Thursday 4 May 2023

பலாமரம் நிற்கும் வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருக்கிறான்



2 லட்சம் லிட்டர் கொள்ளளவு தண்ணீர் தொட்டியின் உயரத்திலிருந்து குறுகிய இரும்புப்படிகள் வழியாக கீழிறங்கிக்கொண்டிருக்கின்றேன்...

விசாகன்
தேனி
---------------------------------------------------------------
ஒருவர் அன்றாடம் கடந்துசெல்லும் தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் இரண்டு பக்க அளவிலான எழுத்தால் நிறைப்பவரின் குருதியோட்டம் தாளலயமிக்கது. அவரின் மனமோ தானியங்கி ரெக்கைகளைக் கொண்டது. அவர் கையாளுகின்ற புனைவுவெளி பூமியைப் போன்று உலகையும் சுற்றும், தன்னைத்தானேயும் சுற்றிக்கொள்ளும். அதிலும், எவருடைய பாணியையும் பின்பற்றாது, உலகளாவிய முன்னோடிகளை சுட்டிக்காட்டி உதாரணப்படுத்தாது தனக்கான ஒரு வெளி உருவாக்கி, அதற்குள் உருண்டு புரளும் உத்தியால் வாசகனைக் கட்டிப்போடும் கதைசொல்லியாக ஒருவராக இருப்பாரெனில் அவர், தன்னுடைய படைப்புளின் வழியாக, பிறர் உள்ளத்தைச் சுடர்விட்டு எரியச் செய்கின்றவராகிறார். அந்த வகையில், கதையின் தலைப்பின் வழியாகவே வழுவழுப்பேற்றிய கேரம் போர்டில் முழுவீச்சில் உந்திவிடப்பட்ட "ஸ்ட்ரைகர்" போன்று சுற்றிச் சுழன்று பல திசைகளில் நம் மனதை மோதச் செய்யும் "புனைவுகோடி" (புண்ணியகோடி போன்று) மீரான் மைதீனின் சமீபத்திய "பலாமரம் நிற்கும் வீட்டிற்குக் கிளம்பிக்கொண்டிருக்கிறான்" என்ற சிறுகதைத் தொகுப்பு நம்முள் தாளலயம் மீட்டுகிறது. 112 பக்க அளவில் ஏழு கதைகளைக் கொண்ட இத்தொகுப்பிற்கு, "பெயல்" ஆய்விதழின் ஆசிரியர் செந்தில்குமார் ஒரு Scanned அணிந்துரை வழங்கியுள்ளார்.


சில நேரங்களில் குழந்தைகள் தன்னையறியாது அடையும் பரமானந்தத்திற்கு இணையானது ஒரு புனைவின் வழி வாசகன் தன்னை அறிந்து அடைகின்ற ஆனந்தம். பரமானந்தத்தின்பொது குழந்தை வெளிப்படுத்தும் மழலை தோய்ந்த குதூகலச் சத்தத்தை வாசகன் தன் மனதளவில் உணர்வது அந்தக் குழந்தையும் அடையாத உச்சம். அதுபோன்ற பரமானந்தத்தையும் உச்சத்தையும் தருகின்ற படைப்பாளிகள் வரிசையில் நின்று மீரான் மைதீன் சிரிக்கிறார்.

தொகுப்பில் உள்ள ஏழு கதைகள் குறித்து எழுத நினைத்தால் தொகுப்பைவிட பக்கங்கள் அதிகமாகிவிடும் பேரானந்தம் வாய்த்துவிடும். முதல் கதையைப் பொருத்தளவில், "ஒரு வீட்டில் மட்டும் வாழ்ந்து வாழ்க்கையை முடித்துக்கொள்வது என்பது ஒரு சாபக்கேடு. ஆனால், கேடுகெட்ட அந்த சாபத்தை எடுத்துப் போர்த்திக்கொள்கின்ற வகையிலான பயணமே நம்முடைய நோக்கமாக இருக்கிறது" என்ற கருத்தைப் பதிவு செய்துவிட்டு, என்னளவில் அதிகமாக ரசித்த 3வது கதையான, "மாமரத்தின் அம்மா அப்ப மற்றும் வளர்ப்புத் தந்தையின் கதை" என்ற கதையை மாத்திரம் சொல்ல விரும்புகிறேன். நட்டுவைத்து வளர்த்து பராமரிக்கின்ற ஒரு மரம், அதை நட்டவன் நேரில் வந்து தனது பெயரை உச்சரித்தால், அந்த மரம் தலையசைத்து இன்பமுற்று இன்பம் தரும் என்ற கற்பனை அல்லது செய்தி அல்லது உண்மை அல்லது பொய், நமக்குள் ஏற்படுத்துகின்ற ரசவாதம் என்ன...? "மனம் நினைவுகளை காலத்தின் தன்மை மாறாமல், உருவங்களைக்கூட மாற்றாமல் அற்புதமான காட்சியாகவே தந்துவிடுகிறது' என்று மீரான் மைதீன் சொல்வதைப் போல, மரம் குறித்த இந்தப் புனைவு சொல்லாத பல கதைகளை நமக்குள் ஊற்றெடுக்கச் செய்கிறது. இக்கதையில் ஒரு இடத்தில்,

அவள்: "மரம் மற்றொரு மரத்துடன் பேசுமா....?"
அவன்: "பேசிக்கொள்ளும், காதல் செய்யும்"
அவள்: "ஆனால் ஏமாற்றாது"

என உரையாடல் இருக்கிறது. எனவே நான் முதலில் குறிப்பிட்டதைப் போல நொடிக்கு ஒன்றிரண்டு பக்கத்தை எழுத்தால் நிரப்பும் திறனை நாம் மீரான் மைதீனின் எழுத்தில் உணர முடியும். அதாவது "மரம் மற்றொரு மரத்துடன் பேசுமா...? நமக்குள் கற்பனை விரிகிறது, "பேசிக்கொள்ளும், காதல் செய்யும்" நம்மனம் பறக்கத் தொடங்குகிறது. "ஆனால் ஏமாற்றாது" மனம் எதார்த்த வாழ்க்கையின் அனுபவங்களை அலசி ஆராய்கிறது. ஆக, எது நம்மை நமக்குள்ளான சோதனை முயற்சியைச் செய்ய உந்தித் தள்ளுகிறதோ, அது நம்முடைய மனதையும் வாழ்வையும் நேர்மை குலையாது, இழப்புகளை ஈடுகட்டி மேன்மையடையச் செய்கிறது. மீரானின் எழுத்து அதைச் செம்மையாகச் செய்கிறது.


மீரான் மைதீனின் கதைகளில் அடர்த்தியும் தெளிவும் எளிமையும் பின்னிப் பிணைந்திருப்பது ஆச்சரியப்படத்தக்க அதிசயம். பயிற்சியாளர்களுக்கெல்லாம் பயிற்சியளிக்கின்றவரின் தலைமைப் பண்பும், திறமையையும் போன்ற ஒரு இலக்கியச் செயல்பாடும், அதன் மூலம் ஒரு செறிவான உரையாடலை தன் கதைசொல்லும் திறன் மூலம் நமக்குள் நிகழச் செய்கின்ற மீரான் மைதீனின் இலக்கியச் செழுமையும்  நம்மை ஆரத்தழுவி ஆட்கொள்கிறது.

No comments:

Post a Comment

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்                    இன்னொரு சாயல்                            எம்.மீரான் மைதீன்          ...