Tuesday 23 January 2024

மஞ்சள் ஔி

மஞ்சள் ஒளிப்பரவலில் 
சிதறிக் கிடந்த சித்திரத்தை
யார் வரைந்து போட்டார்களென்று தெரியவில்லை
விடியும் வரை அப்படியே 
கிடந்தது

அதிகாலை பனியின்
குளிரில் நடுங்கியபடி
போர்த்திக் கொண்டிருந்த 
சித்திரம் 
மஞ்சள் ஒளிப்பரவலில் 
சிதறிக் கிடந்ததல்ல

ஒளி அலைபாய்ந்தோடும்
வீதிகளெங்கும்
முகமற்ற
சித்திரங்கள் 
ஓடி மறைகின்றன
சிலது வாகனத்தின் பின்னே
துரத்துகின்றன

காகமாக
கழுகாக
நாகமாக
நாயாக
பேயாக 
வாகனச் சக்கரத்தில்
வரிசையாக நசுக்கி 
மாற்றி மாற்றி
சித்திரங்களிலும் 
கடந்து போகிறேன்

அடி வானில்
அப்பிக் கிடந்த
ஆயிரத்து ஒன்றாவது
சித்திரத்தில் 
கொம்பு வைக்க 
குளத்து நீரில் கல்லெறிந்த போது
கொம்பு முளைத்துக் கொண்டது

ஆந்தையும் 
வவ்வாலும்
கூட்டாய் வரைந்த 
சித்திரத்தில்
சூரியன் 
இருளாய் இருக்கிறது



                -மொய்தீன் கவிதை-

Tuesday 16 January 2024

ஈரவாதை'நாவல் அறிமுகம்

நண்பர் ரபீக்ராஜாவின் முந்தைய எழுத்துக்களை நான் வாசித்ததில்லை.முதன்முதலாக இப்போது அவரின் ஈரவாதை என்னும் இந்த புதினத்தை வாசித்திருக்கிறேன். அக்கரை என்கிற சொல் இரண்டு அர்த்தங்களை கொண்டுள்ளது.நான் வாசித்துவிட்டு அக்கரையாக அவரிடம் சில விசயங்களைப் பேசிய  பேச்சில் குறிப்பிட்டுள்ளேன்.

நாம் இந்த வாழ்வில் அறிந்த பக்கங்களைக் காட்டிலும் அறியாதவைகளின் உலகம் ஆகப்பெரியது.ரபீக்ராஜா இந்த புதினம் வாயிலாக அறியாத உலகின் ஒரு திறப்பின் வழியே நம்மை குழந்தையைப்போலக் கரம் பிடித்து நடத்திக் கொண்டு போகிறார். அலங்காரமற்ற எளிய ஆவணமாக வரையப்பட்டிருக்கிறது.அலங்காரம் அத்தியாவசியமானதல்ல என்றாலும் ஒரு எழுத்து வாசகர்களுக்கான வெளியை வழங்காமல் அவைகளை அபகரித்துக் கொள்ளுதல் ஈர்ப்பை குறைக்குமென்றாலும்,புதினம் கொண்டிருக்கிற பாடுபொருளின் நிமித்தமாக ரபீக்ராஜா அதீத நம்பிக்கை கொண்டிருப்பதை நாம் குலைத்துவிட இயலாது.
        ஒரு தந்தையும் மகனும் கூட்டாகக் கலந்து  முதன்மையாக நகர்த்தும் இக்கதை உலகம் கடும் நோயின் பரப்பில் இயங்குகிறது.ஒரு மருத்துவமனையின் இருப்பினுள்ளே நோயாளிகளும் அவர்கள் மீது கடப்பாடுகள் கொண்டவர்களும் புழங்குகிறார்கள்.உயிர்களிடத்தில் நோய்கள் எண்ணிலடங்காத வகைமைகளில் இருக்கிறது.அது எவ்வளவு கொடூரமானதாக இருந்தாலும் உயிர்கள் அதனை எதிர்த்து உயிர்வாழ்தலின் பொருட்டு போராடுகின்றன.அது இரண்டுமாத குழந்தையாக  வயோதிகராக. அல்லது அப்போதுதான் திருமணமான இளம் தம்பதியரில் ஒருவராக இருக்கலாம், அந்த நோயாளிகளோடு ஒரு அம்மாவோ,மகனோ,கணவனோ,மனைவியோ சேர்ந்து போராடுகிறார்கள். இந்த போராட்டங்கள் பல காரணகாரியங்களைக் கொண்டிருக்கின்றன.இந்த உணர்வுகளின் பொதுவான பக்கம் போல 'ஈரவாதை' தோன்றினாலும் இது தனித்துவமான அகஉலகமாக இருக்கிறது.புற்றுநோய் பற்றி வெகுஜன சினிமா ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் நீண்டகால பிம்பங்களின் மீது ஒரு மாற்றை இக்கதை உலகம் செய்கிறது. சபிக்கப்பட்டதைப் போல தோற்றம் தரும் ஆசீர்வதிக்கப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள்.இங்கு மனிதர்களில் மோசமானவர்கள் என்று யாரும் வரவில்லை.நீதி நேர்மை தர்மம் அன்பு காரூண்யம் என தேவாம்சம் கொண்டவர்களாக பரஸ்பரம் மானுட அன்பின் பரப்பில் நடமாடும் மனிதர்கள். சிறுதுளி மூத்திரம் மகனின் மீது பட்டுவிட்டதற்காக கலங்கும் அப்பா நோயின் கடுமையால் மனம் வெதும்பி தற்கொலையில் தோல்வியடையும் போது அழுகிறார்.அம்மா பற்றிய நினைவுகள் எங்கோ தூரத்தில் திருப்பறங்குன்றம் மலைமீது கிடக்க,சிறுவனாக அம்மாவை இழந்த மகனுக்காக அப்பாவும் அம்மாவுமாக வாழ்துவரும் அப்பாவை அவன் இத்தனை கருணையோடும் வாஞ்சையோடும் பார்த்தும் கேட்டும் நடப்பதில் கதை கதையாகப் போய்கொண்டே இருக்கிறது.
           உணர்வுகளின் போராட்டத்தோடு  மனம் அலைபாயும் பேருலகின் பல அம்சங்களை எழுதுவதற்கான வாய்ப்புள்ள புதினமாக இருக்கிறது. இன்னொரு பக்கத்தில் மருத்துவம் அது நோயாளிகளிடத்தில் நிகழ்த்தும் வன்முறை அல்லது கருணை இவைகளின் விரிவான உலகைப்பற்றிய அறிய வாய்ப்புள்ளதையும் பயன்படுத்தாமல் புதினம் தன்னைச் சுருக்கியிருக்கிறது. சைக்கிளில் இருந்து இறங்காமலே வட்டமடிக்கும் ஒரு சாகசகாரனின் செயல்போலவும் இதனைக் கருதலாம். நேர்கோட்டு முறையில் எழுதப்பட்டுள்ள இப்புதினத்துக்கான தனித்த பயண இலக்கு எது என்பது இல்லை என்றாலும் இது நமக்கு காட்சிகளைக் காட்டுகிறது.காட்சிகளை சாதரணமாக ஒதுக்கியும் விடஇயலாதவாறு துயரம் நம்மை அடைகிறது.'அப்பாவின் கைகள் மட்டுமல்ல கால்களிலும் நரம்புகள் புடைத்துக் கொண்டு நிற்கும்.ஊசியை எடுத்து கையில் வைக்கும்போது அப்பா வேறுபக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.அப்பாவின் செய்கை எனக்குப் புதிதாக இருந்தது. சமையலின் போது எந்த துணியின் பிடிமானம் இல்லாமலே சட்டியை அடுப்பிலிருந்து இறக்குவார். காய்கறிகள் நறுக்கும் போதுகூட ஏற்படும் வெட்டுக்காயம் அவரை முகம் சுளிக்க வைக்காது.இயல்பு வாழ்விலுள்ள வலிக்கும் வலிந்து திணிக்கப்படும் வலிக்கும் வித்தியாசம் இருக்கத்தானே செய்கிறது.' ரபிக்ராஜா குறிப்பிடும் இந்த இரட்டைவலிகளின் உலகமாகவும் இந்த புதினத்தை இன்னொரு அர்த்தத்தில் கருத முடிகிறது.இயல்பு வலியும் திணிக்கப்படும்வலியுமாக மனிதர்கள் குறுக்குவெட்டாக நோயர்களின் உலகில் பயணம் நிகழ்த்துகின்றனர். நடேசன் மனைவியை இளமையிலேயே இழந்து விடுவது இயல்பான வலி என்றால் அவர் இன்னொரு துணையை அமைத்துக் கொள்ளாதது அவர் வலிந்து ஏற்படுத்திக் கொள்ளும் வலியாகத்தான் இருக்கிறது.
இந்த இரட்டை நிலைபாட்டை இந்த ஈரவாதை புதினத்தின் அனேக கதைமாந்தர்களிடம் அவதானிக்க முடிகிறது.நலவாழ்வும் நோய் வாழ்வுக்குமிடையே மீளத்துடிக்கும் மனிதர்களின் உலகமாக இந்த புதினம் அதன் பரப்புக்கு வெளியே இருக்கும் பேருலகின் அவதானங்களை விட்டு விடுவதையும் பார்க்க முடிகிறது.

              ஈரவாதை,காத்திரமான வாசிப்பிற்கான பகுதிகளை கொஞ்சம் பின்னே வைத்திருக்கிறது.புதினத்தின் மைய்யச் சரடில் ஊடுபாவி விலகும் சில கதைமனிதர்கள் மறக்கவியலாதவர்களா இருக்கிறார்கள்.மின்னலில் கனப்பொழுதில் மின்னி மறையும் அதிசயம்போல ஆக அபூர்வமான மனிதர்களாக இருக்கின்றனர். செய்முறையில் இந்த புதினம் கலைக்கப்பட்டிருக்கலாம் என்ற தோன்றுதல் எனக்கு திரும்பத் திரும்ப வந்த வண்ணமே இருப்பது இதன் நிமித்தமாக கூட இருக்கலாம்.
யாதார்த்தம் உண்மையைப் பேசுவதாக இருந்தாலும் உண்மையைக் கலையாக மாற்றுவதில்தான் ஒரு படைப்பாளி தனக்கான தனித்துவங்களை உருவாக்க இயலும்.உண்மைக்கும் கலைக்கும் இடையே ஒரு சந்திப்புத்தளம் இருக்கிறது.அந்த சந்திப்புத்தளத்தை படைப்பாளி மெருகேற்றக் கடமைப்பட்டவன்.அவன் இதன் தனித்துவம் குறித்து கவனம் கொள்ளவில்லை என்றால் உண்மை வெறும் உண்மையாகத்தான் இருக்கும்.புதினக்கட்டமைப்பில் கலைத்துப் போட்டு புதிய புதிய பரிமாணங்களை செய்வதற்கான சாத்தியங்களைப் பயன்படுத்தாமலும் விட்டு விடக்கூடாது.நோய் கொடியதாக இருந்தாலும் நோயாளி உட்பட யாரும் இரண்டு வாரத்திற்குப் பின் துக்கப்பட விரும்புவதில்லை.ஒன்று நோயை மறந்து விடுகிறார்கள் இல்லையேல் ஏற்றுக் கொள்கிறார்கள்.இரண்டுமே நல்லதுதான் எனக் குறிப்பிடும் புதிதனத்தின் சொல் வெறும் சொல் மட்டுமல்ல ஏகதேசம் வாழ்வின் நிலையும் கூட.ஆனால் வாழ்வில் ஒருபோதும் மறக்கவியலாத நினைவுகளைக் கொண்டு நடேசனை முன் வைத்துதான் இப்படியான சொற்களை செய்யும் முரண்களையும் நாம் புதினத்தின் வழியே அவதானிக்கலாம்.ரபீக்ராஜா ஒரு புதிய பகுதியை எடுத்துக் கொண்டு அதனையே முழுமையாகப் பேசும் புதினத்தை நம்பகமாக படைத்திருப்பதை பாராட்டவும் தவறிவிடக்கூடாது.சமரசமின்றி அவர் எழுத்தை எழுதியிருக்கிறார்.வெகுஜன வாசிப்பில் இதன்மீதான நல்ல உரையாடல்கள் புதினத்தின் உள்ளேயும் வெளியேயுமாக நிகழ்ந்தேற வேண்டும்.

      கடற்கரையைப் போலவோ பூங்காவைப் போலவோ நாம் ஒரு மருத்துவமனையின் உள்அவயங்களை நாம் நெருங்கிப் பார்க்க விரும்புவதில்லை.தள்ளி நின்று பார்க்கிறோம்.நமது இந்த அபிப்ராயத்தை உடைத்து ஈரவாதை நம்மை நெருக்கமாக்கியிருக்க வேண்டும்.மௌனங்களின் அழகை   வார்த்தைகளால் விரையம் செய்துவிடாமலிருப்பதும் கலைதான்.இந்த புதினத்தை வெளிக் கொண்டுவரும் ஆமினா முகம்மதுக்கும் நாவலாசிரியர் ரபீக்ராஜாவுக்கும் நெஞ்சம் நிறைந்த அன்பான வாழ்த்தும் அன்பும்.இன்னும் எழுத்துக்கள் புறப்பட்டு வரட்டும்.

அன்புடன்
எம்.மீரான் மைதீன்
நாகர்கோவில்
01-01-24

Friday 5 January 2024

"வீரியமிக்க விளிம்பின் குரல்" மீரான் மைதீன்


       கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளாக இலக்கிய உலகில் கோலேச்சும் எழுத்தாளுமை மதிப்புக்குரிய தோழர் ம.காமுத்துரை அவர்கள். இவரது எழுத்துகளின் முதன்மைத் தன்மையாக நாம் அறிவது, உணர்வது, புனைவிலக்கியத்தில் விளிம்பு நிலைக் குரலாக எப்போதும் ஒலிக்கும் இவரின் படைப்புகள்தான். அடித்தட்டு மக்களின் வாழ்வை - வலியைக் கலைப்படுத்தும் காமுத்துரை அந்த மக்களின் சொற்களிலேயே அதனை வரைவதில் தமிழ்ச் சூழலில் வல்லமையுடையவர்களில் மிகச்சிறந்த ஒருவராக இருக்கிறார்.

              சாதாரணமாகப் பொருட்களை அளவீடு செய்வதற்கான உபகரணங்கள் பலவகைப்பட்ட மாதிரிகளில் நம்மிடமிருக்கின்றதைப் போல துல்லியமான அளவீட்டுக் கருவிகள் இலக்கியத்தின்பால் நம்மிடமில்லை. நாம்தான், நாம் ஒவ்வொருவரும்தான் கலையின், இலக்கியத்தின் அளவீடாக இருக்கிறோம். எனவே, காமுத்துரையின் அளவீடு என்பது இந்த உன்னத வாழ்வின் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வுபரப்பில் மேவும் சுவீகாரமாக இருக்கிறது.அதனை அதனளவில் அப்படியே உள்வாங்கும் இந்த தெளிவான சுவீகாரமே தேர்ந்த கதைகளாக  அந்நியப்பட்டவர்களுக்கும்  அதனைக் கொண்டு சேர்ப்பதில் வெல்கிறது. இந்த வெற்றி அங்குமிங்குமாக ஏற்றத்தாழ்வுளாகக் கிடக்கும் சமூகச் சமன்பாட்டுக்கு அத்தியாவசியமானது. கலையின் ஜனநாயக முகம். இதனடிப்படையில் சிறுகதை, நாவல் என தனது தனித்துவமான படைப்புலகை கால இடைவெளியின்றி சீரான பயணமாக நிகழ்த்தும் அவரிடமிருந்து எழுத்துக்கள் பொங்கிப் பெருகி வந்த வண்ணமே இருக்கின்றன.தமிழ் இலக்கியத் தடத்தில் பலரிடத்திலும் அவ்வப்போது சில தேக்கநிலைகளைக் கண்டிருக்கிறோம் ஆனால் சிறிதும் தளர்வின்றி அரை நூற்றாண்டை நோக்கிப் பாய்கிறது காமுத்துரையின் எழுத்து.சத்தமின்றி ஒரு சகாப்தமாக மலர்ந்திருக்கிற இதனை கொண்டாட்டத்திற்கான ஒன்றாக கவனப்படுத்துகிறேன்.


              குதிப்பி, கோட்டைவீடு, மில், கொடி வழி போன்ற முக்கிய புதினங்களை நான் முன்னமே வாசித்திருக்கிறேன்.காமுத்துரையின் இருப்பில் இன்னும் ஒன்றை நான் சிறப்பாகக் கருதுவது அவர் இலக்கிய உலகின் எல்லா முனைகளிலும் பாகுபாடின்றி அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார். தமிழ்சூழலில் இது அபூர்வமானதும் கூட. அவர் எழுத்தின் வழி இதனை சாத்தியப்படுத்தியிருப்பதாக உறுதிப்படுத்தலாம். காமுத்துரையின் எழுத்து என்பதே இந்த உறுதிப்பாட்டின் சாட்சியமாகச் சொல்கிறேன். காட்சியை அப்படியே எண்ணம் பிசகாமல் வாசக மனப்பரப்பில் பதித்துச் செல்லும் எழுத்தின் வலு, தன்னிடமிருந்தும் தன் நிலத்திலிருந்தும் சுவீகாரம் செய்கிற வாழ்வை வரைவதாலோ என்னமோ இவரின் எழுத்தில் குருதியோட்டம் துடிப்படங்காமல் எப்போதும் சுடச்சுட இருப்பதை அவதானிக்க இயலும். வாசிக்கும் மனங்களுக்கு உணர்ச்சிகளைக் கடத்துவதில் அனுபவமிக்க தனது எழுத்தால் ஆணுக்குள் பெண்ணையும் பெண்ணுக்குள் ஆணையும் மடைமாற்றி வாசகனைத் தனித்தவனாக இல்லாமல் நியாய அநியாயங்களின் மீது எதிர்வினை புரிய அந்த கூட்டத்தில் ஒருவனாக்கிவிடும் வசீகரம் இவரின் எழுத்திலுண்டு.
               கலவையை இப்போது வாசித்த இந்த அனுபவம் எனக்குள் காட்சியாகத்தான் இப்போதும் கிடக்கிறது. காட்சி என்றால் முற்றிலும் புதிய காட்சி,அபூர்வமான காட்சி. விளிம்புநிலையில் அழகிய அவதானம். இந்த அவதானம் உயிர்ப்புமிக்கது. எனவேதான் வேறு பிரதேசம் வேறு பண்பாட்டிலுள்ள ஒருவனையும் அது காட்சிக்குள் இழுத்துச் சென்று பாத்திரத்தில் ஒருவனாக்குகிறது.

           ம.காமுத்துரை எழுதியிருக்கிற இந்த கலவை என்கிற நாவல் விளிம்பு நிலை வாழ்வியலை மையமாகக் கொண்டுள்ளது. புதினம் திறக்கின்ற வாழ்வும், அந்த வாழ்வில் வலம் வருகின்ற மனித மனுசிகளும், அவர்களின் வழக்குமொழியும், ஒரு புதிய அனுபவத்தை ஏற்படுத்துகிறது.
கட்டுமானப் பணியிலுள்ள அடித்தட்டு உழைப்பாளிகளும் அவர்தம் நிலையிலுள்ள முதலாளிகளும் ஊடறுக்கும் கதைக் களத்தின் மையப் பாத்திரமாக பூங்கொடி இயங்குகிறாள்.
மனிதர்கள் எல்லா நிலைகளிலும் ஒருவரை ஒருவர் மிகைக்க விரும்புகின்றனர் உள்ளார்ந்த இந்த மிகைவிருப்பமே வாழ்வின் போக்கில் நாம் எண்ணவியலாத உணர்வுநிலை மாற்றங்களை நிகழ்த்துகிறது. பரஸ்பரம் பாலியல் தேவைகள்வரை பூர்த்தி செய்து கொள்ளும் ஒத்த அன்பு கொண்ட பூங்கொடியும் குரங்காட்டி குமாரும்‌ தமது உலகில் நிகழும் வாழ்வும் வலியும் முரணுமான ஒரு நேர்கோட்டு கதைக்களத்தில், அய்யம்மாள் மைதானத்தின் மத்தியக் கோடுபோல நின்று தனது இருப்பை நிலைநிறுத்தும் போது பூங்கொடியும், குரங்காட்டி குமாரும் அங்குமிங்குமாக நின்றாடும் தருணம் அமைகிறது.

எதார்த்த வாழ்வென்பது நம் புனிதங்களை உடைத்துப் போடுகிறதாய் இருக்கிறது. கட்டுமான தொழிலாளியான பெண்னொருத்தி வேலையிடத்தில் மூத்திரம் பொய்கிறாள். அது சின்ன அறை என்பதால் பாத்ரூம் என்று கருதி மூத்திரம் பெய்ததாக அவள் அய்யம்மாவிடம் கூறும் போது 'மூதேவி அதுதான் பூஜையறை'யென அய்யம்மாள் சொல்லும் பதில் காற்றில் கடந்து போகிறது.புனிதங்களின் முந்தைய இருப்புகள்மீது என்னவெல்லாமோ நிகழ்ந்திருப்பதை கதை உலகம் போகிற போக்கில் வீசுகிறது.நம்மிடமிருக்கிற தூய்மைவாதம்,பெருமைகள்,தனித்தஅடையாளமென கட்டி புணரமைக்கப்பட்டுள்ள எல்லாவற்றின் ஆதியும் இவ்வாறான கதைகளைக் கொண்டதுதான் என்கிற சிந்தனைக்கு நம்மை கடத்துமிடமாக புரிந்து கொள்ளலாம்.இன்றைய எல்லா புனிதங்கள்மீதும் உழைப்பவனின் இரத்தமும் சதையும் வியர்வையும் மட்டுமல்லாது அவர்களின் கழிவுகளும் கலந்திருக்கின்றன என்பதான இந்த சித்திரம் இலக்கியத்தின் புதிய பதிவாக விரிந்திருக்கிறது.எளிய மனிதர்களுக்கு வாழ்வின் நிமித்தமான காரியங்களின் மீது எந்த வரையரையுமில்லை.அவர்கள் அவர்களின் இயல்பிலேயே வாழ்கிறார்கள். நாம்தான் அந்த நிகழ்வுகளின் மீது அதிர்ச்சி கொள்கிறோம்.நல்லது என்றும் கெட்டது என்றும் தனித்த வார்த்தைகள் இல்லாத மனிதர்கள் தங்களது சேகரங்களில் உள்ள வார்த்தைகளை முன் தீர்மானங்களின்றி வீசிக்கொள்கின்றனர்.மொழி தெறிப்புகளாகி பரவுகின்றன. பெண்ணாக இருக்கும் அய்யம்மாளிடம் ஆணாதிக்க சிந்தனை கதையின் போக்கிலேயே மலருகிறது.அது ஏற்கனவே சமூகம் கட்டிவைத்திருக்கும் படிநிலைகளினால் ஏற்படும் கௌரவத்தின் கூறுகளிலிருந்து தோன்றி வளரும் பண்பாடுகளில் உள்ளவையாக இருக்கிறது.அவைகளால் துரத்தப்படும் அய்யம்மாள் மெல்ல மெல்ல தானே துரத்துபவளாகவும் மாறுகிறாள்.
பூங்கொடியும் குரங்காட்டிக் குமாரும்  செடிகொடி மறைவில் அதீத அன்பின் நம்பிக்கையின் நிமித்தமாக  சங்கோஜமின்றி புணரமுடிகிறது, நம்பிக்கையும் அன்பும் தகரும்போது  அவ்வாறு புணர்ந்தவனை தெரியாது என்று சொல்லுவதில் தனது கௌரவத்தை மீட்டெடுக்க பூங்கொடிக்கு இயலுகிறது. குமாரின் கருவைச் சுமக்கும் அவள் வாழ்கிறாள் மற்றொரு பக்கம் அவனும் வாழ்கிறான் காலமும் வாழ்கிறது. திட்டங்கள் தந்திரங்களின்றி ஒருவரை ஒருவர் ஆளுகிறார்கள்,வெல்கிறார்கள்,வெள்ளந்தித்தனமாக ஒன்றை ஒன்று ஒழித்துக்கட்டவும் முயலுகிறது.இந்த வினோதமான முரண்களோடு இயங்கும் எளிய மனிதர்களின் உலகில்தான் எண்ணிலடங்காத மாயஜாலம் நிகழ்கிறது. காமுத்துரை இந்த மனிதர்களை அவதானித்து நம்மிடம் கொண்டு சேர்பதற்காக அதில் மேலோட்டமாக இல்லாமல் இரண்டற கலந்திருக்கிறார் என்பதை இந்த புதினம் நமக்கு காட்சிப்படுத்துகிறது.

ஒரு வீடு கட்டுபவனுக்கு அது வாழ்வதற்கான கனவுகள் நிறைந்த வாழ்விடம் என்றால் அதைக் கட்டி எழுப்பும் உழைப்பாளிகளின் உலகம் அந்த வீட்டின் மீது புனிதங்களாலும் அபுனிதங்களாலும் நிறைகிறது. உழைப்புக்கு கூலியும் அங்கு உழைப்பின் நிமித்தமான ஒரு பெரும் வாழ்வும் அவர்களுக்கு வசமாகிறது. பிறகு அவர்களுக்கும் அந்த கட்டிடத்துக்கும் தொடர்பற்றுப் போய்விடுகிறது.இந்த தொடர்பற்றுப் போகுதல் என்பது இந்தக் கதை மனிதர்களுக்குள்ளும் நிகழும் போது நாம் வருந்துகிறோம்.மெல்லிய உணர்வுகளை,உழைப்பை வலியை காதலை ஆக்ரோசத்தை,ஒரு ஆணைக் தக்கவைப்பதில் பெண் என்னும் அடையாளத்தின் வழி நிகழும் சச்சரவுகளை சித்திரமாக்கும் காமுத்துரையின் இந்த நாவல் புனிதங்களும் அபுனிதங்களும் ஊடறுக்கும் உலகம். நாம் அன்றாடம் கடந்துபோனாலும் நாம் கவனிக்காத கதைமாந்தர்கள் வாழும் உலகத்தினுள் நம் இருப்பை வசமாக்கும் நாவல் கலவை, நமது தரிசனங்களில் பார்வைப் புலனுக்கு அகப்படாத வீரியமிக்க விளிம்பின் குரல் .

   நான் எப்போதும் கொஞ்சம் அதிசயமாகப் பார்க்கும் எளிய மனிதர். தனது நெடிய அனுபவங்களின் வழி வாழ்வையும் எழுத்தையும் ஒன்றாகக் கொண்டிருக்கும் தோழர் காமுத்துரையின் எழுத்து இன்னும் நீண்டதூரப் பயணத்துக்காக காத்திருக்கிறது. சலிக்காத மானுடப்பற்றாளர் இதையெல்லாம் சாத்தியப்படுத்துவார் என்றே நம்புகிறேன்.


           அன்புடன்
     எம்.மீரான் மைதீன்
        நாகர்கோவில்
        30/11/2023

Tuesday 2 January 2024

"மனிதன் ரகசியங்களில் உடைபடுகிறவன்" மீரான் மைதீன்.

கதைகளுக்கு தனித்துவமான முகமிருக்கிறது.அபூர்வ பச்சிலையின் சாறு பூசிக்கொண்ட ஒரு மூதாதையின் முகம் போல வைரவன் லெ.ரா.வின் கதைகள் இருக்கின்றன.

              நண்பர் ஷாகுல் ஹமீதின் முயற்சியில் இரண்டு நூற்கள் கிடைக்கப்பெற்று நாட்களாகிவிட்டாலும் பட்டர்-பி பிறகதைகள் என்கிற சிறுகதை நூலும் ராம மந்திரம் என்கிற மற்றொரு சிறுகதை தொகுப்பு நூலும்  எப்போதும் பார்வையில் படும்படியாகவே இருந்தது.அவ்வப்போது வாசிப்பதும் அசைபோடுவதுமாக இருந்த சூழலில் இன்று 'நான்,நாய்,பூனை' என்கிற சிறுகதையை வாசித்து முடித்த தருணம் கொஞ்சம் மிரட்சியாகவே இருந்த உண்மையை மறுக்க இயலாது.நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியைச் சார்ந்தவர் வைரவன். வாசிக்க வாசிக்க நம்மை மௌனப்படுத்துகிறது.
நிலம், பெரும்வாழ்வு, ஆதிஅந்தம், மாயமென பழையாற்றின் வெள்ளப்பெருக்குப் போல நாள்பட்ட எல்லாவற்றையும் அடித்துப் பொறுக்கி மறிகடந்து ஓடும் ஓட்டத்தில் நம்மையும் இழுத்துப் போடுகிறது.ரொம்பவும் ஆழமானதுதான்.ஆழமென்றால் பள்ளிகொண்டவனின் தொப்புளில் நான்முகன் தோன்றிய தாமரைத்தண்டின் வேரினைக் காண விழைவதுபோல.கதைகளின் முடிப்பில் வாசகனை அந்த ஆழத்தில் தள்ளிவிட்டு அனாயசமாகக் கடந்துபோகும் ஒரு மாய சுழற்சி வசப்பட்ட எழுத்து.

         குமரி மாவட்டம் ஒரு பன்முகப் பண்பாட்டு பிரதேசமாகும்.ஒரே மாவட்டத்திலேயே பல விநோத எல்கைகளும் மொழிவழக்கும் உணவு உடை என எண்ணிலடங்காத முறைகளும் பல்கிப் பெருகிக் கிடப்பதை நுட்பமாக அவதானிக்க இயலும்.ஒரே சாதி ஒரே மதத்தினருக்குமிடையே கூட இந்த மாற்றங்கள் வேறு வேறு அலங்காரங்களைக் கொண்டிருப்பதைக் காணலாம்.வைரவனின் எழுத்து வகையை முந்தைய தடத்திலிருந்து பார்பதானால் என் புரிதலில் இது நாஞ்சில் நாடனின் பிரதேசவெளியும் பின்னர் அதில் மற்றொரு தடமாக வந்த தெரிசை சிவாவின் பிரதேச வெளியும் கடந்து முன்றாவதாக வைரவன் மற்றுமொரு அழகிய தடத்தை உருவாக்கியிருப்பதாகக் கொள்ளலாம்.பணி நிமித்தமான பெங்களுர் வாசமும் அடிப்படை இருப்பான  நாகர்கோவிலின் மணமும் முயங்குகிறது.'ராம மந்திரம்' தொகுப்பில் ராம மந்திரம் சிறுகதையும் அடுத்து வரும் பொந்து சிறுகதையும் அவ்வளவு நேர்த்தி.ஏகாந்த நிலையில் நட்பு கொள்ளும் மனிதர்களில் இருவர் வாழ்கிறார்கள்.அவர்களுக்குள் நிறைய பொருத்தப்பாடு.ஒருவரிடம் உள்ளதுபோலவே பிரிதொருவரிடமும் தாடகையும் தாடகமலை பற்றிய கதையும் கூட இருக்கிறது.ஒரு வாழ்வை  மந்திரத்தில் முழுங்கி ஆனந்தமாய் நிறைக்கிறார்கள்.இதற்கு சற்றும் குறைவில்லாமல் மேரி தனது பொந்தில்(பெண் குறியில்)எல்லாவனையும் எல்லாவற்றையும் முழுங்குகிறாள். அடுத்தடுத்து வரும் இந்த கதைகளின் உலகில் ஒரு பாலம் கிடக்கிறது. பழையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் போது எல்லா எழவுகளையும் அடித்துப்பிடித்துக் கொண்டு போனாலும் பாலம் ஒரு போதும் அசராது.அது அத்தனை உறுதியானது. வைரவன் கதைகளுக்கிடையே கட்டும் பாலமும் அப்படியாகத்தான் தோன்றுகிறது.

      ஓராண்டு இடைவெளியில் வந்துள்ள இரண்டு நூல்களிலுமாகச் சேர்த்து மொத்தம் இருபத்தியிரண்டு கதைகள் வாசிக்க கிடைக்கிறது.ஒரு சிற்பியைப் போல செதுக்கப்பட்டிருக்கிற இந்த கதைகளின் மொழி தனித்துவமானது. ஒன்றை சொல்ல இன்னொன்றை துவங்குகிறது.ஒரு சொல் நீண்ட தூரங்களுக்கு இட்டுச் செல்கிறது. இந்தியாவின் நீண்ட கழிப்பறை என்கிற சொல்லின் நீளமும் அப்படித்தான். நிலத்தை இணைத்துக் கொண்டு எழுதுகிற எழுத்துகள் எப்போதும் வீரியமானவைதான்.நல்லது கெட்டது மணம் நாத்தம் என எல்லாவற்றையும் தன்மீது வாரிப் போட்டுக்கொள்கிற எழுத்து வசப்படுவது லேசான காரியமல்ல.வைரவன் அதை சுவீகரித்திருக்கிறார்.எல்லா கதைகளையும் சொல்லிக் கொண்டிருப்பது உசிதமானதல்ல என்பதனால் ராம மந்திரம் மற்றும் பட்டர்-பி என இரண்டு சிறுகதை நூல்கள் வாசிக்கவும் அதில் பயணிக்கவும் எக்கச்சக்கமான விசயங்களை வைத்திருக்கிற ஒரு குறிப்பை மட்டும் சொல்லியிருக்கிறேன்.
இதல்லாத ஒரு குறிப்பாக சொல்வதென்றால்,உண்மையில் மனிதன் தன்னை ரகசியமாக வைத்திருக்கவே விரும்புகிறான் ஆனால் அவன் அவனறியாது உள்ளார்ந்த விருப்பங்களிலிருந்து விடுபடத் தெரியாதவனாக தனது ரகசியங்களில் உடைபடுபவனாக இருக்கிறான்.'ராம மந்திரத்தின்' பாத்திரங்களான சிவதானு மற்றும் ராமைய்யாவும் ஒரு பக்கமாகவும் 'பொந்தில்' வரும் பாத்திரங்களான மேரியும் ராமசாமியும் மற்றொரு பக்கமாவும் நின்றாடும் தளத்தில், பாத்திரங்களின் பெயர்களாக வலம் வருவது பெயர்கள் மட்டுமல்ல அது ஒரு குறியீடு எனக்கொண்டால் மனிதன் மட்டுமல்ல எழுதுகிறவனும் ரகசியத்தில் உடைபடுகிறவன் என்பது போத்தியமாகிறது.இவ்வாறு உடைபடுதல் இருபத்தியிரண்டு கதைகளிலும் நிகழ்கிறது. 'நான்,நாய்,பூனை'கதையிலும் கூட அவன் அப்படித்தான் உடைகிறான்.இந்த எல்லாக்  கதைவெளியிலும் நிகழுகின்ற உடைதல்  மேலோட்டமான வாசிப்பில் புலப்படுமா என்று தெரியவில்லை. இங்கு அரசியல் இல்லாமல் என்னதான் இருக்கிறது.நல்ல அனுபவத்தை ஏற்படுத்துகின்ற கதைகளின் எழுத்துக்காக வைரவன் லெ.ரா.வுக்கு அன்பும் வாழ்த்தும்.

மீரான் மைதீன்
நாகர்கோவில்
03/01/24


பட்டர்-பி
ராம மந்திரம்

நூல்கள் வாசிக்க
யாவரும் பப்ளிஷர்ஸ்

Monday 1 January 2024

அஜ்னபி'யின் பார்வையிலே- பிலால் அலியார்



அஜ்னபி, 355 பக்கங்கள் -
மீரான் மைதீன், காலச்சுவடு பதிப்பகம்

வளைகுடா வாழ்வு குறித்தும், அதன் வழியாக சம்பாதிக்கும் மனிதர்களை குறித்துமான இஸ்லாமியர், இஸ்லாமியரல்லாத சமூகங்களின் பொதுப்பார்வையையும், சமூகத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கும் போலி பிம்பத்தையும் உடைத்துச் சுக்குநூறாக்குகிறது, சவூதி அரேபிய நிலப்பரப்பில் சிக்கிக் கொண்ட திருமணமாகாத ஒரு இஸ்லாமிய இளைஞனின் வாழ்க்கையை மையமாக வைத்து அதன் பின்னனியில்  எழுதப்பட்ட அஜ்னபி என்ற இந்த நாவல்…

அஜ்னபி என்ற அரபி வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் அந்நியன். வளைகுடாவிற்கு பொருளாதார தேடலுக்காக செல்லும் எந்த நாட்டினரும் அஜ்னபி தான்.. கேட்பதற்கு நன்றாக தெரியும் இந்த வார்த்தைக்கு பின்னால் மறைந்து கிடக்கும், மற்றவர்களால் உணர முடியாத அவலங்களும்,அவமானங்களும், சுயமரியாதையை இழந்து குடும்பத்திற்காக படும் துயரங்களையும் தன் எழுத்தில் வடித்திருக்கிறார் மீரான் மைதீன்.

கதை நிகழும் காலம் 1990களுக்கும் 2000த்திற்கும் இடைப்பட்ட காலமாக இருப்பதை தெளிவாக உணர முடிகிறது.ஏனெனில் குடும்பத்தினரின் தொடர்புக்காக கடிதங்களை எதிர்பார்ப்பதையும், தொலைபேசியில் பேசுவதற்கு ஊரில் உள்ள வசதியானவர்களின் வீட்டுக்கு சொல்லி குடும்பத்தினரை வரவழைத்து பேசுவதும், திருமணம் நிச்சயிக்கப்பட பெண்ணின் புகைப்படத்தை பார்த்து கொண்டே காலத்தை தள்ளுவதும், சவூதி சென்றுவிட்டாலே சம்பாதித்து விடலாம் என்ற தவறான கற்பிதமும் அந்த காலகட்டத்தை நமக்கு தெளிவாகக் காட்டுகிறது.இந்த சூழல்கள் தற்போது ஓரளவிற்கு களையப்பட்டிருப்பது ஒரு ஆசுவாசத்தை தருகிறது.

பட்டப்படிப்பை முடித்து விட்டு 2000 முதல் 2007 வரை சென்னையில் பணியில் இருந்து கொண்டே வளைகுடா வாய்ப்புக்காக Employment NRI Times என்று மும்பையிலிருந்து வெளியாகும் நாளிதழை வைத்து கொண்டு விண்ணப்ப படிவங்களை அனுப்பி கொண்டிருந்தேன்.. அப்போது வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்காக கீழ்ப்பாக்கத்தில் நடத்த ஒரு நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டேன். ஆப்ரிக்க நாட்டை சார்ந்த ஒருவர் நேர்முகத் தேர்வு நடத்திவிட்டு என்னை அலுவலக கணிணி உதவியாளராக நியமிப்பதாகவும், ஏனைய விபரங்களை ஏஜென்சியிடம் கேட்டு கொள்ளவும் என்றார். ஏஜென்சியினர் 30,000 பணமும் என்னுடைய ஒரிஜினல் பட்ட படிப்பு சான்றிதழ்களையும் (அட்டஸ்டேசன் செய்ய வேண்டுமென) கேட்டனர். சான்றிதழ் அட்டஸ்டேசன் என்றவுடன் முழுமையாக நம்பி விட்டோம். நானும் அண்ணன் கொடுத்த பணத்தை கட்டிவிட்டு அனைத்து சான்றிதழ்களையும், பாஸ்போர்ர்டையும் ஒப்படைத்து விட்டு வெளிநாட்டு கனவில் மிதந்து கொண்டிருந்தேன், ஆனாலும் சென்னையில் அதே வேலையை தொடர்ந்து கொண்டிருந்தேன்.. விசா வந்துவிட்டதா என ஒருவாரம் கழித்து ஏஜெண்ட அலுவலகம் இருந்த திருவில்லிக்கேணி சென்ற போது, அந்த அலுவலகத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர், ஒரே களேபரம்.. ஏஜென்ட் ஓடிவிட்டதாகவும் அலுவலகத்தில் யாருமில்லை என்ற தகவல் வந்தது.. அப்போது அங்கிருந்த ஒரு அண்ணனிடம் என்னண்ணே பண்றது என்ற போது அவர் என்னை பார்த்து அழுது விட்டார், கடைசியா பொண்டாட்டியோட தாலிய வித்துட்டு வந்து பணத்த கட்டுனேன், என்ன பண்றதுண்ணே தெரியல என்ற போது அதிர்ச்சியானேன்.. 30,000 பண இழப்பு என்பதை என்னால் பெரிய இழப்பாக கருதவில்லை, ஆனால் பாஸ்போர்ட்டும், சான்றிதழ்களும் மொத்தமாக போனதில் ஒரு கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டது.. அங்கிருந்த சிலர் எழும்பூர் காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு சென்று புகாரளிக்க செல்வோம் என கிளம்பினர், நாங்கள் அங்கே செல்லும் முன்னே ஊடகங்களும், செய்தியாளர்களும் குழுமி விட்டனர்.. அவர்களுடன் பணத்தை இழந்தவர்கள் பேட்டி கொடுத்தனர்.. ராஜ்டிவியில் ஒளிபரப்பான செய்தியில் கூட்டத்தோடு கூட்டமாக இருந்த என்னை பார்த்த அண்ணன், உடனடியாக இடத்தை விட்டு நகர சொல்லி ஊருக்கு வரச் சொன்னார்.. புகார் மனுவை அளித்து விட்டு ஊருக்கு வந்தேன், அடுத்த பத்து நாளில் கொரியர் மூலமாக அனைத்து சான்றிதழ்களும் பாஸ்போர்ட்டும் வீட்டுக்கு வந்தது.. பணத்தை மட்டும் அடித்து விட்டு சான்றிதழ்களை அனுப்பியதால் பத்து நாட்களில் என் மனதை வென்றான் அந்த ஓடிப்போன ஏஜெண்ட். அன்று ஒரு முடிவு எடுத்தேன், வெளிநாட்டுக்கு கம்பெனியே நம்மை கூப்பிட வேண்டும் நாமாக ஏஜெண்டிடம் செல்ல கூடாதென.. அதன்படியே அடுத்த இரண்டாண்டுகளில் துபாய்க்கு பணி திறனின் அடிப்படையில் வந்து சேர்ந்தேன்.. வந்தநாள் முதல் இன்றுவரை வளைகுடாவில் வாழும் தமிழர்களையும், தமிழ் இஸ்லாமியர்களின் சூழலையும் பார்க்கும் எனக்கு இந்த நாவல் ஒரு ஆவணமாக இருக்கிறது..

வளைகுடா பணிக்கு படித்துவிட்டு சரியான நடைமுறையில் வருபவர்களை விட, எப்படியாவது வளைகுடா (சவூதி, அமீரகம், குவைத், ஓமன், பக்ரைன், கத்தார்) சென்றால் போதும் என்ற எண்ணத்தில் யார் பேச்சையாவது கேட்டு, இல்லாத பணத்தை எப்படியாவது ஏற்பாடு செய்து, இங்கு வந்து அல்லல்படுபவர்கள் அதிகம். ஊருக்கும் சொல்ல முடியாமல், செல்ல முடியாமல், இங்கும் அதிகமாக சம்பாதிக்க வழியில்லாமல் அவர்கள் படும் துயரங்களை நாம் எழுத ஆரம்பித்தால் பக்கங்கள் போதாது..

அம்மாதிரியாக சவூதியில் வந்திறங்கிய ஃபைசல் என்ற கதாபாத்திரத்தை மையமாக கொண்டு, குமரி இக்பால், பிரபு, மிஷிரி கிழவன், நாசர், மம்மரிபா, மம்மக்கண்ணு, மம்மலி, கோபகுமார், பணியடிமை, டெய்லர் அஹமது, செளதி அரபுகள் துவைஜி, அப்துல்லா,
அரூஷா, பிலிப்பைனி, பாகிஸ்தானி ஷமி, பாலஸ்தீனி, ஜாஸ்மின் என்ற உலகின் பலதரப்பட்ட நிரப்பரப்புகளில் வாழ்ந்தவர்களின் பின்னனியில் அஜ்னபியை ஒரு பத்தாண்டு சித்திரமாக நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் மைதீன்.

சவூதியின் நிலப்பரப்பு என்பது மிக நீண்டதாக இருந்தாலும் ரியாத்தில் இருந்து எந்தவித பேப்பரும், பாஸ்போர்ட்டும் இல்லாமல் தப்பிக்கும் ஃபைசலை ஜித்தா கொண்டு வந்து அவனை தாயகம் திரும்ப வைக்கும் நடவடிக்கைகளும், அந்த செயல்பாடுகளினோடு ஜித்தாவில் நிகழ்வும் அஜ்னபிகளின் வாழ்வியல் சம்பவங்களும் ஒரு காட்சிப்பிழையாக நம் கண்முன் நிற்கிறது. சவூதி அரபிகளின் சட்டங்களும், சட்டத்தை நிலைநாட்ட அவர்கள்  அரபி, ஷியா, அஜ்னபிகளுக்கிடையே காட்டும் பாகுபாடுகளை நாம் உணரும் போது, வாழ்வதற்கான பொருளாதார தேடலின் கடுமையான பயணம், பாலைவன சூட்டை விட சூடு மிகுந்ததாக உணர முடிகிறது.

துவைஜி என்ற அரபியின் கொடூர முகம் சாத்தானின் முகமாக நம் கண்களில் தெரியும் வேளையில், மம்மலியின் முதலாளி அரபி அப்துல்லாவும், அரபி அபுஹூசுனும் இஸ்லாத்திற்கான அடையாளமான மனிதம் இன்னும் இருக்கிறது என்றும் நம்மை ஆசுவாசப்படுத்துகின்றனர்.

வார இறுதிநாட்களில் ஏதேனும் ஒரு தங்குமிடத்தில் கூடி குடித்து, நன்றாக சமைத்து சாப்பிட்டு, சீட்டு விளையாடி, நீலப்படங்களை கண்டு விட்டு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை ஜும்மாவிற்காக அடித்து பிடித்து ஓடுவதையே தனி நாவலாக எழுதலாம், அந்தளவிற்கு வியாழன் இரவு நண்பர்களுடனான தனிக் கதைகளும், கிண்டல்களும், ஊரிலிருந்து வந்திருக்கும் கடிதங்களின் செய்திகளுமே வளைகுடா வாழ்வை நகர்த்தி செல்ல ஒவ்வொருவருக்கைமான மனதை அளிக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது, அதை அஜ்னபியில் வெகு நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் நாவலாசிரியர், தன் எழுத்தாளுமையால்.

நாவலில் வரும் கருத்தான் காதர் என்ற கதாபாத்திரத்தின் முன் அறிமுகத்தையும், நாவலின் இறுதிப்பகுதியில் காதர் குறித்து வரும் செய்தியையும் படிக்கையில் ஒரு மனிதனின் வாழ்வை முடிவு செய்வது சம்பவங்களும், சூழலுமே.. எந்த மனிதனும் சமூகத்தின் பார்வையில் மோசமானவனகவும், நல்லவனாகவும் எப்போதுமே இருக்க முடியாது என்பதை காதரின் வாழ்வின் மூலம் நமக்கு கடத்தப்படுகிறது. கருத்தான் காதர் என்ற கதாபாத்திரம் இந்த நாவலில் சூறாவளியாய் வந்து தென்றலாய் கடந்து செல்லும் …

இஸ்லாம் குறித்த வாசகனின் பார்வையை இன்னும் கூர்மையாக்குகிறார் நாவலாசிரியர், தொழுகை, வணக்கம் போன்றவற்றின் செயல்பாடுகள் கணக்குகளுக்காகவோ, சமுதாயத்திற்காகவோ அல்ல, அவை இறையை நோக்கிய நம் நீண்டகால பயணம் என்பதும், நம் புற அடையாளங்களால் இறையை நோக்குவதை விட மனதை இறைவனை நோக்கி செலுத்துவதற்குண்டான உறுதியை பெறுவதே ஆகச்சிறந்த வணக்கம் என உணர்த்தப்படுவதும், அதை பிரபு என்ற இஸ்லாமியரல்லாத ஒரு இளைஞன் நானும் தொழலாமா? என்ற கேள்வியின் மூலம் மிஷிரி கிழவனின் வழியாக நம்மை வந்தடைவதுடன், அடிப்படைவாதிகளை பதட்டமடையவும் செய்யும்.

வாலிபனாக செளதி வந்து தொழிலாளியாக தன் வாழ்வை ஆரம்பித்து திருமணம், குழந்தைகள், அவர்களின் கல்வி என காலம் கடந்து பெற்ற மகனும் கல்வியை உதாசீனப்படுத்தி, எந்த வயதில் தந்தை செளதிக்கு தொழிலாளியாக வந்தாரோ அதே வயதில் மீண்டும் செளதிக்கு தொழிலாளியாக மகன் வரும் கொடுமையும், அந்த தந்தை ஊரில் இறந்த செய்தி வந்த பின்பு தந்தையின் ஜனாசாவை காண செல்ல முடியாமல் மனம் பேதலித்து திரியும் இடமும், தந்தையை இழந்த மகனிடம் மிஷிரி கிழவன் வந்து, நாசர்… அழாதே… உனது தந்தை எனது நீண்ட நாள் நண்பன், நீ பிறந்த செய்தியை அவன் என்னிடம்தான் இனிப்பு தந்து முதலில் சொன்னான், நீ கலங்காதே உன் தந்தையின் ஞாபகம் என் நெஞ்சம் முழுவதும் நிறைந்து கிடக்கிறது என, தந்தையின் இறப்பிற்கு செல்ல முடியாத மகனிடம் ஆறுதல் சொல்லும் இடம் நம்மை உருக்குலைத்து விடும். இன்றும் வளைகுடாவில் தன் மகன், மருமகன்களுக்கான விசாவுக்காக பாடுபடுவர்களையும், அவர்களின் சூழலையும் கேட்பது மனதை வருத்தமடைய செய்யும். ஆயினும் வாழ்தல் வேண்டி இதையெல்லாம் அவர்கள் பொறுத்துக் கொண்டே வாழ வேண்டியிருக்கிறது.

ஒரு படைப்பு சமூக அக்கறையுடன், சமூகம் குறித்த மதிப்பீடுகளையும், பிம்பங்களையும் மறு ஆய்வுக்கு உட்படுத்தி, அதன் முன்னேற்றத்திற்கான ஆரோக்கியமான விவாதங்களை உருவாக்க வேண்டும். அந்த வகையில் அஜ்னபி தன் இலக்கை துல்லியமாக தாக்கியிருக்கிறது. உனக்கென்னப்பா வெளிநாட்டு சம்பாத்தியம் என்ற ஊராரின் பார்வையை இந்த புதினம் கேலி பேசுகிறது. அஜ்னபி (அந்நியன்)யாக நடத்துவதை விட மோசமான அடிமையாக நடத்துபவர்களும், இன்னும் தங்களின் கல்வியையும், உலகளாவிய போட்டிகளுக்கேற்ப திறமையை வளர்த்து கொள்ளாத இளைய சமூகமாக இருந்து கொண்டு, கடுங்கோட்பாட்டுவாத பார்வையில் அரசியல்/சமூக/பொருளாதார முன்னேற்றத்தை எவ்வாறு நாம் பெற முடியும் என்ற கேள்விக்கு யாராவது விடையளிப்பார்கள் என காத்திருக்கிறேன்.

பிலால் அலியார்
24/12/21
மனாமா, பஹ்ரைன்

'இசைக் கடவாய்'- மொய்தீன்



குவிக்கப் பட்டிருந்த
நேசத்தின் வழியெங்கும்
எறும்புகளின் தடத்தில்
பெருக்கெடுத்தோடுகிறது
வெள்ளப் பிரளயம் 

பறந்து போன காகம்
செய்தி சொல்ல மறந்து 
செத்ததை தின்னும் 
அலாதி இன்பத்தில் 
அலைபாய்ந்து கொண்டே 
பறந்து திரிகிறது.

புறாக்களோ நிலம்பாவின. 

அருளின் அருள்பெற்ற 
சூஃபியின் கானத்தால் நிலமெங்கும்
சுடர் வழிந்து பெருகுகிறது,
புழுதி மண்டலத்தை துவம்சித்துக்கொண்டே. 

திரித்து முடிக்கப்பட்ட கயிறுகள்
காற்றில் கலைந்தோடுகின்றன
கண்ணுக்குத் தெரியாத மணல்துகளாய். 

மண்ணும் கடலும் வானும் ஒட்டிக்கிடக்கும்
மெல்லிய இருளில் 
எனை மறந்து.
நாவிலூறும் உன் நேசச்சுரப்பில் 
நடக்கின்றேன். 

நடக்க நடக்க
நடை வசப்படுகிறது. 

ஏழு அடுக்குகளில் 
ஒவ்வொன்றாக மறிகடந்து பயணித்து
ஆதியோடான கலப்பில் 
கலந்து கரைய
உன் புல்லாங்குழலிசை
கடவாய்.

01-01-24

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்                    இன்னொரு சாயல்                            எம்.மீரான் மைதீன்          ...