Monday 23 October 2023

உணவு மற்றும் உணவகங்களின் ஜனநாயகம்



        சைவத்தை விட  அசைவம் உண்ணக்கூடியவர்களே உலகில் அதிகமாக இருக்கின்றனர்.
நான் சைவம் மற்றும் அசைவம் இரண்டுவகை உணவிலும் சம விருப்பமுடையவன்.குமரி மாவட்டத்தில் ஆறுநாள் மீன் உணவும் ஞாயிறு அன்று மட்டன் சிக்கன் ஒருவேளை வசதியில்லாத நேரமென்றால் குறைந்தபட்சம் கருவாடாவது சாப்பிட்டு விடுகிறோம்.இப்படியான ஒரு டிசைனில் உள்ள மாவட்டம் தமிழ்நாட்டில் வேறு எங்காவது இருக்கிறதா என்றும் தெரியவில்லை.சில நகரங்களிலுள்ள பெரிய ஹோட்டல்களைவிட அங்குள்ள கையேந்திபவன்கள் நாட்களைச்  சிறப்பாக்கிவிடுகின்றன,குறிப்பாக நெல்லை,மதுரை,திருச்சி. 

உணவு என்பது எவ்வகையிலும் நமக்கு கெடுதல் செய்யாமலிருந்தால் போதுமானது.அவ்வகையில் மதுரை சுல்தானியா மனம்கவர்ந்த உணவகமாக நான் உணர்ந்திருக்கிறேன்.சென்னை வடபழனியில் விலை கொஞ்சம் அதிகமென்றாலும் கேம்பஸ் மற்றும் ஸ்ரீராகா நல்ல திருப்திகரமானவை.திருச்சியில் காமாட்சி உணவகம் அப்படியானது.இன்னும் அசைவத்தைவிட சைவத்தில்தான் அதிக விலையிட்டு கொள்ளையடிக்கிறார்களோ என்று உணர்ந்த தருணங்கள் நிறைய இருக்கிறது. 

கேரளாவில் உணவுவகைகள் ரொம்பவும் சிறப்பாக இருக்கும்.தமிழ்நாட்டின் விலையை ஒப்பிடுகையில் விலையும் குறைவு.இதன்காரணமாக அங்கு மேற்கொள்ளும் பயணங்கள் இன்பகரமானவை.அசைவம் சாப்பிட மிகச்சிறந்த இடமும் கூட.குறிப்பாக பீஃப் உணவை நம்பிச் சாப்பிடலாம். இந்தியாவுக்கு வெளியே என்றால் வளைகுடா நாடுகளைவிட அசைவ உணவு சாப்பிட தோதான இடமாக இலங்கையைக் குறிப்பிடலாம். 

நம்முடைய நாட்டைப் பொருத்தவரையில் பெரும்பாலான உணவகங்களில் தரம் பேணப்படுதல்,முறையான தயாரிப்பு முறைகளைப் பின்பற்றுதல் போன்றவைகளில் குறைபாடு நிறைய இருக்கிறது.சென்னையில் எண்பது ரூபாய்க்கு பிரியாணியும் கிடைக்கிறது இருநூறு ரூபாய்க்கு தயிர்சாதம் விற்பவர்களும் இருக்கிறார்கள்.ஆலந்தூரில் மிகப்பெரிய கடையாக இருக்கிற சுக்குபாய் கடை அசைவமும் ,வடபழனி துரைசாமி ரோட்டில் சிறிய அளவிலுள்ள சாத்தப்பன் கடை அசைவமும் ஒரு தொல்லையும் செய்யாத ஆரோக்கியமானவைகளாக கண்டிருக்கிறேன்.மனிதர்களின் அடிப்படையான உணவு என்பது இந்த உலகில் ஆகப்பெரும் வியாபாரமாக உருமாறியிருக்கிறது.இன்று உலகின் எல்லா நகரங்களிலும் சர்வதேச நிறுவனங்கள் நங்கூரமிட்டு இறங்கியிருக்கின்றன.ஆனாலும் நினைவுகளில் பசுமையாக கிடக்கிற ஒன்று,திருவண்ணாமலையருகேயுள்ள வேட்டவலம் என்னும் ஊரில் 2014ல் ஒரு சாதரணக் கடையில்(வீடுபோல இருந்தது)நாலு இட்டிலி சாப்பிட்டுவிட்டு எவ்வளவு என்று கேட்டதும் அந்த அம்மா ஐஞ்சு ரூபா கொடுப்பா என்றது இன்னும் மறக்க முடியவில்லை.எந்த உணவகமாக இருந்தாலும் இன்னும் மறக்கமுடியவில்லை என்ற சொல்லை மனங்களில் உருவாக்குவதே அது காலா காலத்துக்கு நின்று நிலைக்ககூடியது.வெந்ததைத் தின்று விதி வந்தால் சாகவேண்டும் என்று சொல்வதைப்போலவே இன்று பெரும்பாலான உணவகங்களின் இருப்பை புரிய முடிகிறது.இன்று பரவலாக பலரும்  உணவகங்களை வெற்றிகரமாக நடத்துகின்றனர் என்பதை நாம் ஜனநாயகத் தன்மை மிக்கதாகப் பார்க்கலாம்.இதன் பின்னணியிலுள்ள கலகக்குரல்களை யாரும் மறுக்க இயலாது என்பதைத்தான் புதிய குரல்கள் வாயிலாக நாம் புரிந்து கொள்கிறோம்.ஆனாலும் கூட சொல்லவிரும்புவது தமிழ்நாட்டில் கேரளா மற்றும் கர்நாடகாவை ஒப்பிடுகையில் உணவகங்களில் விலை அதிகம்.அதிகம் என்பதைவிட கொள்ளை விலை விற்கிறார்கள் என்பதுதான் உண்மை.

No comments:

Post a Comment

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்                    இன்னொரு சாயல்                            எம்.மீரான் மைதீன்          ...