Friday 7 July 2023

பரிசுகள் அன்பை சுமக்கின்றன

எனது சேகரத்தில் நிறைய தஸ்பீகு மாலைகள் இருக்கிறது.நான் தொடர்சியாக அதனை பயன்படுத்துபவனும் கூட இப்போது ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக எனது கையின் விரல்களினிடையே உருளும் தஸ்பீகு மாலையின் கதை இது.

2018 ஐனவரியில் ஒரு நாள்(தேதி பத்தாக இருக்கலாம்)மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூரில் நிகழ்சி முடித்துவிட்டு நண்பர் முகம்மது சப்ரி நல்ல சொகுசான காரில் என்னையும் நண்பர் ஹசீனையும் அண்ணன் எஸ்எல்எம் அவர்களையும் ஓட்டமாவடிக்கு Slm Hanifa அண்ணன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.அவரது வீடு அப்படியே எனது குடும்ப வீட்டை அச்சு அசலாக நினைவூட்டியது. நல்ல விருந்து செய்து சிறப்பித்த அண்ணன் எஸ்எல்எம் வீட்டில் தங்கிய அந்த இரவில் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. அதிகாலை ஐந்து மணிக்கு அங்கிருந்து கண்டிக்கு புறப்படும் போது அவர் எனக்குப் பரிசாக தந்த தஸ்பீகு மாலை இது. KOKULU TESBIH TURK MALI என வாசகம் பொறிக்கப்பட்ட சிறிய பெட்டியில் அது அழகாக சுருண்டிருந்தது.
அவர் மேலும் சில பதார்த்தங்கள் பரிசாகத்  தந்தார் ஆனாலும் இந்த தஸ்பீகு மாலையில் அவரின் நினைவுகளும் தினந்தோறும் எனக்குள் உருளுகிறது. இந்தநொடியிலும் அதனை நான் முகர்ந்துப் பார்க்கிறேன் அதன் வாசனை இப்போதும் மாறவில்லை. பரிசுகள் பெரும்பாலும் அலங்காரங்களாக வீட்டின் காட்சிப் பெட்டியில் அமர்ந்து கொள்கின்றன.
அபூர்வமாகத்தான் அது கைகளில் உருளும்படியாக இருக்கிறது.நான் அடிக்கடி நண்பர்களிடம் சொல்வதுண்டு சின்னஞ்சிறிய பொருட்களில் பெருங்கதைகள் இருக்கிறதென்று. நீங்கள் ஒருவருக்கொருவர் பரிசுகளை வழங்கிக் கொள்ளுங்கள்.பரிசுகள் அன்பை சுமந்துகொண்டே நம்மோடு பயணிக்கும்.

No comments:

Post a Comment

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்                    இன்னொரு சாயல்                            எம்.மீரான் மைதீன்          ...