Tuesday 23 January 2024

மஞ்சள் ஔி

மஞ்சள் ஒளிப்பரவலில் 
சிதறிக் கிடந்த சித்திரத்தை
யார் வரைந்து போட்டார்களென்று தெரியவில்லை
விடியும் வரை அப்படியே 
கிடந்தது

அதிகாலை பனியின்
குளிரில் நடுங்கியபடி
போர்த்திக் கொண்டிருந்த 
சித்திரம் 
மஞ்சள் ஒளிப்பரவலில் 
சிதறிக் கிடந்ததல்ல

ஒளி அலைபாய்ந்தோடும்
வீதிகளெங்கும்
முகமற்ற
சித்திரங்கள் 
ஓடி மறைகின்றன
சிலது வாகனத்தின் பின்னே
துரத்துகின்றன

காகமாக
கழுகாக
நாகமாக
நாயாக
பேயாக 
வாகனச் சக்கரத்தில்
வரிசையாக நசுக்கி 
மாற்றி மாற்றி
சித்திரங்களிலும் 
கடந்து போகிறேன்

அடி வானில்
அப்பிக் கிடந்த
ஆயிரத்து ஒன்றாவது
சித்திரத்தில் 
கொம்பு வைக்க 
குளத்து நீரில் கல்லெறிந்த போது
கொம்பு முளைத்துக் கொண்டது

ஆந்தையும் 
வவ்வாலும்
கூட்டாய் வரைந்த 
சித்திரத்தில்
சூரியன் 
இருளாய் இருக்கிறது



                -மொய்தீன் கவிதை-

No comments:

Post a Comment

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்                    இன்னொரு சாயல்                            எம்.மீரான் மைதீன்          ...