அணிவகுத்திருந்தது. பானைகளை வைத்துவிட்டு தனக்கு சவுரியப்பட்ட இடங்களில் அமர்ந்துக் கொண்டு,தரையில் இருந்து பாம்பு போல் படமெடுத்து நிற்கும் குழாய் மீதும் கவனம் செலுத்தியபடி கதை பேசத் தொடங்கினார்கள்."
ஒரு காட்சி,அந்த காட்சியின் மேல் அடுக்குகள்,அந்த அடுக்குகளின் குறுக்குவெட்டு காட்சி,இவை எல்லாவற்றிற்குமான முதன்மையாக ஒரு தண்ணீர் குழாய் பாம்புபோல படமெடுத்து நிற்பதில் கவனம் கொள்ளும் கான்சா தெரு பெண்களும் குமரிகளுமாக குவிந்திருக்கும் மாந்தர்கள்.ஆனால் ஆமீனா இதனை மாந்தர்களின் கதையாக வளர்க்காமல் அத்தாக்கு நம்ம மேல பாசம் ... ஆனா அம்மா மேல பைத்தியம் என சலித்துக் கொள்ளும் சாய்ராவின் உலகம் உடைபடும் கதையாக நிறைவுருகிறது. இது ஆமினாவின் வசீகரமான எழுத்து முறையாக இருக்கிறது.
       நாசிக்குள் ஈரெட்டென வந்திலங்கு மன மந்திரத்தின் தீதாறு தந்தருளஞ் சீமானே.... என ஞானமாமேதை பீராப்பா ஞானப்புகழ்சியில் பாடியிருக்கிறார். ஞானப்புகழ்ச்சியில் பல இடங்களில் வருகின்ற சொல்லாக தீதாறு இருக்கிறது.தீதாறுக்காக இறைஞ்சுகிறது பாடல்.
         ஆமினாவின் 'ஆகாத தீதார்' மரணித்தவரின் முகத்தினை கடைசியாக பார்பது இஸ்லாமியர் வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. செத்தாலும் எம் மூஞ்சியில முழிக்காதே என்கிற வார்த்தை ஆகக் கொடுரமான வெறுப்பின் உச்சமாக வெளிப்படக்கூடியவை.ஆமினாவின் மொத்தக் கதைக்களமும் இதுதான். இதுதான் என்றால் வாழ்வு மரணத்தில் மரணித்தவரல்லாத எவருக்கும் முற்றுப் பெருவதில்லை.எனவே ஒரு புதிய தொடக்கத்துக்கான வரைதலை துவங்கும் புள்ளியை வைத்துவிட்டு மெல்ல நிமிர்ந்து பார்க்கும் கதைகள்.இத்தொகுப்பிலுள்ள பதிமூன்று சிறுகதைகளிலும் மரணம் நிகழ்கிறது.மனிதர்களின் கஷ்டங்களைக் கேட்பது அவ்வளவு எளிதான விசயமல்ல .அது நம் நிம்மதியை ஒட்டுமொத்தமாய் சீர்குலைக்ககூடியது.ஆனால் இந்த கதைகள் நம்மை எங்கோ சீர்படுத்த முனைகின்றன.நம்மை வாஞ்சையோடு ஒவ்வொன்றின் அருகிலும் அழைத்துப் போகிறது.
           சாதரண மனிதர்களைவிட கலைஞன் அகலப்பார்வை உடையவன்.இன்னும் சொல்லப்போனால் கலைமனம் கொண்டவர்களுக்கு ஒரு கொம்பு கூடுதலாகவே இருக்கிறது.அதை திமிர் என்றோ ஆணவம் என்றோ ஞானமென்றோ எப்படி வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும் அதுகுறித்து வரைகிறவர்களுக்கு ஒரு கவலையுமில்லை.வாழ்வின் நெடிய பரப்பில் அவர்கள் தனித்துவமான அவதானம் கொண்டவர்கள். அவர்களுக்கு பிறப்பின் பெயரிலும் இறப்பின் பெயரிலும் கூட இன்பதுன்பம் கடந்த தனித்த அவதானம் உண்டு.ஆமினாவும் அவதானித்திருக்கிறார்.அந்த அவதானத்தை தனக்குள்ளே உருக்கி படைத்திருப்பதை இதன் வாசிப்பில் புரியமுடிகிறது.சில கதைகளில் தொடர்ச்சியாக பௌசியா வருகிறாள்.ஒரு மனிதருக்குள் எத்தனை மனிதர்கள் இருக்கிறார்கள்.ஜனாசாவின்(மரணத்தவரின் பூத உடல்) கட்டைவிரலில் எஞ்சிய மையின் தடம் உயில் எழுதப்பட்டிருப்பதை உணர்த்தியது என்பன போன்ற முடிப்புகளில் ஆமினா ஆகப்பெருங் கதைகளை மௌனங்களில் விதரணம் செய்வதையும் உணர முடிகிறது.

        ஆகாத தீதாரிலுள்ள இன்னொரு காத்திரமான கதையாக 'மங்கா மாமியா செவத்தா' இருக்கிறது.அனேகமாக மரணத்தில் நிறைவு பெறாத நம்பிக்கையளிக்கும் ஒரு கதையாகவும் கொள்ளலாம்.ஒரு கதைக்கும் இன்னொரு கதைக்குமிடையே உயிர் வாழும் ஆயிரத்தோரு அராபிய இரவுகளின் நாயகியைப் போல செவத்தாவின் உயிர் வாழ்தல் மங்காவின் உலகத்தை நீட்டிக்கச் செய்கிறது.இவ்வாறான ஒற்றை அடுக்கில் நின்று கொண்டே கதை பெரும் வரலாற்றைப் பேசுகிறது. வார்த்தைகள் ஸ்தம்பிக்க வைக்கின்றன.வீரியமான சொற்கள் மற்றுமல்ல பழைய கலாச்சாரத்தின் ஒரு புதிய திறப்பை போகிற போக்கில் 'எல்லை காக்குற அக்பரம்மாக்கே வெளிச்சம்'என்ற சொல் இன்னும் நகரவிடவில்லை.அதில் தங்கி ஒரு பேராய்வு நிகழ்த்தப்பட வேண்டிய தேவையை உணரமுடிகிறது.கதைகள் வரலாற்றின் மீதான பக்கங்களைக் காட்டித் தருவதுபோல மர்ம முடிச்சிகளின் மீது ஒரு வெளிச்சத்தைப் பாய்ச்சியபடி விலகிக் கொள்கின்றன.இந்த தொகுப்பில் இவ்வாறான விளையாட்டுகள் நிறைந்திருப்பதைக் கூர்மையாக கவனிக்க முடிகிறது.
        இன்று எழுதுகிறவர்கள் தாங்களைச் சுருக்கிக்கொள்ள முடியாது.மனித வாழ்வின் எல்லா பக்கங்களும் இன்றைய காலத்தில் பொதுப்பரப்பில் விவாதிக்கப்படுகிறது. அதன் பொருட்டு ஆமினாவும் தனது பங்கை வெறும் சிலாகிப்போடு நின்றுவிடாமல் விமர்சனப்பூர்வமாக அணுகுகிற பார்வையைக் கொண்டிருக்கிறார்.அவரால் தனக்குள் உருவாகும் கேள்விகளையும் அதன் நிமித்தமான சமநீதிக் குரலையும் உயர்த்த முடிகிறது.ரேகை போல் வாழ்க்கை' சிறுகதையில் "ஆண்தான் பெண்ணுக்கு அடைக்கலம் கொடுக்கப் படைக்கப்பட்டவன் என்ற ஒரு ஆணின் ஆதிக்க மனோபாவம் வயோதிகப் பருவத்தில் தகர்ந்துபோகும்.குறிப்பிட்ட பருவத்திற்கு பின்னே ஆணுக்கு பெண்ணே அடைக்கலம் கொடுத்துதவும்படி இயற்கை ஆண் பெண் உறவை சமநிலைப்படுத்தியே வைத்திருக்கிறது."இவ்வாறான கதையோட்ட வரிகளில் விமர்சனப்பூர்வமான பாங்கு இருக்கிறது.அதன் வாசல் இயல்பாகத் திறக்கிற காலமாக, பெண்களிடத்தில் இருந்து படைப்புக் குரலாக பீறிடுகிறது என்பதை இங்கு கவனப்படுத்துகிறேன். இது இன்னும் பெருகும். 'டெய்லி செவத்தாவ பாக்க வர்ரவக கொடுக்குற எந்த காசையும் கையால வாங்குறதில்லேன்னு வைராக்கியத்தோட வாழ்ற மங்கா அந்த காச கைல தொட்டுப் பாக்காமயே எப்படி காலி பண்ணுறாளோ அப்படியான வித்தை இந்த எழுத்திலிருக்கிறது.அது தன்னை சுற்றிலுமுள்ள எளியவர்களின் வரலாற்றை சுவீகரித்து தனக்கான மொழியையும் நடையையும் உருவாக்கிக் கொண்டு மலருகிறது.வாசிக்க வாசிக்க இது அவரவர்களுக்கான காலத்தை திரும்ப காட்சிப்படுத்துகிறது.எனது கவர்னர் பெத்தா தொகுப்பிலுள்ள கதைகள் காட்டிய ஒரு உலகம் போல ஆகாத தீதார் மலைக்க வைக்கும் மற்றொரு உலகத்தின் வாசலை திறக்கிறது.எனது ரோசம்மா பீவி சிறுகதையின் ரோசம்மா பீவி போன்ற காத்திரமான பெண்கள் உலவுகின்றனர்..கவிதை கதை குறித்த முந்தைய பார்வைகள் மீது மெல்லிய கேள்விகளை எழுப்பியவாறே பல்கிப்பெருகும் பெண்படைப்பாளிகளை நாம் ஜனநாயகத்தின் சமன்பாடெனக் கொள்ள வேண்டும்.நாம் கலையைக் கைவிட்டால் பின்னர் இங்கு எடுத்துக் கொள்வதற்கென எதுவுமிருக்காது. ஆமினாவின் எழுத்து கச்சிதமானது. கதைகளில் அவரின் செய்முறை தேவைக்கு குறைவாகவுமில்லை தேவைக்கு அதிகமாகவுமில்லை என்பது இதன் பலமாக இருக்கிறது. ஆகாத தீதார் நூலாசிரியர் ஆமினா முஹம்மது பதிப்பாளராகவும் பல நூல்களையும் பதிப்பித்து வருகிறார்.எழுத்தில் மேலும் உயரம் தொடும் எல்லா சாத்தியங்களையும் கைவரப் பெற்றதாக நம்பிக்கை கொள்ள ஏராளமானவைகள் நிறைந்திருக்கின்றன.

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்                    இன்னொரு சாயல்                            எம்.மீரான் மைதீன்          ...