Wednesday 15 November 2023

சைக்கிள் சக்கரம் கோட்டம் எடுப்பவன், லெஃப்ட்ல வளைவுன்னா டாப்புல நாலமத்த கம்பிய முறுக்குவான், எல்லாம் பொறிதான்....

சைக்கிள் சக்கரம் கோட்டம் எடுப்பவன், லெஃப்ட்ல வளைவுன்னா டாப்புல நாலமத்த கம்பிய  முறுக்குவான்,  எல்லாம் பொறிதான்....
-------------------------------------------------------------------
கொலை என்று கருதப்படுகின்ற ஒரு சம்பவம், அந்த கொலையுண்டவனின் தொடர்பிலிருக்கும் நட்புகள், உறவுகள், அக்கம்பக்கதாரை மற்றும் அவன் தினமும் சாப்பிடச் செல்லும் ஹோட்டல் உரிமையாரைக்கூட விடாது துரத்துவதோடு, காவல்துறை அவர்களை விசாரணை என்கின்ற பெயரில் அவர்களின் தற்போதைய நிலையிலிருந்து அப்படியே புரட்டிப்போடுகின்ற அவலம் என்பது ஒன்று. இரண்டாவதாக, இந்த நீளும் பட்டியலில் வருகின்ற எளிய மனிதர்களின் வாழ்க்கை முறையை, பழக்க வழக்கங்கள், பேச்சு மொழிகள் ஆகியவற்றை சுருக்கமாகவும் கனக்கச்சிதமாகவும் சொல்லுகின்ற பாங்கு. இதனூடாக, அவர்களின் அன்றாட வாழ்வின் கண்ணுக்குத் தெரியாக கண்ணிகளாக இருந்து வினையாற்றுகின்ற அரசியல், அதிகார வர்க்கத்தின் மமதையை உணர்த்துவது என தனது "ஒச்சை" என்கின்ற சிறிய நாவலில் ஒரு புதிய பாணியிலான கதைக்களத்தை உருவாக்கியிருக்கிறார் அருமைத் தோழர் மீரான் மைதீன். நட.சிவகுமாரின் அறிமுகத்துடன் வந்திருக்கும் இந்நாவல் 164 பக்கங்களைக் கொண்டிருக்கிறது. புலம் வெளியீடு. விலை ரூ.180. 

கதையில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்படுகின்ற "கோயா" என்கின்ற கமர்தீன் என்பவர் நாவலின் இரண்டாவது அத்தியாத்திலேயே கொலை செய்யப்படுவதாகச் சொல்லி வாசகனை அதிர்ச்சிகுள்ளாக்கும் மீரான். அதன்பின்னர் அந்த கொலைக்கான மர்ம முடிச்சினை அவிழ்க்கும் முயற்சி என்ற காவல்துறையினரின் நடவடிக்கைகளைச் சொல்வதன் மூலமாக, கதையின் போக்கினை விறுவிறுப்பாக்குகிறார். ஆனால் உண்மையில் ஒரு கொலை, அதைக் கண்டுபிடிக்கின்ற காவல்துறை என்ற ஒரு சாதாரண கோணத்தில் இந்தக் கதையை நாம் அணுகமுடியாத அளவிற்கு, நாவலில் உலவுகின்ற கதைமாந்தர்களின் அறிமுகமும், அவர்களின் பாடுகளும் என அவற்றை நோக்கிய நமது பார்வையைத் திருப்பியிருக்கிறார் மீரான் மைதீன். 

நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற வட்டார வழக்கு மொழி பல வகையில் விளையாடுகிறது. அந்த விளையாட்டின் துவக்கமும் முடிவும் புதியதொரு விளையாட்டின் தொடக்கமாகிறது. மீரானின் துள்ளல் மற்றும் எள்ளல் நடை அவருக்கு இயல்பில் கிடைத்துள்ள பலம். அவ்வாறான மனிதர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்தவர்கள் எழுத்தாளர்களாவதும் மொழிக்குக் கிடைத்த ஒரு வரம். நடந்துவிட்ட கொலையைப் பற்றியோ, அதை யார் செய்திருப்பார்கள் என்பது பற்றியோ அல்லது கொலையுண்டவனைப் பற்றியோ சிந்திக்காமல், அதைச் சுற்றி நடக்கின்ற விசயங்கள் குறித்த பார்வையை விரிவாக்குவது என்கின்ற வகையில் இந்த நாவல் ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டுகிறது. 

"கோயா" என்பவன் ஒரு குறியீடு. அதிகாரத்தை ஆட்டுவிக்கும் குறியீடு. அப்படி ஆட்டுவிக்கப்பட்ட அதிகாரம், அந்த அதிகாரத்தின்கீழ் சுழன்று தவிக்கும் ஒடுக்கப்பட்டவர்களைக் கசக்கிப் பிழியும் என்பதற்கான குறியீடு. "எளியவன் கட்டமைத்து வைத்திருக்கும் அழகிய உலகங்களைச் சற்று மேலே நிற்கிறவன் குலைத்துப் போடுகிறான். அவனுக்கு மேலே அவனுக்கு மேலேயென இந்தக் குலைப்பின் கட்டமைப்பு ஒரு படிக்கட்டு மேலேறிப்போகிறது...." என்று மீரான் குறிப்பிடுவது, இந்தக் குறியீட்டினை முன்வைத்துதான் என்ற முடிவுக்கு நாம் வரலாம். 

தனியாக ஒரு மைய நீரோட்டம் என்றில்லாமல், கதையில் வருகின்ற ஒவ்வொரு பாத்திரத்தையும் நாம் கவனத்துடன் நோக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்திற்கு வாசகனைத் தள்ளுவது வரவேற்கத்தக்க உத்தி. நாவலில் வருகின்ற "பஷீர்" "அன்வர்" "மனோரஞ்சிதம்" போன்ற பாத்திரங்கள்  நம் மனக்கண் முன்னால் விரிக்கின்ற செய்திகள் பலப்பல. கட்டமைத்தலில் ஒரு புதிய வடிவமாக இந்த "ஒச்சை" நாவலை நாம் எடுத்துக்கொள்ள முடியும். "எல்லாம் பொறிதான்" என்பதைப் போல தன்னுடைய அனுபவத்தின் மூலமாக மிக அருமையான ஒரு வாசிப்பனுபவத்தைத் தந்திருக்கின்ற தோழர் மீரான் மைதீனுக்கு அன்பும் நன்றியும். 

விசாகன்
தேனி

No comments:

Post a Comment

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்                    இன்னொரு சாயல்                            எம்.மீரான் மைதீன்          ...