Tuesday 24 October 2023

"ரோஜாமலர்"

உழன்று கொண்டே கிடக்கிறது மனம்.
           கவிஞர் கோ.கலியமூர்த்தி 

ரோஜாமலர் என்றொரு கதாபாத்திரம்
******************************************
       எழுத்தாளர் மீரான் மைதீன் குமரி மாவட்டத்துக்காரர். கலைஇலக்கியப் பெருமன்றத்தின் மூலம் பழகக் கிடைத்து நெருக்கம் கூடிய உறவுகளில் ஒருவர்.

    சிறுகதை, நாவல் இரண்டு வடிவங்களிலும் தொடர்ந்து இயங்குபவர். சமீபத்தில் காலச்சுவடு வெளியீடாக வந்த அவரது 'திருவாழி ' நாவல் அவரது உச்சபட்ச படைப்பு.

   அவரது அபாரமான சிறுகதைகள் பலவுண்டு. என்றைக்கும் என் மனதில் நீங்காத இடம்பிடித்து ரீங்காரம் இடும் கதை  'தங்கமுலாம் பூசப்பட்ட இரண்டு சிறகுகள் '.இந்தக் கதை  'பலாமரம் நிற்கும் புதிய வீட்டிற்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறான் '
என்ற தலைப்புள்ள தொகுப்பில் இருக்கிற கதை.

   காமம் மனிதமனதின் அலைக்கழிப்பு மையமாகத் தொடர்ந்து செயல்படுவதையும்,தனித்த பெண்கள் கையறுநிலை நடுவிலும் சூடுகிற கம்பீரம் அவர்களுக்கு ஒரு ராஜகுமாரியின் சாயலை அளிப்பதையும், காமம் அரும்புகிற பதின்பருவ வயதுகளில் எல்லாச் சிறுவர்களையும் ஆண்களாக்குகிற வளர்ந்த பெண்கள் எல்லாக் காலத்திலும் இருக்கிறார்கள்.அபிதா யமுனா சுகறா போன்ற இலக்கிய கதாபாத்திரங்களுக்கு இணையான கதாபாத்திரங்கள் அவை  என்பதையெல்லாம் நினைவில் மீட்டச் செய்கிற கதை அது.

   கதையில் வருகிற ரோஜாமலர் என்கிற வித்தியாசமான  பெயருள்ள வித்தியாசமான பெண் இளைஞி அல்ல,பேரிளம்பெண். சிறுவனான தன் மகனோடு, பற்றிப்படர கொழுகொம்பு தேடும் கொடிபோல் அலைக்கழியும் அவள் வாழ்வில் ஒருகட்டத்தில் வந்துபோகும் கொஞ்சம் ஆண்கள், அவர்கள் அவளைப்பற்றி வைத்திருக்கும் மதிப்பீடுகள், மனிதமனத்தின் விந்தையான இயங்குதளங்கள், யாரும் எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட வாழ்வின் ஓட்டம் என அழகான நுட்பமான கதை அது.

   அதற்குப்பின் அதைவிடவும் சிறப்பான கதைகளை மீரான் மைதீன் எழுதியிருந்தாலும், பதின்பருவ ஈர்ப்பின் ரகசிய ருசிகளின் பரவசம் மிளிரும் ரோஜாமலர் என்னும் படிமத்தைத் தாண்டி நகரமுடியாமல், முதலில் வெகுநேரம் பிறகு 
வெகுகாலம் அந்தக் கதைவெளிக்குள் உழன்றுகொண்டே கிடக்கிறது மனம்.

No comments:

Post a Comment

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்                    இன்னொரு சாயல்                            எம்.மீரான் மைதீன்          ...