Tuesday 16 May 2023

பயணமும் நூலும்

               
பயணமும் சில நூல்களும்
எம்.மீரான் மைதீன்



                  நம் நாயகம்
               ஜெஸிலா பானு


2023 மார்ச் பத்தாம் தியதி இரவு எட்டுமணிக்கு  திருவனந்தபுரம் விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு துபாயில் அந்த இரவே சென்று சேர்ந்த என்னை அன்பாக உபசரித்து வரவேற்று அழைத்துச் சென்றார் அருமை சகோதரர் ஆசிப் மீரான் அவர்கள்.
11ந்தேதி மாலை துபாயில் எனது புதிய நாவலான "திருவாழி" வெளியிடப்பட்டது. மிகச்சிறப்பும் அன்பு நிறைந்த ஒருகூட்டம் எழுத்தாளர் பெருமக்கள் ஒன்றுகூடிய மனதுக்கு உகந்த விழாவாக இருந்தது.அமீரக எழுத்தாளர் வாசகர்வட்டம் இணைந்து காணல் இலக்கிய அமைப்போடு நாற்பது ஐம்பதுபேர் கூடி  நடத்தப்பட்ட சிறப்பான விழாவினை ஒழுங்கமைவு செய்திருந்தவர்களில் முக்கியமான ஒருவராக எழுத்தாளர் ஜெஸிலாபானு அவர்களுமிருந்தார். அவரின் நூல்கள் எனக்குப் பரிசளிக்கப்படுவது வரையிலும் அவரை எழுத்தாளர் என்று தெரியாது.அவரை ஒரு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக அந்த நொடியில் அறிந்திருந்தேன்.ஆனால் 
ஜெஸிலாபானு அமீரகத்தில் வாழும் தமிழ் எழுத்தாளர்.வேற்று திசை என்னும் சிறுகதைநூல் மற்றும் இறைதூதர் மூஸா நபி மற்றும்  முஹம்மது நபி(ஸல்)பற்றியுமான மூன்று முத்தான  நூல்களை எழுதியிருக்கிறார்.வியப்புகள் வாழ்வில் மெல்ல மெல்லத்தான் நிகழ்ந்தேறுகின்றன. இது அவரின் எழுத்துப் பற்றிய பதிவு.அவர் தன் சிந்தனைகள் மீது தன்னளவில் மிகத் தெளிவான கருத்துக்களைக் கொண்டிருக்கிற ஒரு ஆளுமையான பெண்மணி. 
துபாய் வானெலியின் தமிழ் பண்பலை நிகழ்வுக்கு என்னை அவரின் வாகனத்திலேயே அழைத்துக் கொண்டுபோய் நிகழ்வை சிறப்பித்தார்.வானொலியில் என்னிடம் நிகழ்த்தப்பட்ட நேர்காணலை அவரின் முகநூல் பக்கத்தில் நேரடி காட்சிப்பதிவாய் வெளியிட்டு மேலும் சிறப்பாக்கினார்.வானொலி அறிவிப்பாளர்களுக்கு எழுத்தாளர் என்பதைவிட வதந்தி வெப் தொடரில் காவல்துறை அதிகாரியாக நடித்தவர் என்பது கொஞ்சம் கூடுதலான பெருமிதமாகத்தான் தெரிந்தது போலும். எழுத்தாளனைவிட நடிகன் சமூக மதிப்பில் உயர்ந்திருக்கிறான். ஒருமணி நேரம் அந்த நிகழ்வை நிறைவு செய்துவிட்டு  அந்த நண்பகல் உணவை நண்பர் எழுத்தாளர் மற்றும் கேலக்ஸி பதிப்பாளர்  பாலாஜி பாஸ்கரோடு இணைந்து மேலும் சிறப்பாக்கினார். நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு ஆட்டின் காலை நாங்கள் கூட்டாக உண்டு களித்து உரையாடி மகிழ்ந்த நினைவு இனிமையாக மனதில் கிடக்கிறது.
 அந்த உணவுக்குகூடம் மிகச்சிறப்பான பாரம்பரியம் கொண்டதாக இருந்தது. பலவகையான மந்திவகைஉணவுகளை வளைகுடா நாடுகளில்  உண்டு மகிழ்ந்த நினைவுகளிருந்தாலும் அந்த துருக்கி உணவகத்தின் அன்றைய மதியம் நாங்கள் உண்ட மந்தி உணவு அபரிமிதமானது.
பிரயாணத்தில் வாகனத்தை இயக்கிக்கொண்டே அவர் சினிமா, குறும்படம், இலக்கியமென சீரான உரையாடல்களை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.ஃபிஷ் ஆண்ட் பிளைண்ட் என்ற ஒரு குறும்படம் பற்றியும்,கலைவடிவங்கள் மொழியற்று பறவையைப் போல பறந்துவிடுகின்றன எனவே சிறிய படங்களை நாம் மொழியற்று உலகின் உணர்வுகளில் கலக்கவிடுவதைப் போல  உருவாக்குதல் சிறப்பாக இருக்குமென்ற பேச்சு நீண்டு போனது.  தொடர்ந்த பயணத்தில் வெளியே இந்த உலகின் மாண்புமிக்க நாடுகளில் ஒன்றான துபாயின் வெளிப்புறக் காட்சிகளை ரசித்துக் கொண்டே கதை,திரைப்பட அனுபவம் என  அவரிடம் உரையாடியது அவ்வளவு மகிழ்வான தருணமாக இருந்தது.
நான் ஷார்ஜாவிலிருந்த நாட்களிலேயே அவரின் சில சிறுகதைகளை வாசித்தேன்.எப்போதும் காலையில் எழுந்ததும் நான்கைந்து பக்கங்கள் படிப்பதை வாடிக்கையாக கொண்ட எனக்கு ஆசிபின் வீட்டில் நல்ல நூலகம் ஒன்றிருந்தது உதவிகரமானதாக இருந்தது. ஜெஸிலாவின் எழுத்து கதை,கட்டுரை, கவித்துவம்,சித்தாந்த தர்க்கமென எல்லாம் கலந்த கலவையாக இருக்கிறது.அதுவும் ஒரு சுவைதான்.அவர் தன்னைச் சுற்றி நடப்பவைகள் மீது கடும் அவதானம் கொண்டவராக இருக்கிறார்.அந்த அவதானமே அவரது எழுத்தாகவும் இருக்கலாம்.எனது வகுப்பாசிரியர் சொல்லுவார் மனதில் தோன்றுவதை தைரியமாகச் சொல்லிவிட வேண்டும் தயக்கம் மிக மோசமான குணங்களில் ஒன்று என்று.ஜெஸிலா தைரியம் கைவரப்பெற்றவர் தனக்குத் தோன்றியதை முன்தீர்மானங்களற்று  எழதியிருக்கிறார். அவரின் எழுத்துகள் கேள்விகளை முன்வைக்கின்றன.நாம் யாரிடம்தான்  கேள்விகளுக்கு பதில் இருக்கிறது. வாழ்வின் இலட்சிய பயணத்தில் எத்தனை வழிமுறைகள் இருக்கிறது என்று கேள்வி கேட்கப்படும் இடத்தில் ஒருவர் விரல்மடக்கி எண்ணத்துவங்குவார்.கேட்டவர் சொல்லுவார் எண்ணிக்கையெல்லாம் கிடையாது இந்த உலகில் எவ்வளவு மனிதர்கள் இருக்கிறார்களோ அதே அளவு எண்ணிக்கையில் வழிமுறைகளும் இருக்கிறது. உண்மைதான் ஒன்று,இன்னும் ஒன்றுக்கு உதாரணமில்லை. பிரபஞ்சத்தின் எண்ணிலடங்கா மனங்களின் ஒருதுளியாக நம் மனம் இருக்கிறது. 
2019ல் வெளிவந்திருக்கும் பத்து சிறுகதைகள் கொண்ட வேற்றுதிசை என்கிற இந்நூலில் "அவன் அப்படித்தான்" என்கிற கதையைத்தான் நான் முதலில் வாசித்தேன்.
மூன்றாம் பாலினமாக ஒருவன் தன்னை உணர்ந்து  அறியப்படும் தருணத்தை ஒரு மனுசி அங்கீகரிப்பதாக கொள்வதென்பது ஒரு உயர்ந்த நேசம்தானே.அதிர்ச்சிகரமான ஒன்றின் பொருட்டு நாம் நடுங்கி நின்றுவிடாமல் அதன்மீது அன்பை, கரிசனத்தை, முன்வைப்பதென்பது ஆகப்பெரும் மனதின் திறப்பாக அவதானிக்க இயலும். சு.சமுத்திரத்தின் வாடமல்லி நாவலை நீண்ட காலம் முன்பே வாசித்த அனுபவம் அவன் அப்படித்தான் கதையை சுவீகரிக்க உதவுகிறது. அந்த கதையின் பாடுபொருள் ஆச்சிரியமானது. இதன் நிமித்தமாக ஜெஸிலா நம் மதிப்புக்குரியவராக மாறுகிற ஒரு கதைக்களமும் கூட. இந்தக் கதையின் தாக்கத்தோடுதான் மற்றைய கதைகளை அனுகினேன். அவரின் மேலும் சில கதைகள் கதைகளாக முற்றுப்பெறவில்லை. கதைகள்,கதைகளாக முற்றுப்பெற வேண்டிய யாதொரு கட்டாயமுமில்லை.மிகப்பெரிய விசயங்களும் கடும் தர்க்கங்களுமாய் எடுத்தாளப்பட வேண்டியவைகளை அனாயசமாக அவர் அதன் மீதேறி கடந்து போகிற ஒன்றையும் இயல்பாகச் செய்கிறார்.சில நேரங்களில் சில மனிதர்கள் கதை மனிதர்கள் நம்பிக்கைக்கும் வாழ்வுக்கிடையேயும் கொள்ளும் முரண்.நம்பிக்கைகளின் வழி நிகழும் சந்தர்ப்பவாதங்களைக் கேள்வியாகக் கேட்கிறார்.இந்த கேள்விகளால் தன் மீது படியும் அபிப்ராயங்களைப் பற்றியும் இந்த கதைச் சொல்லிக்கு கவலை இல்லை.கேள்விகளை குவித்தவண்ணமிருக்கிறார்.


அலுவலக மேலாண்மை,குடும்ப மேலாண்மையென இடையறாத கடும் பணிச்சூழலின் நடுவே இவர்கள் எழுதுவதென்பதே ஒரு சாகசம்தான். இந்த சாகசத்துக்காகவே இவர்களை வாழ்த்தலாம்.எழுத்து ஒரு அர்த்தத்தில் இவர்களை புத்துயிர்ப்பாக்குவதாக தோன்றுகிறது.


 கதைகளல்லாத இன்னொரு பங்களிப்பாக நபிமார்கள் வரலாற்று போதனைகள் வரிசையில் அவர் குழந்தைகளுக்கானதாக  உருவாக்கியிருக்கும் "நம் நாயகம்"
ஜெஸிலா பானுவின் மற்றுமொரு சிறப்பான பங்களிப்பு.
நபிகள் நாயகம் இவ்வுலகில் 63 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். அவர்களுக்கு அவர்களின் நாற்பதாவது வயதில் நபித்துவம் கிடைக்கிறது. அன்றிலிருந்து அவர்கள் மறைந்த 63வது வயதுவரையிலும் 23 ஆண்டுகளாக அவருக்கு அருளப்பட்டதுதான் இஸ்லாமியர்களின் புனித நூலான திருகுர்ஆன்.அவருக்கு அருளப்பட்டது திருகுர்ஆனாகவும் அவர் தனக்கு அருளப்பட்டதின் வாயிலாக வாழ்ந்து காட்டிய வாழ்க்கை முறை ஹதீஸ் என்று அழைக்கப்படுகிறது.
நம் நாயகம் என்கிற இந்த சிறப்பான நூலை நாயகத்தின் 63 ஆண்டுகள் உலகியல் வாழ்வை குறிப்பிடும் வகையில்  63 தலைப்பில் நமக்குத் தருகிறார்.
குழந்தைகளுக்கான நூல்வடிவங்களைச் செய்கிறவர்கள் மிகக் குறைவு.அவர்களிடத்தில் ஒரு பண்பை, மாண்பை, வளர்க்க வேண்டுமென அகவிருப்பம் எல்லோரிடத்திலும் இருக்கும் என்றாலும் அதற்கான செயல் வடிவங்களை எப்படி உருவாக்குவது என்பதுதான் இன்று மனிதர்களிடத்தில் சவாலான விடயமாக இருக்கிறது. நீதிக்கதைகள், நீதிபோதனைகள் என  ஏராளமான நூல்கள் பொதுவில்  இருந்தாலும் கூட மானுட வாழ்வியலின் அறம் பற்றிய செய்திகளை முதன்மையாக் கொண்டு ஒரு பண்பாட்டைக் குழந்தைகளிடமிருந்து துவங்குவதற்கான அழகிய பணியை நம் நாயகம் சிரமேற்கொண்டு செய்கிறது.ஜெஸிலாவுக்கு இந்த எழுத்துமுறை  அழகாகக் கைகூடுகிறது. இதன் தொடர்ச்சியாக வந்துள்ள இறைத்தூதர் மூஸா பற்றிய மற்றொரு நூல் இன்னும் அவரின் இந்த பணி தொடரும் என்பதற்கான வரைவாக இருக்கிறது.சின்னச் சின்னதாகப் பெருஞ்செய்தி சொல்லும் அன்பால் நிரம்பிய சேகரமாக நம் நாயகத்தைக் குறிப்பிடலாம்.
தூதர் மூஸா(ஸல்) மற்றும் ,தூதர் முஹம்மது(ஸல்) வாழ்வுப்  பகுதிகளாக வந்துள்ள இந்த நூல்கள் அழகுமிளிரும் அற்புத நூல்வடிவமாக வந்திருக்கிறது. அதன் ஆக்கமே குழந்தைகளிடம் ஈர்க்கும் விதமாக ஒரு நற்பண்புகளை உருவாக்கி வளர்க்கும் முனைப்பு கொண்டதாக அமைந்திருக்கிறது.

No comments:

Post a Comment

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்                    இன்னொரு சாயல்                            எம்.மீரான் மைதீன்          ...