Tuesday 10 October 2023

மாய எண்ணங்களுக்கு உயிர் தரும் எழுத்து.

மாய எண்ணங்களுக்கு உயிர் தரும் எழுத்து. 
ஒருவனை தனியாக ஒரு அறையில் அடைத்துவிட்டால் அல்லது பேச்சறவமற்று தனிமைப் பட்டுப்போகும்போது அவன் அகமனதோடு அதிகம் பேசிக்கொண்டிருப்பான். அந்த பேச்சு கற்பனையாக தொடங்கி கண்முன் காட்சிகளாக விரியும். அதையே தீவிரமாக அவனது மனம் சிந்திக்கத் தொடங்கும்போது அந்த சிந்தனைகளில் உள்ள நல்லது கெட்டதுகளில் தன்னையே ஒரு பாத்திரமாக உருவகித்துக்கொள்வான். சில நேரங்களில் அதில் தெளிவடையும் மனிதனும் உண்டு, மீண்டும் மீண்டும் அதிகமாக தன்னை குழப்பிக்கொண்டு அதிலேயே உழல்பவர்களும் உண்டு. இந்த விசித்திரமான நோய் மனிதனாக பிறந்த எல்லோருக்கும் உண்டு என்பது தான் மறுக்க முடியாத உண்மை. 

அந்த வகையில் எழுத்தாளர் மீரான் மைதீன் அண்ணனுக்கும் இது சற்றுஅதிகமாகவே இருப்பதாக எண்ணுகிறேன். ஏனென்றல் இப்படி இல்லாத ஒன்று குறித்து தன்மனதோடு கலந்து கற்பனையினால் அதற்குள் அவிழ்க்க முடியாத பல சூழ்ச்சிகளிட்டு பின்பு ஞானம் பிறந்தவனை ஒரு தெளிந்த குளத்தை காணுவதுமாதிரி அந்த கதாபாத்திரத்தை வாசகனுக்கு கடத்துவதில் வல்லவர். மேலும் அது வெறும் நல்ல மாதிரியான கற்பனையாகவுமிராது. அதற்குள் பேய், பிசாசு, பில்லி சூனியம் ,மாந்ரீகம், மூட நம்பிக்கைகள் என பலதும் இருக்கும்படியாக பார்த்து வார்த்தெடுப்பார். 

கொரோனோ காலத்தில் எல்லோரும் வீட்டோடு முடங்கின காலத்தில் அவரோடு ஒரு மெய்நிகர் சந்திப்பில் கலந்து கொண்டபோது இந்த கேள்வியை கேட்டேன். 

 "உங்கள் கதைகளில் இப்படி தனிமனித மனத்தோடு கூடிய உரையாடலும், அது மேலும் மூடநம்பிக்கையின் பொருட்டு நகர்வதாகவே கதை,நாவல்களில் தென்படுகிறதே?  இதற்கு பிரத்யேக காரணம் எதுவும் உண்டா?"

அதற்கு அன்று, "அப்படி தனிப்பட்ட எந்த காரணமும் இல்லை., சிறுவயதில் கேட்ட வளர்ந்த கதைகளின் வழி எனக்குள் அது பரவிவிட்டது என்றும் மேலும் அந்த உலகில் இல்லாத ஒன்றிற்கு உருவகம் கொடுத்து உயிர் கொடுத்து நடமாட விடுவது ஒருவித பிரயாசை அதை வாயால் சொல்லிவிட முடியாது ராஜா நீங்க தனியாக இருக்கும்போது அப்படி சிந்தித்து பாருங்கள் உங்களுக்கே புலப்படும்" என்றார். 

ஆனாலும் எனக்கு அன்று அந்த பதில் அவ்வளவு திருப்தியில்லை மீண்டும் ஒருமுறை நேரில் சந்தித்த போதும் அதையே தான் கேட்டேன். அப்பொழுதும் சிரித்துக்கொண்டே 
"ராஜா பேய் பிசாசு என்றெல்லாம் ஒன்று இல்லை தான் ஆனால் அதுசார்ந்த கதைகளை கேட்டு தானே நாம் வளர்ந்திருக்கிறோம். மேலும் மனிதனுடைய கற்பனை திறன் தான் இந்த உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்தது ஆக, அதை எதனாலும் வெல்லவே முடியாது எனும்போது அந்த மாதிரியான மனிதர்களையும் அவர்களின் வெள்ளந்தி தனத்தையும் பரவவிடுவதில் தவறில்லையே" என்றதாக ஞாபகம் பின் வேறு பேச்சுக்குள் மூழ்கிவிட்டோம். 

அது உண்மை தான் ஒருவன் தனிமைப்பட்டு போகும்போது தான் இவ்வாறான எண்ணங்கள் தலைதூக்கும். 

கடந்த நான்கைந்து நாட்களாக வைரஸ் காய்ச்சல் படாதபாடு படுத்திவிட்டது. தனிமை படும்போது உண்டாகும் எதிர்மறையான எண்ணங்களைவிட உடல் நலிவுற்று கிடக்கும் போது உண்டாகும் எண்ணங்கள் மிக கொடூரமானதாக இருக்கும். அப்படியான எண்ணங்களில் தவிர்க்க முடியாதது நாம் இல்லாமல் போய்விட்டால் என்ன ஆகும்? எது நடக்கும் எது நடக்காது?  நமக்கு பிறகு நம் சார்ந்தவர்களை யார் பார்த்துக்கொள்வார்கள் போன்ற காரணமுள்ள எண்ணங்களும் உண்டு. இப்படியான விதண்டாவாத எண்ணங்களோடு மல்லுக்கட்டிக்கொண்டு காய்ச்சல் அவஸ்தையோடு புரலள்வதைவிட ஐந்தாறு மாதங்களாக தொடாத வாசிப்பை தொடங்கலாமென அலமாரியிலிருந்த புத்தக அடுக்கிலிருந்து எடுத்தது தான் 'சித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம்' சிறுகதை தொகுப்பு. 

அந்த தொகுப்பிலுள்ள பதினோரு கதைகளில் பலகதைகள் மேற்சொன்ன எதிர்மறையான எண்ணங்களால் என்னென்ன நிகழ்கிறதென்று விளக்குபவைகளாகவே உள்ளது. எங்கோ ஒரு மூலையில் கேட்பாரற்று கிடக்கும் கயிறுக்குவியல்களுக்கு பின்னால் என்ன கதை இருந்துவிட போகிறது உங்களுக்கோ எனக்கோ? ஆனால் படைப்பவன் கண்ணில் பட்டால் அதற்கு பின்னால் ஆயிரமாயிர கதைகளை புனைய முடியும். அதிலும் அந்த கயிற்றுக்குவியலுக்கு பின் இறுகி உயிர்நீத்த கழுத்துகள் கூட அமானுஷ்யமாக வந்து உங்களோடு பேசும். 

வெளிநாட்டில் பணிநிமித்தமா சென்றிருப்பவன் தினமும் வீட்டிற்கு தொலைபேச டெலிபோன் பூத்திற்கு சென்றால் அங்கு தொங்கும் பல்வேறு நாட்டு கடிகாரங்கள் பல விநோத சித்திரங்களை உங்கள் கண்முன் நகைச்சுவையாக வரைந்துவிட்டு போகும். 

சாதாரணமாக வீட்டின் வாசலில் உள்ள ஒரு மாதுளை மரம். அதுவும் அவர் மனைவிக்கு யாரோ வாங்கி வந்த பழத்திலிருந்து விழுந்த வித்திலிருந்து முளைத்தது. அதனால் இத்தனை ஆண்டுகளுக்குபின் வீட்டின் உரிமையாளருக்கு தூக்கம் கெடுகிறது. தன் சாயங்கால சாயாக்குடி சகாக்களோடு கலந்தாலோசித்து காரணம் 'தென்றல்' தான் என கண்டுபிடிக்கிறார். தென்றலை தீர்த்துக்கட்ட வேண்டுமென்று திட்டம் தீட்டுகிறார் என்றால் உங்களால் சிரிக்காமலிருக்க முடியுமா?. சிரிப்போடும் அதே சமயம் ஒரு சீரியஸ் டிஸ்கஷனோடும் கதை செல்லும். 

இப்படியாக ஊசிகாந்தம் உயர்ந்த மலைப்பிளவின் வழி, மத்தது, குப்பையாண்டி பிள்ளையின் சுவர், உக்கிர ஒலி,கலர் வேலைப்பாடுகளுடன் கூடிய டிசைன் வாய்கள், ஒருபாடு கதைகள் போன்ற கதைகள் அதனதன் வடிவத்திலும், கருப்பொருளிலும் தனித்தன்மை வாய்ந்தவை. குப்பையாண்டி பிள்ளையின் சுவர் கதையும், கலர் வேலைப்பாடுகளுடன் கூடிய டிசைன் வாய்கள் கதையும் கற்பனை திறனின் உச்சம் என்றே சொல்லலாம். ஒரு சுவர் பேசினால் அது எத்தனை ஆண்டுகளின் கதையை தன்மேல் ஏற்றியிருக்கும் என்பதும்- மனிதர்கள் ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொரு வாயை பொறுத்திக்கொண்டு பேசுகிறார்கள் என்பதுவும் வேறு வேறு கோணங்கள். ஆனால் இருவரிடத்திருந்தும் வருவது சமகால வார்த்தைகள். மிக நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு நல்ல தொகுப்பை படித்த திருப்தியை இவ்வளவு அதிகமாக பதிவு செய்துவிட்டதாகவே நினைக்கிறேன். ஆகையால் சித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம்  புத்தகத்தை நீங்கள் வாங்கி படித்து உண்மையை தெரிந்துகொள்ளுங்கள். 

பின் குறிப்பு:- மாய எண்ணங்களை போலவே ஒளி,ஒலிகளை வாசகனுக்கு கடத்துவதிலும் எழுத்தாளர் மீரான் மைதீன் வல்லவர் அந்த எண்ணங்களுக்கு சற்றும் குறைவில்லாமல் இருக்கும் ஒளி, ஒலிகளின் அவருடைய தீராக்காதல். அவ்வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அவருடைய சேலம் வருகையின் போது அறையில் வைத்து இந்த படத்தை நான் எடுத்தேனென்றாலும் இந்த ஜன்னோலரம் எடுங்க ராஜா நல்ல ஒளியா இரிக்கு என்று அவர்தான் சொன்னார். புத்தக விபரம் முதல் கமெண்டில் தருகிறேன்.❤️ 

பேரன்புடன், 
   -சேலம் ராஜா 
        -10-10-23.

No comments:

Post a Comment

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்                    இன்னொரு சாயல்                            எம்.மீரான் மைதீன்          ...