Thursday 7 March 2024

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்
                   இன்னொரு சாயல்

                           எம்.மீரான் மைதீன்



               தெரிசை சிவா குமரி மாவட்டத்துக்காரர். "குட்டிகோரா" சிவாவினுடை சிறுகதை தொகுப்பு நூல்.பன்முகப் பண்பாட்டு நிலமான குமரி மாவட்டம் பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது.இப்போதைய இதன் தலைநகரான நாகர்கோவிலிலிருந்து பத்துகிலோமிட்டர் எப்பக்கமாகப் பயணித்தாலும் மாறுபட்ட நிலத்தை தரிசிக்க இயலும்.மலைசாரந்த பகுதி,காடு,வயல்,வறட்சியான நிலம்கூட பார்க்க இருக்கிறது.தெற்கு பக்கமாக நகர்ந்தோமானால் பரந்த கடல்வெளி தரிசனமாகும்.மேற்கு பகுதி நிலம் துவங்கி உணவு உடை பண்பாடு என எல்லாவற்றிலும் மலையாளச் சுவை மிகுந்திருப்பதைக் காணலாம். விளவங்கோடு கல்குளம் அகஸ்தீஸ்வரம் தோவாளை என நான்கு தாலுகாக்களுக்கும் தனித்தனி நிறம் மணம் குணமிருப்பதை நெருக்கத்தில் உணர இயலும்.இதனை ஓர் எல்லையற்ற பேரழகாக உணரலாம்.
         இங்கு இஸ்லாமியர்களிடமும் கூட இந்த நிலவியல் அமைப்பில் வழிபாட்டு நம்பிக்கைகள் ஒன்றுபோல இருப்பதைக்கடந்து வாழ்வியல் முறைகளில் பேச்சும் உணவும் சடங்குகளும் கூட சில மாறுதல்களைக் கொண்டதுதான்.இது தனித்துவமான மாவட்டம் என்பதைக் கடந்து பனமுகப் பண்பாட்டுப் பிரதேசம் என்பதாகக் கொள்வது பொருத்தமானது. பெரும்பான்மையான எழுத்தாளர்கள் இலக்கிய ஆளுமைகள் நிறைந்த பகுதியும் கூட.ஹெப்சிபாய் ஏசுதாசன்,ஐசக் அருமைராசன் ஒரு பகுதி எனக்கொண்டால் இதன் இன்னொரு பகுதியாக பொன்னீலன் உலகம்.இதன் தொடர்ச்சியாக வரும் லக்ஷிமி மணிவண்ணன்,கிருஷ்ன கோபால்,பிரபு தர்மராஜ்,ராம்தங்கம் போன்றவர்கள் ஒருபகுதியின் பிரதிபலிப்பு.நாஞ்சில் நாடன், மா.அரங்கநாதன் துவங்கி சிவதானு,தெரிசை சிவா,வைரவன்,என வரும் படைப்பாளிகள் மற்றொரு நிலவியல் பிரதிபலிப்பு.நீல.பத்பநாபன் காத்திரமான இன்னொரு பிரதிபலாப்பு.குமார செல்வா, ஜே.ஆர்.வி.எட்வட்,செல்சேவிஸ்,போன்றவர்கள் விளவங்கோடு தாலுகாவின் நுண்பண்பாட்டுப் பிரதிபலிப்பு. இதல்லாத ஆளுமை முகமாக சுந்தரராமசாமி மற்றும் ஜெயமோகன் போன்றவர்களின் பொதுவான எழுத்துகள்.கிழக்கும் மேற்கும் உரசிக்கொள்ளும் மற்றொரு எல்கையாக இருக்கக்கூடிய தக்கலைப் பகுதியை மைய்யமாகக் கொண்ட இயங்கிய இயங்கும் ஹெச்.ஜி.ரசூல், அபிலாஷ், நட.சிவகுமார்.ஐ.கென்னடி, முஜிப் ரஹ்மான்,சிவசங்கர்,ஹாமீம் முஸ்தபா,பைசல்,மலர்வதி,அமுதா ஆர்த்தி  போன்றவர்களின் எழுத்துகள் அறியப்படாத பல நுண் பண்பாட்டு வெளியில் இயங்கக்கூடிய எழுத்துக்களாக வந்தடைகின்றன. ஆரல்வாய்மொழியிலிருந்து எழுதிய வெகுஜனப் பரப்பில் பெரிதும் அறியப்படாத மறைந்த எழுத்தாளர் சாலன் அந்த நிலத்தின் மாறுபட்ட அற்புதமான ஒரு முகம்.அவரின் அழுக்கு சிறுகதை நூல் முக்கியமானது. ஆதிக்கச் சாதியின் அழுத்தங்களால் கிருஸ்தவர்களாக மாறிய தலித் வாழ்வியலைப் பேசியக்கதைகள். இன்னொரு வாழ்வியலைப் பேசிய தோப்பில் முகம்மது மீரான்,ஆளூர் ஜலால்,மீரான் மைதீன்,இடலாக்குடி ஹசன் போன்ற வரிசையைப் போல கடல்சார் வாழ்வைப் பேசிய வறீதையா கான்ஸ்தந்தின்,குறும்பனை பெர்லின்,செள்ளு செல்வராஜ், இறையுமன் சாகர்,அருள் சினேகம், கடிகை ஆன்றனி,கடிகை அருள்ராஜ், சப்திகா,முட்டம் வால்டர்,தமிழ் தேவனார் என பலரையும் அடையாளப்படுத்த இயலும்.இவற்றில் ஒரே வரிசையில் இயங்கியவர்களிடம் கூட எழுத்துக்களில் பல மாறுபட்ட வாழ்வுமுறை அடுக்குகள் வெளிப்பட்டிருக்கின்றன.நீல பத்பநாபனின் நாவலை வாசிக்கும் போது நாம் உள்வாங்கும் சமூகமும் நாஞ்சில் நாடனின் நாவலை வாசிக்கும் போது உள்வாங்கும் சமூகமும் தனித்த தன்மைகள் கொண்டு இயங்குபவவைகளாகும்.பொன்னீலனின் நாவல்கள் காட்டும் உலகமும் குமார செல்வாவின் நாவலின் உலகமும் ஒரு பின்புலத்தின் இருவேறு நுண்பண்பாட்டு முகங்களாக வெளிப்படும் இரண்டிலும் தனித்துவமான இரண்டு அரசியல்கள் வெளிப்படுகின்றன.இந்த மாவட்டத்தின் கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு எனக் கொண்டால் கூட, இங்குள்ள எழுத்தாளுமைகளின் எழுத்துக்களை சுமந்து நகர்ந்தால்  இங்குள்ள பல கூறுகளையும் அரசியலையும் மொழியையும் கலாச்சார மாற்றங்களையும் புழங்கு பொருட்கள் வரையிலும் எல்லா அம்சங்களையும் ஒட்டியும் வெட்டியுமான பெரும் தரிசனம் வாய்க்கப் பெறலாம்.தனித்தனியான ஆய்வுப் பார்வைகள் நிறைய நிகழ்ந்திருக்கிறது என்றாலும் ஒரு கூட்டு ஆய்வானது மேலும் பல சுவாரஸ்யங்களைத் தரக்கூடும்.
                   மனிதர்களுக்குள் கூர்மையான இரண்டு எதிர் எதிர் மனிதர்கள் உண்டு.அது அவனுக்குள் அல்லது அவளுக்குள் தலைகீழாக இருக்கிறது.இந்த எதிர் எதிர் மனிதர்கள் என்பதை கடவுள் சாத்தான் குறியீட்டில் பொருத்திக் கொண்டால் கடவுளையும் சாத்தானையும் ஒருங்கே கொண்டலையும் மனிதன் தனது எழுத்துப் பிரதிகளிலும் இந்த எதிர்நிலையை அறிந்தோ அறியமலோ சமைத்துவிடுகிறான்.வெளியே இருந்து பிரதிக்குள் நுளையும் ஒவ்வொருவனும் ஒவ்வொருவளும் முன்னமே கடவுளையும் சாத்தானையும் தங்களுக்குள் கொண்டிருப்பதால் அதன் வழியே பயணிக்கின்றனர். பிரதியிலிருக்கும் சாத்தானைத் தேடி கடவுளும்,கடவுளைத் தேடி சாத்தானும் பயணப்படுவது ஒரு விளையாட்டுதான். விளையாட்டு எல்லா நேரங்களிலும் விளையாட்டாக இருப்பதில்லை, வினையாகியும் விடும்.ஆதியிலே கடவுளும் சாத்தானும் நண்பர்களாக இருந்தனர்.பின்னர் அவர்களுக்கிடையேயான விளையாட்டு வினையாகியது,எதிரிகளான கடவுளும் சாத்தானும் இப்போது நமக்குள்ளும் நம்பிரதிகளுக்குள்ளும் இல்லாமல் வேறு எங்குதான் வாசம் செய்ய இயலும் .வாசம் செய்கிறவர்களால் சும்மா இருக்க இயலாது எனவே நல்வழி படுத்தியே தீருவேன் என்கிறார் கடவுள் . வழிகெடுக்காமல் விடமாட்டேன் என்கிறார் சாத்தான்.நாம் மூச்சு இடைவெளியில் அங்கும் இங்குமாக சிக்கிக் கொள்கிறோம்.பிரதிகள் நம் மேல் விழுந்த வண்ணமாக இருக்கிறது. பிரதிகளால் மூடப்படுகிறோம். பிரதிகளுக்குள்ளிருந்து ஒன்று பத்து நூறு ஆயிரம் லட்சம் கோடி என கடவுளும் சாத்தானும் நம்மை சூழ்ந்துள்ள நிலையிலிருந்தும் பிரதியை அனுகலாம்.
இயற்கையின் அம்சங்களான கடல், மலை,நிலம் ,வயல்வெளி,நதி போன்ற நீர்சூழ்ந்த நமது ஊர்.அல்லது நாம் அறிந்த ஊர்கள்.மதம்,சாதி,நம்முடைய வழிபாட்டு நம்பிக்கை,உணவு, உடை, நம்முடைய அரசு,அதன் நிர்வாக முறை,சட்டம்,நாம் சார்ந்த சடங்கு சம்பிரதாயம்,சமயப்பண்பாடு,பொதுப்பண்பாடு.இவைகளோடு,ஆண்பெண் உறவு,காதல்,கோபம்,எனத்தொடரும் மனித உணர்ச்சிகள் இவை எல்லாம் கலந்த அல்லது ஏதேனும் சில பகுதிகள் கலந்த மனித வாழ்வின் பிரதிபலிப்புகளே வேறு வேறு வகைமைகளில் பிரதியில் மைய்யம் கொள்கின்றன.இதில் கடவுளையும் சாத்தானையும் விலக்க முடியாத தன்மை மனித பிறப்பிலேயே ஏற்பட்டு விடுவதால் பிரதியின் மைய்யத்திலும் இந்த கடவுள் சாத்தான் விளையாட்டு நாம் அறியாமலே இருப்பு கொள்கிறது. பிரதியை சூழ்ந்திருக்கும் முதன்மை உலகம் இதுதான் என்றாலும். மனிதனுக்குள் ஒரு கனவுலகமும் இருக்கிறது.மனிதனி்ன் கனவுலகிலும் இரண்டு எதிர்நிலைகளை காணலாம்.ஒன்று கடவுளின் கனவு,இரண்டு சாத்தானின் கனவு.எனவே கனவுவெளி புனைவுப் பிரதிகளிலும் இந்த கடவுள் சாத்தான் விளையாட்டு இயல்பிலேயே அமைந்துவிடுகிறது.ஒரு பிரதியின் ஆக்கமுறையில் அது நேர்கோட்டு எழுத்தாகவோ,அல்லது காலத்தை கலைத்துப்போடும் எழுத்தாகவோ, கனவுவெளி புனைவெழுத்தாகவோ எவ்வகைமையானாலும் இந்த கடவுள் சாத்தான் விளையாட்டு மைய்யச் சரடாக இருந்து பிரதிகளை கட்டமைப்பதில் அடிப்படை தன்மை கொள்கிறது.நான் மேற்குறிப்பிட்டுள்ள எல்லா படைப்பாளிகளிடமும் இந்த அடிப்படைத் தன்மை இருக்கிறது.
           மீக அழகான பாரம்பரிய பரப்பில் தெரிசை சிவாவினுடை குட்டிகோராவும் ஒரு கண்ணியாக நம்மை வந்தடைந்திருக்கிறது.நாம் எல்லா மனிதர்களையும் நினைவில் வைத்துக் கொள்வதில்லை.தனித்துவமான நல்லதோ கெட்டதோ அவர்களிடத்திலிருந்தால் அவர்கள் நமக்கு அபூர்வமானவர்கள்.இந்த அபூர்வமானவர்களே நம்முடைய மனங்களை ஆக்கிரமிக்கின்றனர். குட்டிகோரா  இவ்வாறான ஆக்கிரமிப்பாளர்களையே நமக்கு தருகிறது எனவே இந்தக் கதைகளின் மனிதர்கள் நம்முள்ளே வாழ்கிறார்கள். நிலத்தை வடிவமாக்குகிற நேர்கோட்டுக் கதைகளில் அவரின் மாந்தர்கள் ஒரு ஒப்பனையுமின்றி இயல்பில் வாழ்கிறார்கள்.திடிரென நினைத்துப் பார்த்திரா ஒரு விசயமோ சொல்லோ நிகழ்வோ கதையை சிதறடிக்கிறது. மேலும் அதுவே முடிவுறாத மற்றொன்றை நோக்கி நகர்கிறது. இதனை சிவாவின் எழுத்தாழமாகப் பார்க்கலாம்.தோசை என்றொரு சிறுகதை,மிகச் சாதாரணமான ஒரு இஸ்லாமிய பாத்திரம்.திடிரென அவர் மீது ஒரு சித்திரம் தீட்டப்படுகிறது.அந்த அழுத்தம் எப்படி அவரை மெல்லக் கொல்கிறது என்பதன் பதிவு.பக்கீர் பாய் என்பவரின் கதையாக வரும் நிலம் சிவாவின் அருகாமை ஊர் என்பதும் மேலும் அதனை சுற்றிலும் பரவும் நிலமும்கூட அறிந்தவர்களுக்கான ஒரு உலகத்தை கட்டமைக்கும்.அபூர்வமான மனிதர்களின் வரிசையில் பக்கீர் பாய்,துரை பாட்டா மற்றும் ஆசான் போன்றவர்களின் உலகினை எளிதில் கடந்து போய்விட இயலாது.ஒருவேளை நாமும் இதுபோன்ற மனிதர்களை சந்திக்கலாம் துரைபாட்டா போன்ற ஒருவரோடு புழங்கிக் கொண்டிருக்கலாம்.சிவா அபுர்வமான ஆண்களை கொண்டுவருவது போலவே கும்பாட்டக்காரியான வள்ளியம்மாள் மற்றும் வெத்திலைப் பெட்டி கதையில் வரும் பெண்மணி என பெண்கள் வருகிறார்கள்.சிவாவின் இந்த தொகுப்பில் நான் குறிப்பிட்ட கடவுள் சாத்தான் விளையாட்டு அழகான களம் அமைத்திருப்பதை வாசிப்பின்வழி  காண இயலும். சிவாவின் எழுத்துக்களை ஒரே வகையாக சொல்லிவிட முடியாது அல்லது அப்படியே எதார்த்த வகைமையில் மட்டும் பயணிப்பதுமல்ல.உலக்கை அருவி மற்றும் குட்டிகோரா சிறுகதைகள் இன்னொரு எதிர்நிலை எழுத்தாகி மலருகின்றது.நாம் சாதரணமாக பேசத் தயங்கும் விடயங்கள் மனதின் அடியாழத்தில் மறைக்கப்பட்ட விடயங்கள் என பல திறப்பு கொண்டவையாக அதன் மற்றொரு உலகு புலப்படுகிறது.அழகிய யுக்தி பூர்வமான வெளிப்பாடு. சுடலைமாடனுக்கும் ஆட்டிற்கும் நடக்கும் உரையாடல் பகடி கடந்த கதையாக ரசிக்கத் தக்கவை .பெரிய விசயங்களை சின்னவைகள் மீது ஏற்றி அனாயசமாக ஆடும் ஓர் ஆட்டமாக ஆடுகிறார். சாதிய மனம் மனிதர்களின் அகத்தில்  பதுங்கிக் கிடப்பதையும் அது எவ்வாறான சந்தர்பங்களிலெல்லாம் வெளிப்படுகிறது எங்கு வெளிப்படுகிறது என்பதையும் அது எதுபோன்ற வர்ணஜாலங்கள் மூலமாக தன்னை மறைத்துக் கொள்ள விரும்புகிறது என்பதைப் பற்றியெல்லாம் நாசூக்காக பேசிவிடுகிற "நறுவல்"போன்ற கதைகள் ஈர்ப்பு மிக்கது.எழுத்தோடு பயணிக்கும் ஓட்டத்தில் மனதிலிருக்கும் அச்சம் பதிவாகிறது.ஒரு மலையாளப் பேய் என்கிற கதை ஒன்றில் சாலையில் சிதறிக்கிடக்கும் கிரேந்திப்பூ மரணத்தை நினைவூட்டுகிறது மரணம் பேயை நினைவூட்டுகிறது இதன் மனவோட்டம் கதையாக தொடர்ந்து வாசகனைத் துரத்துகிறது.
         ஏராளமான எழுத்து முறைகளை வாசிக்கிறோம். ஏற்பதும் முரண்படுவதுமான பல மாறுபாடுகளை அலசிக்கொண்டேதான் யாராவது காதருகே அமர்ந்து கதை பேசினால் கேட்பதற்கு ஆர்வமுடையவர்களாகவே இருக்கிறோம்.சிவா காதருகே கதை சொல்வதோடு நம் கரங்களைப் பற்றி இழுத்துக் கொண்டுபோய் நிலத்தில் விடுகிறார்.இது ஒரு யுக்தி என்றால் பாரம்பரியமான தொடர்ச்சியில் இவர் தனக்கான இருப்பை கண்டடைந்திருக்கிறார் என்றே கருதலாம்.தந்தையை வெளிநாட்டுக்கு அழைத்துப்போய் அவருக்கு இன்னொரு பண்பாட்டிலுள்ள உடையை அணிவித்துப் பார்பது,கண் பார்வையற்ற ஒருவரின் பாலியல் உணர்வு கற்பனைகள் எப்படியானது, என கதையின் அடுக்குகள் நிறைய இருக்கின்றன.பெண் அறியாத பெண் உடலின் சித்திரங்கள் ஒரு ஆண் மனதில் பலவாறாக குவிந்து கிடக்கலாம்.பார்வையற்ற ஒருவன் உருவாக்கிக் கொள்ளும் சித்திரம் எப்படியானது,அது கனவா நினைவா.முடிவற்ற வாழ்வை பேசும் கதைகளாக  சிவாவின் எழுத்து பரவுகிறது.ஏற்கனவே தமிழ் வாசகர்களுக்கு மா.அரங்கநாதன், நாஞ்சில் நாடன் போன்றவர்களால் அறிமுகமாகியிருக்கிற இந்த நிலத்தின் முகம் சிவாவிடமிருந்து இன்னொரு சாயலையும் தருகிறது.
      
           

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்                    இன்னொரு சாயல்                            எம்.மீரான் மைதீன்          ...