Saturday 5 August 2023

சிறையில் "திருவாழி" மீரான் மைதீன்


சினிமாவில் சிறையிலிருந்த நாயகன் வெளியே வரும் பெரும்பான்மையான சினிமா காட்சிகளில் மத்தியச் சிறைச்சாலை என பெயர் பொறி்கப்பட்ட பலகையின் கீழ் பெரிய கதவொன்றைக் காட்டுவார்கள்.நான் சினிமாவில் உதவி இயக்குநராக பணி செய்த நாட்களில் அந்த கதவும் ஏவிஎம்மில் இருந்ததைப் பார்த்திருக்கிறேன்.இவ்வளவுதான் முன்பு எனக்குள்  சிறைபற்றி பதிந்திருந்த சித்திரம்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் இயக்குநர் அனிஷ் அவர்களின் பகைவனுக்கு அருள்வாய் என்ற படத்தில் நடிகனாக பங்கேற்ற போதுதான் அவர் சிறைபற்றி அபரிமிதமான சித்திரங்களைத் தந்தார்.மெல்ல மெல்ல சிறை என்பது நாம் அறிந்திராத ஒரு தனித்துவமான உலகம் என்பது புரிந்தது.மதில்களுக்கு அப்பால் ஓராயிரம் உண்மைகளோடும் பொய்மைகளோடும் கிடக்கும் விசித்திர உலகமது.இவ்வாறான புரிதல்களின் நீட்சியில்
சென்னை புழல் நடுவண் சிறையில் சிறையில்லவாசிகளின் வள்ளுவர் வாசகர் வட்டம் சாரபில் எனது திருவாழி நாவலை திறனாய்வு செய்த கூட்டம் 3/8/2023 அன்று சிறப்பாக நடைபெற்றது.
ஏற்கனவே நாவலை வாசித்திருந்த சி.செல்வம் அவர்கள் எனக்கொரு பெருங்கடிதத்தை எழுதிய நிலையில் மேலும் சில சிறையில்லவாசிகள் நாவலை வாசித்தைத் தொடர்ந்து  சிறையின் உளவியலாளர் மதிப்புக்குரிய பாஸ்கரன் அவர்கள் முன்னெடுப்பில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்த வாழ்வு பன்முக அனுபவங்களால் விசாலமடைகின்றன, அவ்வகையில் இவ்வனுபவம் மறக்க இயலாத ஒன்றாகும்.நாம் கற்று வைத்திருப்பதும், கண்டு வைத்திருப்பதும் போலல்ல உண்மை.உண்மை ஓராயிரம் உண்மைகளாக இருக்கிறது.அவர்கள் அடைபட்ட உலகிலிருந்து என் எழுத்தை பேசி கொண்டாடினார்கள்.முந்தைய எதனோடும் ஒப்பிட இயலவில்லை.சிறை நூலகத்தைப் பார்வையிட்டேன், பேசினேன்.வாசிப்பு பழக்கம் அவர்களை அழுத்தங்களிலிருந்து பாதுகாக்கிறது.ஒரு சிறையில்லவாசி எனது ஒரு காதல்கதை நூலை கைகளில் சுமந்தபடி புன்னகையாய் கடந்து போனார்.எட்டுபத்து பக்கத்துக்கு நோட்ஸ் எடுத்துக் கொண்டு பதிமூன்று ஆண்டுகளாக அங்கிருக்கும்  சுரேஷ் என்கிற சிறையில்லவாசி தேர்ந்த உரையை நிகழ்த்தினார்.பத்து பதினெட்டுபேர் சுரேஷின் உரைமீது அபிப்ராயங்களைப் பேசினார்கள்.
என் நாவலைப்பற்றிய உரை என்பதில் மகிழ்வாக இருந்தாலும் அந்த உலகம் மனதில் பாரத்தையே நிரப்பியிருந்தது. மனிதர்களின் கடினங்களைக் கேட்கையில் வரும் வேதனையை எதனோடு ஈடுசெய்வது.மனிதர்கள் யாருக்கும் எந்த துயரமும் வராமலிருக்கட்டுமாக. வெளியேறிவரும் போது அடிக்கடி வாங்க சார் என்ற அவர்களின் அன்பும்,கடிதம் எழுதினால் பதில் போடுவீர்களா என்ற கேள்வியிலும் நிறைந்திருந்த ஏக்கத்தை சுமந்து நடந்தேன்.இந்த உலகம் சுழலுகிறது. அவற்றில் பலவற்றையும் நாம் பார்க்க முடிவதில்லை.கடலின் ஒரு மிடருபோல கதைகளின் ஒரு மிடருதான் நம் வசமாகிறது.

Wednesday 2 August 2023

காலமும் நண்பர்களும் -மீரான் மைதீன்

1991ம் ஆண்டு நாகர்கோவில் ஸ்காட் கிருஸ்தவ கல்லூரியில் வணிகவியல் இளங்கலை பட்டப்படிப்பை நிறைவு செய்து விட்டு கல்லூரியைவிட்டு வெளியேறிய நாள் இன்றும் மனதில் நிழலாடுகிறது.நண்பர்களைப் பிரிவது,அந்த சந்தோசமான நாட்களிலிருந்து வெளியேறுவது என மனம் சோகத்தால் கனத்துக்கிடந்தது.இந்த உலகில் ஒன்றிலிருந்து வெளியேறுவது சுலபமானதல்ல,அதில் நமக்கே நமக்கான தனித்துவங்களும் மனதின் ரகசியங்களும் நிறைந்து கிடக்கும்.ஆனாலும் காலம் சூழல் நம்மை நகர்த்திவிடுகிறது.
கல்லூரியைவிட்டு வெளியேறிய பிறகு அந்த சாலையில் பயணித்த பயணம் முந்தய பயணம் போல இல்லை.பார்வையாளனுக்கும் பங்கேற்பாளனுக்குமான வித்தியாசம்.ஆடிப்பாடி ஓடிய அந்த சாலை என்னைக் கொஞ்சம் பரிகசிப்பதுபோலக்கூடத் தோன்றியதுண்டு.நான் பலநேரங்களில் அந்த சாலை வழி பயணத்தை தவிர்த்ததுகூட உண்டு.நினைவுகள் மீண்டும் மீண்டும் ஏதேனும் ஒன்றை மீட்டுக் கொண்டுவரும்.அதுஒரு அவஸ்தையும்கூட.காலம் மெல்ல நகர்ந்தது.சென்னை வாசியானேன் பிறகு சில ஆண்டுகள் ஜித்தா வாசியாகி மீண்டும் ஊர்,சென்னையென நகர்ந்த இவ்வாழ்வில் சில நண்பர்களின் முகம்கூட மறந்துபோனது.உடன் படித்த நாலே நாலு பெண் தோழிகளும் ஐம்பதுபோல உள்ள நண்பர்களும் ஒரு கற்பனைக் காட்சியாகவே இருந்தனர்.கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக முகநூல் உலகம் சில நண்பர்களைத் தொடர்பில் கொண்டுவந்து தந்தது.சிலரை சந்திக்கவும் இயன்றது.ஆனாலும் பலமுகங்கள் தூரமாகவே இருந்தன.இந்த 32 ஆண்டுகாலங்களில் அபூர்வமாக சிலரை சில தருணங்களில் சந்திக்க வாய்த்தது.சில ஆனந்த உரையாடல் அதே ஒருமைச் சொற்கள்,கூக்குரலென பிராயம் துள்ளிக் குதிக்கும்.
இந்த நண்பர்களில் நாங்கள் சுமார் பனிரெண்டுபேர் பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பிலும் ஒன்றாகவே பயின்றவர்கள்.பள்ளிக்கூடம்,கல்லூரியென நட்பின் ஆழம் அதீதமானது.எல்லோரும் லேய் மாப்ளேதான்.சாதி கிடையாது,மதம் கிடையாது யாது மயிரு பாகுபாடும் கிடையாது.அப்படியான காலம் போனது போனதுதான் என எண்ணி நினைவுகளில் கொண்டிருந்த காலத்தை நாங்கள் கடந்தவாரம் மீட்டெடுத்தோம்.

ஆமாம் நாங்கள் 32 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வாரம் கேரளாவின் அழகு மலைப்பிரதேசமான வாகமனில் நாங்கள் நண்பர்கள் ஒன்றிணைந்து 22 பேர் சந்தித்து பழைய காலத்தை மீட்டெடுத்தோம்.காலத்தை மீட்டுக் கொண்டுவருதல் சுலபமானதல்ல அது கடும் பணி கொண்டது.ஆனாலும் நாங்கள் வாட்ஸப் குழுமம் அமைத்து மூன்று நான்கு மாதம் திட்டமிட்டு மெல்ல மெல்ல நகர்ந்து அந்த அன்பின் கூட்டை மீண்டும் சமைத்தோம்.பெகரினிலிருந்து குமார் வந்தான்,தன்ஷானியாவிலிருந்து ஜாஹிர் உற்சாகப்படுத்தினான், மும்பையிலிருந்து செல்வன் மாப்ளே என குரல் கொடுத்தான், திருவனந்தபுரத்திலிருந்து டாக்டர் திமோத்தி மற்றும் சென்னையிலிருந்து ரூப்குமார் மற்றும் வழக்கறிஞராக இருக்கும் ரமேஷ், ஃபாஸ்டராக இருக்கும் ரமேஷும் இணைந்துகொள்ள ரோஹித் பம்பரமாய் சுழல நானும் சந்துருவும் நெல்சனும் ஜஸ்டினும் உற்சாகமூட்ட ஜஸ்டின் பரிமளம் அமீரகத்திலிருந்து புறப்பட்டான்.அந்தோனிசாமியும் வளனும் வந்தார்கள்.நடத்துனராக பணிசெய்யும் தாஸும் ஜித்தாவிலிருந்து வில்ஃப்ரட் இம்மானுவேலும், வால்பாறையிலிருந்து இம்மானுவேலும், தலைமையாசிரியராக பணிசெய்யும் எட்வர்டு ஜென்னரும், பல்கலைக்கழக மரிய இக்னோ ராஜேஸ் என கூடிய கூட்டம் காலத்தை மீட்டெடுத்தது. மீண்டும் வாலிபத்தை அடைவது மட்டுமல்ல காலத்தை அடைவதும் எத்துணை ஆனந்தம் என்பதை உணர்ந்து மகிழ்ந்த தருணம் அழகானது.நண்பர்கள் சொன்னார்கள் மீண்டும் அடுத்த ஆண்டு கூடுவோமென. காதலோடு காலத்தை மீட்டெடுப்பது மிக எழிதான வேலை இல்லை.நாம் அப்பழுக்கற்ற அன்பில் நனையாதவரை மழை நமது ஈரக்குலையை நனைப்பதில்லை. காலத்துக்காக நாமும் நமக்காக காலமும் காத்திருந்தால் பார்க்கலாம். இன்னும் முளைத்து வரும் அன்பை மண்ணில் நடுவோம்.

Tuesday 1 August 2023

சிறுகதைகள் பற்றிய தோழர் காமு:

மீரான் மைதீன் கதைகள் பற்றி... 
———————————————-
மீரான் மைதீன் என்கிற பெயரை சமீபத்தில் தான் கேள்விப்பட்டேன். பன்னெடுங்காலமாக எழுதிக் கொண்டுதான் இருக்கிறார். எனக்குத்தான் தெரிந்திருக்கவில்லை. இதற்குக் காரணம் என்னுடைய வாசிப்புப் பரப்பும், ஞானமும் அவ்வளவுதான் என்று தான் சொல்ல வேண்டும். 

அகஸ்மாத்தாக அவருடைய கலுங்குப் பட்டாளம் என்னும் நாவலை சமீபத்தில் படித்தேன். ஒரு கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை படம்பிடித்து இருப்பார். அந்த மனிதர்கள் இரத்தமும் சதையுமாக வாழ்ந்ததை நேரில் கண்டு அவர்களுடனே வாழ்ந்தது  போன்ற உணர்வு ஏற்பட்டது. அப்படிப்பட்ட உயிர்ச்சித்திரம். 

அப்புறம் தான் அவரைப்பற்றி விசாரித்து, என்னென்ன நாவல்கள், சிறுகதைகள் எழுதியிருக்கிறார் என்று தெரிந்து, எல்லாவற்றையும் தேடிப் பிடித்து ஏதோ எக்ஸாமுக்குப் படிப்பது போல் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

ஓதி எறியப்படாத முட்டைகள் , அஜ்னபி நாவல்களைத் தொடர்ந்து அவருடைய சிறுகதைத் தொகுப்புகள். 

நேற்று இரவு 7 மணிக்கு, ' பலாமரம் நிற்கும் வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருக்கிறான் ' தொகுப்பை ஆரம்பித்தேன். பாதி படித்து விட்டு தூங்கப் போய்விட்டேன். 

விடிகாலை நான்கு மணிக்கே முழிப்பு வந்து விட்டது. இந்நேரம் எழுந்திரிச்சி என்ன செய்ய என்று யோசிக்கும் போது, சட்டென்று அந்தப் புத்தகம் ஞாபகத்துக்கு வந்தது. உடனே எழுந்து ஒரு டீ போட்டுக் குடித்து விட்டு, விட்ட இடத்தில் இருந்து படிக்கத் தொடங்கினேன். 

ஒரே மூச்சில் புத்தகத்தை முடித்து விட்டேன். மொத்தம் ஏழு கதைகள். 

குட்டப்பாவின் புதிய செல் என்று ஒரு கதை. 
குட்டப்பா என்றால் சித்தப்பா. ஊரில் எல்லோரும் செல் வைத்திருக்கிறார்களே என்று, தானும் ஒன்று வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு , அரேபியாவில் இருக்கும் தன்னுடைய அண்ணன் மகனுக்கு தகவல் தர, அவனும் ஒன்று அனுப்பி வைப்பதில் இருந்து கதை தொடங்குகிறது. 

அதைப் பயன்படுத்துவதில் தடுமாற்றம். அதையும் இதையும் தட்டியதால், போன் அடுத்த நாளே ' ஆவியும் இல்லை; அனக்கமும் இல்லை' என்றாகி விட்டது. மலுக்கு மச்சான் சரி செய்து கொடுத்து விட்டு,  " விரல வச்சி சும்மா நோண்டாத ... போன் வந்தா பச்சய அமுக்கு... பேசி முடிச்சா செவப்ப அமுக்கு..." என்று எச்சரித்து அனுப்புகிறான். 

உங்களுக்கு ஒரு லட்சம் பரிசு விழுந்திருக்கிறது என்று அனாமதேய அழைப்பு வர , புருஷனும் பெண்டாட்டியும் ஆசையாய் போய் அவமானப்பட்ட செய்தி ஊருக்கே தெரிய, ஆளாளுக்கு போன் செய்து அந்த ரூபாய என்ன செய்யறதா உத்தேசம் என்கிற ரீதியில் கிண்டலடிக்க, அந்த 'சிம்' மை தூக்கி வீசிவிட்டு, வேறு புதிய சிம் போட்டும் தொல்லைகள் தொடர்வதாக கதை போகிறது. 

கதை முழுக்க ஒரே சிரிப்பு . நகைச்சுவை என்றால் சம்பவக் கோர்வை மட்டுமல்ல ; அதை எழுதிய விதமும் . அந்த வெள்ளந்தி கிராமத்து பெரியவர் , மனைவியிடம் தன்னுடைய எண்ணை அழைக்கச் சொல்லி விட்டு வளவில் நின்று கொள்வார். மனைவி அழைத்தவுடன் என்னா.... சொகமா இருக்கியா... என்று கேட்பார். அதற்கு மனைவி ' இல்லண்ணா ஆர்லிக்ஸ் வாண்டித் தருவியரா... வையும் ஓய் போன .. லவ்வா பண்ணியரு ' என்று கேட்கும் போது சிரிக்காமல் இருக்க முடியாது. 

கண்மணியே பேசு தான் இவருடைய ரிங்டோன். கபர் குழியில் இருந்து திரும்பும் கூட்டத்தில் கண்மணியே பேசு பாடல் வந்தது என்று எழுதிச் செல்லும் போதும் சிரிப்புப் பொங்கும். ஒரு முறை செல்போனில் அழைப்பு வர, எடுத்துப் பேசியவர், தன் மகனிடம் " நயன்தாராவாம் .... யாருடே அது " என்று அப்பாவியாகக் கேட்பார். 

நடப்பதைக் கேள்விப்பட்ட அவருடைய அப்பாவும் சிரியோ சிரி என்று ரொம்ப நேரம் சிரித்துவிட்டு , ஒரு அஞ்சாறு வருஷமாச்சி பாத்துக்கோ இந்த மாதிரி சிரிச்சி என்பார். 

இப்படியே போய்க் கொண்டிருந்த கதையின் போக்கில்,  ஒரு கட்டத்தில் கப கப வென சிரித்து விட்டேன். இந்நேரத்துக்கு என்ன சிரிப்பு என்று தூக்கத்திலேயே முணகி விட்டு, திரும்பிப் படுத்து தூக்கத்தைத் தொடர்ந்தார் என் மனைவி.  

' மாமரம் , அவன், அவள் மற்றும் வளர்ப்புத் தந்தையின் கதை' என்னும் கதையை தொகுப்பின் ஆகச்சிறந்த ஒன்றாகக் கருதுகிறேன். 

அவனும் அவளும் நகரில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள தோப்பில் உலா வருகிறார்கள். இருவரும் கல்லூரியில் ஒரே வகுப்பு . அவள் நகரில் தனியார் விடுதியில் தங்கிப் படிக்கிறாள். தோப்புக்காரர் மாடசாமி, அவனுடைய அப்பாவின் நண்பர். இளம்பெண் ஒருத்தியுடன் அவனைப் பார்த்தவுடன் 'ஒண்ணும் சரியில்லையே ' என்று அசூசைப் படுகிறார். 

அவனும் அவளும் ஒரு மாங்கொட்டையை நடுகிறார்கள். அது வளர்கிறது. படிப்பு முடிந்து, அவள் தன்னுடைய ஊருக்குப் போய் விடுகிறாள். 

காலம் உருண்டு ஓடுகிறது. இவன் மட்டும் அவ்வப்போது சென்று செடியின் வளர்ச்சியை பார்த்து விட்டு வருகிறான். இப்போதல்லாம் அவள் ஏன் வருவதில்லை என்று  மாடசாமி கேட்கிறார். இவன் " படிப்பு முடித்து சென்று விட்டாள். இனி வர மாட்டாள் " என்று  சொல்கிறான். 'காலம் பொல்லாதுடே' என்கிறார் மாடசாமி. 

இப்படி பல ஆண்டுகள் கழிந்து விட்டன. 

அவன் தன் மனைவியிடம், தலையாட்டும் மாமரத்தைப் பற்றி சொல்கிறான். நம்ப மறுத்து, சரி பார்த்து விடலாம் என்று கிளம்புகிறாள். அவன் தன்னுடைய பெயரைச் சொன்ன போது மாமரம் தலையாட்டியது. பிரமித்துப் போய் அவளும் அவன் பெயரைப் சொல்கிறாள். அசையவில்லை. ஏன் என்பது போல் இவனைப் பார்க்க, பெயருடன் குயின் என்று சேர்த்து சொல் என்கிறான். அதிசயம்! இம்முறை தலையாட்டியது. 

திரும்பி வரும் போது யார் அந்த குயின் என்று மனைவி கேட்பதாக கதையை முடித்திருப்பார் மீரான் மைதீன். 

கதையை இப்படி முடித்திருந்தாலும், என்னால் அதில் இருந்து நீண்ட நேரம் மீள முடியவில்லை. ஒரே யோசனையாக இருந்தது. ஆரம்பத்தில் நண்பரின் மகனை ஓர் இளம்பெண்ணுடன் பார்த்தவுடன் ஒவ்வாமைக்கு ஆட்பட்ட மாடசாமி , பிறகு அவள் இல்லாமல் அவன் மட்டும் வந்து போவதன் காரணம் அறிந்தவுடன் ' காலம் பொல்லாது டே ' என்று அங்கலாய்த்தாரே ? அவருக்கும் இது போன்ற வாலிப வயது அனுபவம் ஏதும் இருந்திருக்குமா ? இல்லையென்றால் வீரியம் மிக்க அந்த ஒற்றைச் சொல் எப்படி வந்திருக்கும் என்று மனம் சிந்தித்துக் கொண்டே இருந்தது. 

மேலும் அவன் மனைவி,  யார் அந்த குயின் என்று கேட்பதோடு கதை முடிந்தாலும் அதற்குப் பிறகு என்ன ஆகியிருக்கும் என்று மனம் யோசித்துக் கொண்டே இருந்தது. 

மீரான் மைதீனின் கதை சொல்லும் பாணி அலாதியான ஒன்று. நெருங்கிய சிநேகிதன் நமக்கு மட்டும் தனியாக கதை சொல்வது போன்ற இலகுத்தன்மை ; இயல்பு. எந்த மிகை உணர்ச்சியும் இல்லாத, குழப்பம் இல்லாத , தெளிவான எழுத்து நடை. வட்டார வழக்கை இவர் சரளமாகக் கையாளும் விதம், கதைக்கு விசேஷமான உயிர்த்தன்மையைக் கொடுக்கிறது. 

பெரும்பாலான கதைகள் காலக் கோட்டில் முன் பின்னாக பயணித்தாலும் , ரயில் ஒரு தண்டவாளத்தில இருந்து இன்னொன்றுக்கு மாறுவது போல் அவ்வளவு லாவகம்.

கதை எழுதுவதற்கு ஒரு சொல்லுக்காகக் காத்திருப்பேன் என்கிறார் மீரான் மைதீன். அந்த காத்திருப்பு சமயத்தில் ஆண்டுக் கணக்கில் கூட நீண்டது உண்டு என்கிறார். எல்லாக் கதைகளிலும் ஆரம்பத்தில் இருந்து ஜிவு ஜிவு என்று எகிறி அடிக்கும் வேகத்தைப் பார்த்தால் அப்படித்தான் இருக்க முடியும் என்று தோன்றுகிறது. 

இவருடைய பாத்திரப் படைப்பு அபாரமானது. எந்த பாத்திரத்தின் குணாதிசியங்களைப் பற்றியும் கதாசிரியர் என்ற முறையில் தான் புகுந்து வர்ணணை செய்வதில்லை. கதையின் போக்கிலும், உரையாடல்கள் வழியாகவும் அந்தந்த பாத்திரங்கள் வாசகன் மனதில் மெல்ல மெல்ல உருப்பெறுகிறார்கள். இது மீரானின் தனித்தன்மை. 

சமூக, பண்பாட்டு, அரசியல் அவதானிப்பு மற்றும்  விமர்சனம் எதையும் வெளிப்படையாகப் பேசுவதில்லை. கதைப் போக்கிலேயே எல்லாவற்றையும் நுட்பமாகப் பொதிந்து வைத்திருப்பதை வாசகன் உணர முடியும். இதுவும் இவருடைய சிறப்பம்சம் என்று கருதுகிறேன். 

நிறைய வாசிக்க இருக்கிறது. 
வாசிப்போம். 

 அன்புடன், 
காமு 

பக்கம்.     100 
விலை ரூ. 100 
தொடர்புக்கு : போதிவனம்

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்                    இன்னொரு சாயல்                            எம்.மீரான் மைதீன்          ...