Wednesday 28 June 2023

"யானை"சிறுகதை - மீரான் மைதீன் 1998


பள்ளிக்கிணத்துக்கு தெக்குப்பக்கம் அந்த வளைந்த தென்னையில் யானையை கட்டிப் போட்டிருந்தார்கள். ஆண் யானை . அதன் தந்தத்தின் முனை மழுக்கப்பட்டிருந்தது. வாலில் நிறைய ரோமங்கள் பிடுங்கப் பட்டிருந்தன.

நேத்திரவே பள்ளிக்கு யானை வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் பெரிய கூட்டம் காத்திருந்தது. பனிரெண்டு மணிவரை யானை வரவில்லை; காத்திருந்த கூட்டம் முனங்கிக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து போனது. சோன்பப்டி வியாபாரி ஒன்பது மணிக்கு மணியடித்துக்கொண்டே வந்தபோது பாதி பயலுவளும் பள்ளிக்கு முன்னால் சாடி வந்துட்டானுவோ. சோன்பப்டிகாரன் பெட்ரோமாஸ் லைட் வெளிச்சத்தில் மணியடித்தவாறு தெருவுக்குள் வந்தபோது பொம்பளையளு வெல்லாம் யானை போவதாக பரிகாசம் செய்து சிரித்தனர். பிறகு ஒவ்வொரு நிமிடமும் யானைக்கான காத்திருப்போடு நின்றார்கள்.

இரண்டு மகன்களையும் சேர்த்துப்பிடித்துக்கொண்டு நின்ற சேமொம்மதுசாயிப்பு பத்துமணி தாண்டியதும்..

“யானை வருமா வராதாடே” கேட்டபோது யானைக்கு ஏற்பாடு செய்திருந்த நூர்தீன் சொன்னார்.

அந்த பண்ணிக்குப் பொறந்தவன் … எட்டரைக்கெல்லாம் பள்ளியில் கொண்டு வந்து கெட்டிருவோம்னு சொன்னான்.. ”

“பயலுவ கெடக்க உடமாட்டேங்கானுவடே. யானையை காட்டு யானையை காட்டுன்னு சீவன் எடுக்கானுவோ..”

ஒன்றிரெண்டுபேர் சிரித்தார்கள். சிரிப்புக்கிடையே ஒருத்தன் மெதுவாக முனங்கினான்.

“ஒம்ம பொண்டாட்டிய காட்டி கொடுக்கவேண்டியதுதானே”

மேலும் சிரிப்பு சிதறியது.

பள்ளியில் சீரியல் செட்கள் மின்னி மினுங்கின. ஜங்சனில் ஒரு பாடு டியுப்லைட் கட்டியிருந்ததால் உண்டான வெளிச்சம் விழாவுக்கான பொலிவை கூட்டி இருந்தது. தெரு முகப்பில் ஆர்ச்சிப் போட்டு கொடி கட்டியிருந்தார்கள். நாளைக்கு சாயங்காலம் தான் பள்ளி கொடிக்கட்டு என்றாலும் விழாவுக்கான எல்லா பொலிவுகளும் இப்போதே தொடங்கி விட்டன. ஆனாலும் யானை இதுவரை வந்து சேராதது பலரையும் செறப்படுத்திக்கொண்டே இருந்தது. யாரோ ஒருத்தர் சொன்னார்.

“மணிசத்தம் கேக்கது மாதிரி இருக்குல்லா… ”

“போவுமோய் அப்புறம். ஓட்ட காதுவள் கொண்டுட்டு….”

யானையைப்பற்றியே பேச்சுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. ஒவ்வொருவரும் அவர்கள் அறிவில் நடந்த யானையைக் குறித்த சம்பவங்களை சொல்லிக் கொண்டே இருந்தனர். கூடுதலும் யானை கலஞ்ச கதைகளையே பேசினார்கள். கொட்டாவி விட்டுக்கொண்டே சிலர் “காலையில் பாக்கலாம்டே…” என அழும் பிள்ளைகளை இழுத்துக் கொண்டுபோனார்கள்.

திடீரென காதர் சொன்னான்.

“யானை விட்டயில் ஒரு விசேசம் இருக்கு தெரியுமா.”

எல்லோரும் காதரைப்பார்த்தார்கள்.

படிப்பு வராத பயலுவளெல்லாம்.. யானை விட்டய சமுட்டுனா படிப்பு வரும்…”

சிலர் பொசுக்கென சிரித்தார்கள்.

“சிரிக்கியரு…அனுபவத்துல உள்ள உண்மையாக்கும்…” மரத் தூணில் சாய்ந்து நின்று காதர் சொன்ன கம்பீரத்தில் புரசான் தீர்மானித்துக்கொண்டார். மூணாங்கிளாசில ரெண்டு தடவகுட்டிபோட்ட மொவன் எப்படியாவது நாளைக்கு யானை விட்டய சமுட்ட வச்சிரனும்.

காலை சுபுஹ் தொழுகைக்கு பள்ளிக்குப்போன மசூதுசாகிப் காம்பவுண்டுக்குள் கால்வைத்ததும் யானையைப்பார்த்துவிட்டார். இருட்டுக்குள் இருட்டாய் நின்ற யானையின் மணிசத்தம் தான் அவருக்கு யானையை அடையாளம் காட்டியது. மதரஸா திண்ணையிலிருந்த லப்பையிடம் சிரித்துக்கொண்டே கேட்டார்..

“எப்போ வந்தது…”

“மூணுமணி இருக்கும்… எனக்க ஒறக்கத்த நாசமாக்கி போட்டு… கிணிங் கிணிங்ன்னு ஒரே சத்தம்.. எழவு ராத்திரி ஒறங்காது போல

எனக்கு ஒரே பேடி.. அத ஒறக்காட்டுடேன்னு ரெண்டு மூணுதடவை சொன்னேன். அந்த பொல்லாமுறுவம். தெங்குல கட்டிட்டு அவன் ஒறங்கிட்டான்….”

மசூது சாகிபு கிணத்துப்பக்கம் போய் பார்த்துவிட்டு சிரிப்பும் சந்தோசமுமாக வந்தார்.

“ஓம்மளதான் இன்னைக்கு யானையில் ஏத்துவானுவோ.”

“நல்ல மொவன்.. நான் ஏறுவனே..அது உலுப்பி கீழே தள்ளிச்சின்னா அந்தால கபர்குழிக்கு கொண்டுபோவ வேண்டியதுதான்…”

பண்டு ஒரு ஊர்ல யானைக்கு மேல உச்சைக்கே லெப்பைய ஏத்தி உட்டுட்டானுவோ…அது எல்லா தெருவுலயும் சுத்தி சுத்தி போச்சி..லெப்பைக்கு ஒருபக்கம் குறுக்குவலி. . தள்ளயத்தின்ன குறுக்குவலி யாவது பொறுத்துகிடலாம்…மனுசனுக்கு மூத்திரம் முடுக்கி நிக்கி… லே எறக்குங்கோ … மோளணும்.லே…எறக்குங்கோ மோளணும்..எவன் கேக்கான். அவரு உடலே… லே..கொர்னாகொடு பிடிச்சவனுவளே மோளணும் எறக்கி உடுங்கலே…ஒரு துக்கயளும் கேக்கல…கடைசியில் சொன்னாரு எறக்கியளா….மோளட்டான்னு…”

மசூதுசாகிபு சிரியோ சிரி என் சிரித்துக்கொண்டிருக்கும் போதே … இன்னும் ஒன்றிரெண்டுபேர் வந்து யானையை சுத்தி சுத்திப்பாத்தார்கள். தென்னை மடலை அப்படியே சுருட்டி உள்ளே தள்ளியது…

“படச்சவனுக்க வேலைய பாத்தியா…தாயோழி யானைக்க தீத்தி…ம்…” மலைப்பாகப் பார்த்துக்கொண்டே யானையின் அழகில் மயங்கி நின்றார்கள்.

விடியும் முன்னால் சின்னபுள்ளையளுவெல்லாம் வந்து குவிந்து விட்டன. கிணத்து மதிலை சுற்றியும் சீலாந்தி மரத்திலுமாக பயலுவ ஏறிக்கிடந்து கும்மாளமடித்தபோது மரியம் பெத்தா பேத்தியை இடுக்கிக்கொண்டு பக்கத்து களத்தில் நின்றாள். காதர்சாகிபு மகனை அழைத்துக் கொண்டு வந்தார். அவன் மூக்கை நோண்டிக்கொண்டே மலங்க மலங்க விழித்தான்.

“விட்டபோட்ட உடனே சமுட்டணும் என்னா..” மகனின் காதில் குசுகுசுத்தபோது மகன் சிணுங்கி கொண்டே கேட்டான்.

“விட்டன்னா என்ன வாப்பா..”

“அதுக்க பீ…”

“ஐய்யே…நாறும்…”

“நாறாதுலே துக்கோ…சமுட்டுனா படிப்பு வரும்…”

“பீ நாறும் வாப்பா…”

“யானை பீ நாறாது மொவனே.”

பயலுக்கு நம்பிக்கை இல்லை. ஆனாலும் காதர்சாகிப் விடுவதாக இல்லை . அவர் யானையைப் பார்த்துக்கொண்டே நின்றார்…அது விட்டைப் போடாமல் காலம் தாழ்த்துவது அவருக்கு எரிச்சலாக இருந்தது.

சேவு ஒரு சீப்பு பழம் கொண்டு வந்து பாகனிடம் கொடுத்தான். பாகன் வாங்கி யானையின் தும்பிக்கையில் வைக்க அது தின்று விட்டு தும்பிக்கையை தூக்கி சேவுவின் தலையை தொட்டது… பயலுவோ துள்ளி ஆடியதும் சின்னபெத்தா பேரன் சத்தம் போட்டான்.

“ஓய் யானை புரோட்டா திங்குமா… எங்க ஊட்ல இன்னைக்கு புரோட்டா…”

பாகனும் சகாக்களும் மெலிதாக சிரித்தனர். அவர்களின் சிரிப்புக்கு பிறகு பயலுவோ நிறைய கேள்விகளை அடுக்கடுக்காய் கேட்டார்கள்.

“ஓய்.. இந்த யானைக்கு மொவன் உண்டா ..”

காதர்சாகிப் இடையில் புகுந்து எரிச்சலாகச் சொன்னார்.

“இது ஆம்புளை யானைலே..இதுக்கு மொவன் கெடயாது…”

“ஒமக்கு மொவன் இருக்காம்புலா..”

காதர்சாகிபு பேச்சடைத்துப் போனார்…பாகனைப் பார்த்து எரிச்சல் பட்டுக்கொண்டு சொன்னார்…

“எல்லாம் தலதெறிச்சதுவோ..”

“ஓய்… இந்த யானைக்கு வாப்பா எங்கே.. ” என கேட்டதைத் தொடர்ந்து இன்னொருவன் “யானைக்கு மத்ததுல கட்டெறும்போ…” என் சத்தம் போட எல்லாவனும் கூடி நின்று சிரித்தார்கள். விதவிதமான சிரிப்பு. நேரம் போகப் போக ஒரு பாடு குழந்தைகள் வந்து விட்டனர். சில குழந்தைகளே குழந்தைகளை சுமந்து நின்று சிரித்தனர். சில வயசாளிகள் பேரன் பேத்திகளை சுமந்து நின்றார்கள். ஒன்றிரெண்டு வாப்பாக்கள் பிள்ளைகளைத் தூக்கி வைத்திருந்தார்கள்.களத்தில் ஐந்தாறு பொம்பளைகள் குழந்தைகளோடு நின்றார்கள். பலூன்காரனின் வியாபாரமும் பொம்மைக் காரனின் வியாபாரமும் பிசுபிசுத்துப்போனது. யானை. யானை – யானை மேலத் தெரு . மாவிளை இன்னும் இன்னும் ஊர்முழுக்க எங்கும் யானை பற்றிதான் பேச்சு . சாயிப்புமார் பள்ளியில் யானை வந்திருக்காம் என்ற செய்தி செட்டியார் தெருவிலும், பிள்ளமார் தெருவிலும் பரவி சிலர் குழந்தையைக் கொண்டு வந்திருந்தார்கள்.

காதர் சாகிபுவின் எதிர்பார்ப்பை யானை பதினொருமணிக்கு விட்டைப்போட்டு பூர்த்தியாக்கியது. நான்கு விட்டை அடுக்கடுக்காய் வந்து விழுந்தது. யானைப் பாகனிடம் மகனை கொடுத்து விட்டையை சமுட்ட வைத்தார். பயல் பயந்து நெழிந்து புழுவாக துடித்து அழுதான். ஆனாலும் பாகன் விட்டையை சமுட்ட வைத்து விட்டான். இனி பயல் படிப்பு வந்து கலெக்டர் ஆகிவிடுவான் என்ற திருப்தியோடு காதர்சாகிபு போனபிறகு முதலாளி அவரது நான்கு வயது மகனை தூக்கிக் கொண்டு நான்கைந்து பேர்களுடன் வந்தார். கையில் காமிரா இருந்தது. ஒருவன் யானைபாகனிடம் ஏதோ பேசினான். பாகனில் ஒருவன் யானை அருகே வந்து மலையாளத்தில் ஏதோ சொன்னதும்.

யானை வலது காலை மடக்கி லேசாக தூக்கியது. பாகன் அதில் சமுட்டி நின்று கொண்டு அதன் கழுத்தில் கிடந்த கயிறை பிடித்துக் கொண்டு ஊஞ்சலில் உயரே போவது போல யானையின் முதுகில் லாவகமாக ஏறி அமர்ந்து கொண்டான். இன்னொருவன் முதலாளி மகனை வாங்கி யானையின் மேலே இருந்தவனிடம் கொடுத்துவிட்டு நீங்கிக்கொள்ள முதலாளியின் ஆள் நிறைய போட்டோ எடுத்துக் கொண்டே இருந்தான்.

ஒரு போட்டோவுக்கு யானை தும்பிக்கையை வளைத்துத் தூக்கி ஸலாம் போட்டது. பயலுவோ கோழை வடிய துள்ளி குதித்து கைத்தட்டி சிரித்தனர். யானை தன் சிறிய கண்களால் அவர்களை மட்டும் பார்ப்பதாக கருதி சிரித்துக் கொண்டும் கும்மாளமிட்டுக் கொண்டும் சுத்தி சுத்தி வந்தனர்.

காசிம் பிள்ளையின் மகன் நேராக வீட்டுக்கு ஓடிப்போய் வாப்பாவிடம் அழுதான்…

வாப்பா. என்னைய யானைக்கு முதுவுல ஏத்திவிடு நவுசானுக்கு வாப்பா: – அவன யானைக்கு முதுகுல வச்சி போட்டோ எடுத்தாரு..”

“போல..யானையும் மயிரும்தான்…”

பயல் விடவில்லை…ம்மாவிடம் போய் அழுதான். கண்ணீர் மடமடவென் சாடியது. அவனை பார்க்க சகிக்காமல் ம்மாக்காரி அவனை கூட்டிக்கொண்டு களத்துக்கு வந்தாள். பாகனை கூப்பிட்டு இரண்டு ரூபாய் கொடுத்து யானையின் முதுகில் தனது மகனை உட்கார வைக்கும்படி சொன்னாள். பாகன் மேலே உட்காரவைக்க முடியாது என்ற போது.

“நவுசான் இருந்தாம்புலா” பயல் சொல்லிக்கொண்டே அழுதான். பாகன் பயலை அழைத்துக்கொண்டு போய் யானை அருகே கொண்டு போனதும். அது தும்பிக்கையால் அவன் தலையை தொட்டவுடன் பயல் சிரித்த சிரிப்பு எதோடும் ஒப்பிட்டுப்பார்க்க முடியாததாக இருந்தது. இதைத் தொடர்ந்து ஒருபாடு பயலுவோ வீட்டில் போய் அடம்பிடித்து அழுது காசு கொண்டு வந்து யானையிடம் ஆசீர்வாதம் வாங்கினார்கள். சுல்தான் பிள்ளை பேரனை யானை அருகே கொண்டு போனதும் அது அவரின் தலையில் கைவைத்துவிட பேரன் அழுதான் மற்றவர்கள் பரிகாசம் செய்து சிரித்தனர்.

பனிரெண்டு மணிக்கு யானை குளிக்க புறப்பட்டது. குளம் நோக்கிப் புறப்பட்ட யானையை பின்தொடர்ந்து ஒருபாடு பயலுவ கூட்டம்.. பிள்ளைகளைத் தூக்கிக் கொண்டு நிறைய பெரியவர்களும் நடந்தார்கள். தெருவில் யானை நடந்த போது பெண்கள் எல்லாம் வாசலுக்கு வந்து விட்டார்கள்.

“லே..சத்தம் போடாம போங்கலே.. யானை கலஞ்சிரும். ”

தெருவில் மைதிமாமி சொன்னாள். பயலுவளின் சத்தம் குறையவில்லை அவர்களுக்கான உற்சாகம் பீறிட்டுக்கிளம்பி…புதிய சத்தம் புதிய மொழி என அவர்களின் சந்தோசம் ரொம்பவும் உயரத்துக்கு போய் கொண்டே இருந்தது.

“லே.வாப்பா.. மெளனே . என்னமும் தின்னுட்டு போலே”.

ஒருவனை ம்மாகாரி – அழைத்தாள். யானைக்குப் பின்னால் அணிவகுத்த அவனுக்கு அந்த சத்தம் கேட்கவில்லை. பசிக்கவில்லை அந்த பிரமாண்டமான உருவம் அவனுக்கும் மற்றவர்களுக்கும் விளையாட்டு பொம்மையாகிக் கிடந்தது.

குளத்தில் மாடு குளிப்பாட்டும் சப்பாத்து வழியாக யானை இறங்கி தண்ணிரில் படுத்தது…

“லே….மக்கா யானை படுத்துட்டு..” குளத்தை சுற்றிலும் மக்கள் கூட்டம் செட்டியார் தெருவிலிருந்து பெண்கள் நிறைய வந்து நின்றனர்.

தும்பிக்கையில் தண்ணீரை உறிஞ்சி யானை முதுகில் ஊற்றியதும் அஞ்சாறு சின்ன பைய்யன்மார்கள் குளத்தின் இன்னொரு கரையில் கைகளால் தண்ணீரை கோரிகோரி இறைத்தனர். யானையை போல நடப்பதாக கூறி ஒருவன் குனிந்து கொண்டான். அவனை மற்ற பயலுவோ யானைக்குட்டி.. யானைக்குட்டி..என் பரிகாசம் செய்தனர். முஸ்தபாவும் அவன் தோளில் கிடந்த மூன்று வயது மகளும் யானை குளிப்பதை விழிவிலக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தபோது, திடீரென் முஸ்தபாவின் மகள் கேட்டாள்…

“வாப்பா யானையை மீன் கொத்துமா..”

“கொத்தாது…’

“யானை மீன ஒத்த அடிவச்சி கொடுக்குமோ..?”

முஸ்தபா பதில் சொல்லவில்லை. மகள் நாடியைப் பிடித்து இழுத்துகொண்டே மறுபடியும் கேட்டாள். ம்..ம் . என்றபடி பாகன் யானையை தேய்த்து குளிப்பாட்டும் அழகில் மூழ்கி நின்றார். மீண்டும் மகள் முஸ்தபாவின் தலைமுடியைப் பிடித்து இழுத்து முகத்தை திருப்பிப் பார்த்துக்கொண்டே

“வாப்பா இந்த யானையை பிடிச்சிதா.”

“யானையை பிடிக்க முடியாது மோளே. அதுபொல்லாதது. ” முகத்தை பயந்தது போல வைத்துக் கொண்டார்.

“அவரு மட்டும் பிடிச்சிவச்சிருக்காருல்லா..” பாகனைக் காட்டிச் சொன்னாள்….முஸ்தபா பதில் சொல்ல முடியாமல் திணறினார். மீண்டும் மீண்டும் யானையைப்பற்றியே கேட்டுக் கொண்டிருந்தாள்.

“பிள்ளே சும்ம இரிங்கோ. கன்னியாமரியில் இருந்து மர யானை வாங்கித்தருவேன்”.

“இதான் வேணும். நம்மோ ஊத்துக்கு கூட்டிட்டு போய் மாவு கொடுக்கலாம்…”

“அது முட்டிபோடும் மக்கா…”

“முட்டாது…”

மகள் அழ ஆரம்பித்தாள்…முஸ்தபா சமாதானப்படுத்திப் பார்த்தார். அவள் அழுகையை நிறுத்தவில்லை..

“யானைக்கு தும்பிக்கையை பாத்தியா. எப்படி இருக்கு. கொள்ளாமலா”

“அத் கூப்புடு வாப்பா.. ” மகள் தொடர்ந்து அழுதாள்.

அவள் அழுகையை நிறுத்தவில்லை. முஸ்தபாவின் எந்த சமாதானமும் மகளிடம் எடுபடவில்லை. யானை குளித்து கரையேறும் முன்னால் முஸ்தபா அழும்மகளோடு வீட்டுக்கு வந்துவிட்டார். வாசலில் கால் வைத்ததும் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு மனைவி ஓடி வந்து.

“எதுக்கு பிள்ளே அழுது.”

“ஆ. உன் மொவளுக்கு யானை வேணுமாம். எங்கிட்ட பிடிச்சி கேக்குதா. என்னைய குளோஸ்பண்ண பிளான் போட்டுட்டா…”

அவள் சிரித்துக்கொண்டே பிள்ளையை வாங்கினாள். ம்மாவிடம் போயிருந்தும் அவள் அழுதாள்… அழுகையினூடே ஆனை ஆனை என் சத்தம் பிசிறில்லாமல் வந்து கொண்டிருந்தது. ஒரு வகையிலும் சமாதானமடையாமல் யானையின் நினைவுகளோடு அழுதுகொண்டே தூங்கினாள்

நாலரை மணிக்கு யானை கம்பீரமாக புறப்படத்தயாரானது. யானையின் முகப்பட்டாவில் பழய பொலிவு இல்லை. முகப்பட்டா ஒரு காலத்தில் தங்கத்தில் இருந்ததாக சொல்லிக் கொண்டார்கள். யானையின் முதுகில் பட்டுத்துணி விரிக்கப்பட்டிருந்தது. லப்பையை எவ்வளவோ வற்புறுத்தியும் கொடியோடு அவர் யானையில் ஏறி உட்கார தயாராக இல்லை. அவர் கொஞ்சம் தைரியமடைந்து யானையில் ஏறிவிடுவார் என்ற நிலை வந்த போது எவனோ ஒருவன் பண்டு ஒரு ஊரில் யானை கலஞ்சி யானையின் முதுகில் இருந்தவனை யானை இழுத்துப்போட்டு சமுட்டி கொன்ன கதையை கிசுகிசுத்து விட்டான்.

“நான் புள்ள குட்டிகாரன்…என்ன விடுங்கோ….” ஒரேயடியாக மறுத்துவிட்டார். பலரும் யானையில் இருக்க தயங்கினார்கள். ஒரு வழியாக கடைசியில் சாலும், அத்துலும் யானையில் உட்கார சம்மாதித்தார்கள். புதிதாக தொப்பியெல்லாம் போட்டுக் கொண்டு வந்து இருவரும் பயந்து நடுங்கி ஏறி உட்கார்ந்து கொடியை பிடித்துக் கொள்ள யானை மெல்ல மெல்ல எழுந்து நடந்தது. எல்லா தெருவிலும் யானை போகவேண்டும். எல்லா வீட்டுக்கு முன்னாலும் யானை நிற்க வேண்டும். இல்லையென்றால் அதுவேறு பிரச்சனையாகிவிடும். யானை விட்டையச்சமுட்டினால் படிப்புவரும் என்ற செய்தி பரவலாகிவிட்டதால் பலரும் யானைவிட்டையை எதிர்பார்த்து பின்னால் நடந்தனர். யானை விட்டையை சமூட்டினால் காலில் செரங்கு குணமாகும் என வைத்தியர் சொன்னதை நம்பி ஜின்பிள்ளை சிரங்கு காலையும் வைத்துக்கொண்டு இழுத்து இழுத்து யானை பின்னால் நடந்தார். கும்மாளமாக துள்ளி குதித்து ஓடிய ஒரு சின்னப்பையன் ஜின்பிள்ளையின் சிரங்கு காலை சமுட்டிவிட அவர் வலியில் துடித்து அறுத்து கிழித்துக்கொண்டே யானை விட்டயை சமுட்டி விடும் ஆவேசத்தில் பின்தொடர்ந்து போனார்.

தக்கலை சாயிப்பு வீட்டு முன்னால் யானை விட்டை போட்டது, முண்டியடித்துக் கொண்டு பலரும் சமுட்ட ஜின்பிள்ளை சிரங்கு காலை உள்ளே விட்ட மறு நிமிடம் அலறினார்.

“யாரப்பே. என் கால சமுட்டி முறிக்கானுவளே – எங்காலு காலு ஹாவாபோவானுவளே… எங்கால உடுங்கலே..”

ஜின்பிள்ளையை இழுத்து தக்கலை சாயிப்பு வீட்டு நடையில் உட்கார வைத்தனர்.

“ஒமக்கு இது அவசியமா ஓய். இந்த கால வச்சிட்டு..”

“அந்த வைத்தியன் தாயழி சொன்னாம்னு வந்துட்டேம்டே என் கால மண்ணாக்கிட்டானுவோ… காந்தலு பொறுக்க முடியலியே ரப்பே…”

ஜின் பிள்ளையின் சிரங்கு காலில் ரத்தம் வழிந்து கொண்டிருந்த போது தெருவிலிருந்து யானை மேலத்தெருவுக்கு திரும்பிக் கொண்டிருந்தது. மேலத்தெருவின் தொடக்கத்தில் இருந்த சிவன்பிள்ளை வீட்டில் யானைக்கு ஒரு சிப்பு பழம் கொடுத்தார்கள். யானை தின்றுவிட்டு தும்பிக்கையை தூக்கி சிவன் பிள்ளையின் தலையில் வைத்து எடுத்தது. அவர் யானையை கும்பிட்டார். பதிலுக்கு யானையும் தும்பிக்கையை தூக்கி ஸலாம் போட்டது.

எல்லா தெருவும் சுத்தி விட்டு ஆறரைமணிக்கு யானை மீண்டும் பள்ளிக்குள் வந்ததும்… கொடியேற்றினார்கள். நேர்ச்சை பழத்தை யானை நிறைய தின்றது. கணக்கு முடித்துக் கொண்டு பாகன்கள் எட்டு மணிக்கெல்லாம் யானையோடு கிளம்பினார்கள். யானை எல்லோரிடமும் விடைபெற்றுக் கிளம்பியது. கிளம்பும் முன்னால் பள்ளிக்கு குனிந்து ஸலாம் போட்டது.

“லே.. . மக்கா நம்ம யானை போவுதுலோய்… ”

பயலுவோ எல்லாரும் யானைக்கு பின்னால் நடந்தார்கள். சிலரை சில வாப்பமார்கள் அடித்து இழுத்துப்போனார்கள். ஒருபாடு சிறுவர்கள் வாப்பாமார்களுக்கு தெரியாமல் யானைக்குப் பின்னால் ஓடினார்கள். யானை வேகமாக நடந்தது. அம்மங்குண்டு தாண்டியதும் பாதிசிறுவர்கள் திரும்பிவந்தனர். இன்னும் கொஞ்சம் பேர் ஊர் எல்கைவரை போனார்கள் யானை அவர்களை விட்டு வேகவேகமாக நடந்து போனது.

ஊர் எல்கையில் நின்று அவர்கள் கத்தினார்கள் “ஓய் அடுத்தவருசம் எங்க யானையை கொண்டு வாரும்..”

யானை இருட்டுக்குள் இருட்டாய் மறைந்து கொண்டே போகப்போக நீண்டநேரம் மணிச்சத்தம் காதுகளில் கேட்டுக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு வருசமும் கொடிகட்டு வருகிறது…ஆனால் யானை மட்டும் வரவே இல்லை.

Thursday 22 June 2023

மொய்தீன் கவிதைகள்



          மொய்தீன் கவிதைகள்.  
நான் என்னைத் தேடிக்கொண்டிருக்கிறேன்
இதறியாத சிலர்
என்னைப் பார்க்க
வந்து விட்டுப் போகிறார்கள்.

எனக்காக அவர்களில் நிகழ்ந்த
மாற்றம்
முன்னெப்போதும் அவர்களில் நிகழாத மாற்றமாக இருக்கிறது.

நான் என்னை தேடுவதுபோலவே
அவர்களும் தேடுகிறார்கள்.
நான் பார்வையில் பட்டுவிட்டால் அவர்களின் பதட்டம்
மிகைப் பட்டு விடுகிறது
முகபாவனையில் விசித்திரம்
கூடியும் விடுகிறது

நான் என்னை தேடிக் கொண்டிருப்பதை அவர்கள்
அறியவில்லை
ஆகையால் அவர்கள்
தினந்தோறும் குளிக்கிறார்கள்
அலங்காரம் செய்கிறார்கள்
இப்போது புதிதாக
பல்லும் விளக்குகிறார்கள்.



                        2

உப்பரிகையோடு
இரண்டு ஜன்னலும்
கதவும் கொண்ட
வீடு இருக்கிறது.

முன்னறையிலும்
பின்னறையிலும்
இரண்டு
கழிப்பறைகள் உண்டு.

விருப்பம் போல
உலவலாம்
உண்ணலாம்
உறங்கலாம்.

உச்சி முகட்டில்
ஒளி உமிழும் விளக்கையும்
பறந்த பெருவெளியும்
பார்க்கும்படியாகவே
மாடத்தில் இரண்டு
ஜன்னல்கள் அமைந்திருக்கின்றன.

காற்றின் உள்வருகையும்
அதைப் போல
வெளியேறுதலுக்குமான
நேர்த்தியான வாசல் கொண்ட வடிவமைப்பிலானது வீடு.

வீட்டை சுத்தப்படுத்தி,
அழகு படுத்தி,செப்பனிட்டு ரசித்துக் கடக்கலாம் தினந்தோறும்.

வீட்டின் மீதான
பிடித்தம் உங்களைப் போல
எனக்கும்
அலாதியானதுதான்

வீட்டின் உரிமையாளன் பற்றிய
விபரத்தைக் குறித்து
யாருக்கும் தெளிவில்லை.


நான் வசிக்கும்
வீடு என்னுடையதல்ல.

                       3

மௌனத்தை
இன்னும் அவர்கள்
மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

வேறு வேறு மௌனங்களுடன்
மலைகடந்து
பறந்து கொண்டிருக்கிறது பறவை.


Monday 19 June 2023

கடவுளின் கடைசி முத்தத்திலிருந்து ஒரு உரையாடல்

    கடவுளின் கடைசி முத்தத்திலிருந்து 
                    ஒரு உரையாடல்
                  எம்.மீரான் மைதீன்


காதலின் சொற்கள் தூய்மையானவை அதற்கு ஒருபோதும் மாறு செய்யலாகாது.
அலிஷார் ஜம்ரூத்தின் சொற்களுக்கு ஒரேயொரு முறை மாறு செய்கிறான் பிறகு அவனை பிரிவும் துயரமும் நீண்டகாலம் துரத்துகிறது.ஆனாலும் அவர்கள் எல்லா துயரங்களையும் ஒவ்வொன்றாக துரத்தியடித்து காலத்தால் மீண்டும் அற்புதத்தில் அலிஷாரும் ஜம்ரூத்தும் நுழைந்துவிடும்போது மனம் அவ்வளவு சந்தோசம் கொள்கிறது.
ஒரு நீதிக்காக 
ஒரு உரிமைக்காக 
ஒரு வாய்ப்புக்காக
ஒரு தேவைக்காக
காத்திருப்பவர்களே
பொறுமையிழக்கிறார்கள்
அவ்வளவு விரைவாய் நம்பிக்கையிழக்கிறார்கள். 

அன்புக்காக
காத்திருப்பவர் 
எவரும் 
களைத்துத் திரும்புவதே 
இல்லை 

கடவுளின் கடைசி முத்தம் கவிதை தொகுப்பிலுள்ள ரிஸ்கா முக்தாரின் இந்த கவிதையை வாசித்து வரும்போது அலிஷார் ஒருபோதும் களைத்துத் திரும்பவே இல்லை.அவன் ஜம்ரூத்தை களைப்பற்றவனாய் கண்டடைகிறான். ஒரு கவிதை எங்கு கொண்டு போகிறது பாருங்கள் என்னை ஆயிரத்தியோரு இரவுகளிலுள்ள அலிஷாரின் கதைக்கு கொண்டு போயிருக்கிறது. 

கடவுளின் கடைசி முத்தம்,கஸல் பதிப்பகம் வெளியீடாக அருமை நண்பர் சப்ரி அவர்கள் எனக்கு அன்பளிப்பு செய்த இந்த கையடக்க கவிதைநூலின் தலைப்பு என்னை வெகுவாக கவர்ந்திருந்தது. இந்த நூலின் முகப்பு அட்டையும்கூட ஈர்புடைதாக இருந்தது. இரண்டு வர்ணங்கள்தான் ஆனால் ஏதோ ஒன்றையோ பலதையோ  சொல்கிறது.வைக்கம் முகமது பஷீரின் சிறுகதைகளில் ஒன்றான மயக்கமுரச் செய்யும் "முதல் முத்தம்" கவித்துவமான ஒரு கதை.அந்த கதையில் அந்த கதைஞன் சொல்லுவான் கதைகள் இல்லாமல் முத்தம் தர முடியுமா? முத்தம் இதயத்தின் கண்ணாடி என்றால் அந்த முத்தத்தின் பாவனைகள் எப்படியிருக்கும்.இங்கு /ம்ம்ம் கள் என்பன மனம் கசிந்து மண்டியிடுமொருவனின் கரம் தீண்டும் கடவுளின் கடைசி முத்தம்/முதல் முத்தத்தில் மறைந்து கிடந்த கவித்துவமான வரிகளைப்போல ரிஸ்கா முக்தாரின் கடவுளின் கடைசி முத்தம் கவிதைக்குள் மறைந்து கிடக்கும் சில  கதைத்துவமான கவிதைகளைக்  கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.
/நினைத்த நொடியில் 
நினைத்தவாறு 
இதிலிருந்து வெளியேறிச் செல்லலாம் 

இருந்தும் 
வாசல் தூனை இறுகப்பிடித்துக்கொண்டு
வெளியேற மாட்டேனென அடம்பிடித்து
அழுமொன்றுக்குத்தான் 
இங்கே 
பேரன்பென்று
பெயர்/
எது எப்படியானாலும் இந்த கவிதைகளுக்குள்தான் எவ்வளவு எவ்வளவு  பெருககெடுக்கும் அன்பின் படைப்பு மனம் இருக்கிறது. 

இலங்கை மண்ணில் இஸ்லாம் பின்புலத்திலுள்ள அனேக கவிஞர்கள் எனக்கு மிக மிக ஆச்சரியமாகவே இருக்கிறார்கள்.இவ்வாண்டு மின்ஹாவினுடையதும் மிஸ்ராவினுடையதுமாக இன்னும் இரண்டு கவிதை தொகுப்புகள் வாசிக்க இருக்கின்றன.இந்தியச் சூழலில் தமிழ் மண்ணில் இஸ்லாம் பின்புலத்திலிருந்து கவிதை எழுத வரக்கூடியவர்கள் ரொம்பவும் குறைவு அதிலும் பெண் என்று கவிஞர் சல்மா தவிர்த்து சிலர் இருக்ககூடும் அவ்வளவுதான்.இரண்டாயிரத்துக்குப் பிறகு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் மாற்றம் ஒரு பக்கத்தில் பார்வைகளை எல்கைகள் தாண்டி பிரகாசப் படுத்தியிருப்பதாக தோன்றுகிறது.ஒரு அர்த்தத்தில்  கவிதையைக் குறித்து சில மாறுபட்ட அபிப்ராயங்களை இஸ்லாமிய கருத்தியலாளர்கள் முன்வைக்கும் பழைய சூழல் இப்போது அத்துனை வீரியமாக இருப்பதாகவும் தெரியவில்லை.இது நல்லவிடயமும் கூட.எட்டாம் நூற்றாண்டின் கடைசியில் பாரசீக வெளியில் ஒரு,றாபிய பர்வாரி வருகிறார். அவரின் காதல் கவிதைகள் தவறான புரிதலின் பொருட்டு அவரும் அவரின் கவிதைகளும் அழிக்கப்பட்டதாக ஒரு குறிப்புக் கிடைக்கிறது.சமகால இலங்கை கவிதைகளால் பெருகுகிறது. அவர்களின் கவிதைமொழி, கவிதைபுனையும் இலாவகம் நேர்த்தியென செழித்து வளர்கிறதை அவதானிக்க முடிகிறது.நிறைய பெயர்களை இங்கு வரிசைப்படுத்தலாம்.அது கொழும்பு கடற்கரையில் பறக்கவிடும் பட்டத்தின் கயிறுபோல மிக நீளமானதும் ரசனையானதுமாக இருக்கும்.
ரிஸ்கா முக்தாரின் உனக்கு நேசிக்கத் தெரியவில்லையென துவங்கும் ஒரு முகநூல் கவிதையை பெண்கள் பலரும் எடுத்தாட்கொள்வதும் அதன் உண்மைத்தன்மைக்கு சான்று வழங்குவதுமாக ஒரு ரகசிய உலகம் இயங்குவதையும் அறிய முடிகிறது. காதலின் பொருட்டு இயல்பிலேயே படைப்பு மனம் பெற்ற பெண்,ஆணை ஒரு அழகான சட்டகத்துக்குள் வடிவமைக்க விரும்புகிறாள். உண்மையில் அவளால் வடிவமைக்கவும் இயலும்.அவள் அன்புக்கு முன்னால் தன்னை ஒப்புக்கொடுக்க அவன் தயாராக இருந்தால் போதுமானது.மாறாக அவனிடம் போதமைகள் வெளிப்படும் போதுதான் அவள் உனக்கு நேசிக்கத் தெரியவில்லை என்கிறாள். உண்மையில் ஒரு பெண்னைப் தொடர்ச்சியாக நேசிப்பதில் ஆண்கள் தோற்றுப்போய் விடுகின்றனர். அவனுக்கு அன்பின் முன்னால் ஒப்புக்கொடுப்பதில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது.நான் ஆரம்பத்தில் சொன்ன அலிஷார் ஜம்ரூத் கதையில்கூட கதை துவங்கும்போதே ஜம்ரூத் அலிஷாரிடம் ஒரு விசயத்தைக் குறிப்பிட்டு இதை மட்டும் நீ செய்யாதே அதனை செய்தால் நாம் பிரிந்துவிடுவோம் பின்னர் நாம் இந்த உலகில் பிரிந்து பெருந்துயரங்களில் ஆகிவிடுவோம் என்பதை முதலிலேயே எச்சரிக்கிறாள். ஆனால் வாழ்வின் போக்கில் ஜம்ரூத் எச்சரித்த விசயம் அலிஷாருக்கு வந்து சேர்ந்துவிடுகிறது.பிறகு அவர்கள் கடுந்துயரங்களை அனுபவிக்கிறார்கள்.இரண்டு தனித்தனி அன்பு என்பதும் சிக்கலானதுதான் ஒரு அன்பில் கரைவதுதான் உத்தமமானது. எப்போதும் அவர்கள் ஒருவர் மற்றொருவரிடத்தில் இருப்பதுதான் அன்பின் படித்தரமாக இருக்கிறது. வாழ்வில் இந்த நிலைப்பாட்டுக்கு எதிரான எல்லா கேள்விகளுக்கும் பதில்கள் இருக்கின்றன தர்க்கம் இருக்கின்றது ஆனால் காதலில் இவைகள் செல்லுபடியாகாது.ஒரு மகாராணி அவள் விருப்பத்துக்கு உனதுதலையைக் கொய்வாள் பிறகு அவளது விருப்பத்துக்கு உனது தலையைப் புதுப்பிப்பாள்.உன் சித்தம் என் பாக்கியம் என்பதுதான் காதலின் மைய்யச் சரடு. 

ரிஸ்கா முக்தாரின் கவிதை உலகம் வெகுஜன ஈர்ப்புக்குரியது.அன்பை முதன்மையாக கொண்டது.அன்பின் நிமித்தமாக இயங்குகிறது, தேங்குகிறது,தேம்புகிறது.அழுது ஓய்ந்த இரவை மடித்து கைப்பையில் மறைத்தபடி விடியலை எதிர் கொள்வதாக இருந்தாலும் அது பிற்பாடு எவ்வாறு நேசிக்க வேண்டும் என்பதற்கான நெடுங்குறிப்புகளை கருனையோடு பட்டியலிடுகிறது.அழுது பழக்கமில்லாத பார்ஃபி டோல்களுக்கு எல்லாவற்றுக்கும் புன்னகைதான். அதனால்தான் யாரேனும் கொஞ்சம் தேற்றுங்களேன் என்னை எனக் கேட்கமுடிகிறது.
      நீ,உன்,நான் என நிகழும் இந்த கவிதை மண்டலத்தின் விளையாட்டுக்களமாக அன்பே நிறைந்திருக்கிறது.அன்புக்காக காத்திருப்பவர்கள் எவரும் களைத்துத் திரும்புவதே இல்லை என வரைய முடிகிறது.ரிஸ்காவின் இந்த வரைதல் ஒருவேளை எங்கேனும் போலியாக தன்னை வெளிக்காட்டும் மாயப்புள்ளிகள் தென்படும் எனத்தேடினால் உறுதியாக நாம் தோற்றுப் போய்விடுவோம். 

உலகின் பிரச்சனைகளெல்லாம் உங்களிடமே தொடங்குகிறது.எனவே உங்களிடமிருந்து உங்களைக் காப்பாற்றுங்கள் என்பார் மௌலான ஜலாலுத்தீன் ரூமி.ரிஸ்காவின் கவிதை வரிகளைப் பாருங்கள் /
இதோ
பேரன்பின் பைத்திய இரவுகளின் 
மேல் 
பெய்து கொண்டிருக்கிறதொரு
பேய்மழை 

செய்வதறியாது 
வெறுமனே
உடல் நடுங்க வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் 
நான் 

இந்த கவிதைகளின் பரப்பெங்கும் இப்படியான விளையாட்டொன்று நடந்தேறுகிறது.என்னை நானே நேசித்துக்கொள்ள தினமும் மூன்று காரணங்களைத் தேடுவதிலாகட்டும், என்னை நானே அணைத்துக்கொண்டு தன்னாலே உறங்கிப்போனேன் என தன்வயமாகும் அல்லது தன்வயத்துகுள்ளிருந்து நிகழும் தேடுதலின் மௌனம் நமக்குள் அசாத்தியமான காட்சிகளைக் கொண்டுவந்து நிரப்புகிறது.கடவுளின் கடைசி முத்தத்தை நாம் இவ்வாறு பேசிக்கொண்டே போகலாம் என்றாலும் இவரின் கவிதைகளை பின்னோக்கி வாசிக்கையில் கவிதைகள் இன்னொரு கட்டுமானத்துக்குள் இருப்பதும் தெரியவருகிறது.பெண்ணின் மனவோட்டமாக மைய்யம்  கொள்ளும் மனஅழுத்தங்கள் ரகசியமாகவும் பரகசியமாகவும் கவிதைகளாகி இருக்கின்றன.மேலோட்டமாகப் பார்த்தால் நிறைய காதல்கவிதைகள் போலத் தோற்றமிருந்தாலும் அதற்குள் ஊடுருவும் ஒரு மறுமுனையாக உயிர் பற்றிப் படருமொரு பெருங்காதலை நோக்கிய பயணமும் தெரிகிறது. கண்கண்டதிலிருந்த  கண்காணாத வெளியில் கரைவதை நோக்கி தாகிப்பதும் வெளிப்படுகிறது. இதனடிப்படையில் சூஃபித்துவத்தின் அடிப்படையான ஒரு மென் புள்ளியிலும் கவிதை உருமாறும் தன்மையுடையதாக வளர்கிறது.இத்தொகுப்பிலுள்ள ஐம்பத்தி ஏழு கவிதைகளில் சிலவற்றைத் தவிர்த்து  இதன் வார்ப்பில் ஒரே தடத்திலுள்ள பயணம்தான்.தன்னை அறிந்தவனே தன் தலைவனை அறிவான் என்பது ஞானமுறை.இந்தக் கவிதைகள்  ஒரு ஞானமுறை பயணமாகவும் பயணிக்கிறது.

ஒரு தேர்ந்த திருடனைப்போலவே 
நானும் 
இங்கிருந்து 
கண்காணாமல் எங்கேனும் மறைந்திட வேண்டும் 
எனக்கு 

இதுவரை
வாழா
என் பெருவாழ்வை
இனி நான் வாழந்திடவே


ரிஸ்கா முக்தாரின் கவிதை உலகம் ரசனைக் குறைவின்றி நிறைகிறது.தன்னைத்தானே சமாதானிப்பித்துக் கொள்ளும் அசாத்திய கவிதை மனம். தன்னைத்தானே நேசித்துக் கொள்ள தினமும் மூன்று காரணங்களைத் தேடிக் கொள்ளும் கவிதை ஒரு யாசகனுக்கு உணவளிக்கிறது,முறிந்துபோன பழைய உறவொன்றை புதுப்பிக்கிறது,நோய்மையிலான ஒருவரை நலம் விசாரிக்கிறது. கவிதையின் தனித்துவமான அன்பு பேரன்பாக மலருகிறதுஅன்பின் நிமித்தமான நூறு தருணங்களையேனும் நினைவில் கொள்ளத்தக்க வகையில் நகர்த்துகிறது.  இதன் வரிகள் அன்பின் மலர்களைக் கொய்து தருகிறது.


கடவுளின் கடைசி முத்தம்
ரிஸ்கா முக்தார்.


Friday 9 June 2023

"மதில்களுக்கு அப்பால்" எம்.மீரான்மைதீன்

எனக்கு கடிதங்கள் வந்து நீண்டகாலமாகிவிட்டது முன்புபோல யாரும் இப்போது கடிதம் எழுதுவதில்லை.முன்பு வந்த பலகடிதங்கள் எனது சேகரத்தில் உள்ளன.பெரும் எழுத்தாளர்கள் வாசகர்கள் என பல பெருமக்களின் கடிதங்கள் அதில் அடங்கும்.கல்லூரி காலங்களில் காதல் கடிதங்கள் பெற்றதும் எழுதியதுமென விரிவான அனுபவம் இருக்கிறது. சமீபகாலமாக கடிதம் என்றால் ஆயுள் காப்பீடு பிரிமியம் கட்டச் சொல்லி நினைவூட்டும் கடிதம் மேலும் அடகிலுள்ள நகைகளை மீட்க்கச் சொல்லி வரும் கடிதமென சிரத்தையற்ற கடிதங்கள்தான்.ஆனால் நேற்று கிடைக்கப்பெற்ற 8/06/2023 கடிதம் மலைப்பான இன்பகரமான கடிதமாகும்.

சென்னை புழல் நடுவண்சிறையிலிருந்து ஒரு தண்டனைச் சிறையாளி "திருவாழி" நாவல் குறித்து சுமார் பனிரெண்டு பக்கங்களுக்கு முத்துமுத்தான கையெழுத்தில் எழுதி அனுப்பிய கடிதம் எனது சமீபத்திய பொக்கிசமாக மாறியிருக்கிறது. கடைசியாக, இரண்டாண்டுக்கு முன்பாக  எனக்கு ஒச்சை நாவலுக்கு ஒரு பிரபலமான பதிப்பக அதிபர் எழுதியிருந்த இரண்டுபக்க கடிதமே முக்கியமானதாக இருந்தது.ஆனால் நேற்றைய சி.செல்வத்தின் கடிதம் முற்றிலும் புதிய ஒரு இனிய அனுபவமாக மாறுகிறது.

கர்நாடக மாநிலம் சிமோகாவில் 2021ல் அரசால் கைவிடப்பட்ட ஒரு சிறைச்சாலையில் பத்து நாட்கள் "பகைவனுக்கு அருள்வாய்"படத்தில் சிறையில் சேவை செய்யும் அருட்தந்தை பாத்திரத்தில் நடிப்பதற்காக இயக்குநர் அனிஷ் அவர்கள் வழங்கிய வாய்ப்பில் அங்கு கலந்திருந்த  அனுபவம் மிக முக்கியமானது.அந்த அனுபவ படிப்பிலிருந்து சிறையின் அமைப்பும் கைதிகளின் வாழ்க்கை முறையும் அவ்வளவு வலிமிகுந்ததாக உணரமுடிந்தது.சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றவாளிகளானவர்களே அதிகமான மனிதர்கள்.வலிக்க வலிக்க அவர்களின் கதைகள் கேட்டு வந்தபிறகு நிறைய பார்வைகள் மாறுகின்றன.இந்த உலகில் நாம் ஒன்றை அறிந்த பிறகே அதன்மீதான மாறுபட்ட எண்ணங்கள் நம்மிடமிருந்து மறைகிறது.யாவற்றையும் நெருங்கிப் பார்த்தல் ஒரு நல்ல கல்வியும் கூட. இங்கு ஏராளமான அனுபவங்கள் இருக்கின்றன ஆனால் எல்லா அனுபவங்களையும் நாம் அனுபவப்பூர்வமாக உணர இயலாது. ஒரு விடயம் நமக்குள்ளே அனுபவமாக உயிர்ப்பாவதற்கு நாம் அடிப்படையில் ஒரு படைப்பு மனம் கொண்டிருக்க வேண்டும்.

நாடெங்கும் புத்தகத் திருவிழா நடப்பதுபோல சிறையிலும் ஒரு புத்தகத் திருவிழாவை நடத்தியிருக்கிறார்கள்.அந்த புத்தகத் திருவிழாவில்தான் அருமைக்குரிய சி.செல்வம் அவர்கள் சென்னை புழல் நடுவண்சிறையில் "திருவாழி "நாவலை வாங்கியிருக்கிறார்.அவர் வாசித்து பிறகு அங்கு அனேகர்கள் வாசித்து கூடிப் பேசி மகிழ்ந்த ஒவ்வொரு பகுதிகளையும் குறிப்பிட்டு எழுதியருக்கும் இக்கடிதம் மற்றைய கடிதங்களைவிட எனக்கு முக்கியமானதாக இருக்கிறது.
சி.செல்வத்தின் கடிதம் இப்படி துவங்குகிறது.
"திரு.மீரான் மைதீன் அவர்களுக்கு வணக்கத்துடன் சென்னை புழல் நடுவணசிறையிலிருந்து ஆயுள் தண்டனை சிறையாளி சி.செல்வம் எழுதும் மடல்.தாங்களின் முதல் நூலான கவர்னர் பெத்தாவிலிருந்து திருவாழி வரை தாங்கள் எழுத்தை தொடர்ந்து வாசித்துவரும் வாசகன் நான்.வாசிப்பு விரிவடையும் போது கற்பனைகளும் விரிவடையும். சகமனிதர்களை நேசிக்கும் போது சமூகத்தை நேசிக்கிறோம்.சிரிப்பை மகிழ்வை தொலைத்துவிட்டு தேடும் இன்றைய சமூகத்துக்கு இதுபோன்ற நூல்கள் தேவையாகிறது.மனித மனதை பேனாவில் நிரப்பி திருவாழி நிறைந்து வழிகிறது.மனித மனதை இவ்வளவு உள்நுழைந்து எழுத்து வழியாக கொண்டுவர முடியுமா என்று பிரம்மித்துப் போனேன்" எனத் துவங்கி நாவலின் அவரின் மனம் கவர்ந்த பல அம்சங்களை பத்து பக்கங்களுக்கு மேலாக எழுதியிருக்கிறார்.அவர் நாவலிலிருந்து ஒரு வரியைக் குறிப்பிடுகிறார்."ஒரு மனதின் சிதைவும் அதன் விவரிக்க முடியாத வலியும் ஏதேனும் ஒரு புள்ளியில் சகமனிதனிடம் போய்விடத்தான் செய்கிறது." உண்மையில் அது போய்விடுகிறது என்பதை நானும் மீண்டும் ஒருமுறை இப்போது உணர்கிறேன்.

மிகப்பெரிய மதில்களுக்கு உள்ளே இருக்கும் மனிதர்களின் மீது நமக்கு உருவாக்கி வளர்க்கப்படும் ஒரு பார்வை இருக்கிறது.அந்த பார்வையின் வழியே நாம் நம் நகரங்களின் மத்தியில் அமைந்திருக்கிற சிறைச்சாலைகளைக் கடந்து போகிறோம்.அங்கு என்ன நடைபெறுகிறது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது எதுவும் நம் பார்வை புலனுக்கு வருவதில்லை. அங்கிருந்து மனிதர்கள் வெளியேறுகிறார்கள் பிறகு மேலும் மனிதர்கள் செல்கிறார்கள்.இந்த சமூக அமைப்பில் குற்றங்கள் நிகழ்ந்தேறுகின்றன.தண்டனைகள் நிகழ்ந்தேறுகின்றன.அப்படியானால் இந்த சுற்று எப்போது நிற்கும் என்கிற கேள்வி நம்முள் உருவாகவேயில்லை. அங்கிருப்பவர்கள் கலையை விரும்புகிறார்கள், மனதைக் கொண்டாடுகிறார்கள்,சமூக நேசம் பற்றிய அக்கரையை வெளிப்படுத்துகிறார்கள்.பிறகு எங்கே மானிட சமூக அமைப்பில் குற்றங்கள் நிகழ்கின்றன.அந்த பெரிய மதில்களுக்கப்பால் உலகம் முழுவதும் சிறைச்சாலையில் அடைபட்டிருக்கும் மனித மனுசிகளுக்காக நான் பிரார்த்திக்கலாம் நீங்கள் பிரார்த்திக்கலாம் நாம்கூடி பிரார்த்திக்கலாம், ஆனால் பிரார்த்தனைகளைவிட இப்படியான சிறை இல்லாத உலகம் மலர நாம் என்ன செய்வது என்பதனை சிந்திப்பதுதான் ஆரம்பபுள்ளியாக இருக்குமென்று நம்புகிறேன். செப்பனிடப்படாத சமூக அமைப்பும் பாரபட்சமான ஆண்டான் அடிமை முறைகளும் துவேசமும் கொண்ட சமூக அமைப்பில் பெரும்பாலும் சிறைவாசிகள் எழியவர்களாக இருக்கின்றனர் என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். செல்வம் மதில்களுக்கு அப்பாலிருந்து எனது நாவலைப்பற்றி எழுதி கடிதமாக எனக்கு அனுப்புகிறார்.இந்த கடிதத்தை வாசித்துவிட்டு நான் அவரைப் பற்றி சிந்திக்கிறேன்.நமது கல்விமுறை,சமூக அமைப்பு,மனிதமாண்புகளென நாம் எவ்வளவு மாற்றங்களையும் தூரங்களையும் இனியும் கடக்க வேண்டியிருக்கிறது.

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்                    இன்னொரு சாயல்                            எம்.மீரான் மைதீன்          ...