Wednesday 20 December 2023

"உலகியல் அறிவு " தோழர் காமுவின் ஆஸ்திரேலிய போஸட் அறிமுகம்

      ஒவ்வொரு முறையும் நம்மை புதுப்பிக்கும் அழகிய வேலையைப் பயணங்கள் செய்கின்றன. பயணத்தைப் பற்றி நினைப்பதும் பயணத்தைப் பற்றி பேசுவதும் புத்துணர்வளிக்கும் செயல்களில் உள்ளவை.இதல்லாது பயணத்தைப் பற்றி எழுதுவது என்பது மானுட விசாலத்தின் மீது  புத்தொளி பாய்ச்சும் ஆவணமாகும்.கவிஞர் கோவை காமு அவர்களின் 'ஆஸ்திரேலியா போஸ்ட் 'என்கிற இப்பயண அனுபவ நூல் ஆவணங்களின் வரிசையில் இடம்பெற்றிருக்கும் அழகிய புதிய ஆவணமாகும்.

           1888ல் சேலம் பகடலு நரசிம்ஹலு நாயுடு துவங்கி புகழ்பெற்ற பயண இலக்கியங்களைத் தந்த நெ.து.சுந்தரவடிவேலு,ஏ.கே செட்டியார் வரிசையில் எழுத்தாளர் சோமலே என்கிற சோம.லெட்சுமணன் 1950ல் ஆஸ்திரேலியாவில் ஒருமாதம் என ஒரு பயண நூலைத் தமிழுக்கு வழங்கியிருக்கிறார்.1972க்குப் பிறகு எழுத்தாளர் மணியன் சிங்கப்பூர் மலேசியா ஆஸ்திரேலிய பயண அனுபவங்களை எழுதியிருக்கிறார். ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம் ஆஸ்திரேலியா பயண அனுபவங்கள் என்றும் 2012ல் பி.எம்.இராமசாமி ஆஸ்திரேலியாவில் அறுபது நாட்கள் என்ற ஒரு பயண நூலைப் படைத்திருக்கிறார்.இந்த நீண்ட தொடர்ச்சியின் வரிசையில் கோவை காமு அவர்கள் இப்போது ஆஸ்திரேலியா போஸ்ட் வாயிலாக தனது சிறப்பான பார்வையை ஐம்பது கட்டுரைகளாக எழுதிய இந்த நூல் சமீபத்திய பயண இலக்கிய நூற்களில் மிக முக்கியமான புதிய வரவாக இருக்கிறது.ஆஸ்திரேலியா நாட்டின் பன்முக தன்மையை அப்படியே எடுத்துவரும் காமுவின் எழுத்து நமக்கு படிப்பினையாக அமைகிறது என்பதை உறுதியாகக் குறிப்பிடலாம்.
         ஆதியிலிருந்தே மனிதன் இடம் விட்டு இடம் நகரும் பயணியாகத்தான் இருந்திருக்கிறான்.இப்படி நகர்கிறவர்களிடமிருந்தே மானிட சமூகம் புதியவைகளை கற்றுக் கற்று தேர்ந்திருக்கின்றன.பயணிகளால்தான் புதிய இடங்கள்,புதிய கலாச்சாரங்கள், இப்படி எல்லா புதியவைகளும் பரஸ்பரமாக வந்தடைந்தும் சென்றடைந்தும் காலங்கள் கடந்திருக்கிறது.கோவை காமு அவர்கள் இப்போது புதிய ஒன்றை வந்தடையச் செய்திருக்கிறார்.இது காலத்தின் அவசியமான ஒன்று.எப்படி அவசியமான ஒன்று என்பதைத்தான் இந்த ஐம்பது கட்டுரைகளும் நம்மோடு கதைக்கின்றன.
            காமு அவர்கள் தகவல்,செய்தி, கலாச்சாரம் ,தனித்துவமான தன்மைகளடங்கிய வாழ்வியல் இயல்புகள்,அரசு மற்றும் அரசமைப்பு முறை,உறவும் உறவுச்சிக்கலும், இணைந்து வாழுதல் மற்றும் தன்பாலின ஈர்பார்களின் சுதந்திரமென ஏராளமான பொருண்மைகளில் ஒரு தொடர் உரையாடலை நிகழ்த்துகிறார். இதில் வாசகனாக பங்கெடுக்கும் நாம் ஒப்பீடு செய்து பார்பவர்களாகவும் மலைப்பவர்களாகவும் அல்லது அப்படியான கட்டங்களை இங்கு நிறுவும் அகமன விருப்பத்தை விவாதிப்பவர்களாகவும் பயணிக்கிறோம்.அவர் பயணத்தில் நம்மை இணைக்கும் இந்த பயணநூல் ஒரு கல்வி நிலையத்தின் கற்பித நுட்பங்களை நமக்குள் மெல்லக் கடத்துகிறது.மனித சமூகம் ஒன்றுக்கொன்று முகம் பார்க்கும் கண்ணாடியாக இருக்கின்றன. செம்மைப்படுத்துதல் தொழில் விஞ்ஞானம் பொருளியல் மேம்பாடு காலநிலை என இன்று சர்வதேச சமூகத்துக்கு சில பொது குணாம்சங்கள் இருப்பதனால்  நாம் சர்வதேச சமூகத்தினைக் கற்பது காலத்தேவையாக இருக்கிறது.நாம் இதனை பாடசாலையின் மாணாக்களைப் போல கற்க இயலாது .எனவே இப்படியாகத் திறக்கும் தனித்தனி வாசல்களின் வழியேதான் நாம் நம் பார்வையை விசாலப்படுத்த இயலும்.இன்றைய நவீன உலகின் போக்கில் இன்று தொடர்பு என்பது எல்லாவகையிலும் சாத்தியம் என்றாலும் காமூ சுவீகரிக்கும் சில நுட்பங்களை பொதுவான தன்மையால் கொண்டுவர இயலுமா என்றால் அது சாத்தியமற்றது.எனவே இந்த பயணநூல்கள் நமது அறிவு பரப்பில் சாத்தியமற்ற ஒன்றையே சாத்தியப்படுத்துகிறது. ரோடு நன்றாக இருக்கும் பூங்காக்கள் அழகாக இருக்கும் கடற்கரைகள் கவர்ச்சியானவைகள் என்ற பொது பிம்பங்கள் கடந்து காமு சாலையில் சும்மா நிற்கும் போது ஒரு ஆஸ்திரேலிய குடிமகன் உதவ முன் வருகிறான்.ஒரு மனிதர் சாலையில் நிற்கிறார் ஒருவேளை அவருக்கு உதவி தேவைப்படலாம் என்ற எண்ணம் அங்கு வளர்க்கப்பட்டிருக்கிறது.நாம் ஒதுங்கிப் போய்விட வேண்டும் என்ற போதனையைக் கைக்கொண்டிருப்பவர்கள்.இங்கே காமு பதியும் வாழ்வு நமக்கு மாற்றுப் போதனையைத் தருகிறது.தனிமனித சுதந்திரம் என்பதன் வரையரை இந்த உலகின் சிறிய கண்டமாக இருக்கிற ஆஸ்திரேலிய வாழ்வின் வாயிலாக நமக்கு ஆவணப்படுத்துகிறார்.இந்த நூலுக்கு உள்ளேயும் வெளியேயும் நம்மை தேடத் துரத்தும் ஒப்பனையற்ற எழுத்து மதிப்புக்குரிய கவிஞர் காமுவினுடையது.

          அவர் நூலில் குறிப்பிடுகிறார் அரசாங்கத்தைப் பொறுத்தவரை கடவுள், மத,நம்பிக்கையில் எந்தப் பாகுபாடும் காட்டுவதாகத் தெரியவில்லை. குறிப்பாக பள்ளிகளில் குழந்தைகள் அவரவர் விருப்பப்படி மத அடையாளங்களை அணிந்துவரலாம் என்று அறிவிப்பு செய்திருக்கிறார்கள்.

1901ல் இயற்றப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் 106வது பிரிவு, அரசு, மதவிவகாரங்களில் தலையிடக்கூடாது. எந்த மதத்தையும் சாராமல் நடுநிலையோடு (State Neutrality) இருக்க வேண்டும் என்று சொல்கிறது. அந்த வகையில் இந்நாடு மத நடுநிலை நாடாகவும் திகழ்கிறது.இந்த செய்தி பெரும் படிப்பினையை சொல்லத்தருகிறது.

   
           பயணங்களின் வழியே நிகழும் உலகியல் அறிவு என்பதை நாம் பயணமல்லாத இன்னொன்றிலிருந்து கற்க இயலாது.எனவே பயண இலக்கியம் மானிட வாழ்வை மேலும் செம்மையான பகுதிக்கு நகர்த்தவல்லது.ஆஸ்திரேலிய நாடு பற்றி காமு எழுதியிருக்கும் இந்த பயண அனுபவ நூல் நம்மை செம்மையான ஒரு பக்கத்துக்கு நகர்த்துகிறது.இது ஒரு புள்ளி.இந்த புள்ளி மேலும் விரிவுபட வேண்டும். எழுத்தாளர் கவிஞர் கோவை காமு மேலும் இதனை விரிவாக்குவார்.


                           அன்பும் வாழ்த்தும்
                          எம்.மீரான் மைதீன்.

No comments:

Post a Comment

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்                    இன்னொரு சாயல்                            எம்.மீரான் மைதீன்          ...