Thursday 11 May 2023

பெருவெளியில் விட்டெறியப்பட்ட கவிதை

          பெருவெளியில் விட்டெறியப்பட்ட கவிதை
                     -மீரான்மைதீன்

            பல அர்த்தங்களிலும் ஒரு சூஃபியின் மனம் என்பது பெண்மையின்,தாய்மையின் மனம் போன்றதுதான்.இதனோடு படைப்புமனமும் கலைமனமும் இசைவு கொண்டிருந்தால் அது மேலும் ஒரு ஆனந்த அனுபவமாகிவிடுகிறது.
சில படைப்புகளை வாசிக்க நேர்கையில் அதன் மைய்ய ஓட்டம் நமக்கு புலப்படும் போது நாம் அதற்குள் வெகுவாக ஈர்க்கப்பட்டு விடுகிறோம். நாம் தனித்தனியாக ஏராளமான அனுபவங்களின் குவியலாக இருக்கிறோம்.ஆனால் அனுபவங்களுக்கு நம்மிடம் தனித்தனியான பெயர்கள் இல்லை. அளவுகளுமில்லை.இவைகளின் அளவுகளாக நாம்தான் இருக்கிறோம். இலக்கிய வகைமைகளில் கவிதை தனித்துவமான அகப்பற்றுடையது என்பதால் கவிதைகளின் அனுபவத்தோடு சொல்லவியலாத ஈர்ப்பு மானிடசமூகத்துக்கு உண்டு. இதன் நிமித்தமாக கவிதைகள் நம்மை வந்தடையும்போது அது விசையாக இழுக்கவோ விலக்கவோ அல்லது இரண்டுக்கும் மத்தியில் ஒரு மாயம் போலச் சுழலச் செய்வதையோ செய்துவிடுகிறது.இது எல்லோருக்கும் ஒன்றுபோல நிகழவேண்டுமென இல்லை.அது தனித்த அல்லது ஒரு அலைவரிசையின் கூட்டு  மனப்பிரயாசங்களின் இயக்கம்.
       
   எனக்கு இப்புதிய ஆண்டில் கவிஞர் அம்முராகவின் ஔவையின் கள்குடுவை கிடைக்கப்பெற்றபோது மேம்போக்கான ஒரு வாசிப்புக்குப் பிறகு இப்போது முழுமையான மற்றுமொரு வாசிப்பு வசமாகியிருக்கிறது.இந்த மற்றுமொரு வாசிப்புதான் எனக்கு இவரின் கவிதைகள் மீது தனித்த மனப்பிரயாசங்களை உருவாக்கியிருக்கிறது.பொதுவாக கவிதைநூல்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வாசிப்புகளில் வேறு வேறு தனித்தனி அனுபவங்களைத் தரக்கூடியதாக இருக்கிறதென்பதை நாம் காலதேச வர்த்தமானங்களைக் கடந்து உணரமுடிகிறது.
கடலை மிக அருகில் எல்கையாகக் கொண்டு வாழும் நிலத்திலுள்ள உயிருக்கும், கடலற்ற நிலத்தைக் கொண்டிருக்கும் உயிருக்கும் இயல்பிலேயே  உண்டாகியிருக்கும் பார்வை நுட்பம் கவிதையில் மைய்யம் கொண்டு அது பிரதியில்  இன்னொரு காட்சிச் சித்திரமாகிற வியப்பை இத்தொகுப்பின் சிலக் கவிதைகளில் கண்டுணரமுடிகிறது.நாம் அறிந்தும் அறியாமலும் இயங்குவது போல கவிதையும் இந்த கூறுகளைக் கொண்டிருப்பதை உணரலாம்.
"கடலற்ற ஊரில் கடல்க்காரன் சொல்லும் கடல் கதைகளின் மீது நான் ஒரு  கப்பலில் பயணிக்கிறேன்."
இவ்வாறு இந்த தொகுப்பிலுள்ள பல கவிதைகளில் கடலின் மீதான ஈர்ப்பும் மயக்கமும் தொடர்ச்சியாக இயங்குவதின் ஆழம் கடலைப்போல இரகசியமாகவே கிடக்கிறது.

செங்காந்தாள்,அனிச்சம் என இரட்டைப் பிரிவுகளாக ஔவையின் கள் குடுவையிலுள்ள கவிதைகள் மனசுக்கும் இயற்கைக்குமிடையேயும், கனவுக்கும் நனவுக்குமிடையேயும் நிகழ்கின்ற பயணம்.
நீ நீயாக இல்லாமல் வா நான் நானாக இல்லாமல் வருகிறேன் என்பது போன்ற சூஃபிய மனோநிலையின் நிறைவான கலப்பு போல,பிரபஞ்ச பேரியக்க இயற்கையின் மீது எல்லையற்ற அன்புகொள்ளும் இவரின் கவிதைகள் உருவாக்கும் உலகம் இன்னொரு பேருலகின்  நிலையாக மாறிவிடுகிறது.


கவிஞர் எனக்கு அவரின் முந்தைய கவிதைத் தொகுப்பான ஆதிலாவிலிருந்து அறிமுகமானவர். இப்போது என்மீதும் என் எழுத்தின் மீதும் நிறைவான அன்பும் மதிப்பும் கொண்டவரும் கூட.எனது கலுங்குப்பட்டாளம் நாவலை வெளியீட்டுக்கு முன்பாகவே வாசித்து அவற்றின் செம்மையாக்கத்துக்கு துணை செய்தவர் இப்போது எனது புதிய நாவலான திருவாழியிலும் இதுபோன்றே அவரின் பங்கிருக்கிறது. ஆதிலா கவிதைநூலுக்கு சிறகிடம் கைமாறும் கவிதைகள் எனத் தலைப்பிட்டு நான் எழுதியிருந்த முன்னுரையில் அம்முவின் கவிதைகள் மனதின் கடினங்களை எடுத்து காற்றில் வீசிக்கொள்ளாமல் மென்மையாகப் படர்கிறது என்கிற ஒரு குறிப்பை எழுதியிருக்கிறேன்.இப்போது இரண்டாவது தொகுப்பாக வந்திருக்கும் இத்தொகுப்பு  மனதின் ஓசைகளை உயிரியக்க பிரபஞ்சவெளியோடும் இயற்கையின் எல்லா அம்சங்களோடும் மெல்லியச் சாரல் போல நனைத்துக் கொண்டே ஊடுபாவுகிறது. இது ஒரு அசாத்தியமான பாய்ச்சலாக அவரிடத்தில் நிகழ்ந்தேறியிருக்கிறது. ஒரு கவிதையில் ஒரு தேநீர்  கோப்பையில் மழையைப் பிடிக்கிறார் மழையின் துளிகளால்  நிறைந்த கோப்பையில் அவருக்குச் சொந்தமாக ஒரு நதியும் கடலும் கைகூடுகின்றன. பிரிதொன்றில் ஒரு நதிப்படுகையில் ரகசியமாய் வசிக்கும் இரண்டு மீன்களின் கதையைச் சொல்கிறார். இன்னொன்றில் நேவாவின் கலம் பற்றிக் குறிப்பிடும் கவிஞர் ஆழ்கடலில் கிடக்கும் சிதிலமான கப்பல்பற்றியும் புதிய குறியீட்டுத் தன்மை வாய்ந்த கவிதைகள் புனைகிறார்.

தமிழ்நாட்டின் நிலவியலில் மத்தியபாகமான மதுரையின் அருகே தேனியில் வசிக்கும் கவிஞரின் மனம் முழுவதும் கடல் பெருக்கெடுத்துக் கிடக்கிறது.நான் இந்த மாறுபட்ட நிலவியலிலிருந்து இந்த கவிதைகளை அணுகும்போது என்னை இவைகள் பிரமிப்பிலாக்குகின்றன.கடல்மீது அளப்பரிய ஈர்ப்புக்கொண்ட எனக்கு கவிதையின் கடல்பற்றிய அற்புதவெளியில்  பலகுறியீடுகளை வரைந்து செல்வதையும் அதன் உள்ளார்ந்த மனதின் ஓசைகளையும்  அவதானிக்க இயலுகிறது.
படைப்பு என்பது வெறுமனே மனித மூளைமண்டலத்தில் உண்டாகிற சிந்தனைகள் மட்டுமல்ல அது ஆழ்மனதின் அதீத ஏக்கங்களை புதிய வார்த்தைகளால் பொதிவதாகவும் இருக்கிறது என்பதை கண்டடையும் புள்ளியாக இவரின் கடல்பற்றிய கவிதைகளைக் காணலாம்.பரந்துபட்ட வெளிகளில் பிரவேசிக்கும்  இவரின் கவிதைகளை யாரேனும் இதன் அம்சங்களில் பார்ப்பார்களாவென எனக்குத் தெரியவில்லை.ஆனால் இவ்வம்சம் அவ்வையின் கள்குடுவையில் முழுக்கமுழுக்கப் பார்க்கப்படவேண்டிய அம்சமாகக் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதாக இருக்கிறது .

இந்த மானுட வாழ்வு விசித்திரமானது என்றால் பெண் வாழ்வு இன்னும் பலபடி மேலே விசித்திரங்களைக் கொண்டது. இயற்கையின் எல்லா அம்சங்களோடும் ஆலிங்கனம் செய்கிற கவிதைகள் பெண்ணுடல் பற்றிய கருத்துக்களை, சித்திரங்களை அனாயசமாக அடித்துக் கடந்து போகிறது."யோனிச் சுழியிலென் மூன்றாவது கண்ணை இப்படித்தான் திறந்து பார்த்தேன்" எனக் கவிதையொன்று முடிகையில் மீளமுடியாத மௌனச்சுமையேறிய ஒரு ஆண்மனம் நமக்குள் புரள்கிறது. சிலநேரங்களில் வார்த்தைகள் என்னை எடுத்தாட்கொண்டு உலவுகின்றன எனக் குறிப்பிடும் கவிஞரின் சிலவரிகள்  பெரும் நெருப்புக் குவியலுக்குள் புகுந்து கரிந்துபோகாமல்,ஒரு விளக்கைக் கொண்டுவருவது போன்ற செய்கைகளைக் கொண்டு அமைந்திருக்கிறது.இயற்கையின் மீதும் ஆதியின் மீதும் சிறு பெரு உயிரினங்களின்மீதும் கவிதையின் கண்கள் பார்க்கும் விதத்தில் ஒரு ஞானப்பார்வை உடையதாக தன்னை உருவாக்குகிறது.அர்த்தத்தை அவ்விடத்திலேயே வைத்துக்கொண்டு கவிதையின் மொழி ஔிவேகத்தில் பயணிப்பது சிலவற்றிலிருந்து ஒன்று அல்லது அதற்குமேற்பட்ட விதந்தோதும்  உண்மைகளாக இருக்கின்றன.

       நமக்கு ஏன் ஒரு கதை பிடிக்கிறது கவிதை பிடிக்கிறது என்கிற கேள்வியை முன்வைத்தால் நமது பிடித்தங்களுக்கு பல மாறுபட்டக் காரணங்கள் இருக்கலாம்.அவை ஒன்றுபோல ஒன்றிருக்காது.நாம் இங்கு ஏற்கனவே நமக்குள் பிடித்தமான விசயத்திலோ கருத்துகளிலோ இருந்துவருகிறோம் எனவே நமக்குப் பிடித்தமானவைகளில் ஒன்றோ அல்லது பலதோ நம்மை வந்தடையும் போது நமக்கு அது பிடித்தமானதாக நெருக்கமாகி விடுகிறது.இது ஒரு படைப்புக்குள்ளும் இயங்குகிறது. எனக்கு பூனைகள் ரொம்பவும் பிடித்தமானது.எனவே இந்த உலகில் யாருக்கெல்லாம் பூனைகளைப் பிடிக்குமோ,யாரெல்லாம் பூனைகளைப் பற்றிப் பேசுவார்களோ அவர்கள் எனக்கு எங்கிருந்தாலும் நெருக்கமாகி விடுகிறார்கள்.இத்தொகுப்பிலுள்ள முக்கியமான பத்துப் பதினைந்து கவிதைகள் பூனைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.இக்கவிதைகளோடு நான் இவ்வளவு சிலாகிப்பும் நெருக்கமாகவும் மாறிக்கொள்வதற்கு இந்த படிமங்களும் குறியீடுகளும் போதுமானது.இவைகள் எனக்குள் தகவமைக்கும் அனேக அர்த்தங்களும் அதன் வழி உருவாகும் சித்திரங்களும்  அலாதியான சுவையுடையது. பூனையின் பிளிறல் என்றொரு கவிதை கைவிடப்பட்ட பூனைக்குட்டிகளுக்காய்  கோபம் கொள்கிறது.புதரில் பதுங்கிய அந்த பிஞ்சு பூனைகளின் மியாவ் ஒலி ஒரு யானையின் பிளிறலைப் போலக் கேட்கிறது.இந்த கவிதையின் உளவியலை அதன் மனதை இந்த பிரபஞ்ச மனதோடு கொண்டு பிணைத்துவிடுதாக நான் கண்டுகொள்கிறேன். தனது துயரங்களை மௌன ராகமாக மென்குரலினும் குறைவான ஓசையில் பேசிக்கொள்கின்ற இந்தக் கவிதையின் குரல் ஒரு சிறு உயிரின் வாழ்வு இருப்புக்கான குரலை இந்த கவிதை மொத்தப் பெரும் குரலாக  யானையின் பிளிறலோடு ஆகப்பெரும் ஓசையாக்குகிறார்.இன்னொரு பகுதியில் பூனை,மீன் குறியீட்டில் நான் ஒரு கெண்டை மீனைப்போல துள்ளி விழுகிறேன்.நீ என்னை ஒரு பூனையைப் போலக் கவ்விக் கொண்டுபோ என்பதன் முரண்பட்ட அர்த்ததளம் சில விசித்திரங்களைச் சூடிக்கொள்கிறது.இந்த சித்திரமே ஒரு உச்சமான காட்சியாக மலருகிறது. இதனோடான பயணம் முற்றுப்பெறவிடாமல் துரத்துகிறது. எனவே இந்த வரிகளில் பூனையாக கவ்வுவதும் மீனாக ஒப்புக்கொடுப்பதும் அகவயச்சார்பின் வலி அல்லது இன்பம் சார்ந்த உணர்ச்சி பெருக்காலான  முரணாகவோ கவிதை வரைந்து போகிறது.
  
       தனிமனிதர்களின் அகத்தன்மைகள்,உணர்ச்சிப் பின்னணி, தனித்தன்மை ஆகியவற்றிற்கிடையில் ஒரு பொதுச் சராசரி மொழி நிலவுவதாக சசூர் குறிப்பிடுகிறார். இத்தொகுப்பிலுள்ள கவிதைகளை செங்காந்தள் அனிச்சம் என இரண்டு பிரிவாக வரையறுத்திருந்தாலும் அது மேலும் சில பகுதிகளாக விரிவடைகிறது. பெண்ணுடல்,இயற்கை,இயற்கையின் அம்சங்களில் காடு,மலை,கடல் மற்றும் வெளியின் அரூபங்கள், சிறுபூக்கள், பூனை,மீன்,யானை,என சிறுஉயிர்களில் நிகழும் கவிதையின் பயணம் மேலும் உயரிய சில அம்சங்களாகிறது. ஒன்றையொன்று ஊடறுத்து செல்லும் கவிதையின் நிலப்பரப்பு ஒரு எல்லையிலிருந்து கடந்து பெரும் பார்வையைக் கொண்டிருக்கிறது.இது கவிதையின் போக்கிலோ அடுக்கிலோ மிக இயல்பாக வர்ணப்பூச்சுகளற்று உண்மையாக இருக்கிறது.ஒரு சிறு துவாரத்திலிருந்து பேருலகைப் பார்ப்பதும் பேருலகிலிருந்து ஒரு சிறு புள்ளியைப் பார்ப்பதுமான வினோத விளையாட்டைக் இந்தக் கவிதை தனக்கு வசமான பரப்பில் கொண்டாடுவதையும் அவதானிக்க இயலுகிறது. பெருங்கடலைக் காதல் கொண்டு பார்க்கும் கவிதையே, சிதிலமடைந்த பழைய படகின் இண்டில் சேகரமான மண்ணில் வளர்ந்த செடியின் சிறு பூக்களையும் கொண்டாடுகிறது. தன்னை இயற்கையோடும் இயற்கையை தன்னோடும் அனாயசமாக இணைத்துக்கொள்கிற நுட்பமான கவிதைகளை கண்டடைந்திருக்கிறார். பிரகாசமான ஒரு பூவின் பூப்பைப் போல வந்துதித்த யானை இருளில் இருளாகக் கிடக்கிறது என்கிற கவிதைவரிகளில் நாம் மயக்கமுறுகிறபோதே, அவர் இரகசியமாக யானையொன்றை கொசுவத்தில் முடிந்து வளர்த்து வருவதாக வரும் கவிதைக்குள் நாம் எண்ணிப் பார்க்கமுடியாத சித்திரக் குறிப்புகள் தோன்றி ஒரு  காட்சி இன்பத்துக்கு கொண்டு போகிறது. எனது தும்மலின் நிமித்தமாக அது வனத்தில் பிளர்கிறது.அல்லது அதன் பிளிர்தலின் நிமித்தமாக நான் தும்மலிடுகிறேன்.இதுபோன்ற கவிதைகளிலிருந்து நம்மால் கடந்தே போகவியலாது.
பெண்ணாலானது உலகு, பெண்தன்மையுடையது இயற்கையின் அம்சங்கள் .இந்த பிரபஞ்சத்தில்  உலவும் எல்லா உயிர்களுக்குள்ளும் வியாபித்திருக்கும் பெண்மையைக் கொண்டாடி கொண்டாடி கவிதைகள் ஒவ்வொரு முனையில் உற்சாகம் கொள்கின்றன.இதன் மொத்தக் கவிதைகளின் மையச்சரடு இதுவாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. நேசத்தை விதைத்து நேசத்தை அறுவடை செய்யும் ஔவையின் கள்குடுவை பேரனுபவமாக உணரமுடிகிறது.

ஒரு கவிதை நூலை பெரும்பாலும் நாம் இங்கு மேம்போக்காத்தான் பார்க்கிறோம்.அதற்குள் புகுந்து வெளியேறும் வித்தைகள் எப்போதும் ஒரு வாசகனுக்கு வாய்த்துவிடும் என்று சொல்ல இயலாது.கவிதை ஏராளமான அனுபவங்களைக் கொண்டிருந்தால் நாம் அதில் நுழைந்து வெளியேறும் போது அதன் சில அனுபவங்களைப் பெறுகிறோம்.இங்கே இது என்னை இவ்வாறு நீண்ட பேச்சுக்கு இட்டுச் செல்லக் காரணமாக நான் கருதுவது இக்கவிதைகள் எல்லாவற்றின் மைய்ய அரசியலாக அது பெண்மையைக் கொண்டாடக் கூவுவதை நான் உணருவதால்தான்.
சூஃபிய சிந்தனையில் பெண் உயர்வான ஓர் அம்சமாக இருக்கிறாள்.எனவே இது எனக்கு ஏற்புடைய குரல்."சக்தியாய் சிவனாய் இந்த தரணியிலாக்கியெனை " எனத் தொடங்கி மதுரமோடு உருவாய் எனை வகுத்தவா என பீரப்பா பாடுவார்.நாம் மதுரத்தின் உருவ அடையாளமாக இருக்கிறோம். ஔவையின் கள்குடுவையில் சக்தியே எல்லாமுமாக இருக்கிறாள்.அவள் மதுரமாக இருக்கிறாள்.ஆணாக பெண்ணாக கடலாக,காடாக,யானையாக,பூனையாக, போத்தலில் அடைபட்ட இரவாக, நதிப்படுகையாக,இரகசிய சீசாவாக, ஒரு பூந்தொட்டியில் நட்டு வைக்கப்பட்ட மீசையாக,இந்த கவிதைகளின் வெளியெங்கும் சக்திதான் மதுரமாகப் பரவி நிற்கிறாள். அவர்  குறிப்பிடுவது போல இம்முறை அவர் கவிதைகளை பெருவெளியில்தான் விட்டெறிந்திருக்கிறார்.எனவே அதனை நாம் கண்டடைய கொஞ்சமல்ல நிறைய மெனக்கெட வேண்டும். இத்தொகுப்பின் சாரங்களிலமர்ந்து  நீண்ட பேச்சுக்கு சாத்தியங்கள் இருக்கின்றன.

"குப்பியில் அடைபட்ட கப்பல்"

'நெடுங்கடலின் ஆழத்திலொரு மீனைப்போலப் பறக்கவோ
பெருவெளியிலொரு பறவை போல
நீந்தவோ வாய்த்திடாத இவ்வாழ்வு
குப்பியிலடைபட்ட கப்பலாய்
எல்லோருக்குமான ஆச்சரியமாய்
மிதக்கிறது

அற்புதம் தோய்ந்த கண்களின்
காட்சிப் பொருளாய்க் கிடக்கிறது குப்பிக்குள் கப்பல்

வந்து வந்து பார்த்துச் செல்லும்
எல்லா கண்களுக்கும்
குப்பியில் புகுத்தப்பட்ட கப்பலின் அதிசயம் தெரிகிறது

குப்பிக்கு வெளியே
சாகர சாட்சியாய் படரும்
என் காதலின் சுவாசம்
அதிசயம் பார்க்கும் கண்களுக்கும்
காற்றுக்கும் தெரியாது

குப்பியில் அடைபட்ட
அலங்காரக் கப்பல்
இதுவரையிலும் கடல் பார்த்ததில்லை

குப்பியில் அடைபட்ட நான்
கடல் கன்னியாக இருக்க
கனவில் இழைபவன் கடலாக இருக்கிறான்.
நான் நெடுங்கடலின் ஆழத்திலொரு
இறகு முளைத்த,
குப்பியின் கழுத்துப் பகுதியின்
இடர் கடந்து நீந்திப் பறக்கும்
மீனாவது எப்படி சாத்தியம்

கண்ணாடிக் குப்பியில்
அடைபட்டு அலங்காரப் பொருளான
கப்பலுக்கு குப்பி உடைத்தல்
அத்தனை சுலபமானதல்ல

காட்சிப் பெட்டகத்திலான இருப்பு
எப்போதாவது தூசு தட்டப்படும்
பொழுதுகளில் இளைப்பாறுகின்றன
பெருமூச்சுகளை அடக்கிக் கொண்டு
எடுக்கப்படும் சிறுமூச்சுகளில்.

கவிதையின் வரிகள் எளிமையானதுதான் என்றாலும் அது விரிக்கும் உலகம்  பன்மைத்துவமான அர்த்தத்தளங்களில் இயங்கும் வலிமை கொண்டது.

No comments:

Post a Comment

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்                    இன்னொரு சாயல்                            எம்.மீரான் மைதீன்          ...