Wednesday 3 May 2023

அமீரகத்திலிருந்து மலையாளத் திரையோரம்

ஆமிரகத்திலிருந்து மலையாளத் திரையோரம்
                  எம்.மீரான் மைதீன்



பயணங்கள் புதிய அனுபவங்களைத் தரும் அதுவும் வாழ்வில் நாம் முன்பொருக்கிலும் பெறாத அனுபவங்களாக இருக்கும்.2020 ல் ஒருமுறை தோஹாவிலிருந்து ஒமானுக்கு பயணப்பட்டிருந்தேன் அப்பயணத்தில் அரைமணிநேரம் சென்று பூமியில் வளமாய் தெரிந்த நகரத்தைக் காட்டி அருகிலிருந்த நண்பர் இதுதான் துபாய் என்றார்.நான் ஜன்னலோரமாய் கீழே பார்த்தேன்,அப்போதுதான் இருள் பரவத்துவங்கிய நேரமென்பதால் அந்த நகரம் மின்னொளியில் மின்னிக் கொண்டிருந்தது.அப்போது மனதில் தோன்றியதுதான் துபாய்க்கு ஒருமுறை பயணம் செய்ய வேண்டுமென்பது.மனதில் ஒன்று தோன்றும்போதே அது வளரத் துவங்கும்.அதன் வளர்ச்சியை நாம் ஆராதிப்பவர்களாக இருந்தால் அந்த ஆராதனை பலன் செய்யாமல் விடுவதில்லை.


2022 ன் மத்தியில் மிகத்தீவிரமாக "திருவாழி" நாவலை எழுதிக் கொண்டிருந்த நேரம்.தீவிரம் என்றால் மிக உச்சமான எழுத்துத் தன்மை.எழுத்து எப்போதும் அப்படித்தான் மெல்லத்துவங்கி பின்னர் பெரும் வேகமெடுத்து நம்மை அதன் விசைக்கு இழுத்துக் கொண்டு போகும்.அப்படியான ஒரு தவநிலையிலிருந்த நேரத்தில் நெஞ்சம் நிறைந்த அன்புத் தோழமை ஒருவர் கேட்டார் ,நாவலை எங்கு வெளியிடப் போகிறீர்கள் என்று.அஜ்னபி நாவலை சென்னையில் வெளியிட்டோம் இதையும் சென்னையில் வெளியிடலாம் என்றுதான் எண்ணுகிறேன் என்றதும் துபாயில் வெளியிடலாமா என்றார்.
கேள்விகள் மெல்ல மெல்ல முளைக்கின்றன.பார்க்கலாம் என்றபோது பார்ப்போமென்ற தோழமையின் உற்சாகத்தில் சகோதரர் ஆசிப் மீரான் தொடர்பில் வந்தார்.மெல்ல நகர்ந்து  நகர்ந்தது.2023 மார்ச் 11ம் தேதி துபாயில் நாவல் வெளியீடு என்று உறுதியானது.அருமை அண்ணன் எழுத்தாளர் ஆப்தீன் அவர்கள் வெளியிட்டு அறிமுகப்படுத்த வேண்டுமென நான் கேட்டுக் கொண்டேன்.நான் இப்போது எழுத விரும்புவது நாவல் வெளியீட்டு நிகழ்வு பற்றியது மட்டுமல்ல ஆசிப் மீரானின் மலையாளத் திரையோரம் நூலைப் பற்றியும் பயண அனுபவங்களையும் இணைத்து கொண்டு ஒரு கதை பேசலாம் என்றுதான்எண்ணுகிறேன்.

குமரி மாவட்டத்துக் காரர்களுக்கு நிலவியல் ரீதியாகவும் பண்பாடு கலாச்சாரம் பண்டிகை என எல்லா கொண்டாட்டங்களிலும் சில திண்டாட்ங்கள் உண்டு.நெல்லை எங்கள் எல்லை குமரி எங்களுக்குத் தொல்லை என்ற கலைஞரின் அடுக்குமொழி ரொம்பவும் பிரசிசத்தமானதும்கூட.நாங்கள் ஆரல்வாய்மொழி கடந்து போனால் எங்களை மலையாளி என்றும் சேட்டன் என்றும் அழைக்கிறார்கள்.
மறுபக்கம் களியாக்காவிளைத் தாண்டி போனால் அவர்கள் பாண்டி என்று அழைப்பார்கள்.நாங்கள் பாண்டியா,மலையாளியா அல்லது இரண்டுக்கும் நடுவிலா?விடையற்ற கேள்விகள் நிறைய உண்டு.நான் பலரோடும் சொல்வதுண்டு இது ஒரு பன்முகப் பண்பாட்டுப் பிரதேசமென்று. உண்மைதான் எனவேதான் இலக்கிய உலகின் மிகக் காத்திரமான படைப்பாளிகளெல்லாம் இந்த ஊரிலிருக்கிறார்கள் என்பதனை மேற்குறிப்பிட்ட வாக்கியத்தின் உதாரணமாகக் கொள்ளலாம்.


தமிழ்நாட்டில் சமீபகாலமாக பரவலாக மலையாளப் படங்களைக் கொண்டாடுவதைப் பார்க்க முடிகிறது.கொண்டாட்டமென்றால் சாதாரணக் கொண்டாட்டமல்ல ஆர்த்திமூத்த கொண்டாட்டம்.நான் யோசிப்பதுண்டு ஏன் இவர்கள் இப்படி கொண்டாடுகிறார்கள்.தமிழ் கலைஞர்கள் சாதியாகப் பிரிந்து கிடக்கிறார்கள் அதன் வன்மம் காரணமாக அருகிலிருப்பவனைக் கொண்டாட மறந்து தூரத்திலிருப்பவனைக் கொண்டாடுகிறார்கள். கொண்டாட்டமென்பது ஒரு அழகான மனோபாவம்,அவற்றை தவிர்க்க இயலாத மனிதன் அருகிலிருப்பவற்றின் மீது அடையாளச் சிக்கல்கள் குவிந்து கிடப்பதால்,அதல்லாத  தனக்கு சவுரியமான ஒன்றை எடுத்துக் கொள்கிறான் என்கிற யோசனை சரியா என்றும் தெரியவில்லை. நாங்கள் மலையாள சினிமாவை நேரடியாகவே பார்க்கிறோம். கேரளத்தின் தலைநகரம் எங்களுக்கு மிகவும் அருகிலிருக்கிறது.அந்த மொழியும் கூட ஓரளவுக்கு மேலே எங்களுக்கு பரிட்ச்சயமானதுதான். ஆனால் சென்னைவாசிகள் ஏன் இப்படி கொண்டாட வேண்டுமென யோசனை வரும்போதே கலை,இன்றைய காலத்தில் அதன் எல்கைகளை பரப்பி  கால தேச பிரதேச வெளிகளைக் கடந்து மனித மனங்களுக்குள்வியாபித்திருக்கிறது என்கிற உண்மை புலப்படுகிறது. புத்தாயிரத்துக்குப் பிறகான காலம் உண்மையில் உலகினை நமக்கு வசப்படுத்தி தந்திருக்கிறது.இன்று ஒரு சினிமாவை நாம் நமக்கு புரிகிற மொழியில் இருக்குமிடத்திலிருந்து பார்க்க வரம் பெற்றவர்களாக இருக்கிறோம்.கால் நூற்றாண்டுக்கு முன்னரே ஔிப்பதிவாளர் செழியன் அவர்கள் உலக சினிமாக்களை தமிழில் அறிமுகப்படுத்தி இரண்டு நூல்களை வெளியிட்டிருக்கிறார். ஈரான் திரைப்படங்கள் மற்றும் கொரியா,ஜப்பானிய படங்கள் என உலகின் முக்கியமான சினிமாக்கள் நம்மை வந்தடைந்தன. உளவியலாளர் மற்றும் எழுத்தாளரான நண்பர் ஷபி அவர்கள் ஈரானிய சினிமாவை அறிமுகப்படுத்தி நூல்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை.இன்னும் நம் பார்வைக்கு வராத பலரும் இப்பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர்.

மலையாள சினிமா பற்றி நான் சிறுவனாக இருந்த காலத்தில் பொதுவான அபிப்ராயம் என்பது அத்தனை உசிதமானது அல்ல. இவன் மலையாளப்படம் பார்க்கிறான் என்றால் அதன் அர்த்தம் நிறைய நகைப்புக்குரியது.ஒவ்வொரு மாவட்டங்களிலும் பாலியல் கிளர்ச்சியைத் தூண்டும் மலையாளப்படங்கள் திரையிடுவதற்கென்றே திரையரங்குகள் இருந்தன.ஐஞ்சரைக்குள்ள வண்டி என்கிற தலைப்பு கடும் கவனம்பெற்றதாகும்.ஆனால் தொண்ணூறுகளின் இறுதியில் இவை முற்றிலுமாக மாறி மலையாள சினிமா ஒரு புதிய பாய்ச்சலை நிகழ்த்தியது.அது தன்மீது படிந்து கிடந்த முந்தைய எல்லா அபிப்ராயங்களையும் துடைத்தெறிந்து வேறொரு பக்கத்தை உலகுக்கு காட்டியது.நான் ஆசிப் மீரானின் "மலையாளத் திரையோரம்"விமர்சன கட்டுரை நூலை முன்பே அறிந்திருந்தாலும் எனக்கு வேறு எங்கும் வாசிக்க கிடைக்கவில்லை.துபாய் பயணத்தில் அவரின் அறையில் உடனிருந்த நாட்களில் எனக்கு நூல் கிடைக்கப் பெற்றது.ஆசிப் மீரான் என்னை, பழமையாக வடிவமைக்கப்பட்ட துபாய் நகரத்திலுள்ள ஒரு மார்க்கெட்டுக்கு அழைத்துப் போனார்.அத்தனை சௌந்தர்யம் ஒரு நூறு வருடங்களுக்கு முந்தய காலத்தில் இருந்ததைப் போல,காலம்தான் எவ்வளவு அழகானது.அந்த இரவு உணவை நாங்கள் சார்ஜாவிலுள்ள ஆதாமிண்ட சாயக்கடை என்கிற உணவு விடுதியில் உண்டு மகிழ்ந்தோம்.
அந்தக் கடையும் மிகப் பழமையான காலத்தின் தன்மையோடு வடிவமைக்கப்பட்டிருந்தது.முந்திய இரவும் இங்கு தேநீர் அருந்துவதற்காக நானும்  ஆசிப்,சென்ஷீ,மற்றும் ஆப்தீன் அண்ணனுமாக வந்திருந்தோம். அந்தக் கதைகளை உயிர்த்தலம் பற்றி எழுதும்போது விரிவாக எழுதுவேன். இப்போது இந்த பழங்கதையோடு 
ஆசிப் மீரானின் மலையாளத் திரையோரத்துக்கு வந்து விடலாம்.
அவர் அன்பும் நல்ல உளப்பூர்வமான  அணுசரனையுமிக்க மனிதர்.நாம் இந்த நவீன உலகில் பலரிடமும் இதை காணவோ உணரவோ முடியாது.ஒரு சரத்தைக் கழிப்பதுபோல கடமையாக முடித்துக் கடந்துவிடுகிற மானிட வாழ்வில் நேசத்தை நீடித்து வைத்திருப்பது ஒரு பெரும் பண்புதான். இப்படியான பண்பு கொண்ட நண்பரின் நூலை அவரின் அறையிலிருக்கும் போதே வாசிக்க இயன்றது.அவருக்கு மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால் அவன் தனது வாழ்வின் சில காலங்களை கல்விக்கா கேரளாவில் வாழ்ந்திருக்கிறார்.மலையாள மொழியும் அதன் பண்பாட்டு அம்சங்களும் அவருக்கு மிக நெருக்கத்திலிருக்கின்ற ஒன்றாகும். இந்த ஒன்றுக்குள்ளிருந்தே  பத்தொன்பது மலையாள சினிமாக்களை இந்த நூலில் அறிமுகப்படுத்துகிறார். அவருக்கே உரித்தான பாணியில் மெல்லிய மற்றும் மெல்லியத் தன்மையற்ற விமர்சனங்களையும் செய்கிறார். நான் கிட்டத்தட்ட அவர் குறிப்பிடுகிற பெரும்பான்மையான சினிமாக்களைப் பார்த்து விட்டதால் எனது வாசிப்பில் ஆதீத ஆர்வமிருந்தது.முதலில் எந்நு நின்டெ மொய்தீன் வாசித்தேன். மறக்கவியலாத சினிமாவாக நான் இப்போதும் கவனப்படுத்துகிறேன். நான் ஏன் ஆசிப் மீரானின் இந்த நூலை மைய்யமாகக் கொண்டு இந்த விடயத்தை எழுதுகிறேன் என்றால் இந்த பத்தொன்பது சினிமாவை கைக்கொண்டால் நீங்கள் மலையாள சினிமாவின் ஒரு காலத்தைக் கைகொள்ள இயலும்.காலத்தைக் கைகொள்ளுதல் அத்தனை சுலபமானதல்ல அது ஒரு கடும் தவம்போல.நூலில் ஆசிப் ஷிக்காரில் துவங்கி பிராஞ்சியேட்டன் த செயிண்டில் முடிக்கிறார்.இந்த சினிமாக்கள் கேரளத்தின் பல்வேறு மாறுபட்ட பண்பாடுகள் ஒன்றை ஒன்று ஐக்கியபடுத்திக் கொண்டு வாழும் பரிமாணங்களின் ஒரு திறப்பாகக் கிடக்கின்றன.இன்று வரலாறு திருடப்பட்டு அடுத்தாக புவியியல் திருட்டு துவங்கியிருக்கிற காலத்தில் ஆசிபின் இந்த பத்தொன்பது கட்டுரைகள் நமக்கு ஒரு காலத்தை பார்க்கத் துணை புரிகிறது என்பதுதான் இந்த நூலின் முக்கியத்துவமாகப் பார்க்கலாம்.

ஆசிப் மீரானின் சிறுகதைகளை ஷார்ஜாவில் தங்கியிருந்தபோது  அவரின் பழைய கோப்புகளிலிருந்து வாசித்தேன்.அவர் அதனை நூலாக வர அனுமதிக்க வேண்டும். எப்படியான மனிதர்கள் நம்மிடையே இருந்தார்கள் என்பதனைஉலகுக்கு அறியத்தருவதுதான் கலையின் முக்கிய கூறுகளில் ஒன்றாக நான் கருதுகிறேன்.காலத்தைக் கபளிகரம் செய்து வைத்திருக்கிற இன்றைய மதிப்பீடுகளின் முன்பாக வசந்தகால மனிதர்களை உலவவிடுவதுதான் அதற்கு மருந்தாக இருக்கும்.

குறிப்பு.துபாய் பயண அனுப வரிசையில் ஆப்தீன் அண்ணனின் உயிர்த்தலமும் அவரோடு நடவாமல் போன முதலிரவும்" விரைவில் எழுதுவேன் என்று நம்புகிறேன்.

அன்புடன்
மீரான் மைதீன்
04/05/2023

3 comments:

  1. இந்த அனுபவங்களின் மேலும் சில பகுதிகளை எழுத இருக்கிறேன்.

    ReplyDelete
  2. சம்பவங்கள் ஒரு கதை போல வாசிக்க ரசனையாக இருக்கிறது.நூல் அறிமுகமும் சிறப்பு.வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நிறைந்த அன்பும் நன்றியும்

      Delete

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்                    இன்னொரு சாயல்                            எம்.மீரான் மைதீன்          ...